Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 -ஆம் திருமுறை பதிகம் 8.112  
திருச்சாழல் - பூசுவதும் வெண்ணீறு
பண் - பூவேறு கோனும் புரந்தரனும் (கோயில் (சிதம்பரம்) )
தரவுகொச்சகக் கலிப்பா
திக்குவாய் மாறிச் சீர் பெறுவதற்கும் , சிறந்த பேச்சாளர் ஆவதற்க்கும் ஓதவேண்டிய பதிகம்
Audio: https://sivaya.org/thiruvaasagam/12 Thiruchalal Thiruvasagam.mp3
பூசுவதும் வெள் நீறு, பூண்பதுவும் பொங்கு அரவம், பேசுவதும் திருவாயால் மறை போலும்? காண், ஏடீ! பூசுவதும், பேசுவதும், பூண்பதுவும், கொண்டு என்னை? ஈசன் அவன் எவ் உயிர்க்கும் இயல்பு ஆனான்; சாழலோ!
| [1] |
என் அப்பன், எம்பிரான், எல்லார்க்கும் தான் ஈசன்; துன்னம் பெய் கோவணமாக் கொள்ளும்அது என்? ஏடீ! மன்னு கலை, துன்னு பொருள் மறை நான்கே, வான் சரடா, தன்னையே கோவணமா, சாத்தினன், காண்; சாழலோ!
| [2] |
கோயில் சுடுகாடு, கொல் புலித் தோல் நல் ஆடை, தாயும் இலி, தந்தை இலி, தான் தனியன் காண்; ஏடீ! தாயும் இலி, தந்தை இலி, தான் தனியன்; ஆயிடினும், காயில், உலகு அனைத்தும் கல் பொடி, காண்; சாழலோ!
| [3] |
அயனை, அனங்கனை, அந்தகனை, சந்திரனை, வயனங்கள் மாயா வடுச் செய்தான்; காண், ஏடீ! நயனங்கள் மூன்று உடைய நாயகனே தண்டித்தால், சயம் அன்றோ வானவர்க்கு, தாழ் குழலாய்? சாழலோ!
| [4] |
தக்கனையும், எச்சனையும், தலை அறுத்து, தேவர் கணம் தொக்கென வந்தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்? ஏடீ! தொக்கென வந்தவர் தம்மைத் தொலைத்தருளி அருள் கொடுத்து, அங்கு எச்சனுக்கு மிகைத் தலை மற்று அருளினன், காண்; சாழலோ!
| [5] |
அலரவனும், மாலவனும், அறியாமே, அழல் உரு ஆய், நிலம் முதல், கீழ் அண்டம் உற, நின்றதுதான் என்? ஏடீ! நிலம் முதல், கீழ் அண்டம் உற, நின்றிலனேல் இருவரும் தம் சலம் முகத்தால் ஆங்காரம் தவிரார் காண் சாழலோ!
| [6] |
மலை மகளை ஒரு பாகம் வைத்தலுமே மற்று ஒருத்தி சலம் முகத்தால் அவன் சடையில் பாயும் அது என் ஏடீ சலம் முகத்தால் அவன் சடையில் பாய்ந்திலளேல் தரணி எல்லாம் பில முகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடு ஆம் சாழலோ!
| [7] |
கோலாலம் ஆகிக் குரை கடல்வாய் அன்று எழுந்த ஆலாலம் உண்டான் அவன் சதுர் தான் என் ஏடீ ஆலாலம் உண்டிலனேல் அன்று அயன் மால் உள்ளிட்ட மேல் ஆய தேவர் எல்லாம் வீடுவர் காண் சாழலோ!
| [8] |
தென் பால் உகந்து ஆடும் தில்லைச் சிற்றம்பலவன் பெண் பால் உகந்தான்; பெரும் பித்தன், காண்; ஏடீ! பெண் பால் உகந்திலனேல், பேதாய்! இரு நிலத்தோர் விண் பால் யோகு எய்தி, வீடுவர், காண்; சாழலோ!
| [9] |
தான் அந்தம் இல்லான், தனை அடைந்த நாயேனை ஆனந்த வெள்ளத்து அழுந்துவித்தான், காண்; ஏடீ! ஆனந்த வெள்ளத்து அழுந்துவித்த திருவடிகள், வான் உந்து தேவர்கட்கு ஓர் வான் பொருள், காண்; சாழலோ!
