சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
7.004
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
தலைக்குத் தலை மாலை அணிந்தது பண் - இந்தளம் (திருஅஞ்சைக்களம் அஞ்சைக்களத்தீசுவரர் உமையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=knUvNd5gXAQ |
7.044
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
முடிப்பது கங்கையும், திங்களும்; செற்றது பண் - கொல்லிக்கௌவாணம் (திருஅஞ்சைக்களம் ) Audio: https://www.youtube.com/watch?v=yoM_GiP8gR8 |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.004  
தலைக்குத் தலை மாலை அணிந்தது
பண் - இந்தளம் (திருத்தலம் திருஅஞ்சைக்களம் ; (திருத்தலம் அருள்தரு உமையம்மை உடனுறை அருள்மிகு அஞ்சைக்களத்தீசுவரர் திருவடிகள் போற்றி )
ஒருநாள் சேரர்கோன் திருமஞ்சனமாடிக் கொண்டிருந்த பொழுது சுந்தரர் திருவஞ்சைக்களத்து இறைவனை வழிபடச் சென்றார். திருக்கோயிலுக்குட் சென்ற சுந்தரர் நெஞ்சம் நெகிழ்ந்துருகி நிலமிசை வீழ்ந்து அடியேன் இவ்வுலக வாழ்வை வெறுத்தேன்; அடியேனை நின் திருவடியில் சேர்த்தல் வேண்டும் என்னும் குறிப்புடன் தலைக்குத் தலைமாலை என்னும் திருப்பதிகத்தால் விண்ணப்பித்து வேண்டினர்.
தலைக்குத் தலை மாலை அணிந்தது என்னே? சடைமேல் கங்கை வெள்ளம் தரித்தது என்னே? அலைக்கும் புலித்தோல் கொண்டு அசைத்தது என்னே? அதன் மேல் கதநாகம் கச்சு ஆர்த்தது என்னே? மலைக்கு(ந்) நிகர்-ஒப்பன வன் திரைகள் வலித்து, எற்றி, முழங்கி வலம்புரி கொண்டு, அலைக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே! . | [1] |
பிடித்து ஆட்டி ஓர் நாகத்தைப் பூண்டது என்னே? பிறங்கும் சடை மேல் பிறை சூடிற்று என்னே? பொடித்தான் கொண்டு மெய்ம் முற்றும் பூசிற்று என்னே? புகர் ஏறு உகந்து ஏறல் புரிந்தது என்னே? மடித்து, ஓட்டந்து, வன் திரை எற்றியிட, வளர் சங்கம் அங்காந்து முத்தம் சொரிய, அடித்து ஆர் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே! . | [2] |
சிந்தித்து எழுவார்க்கு நெல்லிக்கனியே! சிறியார் பெரியார், மனத்து ஏறல் உற்றால்; முந்தித் தொழுவார் இறவார்; பிறவார்; முனிகள் முனியே! அமரர்க்கு அமரா! சந்தித் தடமால் வரை போல்-திரைகள் தணியாது இடறும் கடல் அம்கரை மேல், அந்தித்தலைச் செக்கர்வானே ஒத்தியால் அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே! . | [3] |
இழைக்கும்(ம்) எழுத்துக்கு உயிரே ஒத்தியால்; இலையே ஒத்தியால்; உளையே ஒத்தியால்; குழைக்கும் பயிர்க்கு ஓர் புயலே ஒத்தியால்; அடியார் தமக்கு ஓர் குடியே ஒத்தியால் மழைக்கு(ந்) நிகர்-ஒப்பன வன் திரைகள் வலித்து, எற்றி, முழங்கி வலம்புரி கொண்டு அழைக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே! . | [4] |
வீடின் பயன் என்? பிறப்பின் பயன் என்? விடை ஏறுவது என், மதயானை நிற்க? கூடும் மலை மங்கை ஒருத்தி உடன் சடை மேல் கங்கையாளை நீ சூடிற்று என்னே? பாடும் புலவர்க்கு அருளும் பொருள் என்? நிதியம் பல செய்த கலச் செலவில் ஆடும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே! . | [5] |
இரவத்து இடு காட்டு எரி ஆடிற்று என்னே? இறந்தார் தலையில் பலி கோடல் என்னே? பரவித் தொழுவார் பெறு பண்டம் என்னே? பரமா, பரமேட்டி, பணித்து அருளாய்! உரவத்தொடு, சங்கமொடு இப்பி முத்தம் கொணர்ந்து, எற்றி, முழங்கி வலம்புரி கொண்டு, அரவக் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே! | [6] |
ஆக்கும் அழிவும் அமைவும், நீ என்பன், நான்; சொல்லுவார் சொல்பொருள் அவை, நீ என்பன், நான்; நாக்கும் செவியும் கண்ணும், நீ என்பன், நான்; நலனே! இனி நான் உனை நன்கு உணர்ந்தேன்- நோக்கும் நிதியம் பல எத்தனையும் கலத்தில் புகப் பெய்து கொண்டு, ஏற நுந்தி ஆர்க்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே! . | [7] |