| [10] |
நங்காய்! இது என்ன தவம்? நரம்போடு, எலும்பு, அணிந்து, கங்காளம் தோள்மேலே காதலித்தான், காண்; ஏடீ! கங்காளம் ஆமா கேள்; கால அந்தரத்து இருவர் தம் காலம் செய்யத் தரித்தனன், காண்; சாழலோ!
| [11] |
கான் ஆர் புலித் தோல் உடை; தலை ஊண்; காடு பதி; ஆனால், அவனுக்கு இங்கு ஆட்படுவார் ஆர்? ஏடீ! ஆனாலும், கேளாய்; அயனும் திருமாலும், வான் நாடர் கோவும், வழி அடியார்; சாழலோ!
| [12] |
மலை அரையன் பொன் பாவை, வாள் நுதலாள், பெண் திருவை உலகு அறிய, தீ வேட்டான் என்னும்அது என்? ஏடீ உலகு அறிய, தீ வேளாது ஒழிந்தனனேல், உலகு அனைத்தும், கலை நவின்ற பொருள்கள் எல்லாம் கலங்கிடும், காண்; சாழலோ!
| [13] |
தேன் புக்க தண் பணை சூழ் தில்லைச் சிற்றம்பலவன், தான் புக்கு நட்டம் பயிலும்அது என்? ஏடீ! தான் புக்கு நட்டம் பயின்றிலனேல், தரணி எல்லாம், ஊன் புக்க வேல் காளிக்கு ஊட்டு ஆம், காண்; சாழலோ!
| [14] |
கட கரியும், பரி மாவும், தேரும், உகந்து ஏறாதே, இடபம் உகந்து ஏறிய ஆறு, எனக்கு அறிய இயம்பு; ஏடீ! தட மதில்கள் அவை மூன்றும் தழல் எரித்த அந் நாளில் இடபம் அது ஆய்த் தாங்கினான் திருமால், காண்; சாழலோ!
| [15] |
நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை, அன்று, ஆலின் கீழ் இருந்து, அங்கு, அறம் உரைத்தான், காண்; ஏடீ! அன்று, ஆலின் கீழ் இருந்து, அங்கு, அறம் உரைத்தான், ஆயிடினும், கொன்றான், காண், புரம் மூன்றும் கூட்டோடே; சாழலோ!
| [16] |
அம்பலத்தே கூத்து ஆடி, அமுது செய்யப் பலி திரியும் நம்பனையும் தேவன் என்று நண்ணும்அது என்? ஏடீ! நம்பனையும் ஆமா கேள்; நான்மறைகள் தாம் அறியா, எம்பெருமான், ஈசா' என்று ஏத்தின, காண்; சாழலோ!
| [17] |
சலம் உடைய சலந்தரன் தன் உடல் தடிந்த நல் ஆழி, நலம் உடைய நாரணற்கு, அன்று, அருளிய ஆறு என்? ஏடீ! நலம் உடைய நாரணன், தன் நயனம் இடந்து, அரன் அடிக்கீழ் அலர் ஆக இட, ஆழி அருளினன், காண்; சாழலோ!
| [18] |
அம்பரம் ஆம், புள்ளித் தோல்; ஆலாலம், ஆர் அமுதம்; எம்பெருமான் உண்ட சதிர், எனக்கு அறிய இயம்புல் ஏடீ! எம்பெருமான் ஏது உடுத்து, அங்கு ஏது அமுது செய்திடினும், தம் பெருமை தான் அறியாத் தன்மையன், காண்; சாழலோ!
| [19] |
அரும் தவருக்கு, ஆலின் கீழ், அறம் முதலா நான்கினையும் இருந்து, அவருக்கு அருளும்அது எனக்கு அறிய இயம்பு; ஏடீ! அரும் தவருக்கு, அறம் முதல் நான்கு அன்று அருளிச்செய்திலனேல், திருந்த, அவருக்கு, உலகு இயற்கை தெரியா, காண்; சாழலோ!
| [20] |
Back to Top
நம பார்வதி பதயே ஹர ஹர மஹா தேவா
தென் நாடு உடைய சிவனே, போற்றி! எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!
காவாய் கனகத் திரளே போற்றி! கயிலை மலையானே போற்றி போற்றி Back to Top
This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400 |
|