வெறுத்தேன், மனை வாழ்க்கையை விட்டொழிந்தேன்; விளங்கும் குழைக் காது உடை வேதியனே! இறுத்தாய், இலங்கைக்கு இறை ஆயவனை, தலை பத்தொடு தோள் பல இற்று விழ; கறுத்தாய், கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம்; கடுகப் பிரமன் தலை ஐந்திலும் ஒன்று அறுத்தாய் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே! . | [8] |
பிடிக்குக் களிறே ஒத்தியால்; எம்பிரான்! பிரமற்கும் பிரான்; மற்றை மாற்கும் பிரான்; நொடிக்கும் அளவில் புரம் மூன்று எரியச் சிலை தொட்டவனே! உனை நான் மறவேந்- வடிக்கின்றன போல் சில வன் திரைகள் வலித்து, எற்றி, முழங்கி வலம்புரி கொண்டு அடிக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே! . | [9] |
எம் தம்(ம்) அடிகள், இமையோர் பெருமான், எனக்கு என்றும் அளிக்கும் மணிமிடற்றன், அம் தண்கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனை, மந்தம் முழவும் குழலும் இயம்பும் வளர் நாவலர் கோன்-நம்பி ஊரன்-சொன்ன சந்தம் மிகு தண் தமிழ் மாலைகள் கொண்டு அடி வீழ வல்லார் தடுமாற்று இலரே . | [10] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.044  
முடிப்பது கங்கையும், திங்களும்; செற்றது
பண் - கொல்லிக்கௌவாணம் (திருத்தலம் திருஅஞ்சைக்களம் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
முடிப்பது கங்கையும், திங்களும்; செற்றது மூ எயில்; நொடிப்பது மாத்திரை நீறு எழக் கணை நூறினார்; கடிப்பதும் ஏறும் என்று அஞ்சுவன்; திருக்கைகளால் பிடிப்பது பாம்பு அன்றி இல்லையோ, எம்பிரானுக்கே? | [1] |
தூறு அன்றி ஆடு அரங்கு இல்லையோ? சுடலைப் பொடி- நீறு அன்றிச் சாந்தம் மற்று இல்லையோ? இமவான் மகள் கூறு அன்றிக் கூறு மற்று இல்லையோ? கொல்லைச் சில்லை வெள்- ஏறு அன்றி ஏறுவது இல்லையோ, எம்பிரானுக்கே? | [2] |
தட்டு எனும் தட்டு எனும், தொண்டர்காள்! தடுமாற்றத்தை, ஒட்டு எனும் ஒட்டு எனும் மா நிலத்து உயிர் கோறலை; சிட்டனும், திரிபுரம் சுட்ட தேவர்கள் தேவனை, வெட்டெனப் பேசன்மின், தொண்டர்காள், எம்பிரானையே! | [3] |
நரி தலை கவ்வ, நின்று ஓரி கூப்பிட, நள் இருள் எரி தலைப் பேய் புடை சூழ, ஆர் இருள் காட்டு இடைச் சிரி தலை மாலை சடைக்கு அணிந்த எம் செல்வனை, பிரிதலைப் பேசன்மின், தொண்டர்காள், எம்பிரானையே! | [4] |
வேய் அன தோளி மலை மகளை விரும்பிய மாயம் இல் மாமலை நாடன் ஆகிய மாண்பனை, ஆயன சொல்லி நின்றார்கள் அல்லல் அறுக்கிலும், பேயனே! பித்தனே! என்பரால், எம்பிரானையே! | [5] |
இறைவன்! என்று எம்பெருமானை வானவர் ஏத்தப் போய், துறை ஒன்றி, தூ மலர் இட்டு, அடி இணை போற்றுவார்; மறை அன்றிப் பாடுவது இல்லையோ? மல்கு வான் இளம்- பிறை அன்றிச் சூடுவது இல்லையோ, எம்பிரானுக்கே? | [6] |
தாரும், தண் கொன்றையும் கூவிளம் தனி மத்தமும்; ஆரும் அளவு, அறியாத ஆதியும் அந்தமும்; ஊரும், ஒன்று இல்லை, உலகு எலாம், உகப்பார் தொழப் பேரும் ஓர் ஆயிரம் என்பரால், எம்பிரானுக்கே. | [7] |
அரியொடு பூமிசையானும் ஆதியும் அறிகிலார்; வரி தரு பாம்பொடு வன்னி திங்களும் மத்தமும் புரி தரு புன்சடை வைத்த எம் புனிதற்கு, இனி எரி அன்றி அங்கைக்கு ஒன்று இல்லையோ, எம்பிரானுக்கே? | [8] |
கரிய மனச் சமண் காடி ஆடு கழுக்களால் எரிய வசவுணும் தன்மையோ? இமவான் மகள் பெரிய மனம் தடுமாற வேண்டி, பெம்மான்-மதக்- கரியின் உரி அல்லது இல்லையோ, எம்பிரானுக்கே? | [9] |
காய்சின மால்விடை மாணிக்கத்து, எம் கறைக் கண்டத்து, ஈசனை ஊரன் எட்டோடு இரண்டு விரும்பிய ஆயின சீர்ப் பகை ஞானி அப்பன், அடித்தொண்டன் தான், ஏசின பேசுமின், தொண்டர் காள், எம்பிரானையே! | [10] |