Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.001   அரியானை, அந்தணர் தம் சிந்தை
பண் - பெரியதிருத்தாண்டகம் (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
அரியானை, அந்தணர் தம் சிந்தை யானை,
அருமறையின் அகத்தானை, அணுவை, யார்க்கும்
தெரியாத தத்துவனை, தேனை, பாலை, திகழ் ஒளியை,
தேவர்கள்தம் கோனை, மற்றைக்
கரியானை, நான்முகனை, கனலை, காற்றை,
கனைகடலை, குலவரையை, கலந்து நின்ற
பெரியானை, பெரும்பற்றப்புலியூரானை,-பேசாத நாள்
எல்லாம் பிறவா நாளே.
[1]
கற்றானை, கங்கை வார்சடையான் தன்னை, காவிரி
சூழ் வலஞ்சுழியும் கருதினானை,
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள் செய்வானை,
ஆரூரும் புகுவானை, அறிந்தோம் அன்றே;
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதானை, வானவர்கள்
எப்பொழுதும் வணங்கி ஏத்தப்-
பெற்றானை, பெரும்பற்றப்புலியூரானை, -பேசாத நாள்
எல்லாம் பிறவா நாளே.
[2]
கருமானின் உரி-அதளே உடையா வீக்கி, கனை
கழல்கள் கலந்து ஒலிப்ப, அனல் கை ஏந்தி,
வரு மானத் திரள் தோள்கள் மட்டித்து ஆட,
வளர்மதியம் சடைக்கு அணிந்து, மான் நேர் நோக்கி
அரு மான வாள் முகத்தாள் அமர்ந்து காண,
அமரர்கணம் முடி வணங்க, ஆடுகின்ற
பெருமானை, பெரும்பற்றப்புலியூரானை, -பேசாத நாள்
எல்லாம் பிறவா நாளே.
[3]
அருந்தவர்கள் தொழுது ஏத்தும் அப்பன் தன்னை,
அமரர்கள்தம் பெருமானை, அரனை, மூவா-
மருந்து அமரர்க்கு அருள் புரிந்த மைந்தன் தன்னை,
மறிகடலும் குலவரையும் மண்ணும் விண்ணும்
திருந்து ஒளிய தாரகையும் திசைகள் எட்டும் திரி
சுடர்கள் ஓர் இரண்டும் பிறவும் ஆய
பெருந்தகையை, பெரும்பற்றப்புலியூரானை, -பேசாத
நாள் எல்லாம் பிறவா நாளே.
[4]
அருந்துணையை; அடியார் தம் அல்லல் தீர்க்கும்
அருமருந்தை; அகல் ஞாலத்து அகத்துள் தோன்றி
வரும் துணையும் சுற்றமும் பற்றும் விட்டு, வான்
புலன்கள் அகத்து அடக்கி, மடவாரோடும்
பொருந்து அணைமேல் வரும் பயனைப் போக மாற்றி,
பொது நீக்கி, தனை நினைய வல்லோர்க்கு என்றும்
பெருந்துணையை; பெரும்பற்றப்புலியூரானை;- பேசாத
நாள் எல்லாம் பிறவா நாளே.
[5]
கரும்பு அமரும் மொழி மடவாள் பங்கன் தன்னை,
கன வயிரக் குன்று அனைய காட்சியானை,
அரும்பு அமரும் பூங்கொன்றைத்தாரான் தன்னை,
அருமறையோடு ஆறு அங்கம் ஆயினானை,
சுரும்பு அமரும் கடிபொழில்கள் சூழ் தென் ஆரூர்ச்
சுடர்க்கொழுந்தை, துளக்கு இல்லா விளக்கை, மிக்க
பெரும்பொருளை, பெரும்பற்றப்புலியூரானை, -
பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
[6]
வரும் பயனை, எழு நரம்பின் ஓசையானை, வரை
சிலையா வானவர்கள் முயன்ற வாளி
அரும் பயம் செய் அவுணர் புரம் எரியக் கோத்த
அம்மானை, அலைகடல் நஞ்சு அயின்றான் தன்னை,
சுரும்பு அமரும் குழல் மடவார் கடைக்கண் நோக்கில்
-துளங்காத சிந்தையராய்த் துறந்தோர் உள்ளப்
பெரும்பயனை, பெரும்பற்றப்புலியூரானை,-பேசாத நாள்
எல்லாம் பிறவா நாளே.
[7]
கார் ஆனை ஈர் உரிவைப் போர்வையானை, காமரு
பூங் கச்சி ஏகம்பன் தன்னை,
ஆரேனும் அடியவர்கட்கு அணியான் தன்னை,
அமரர்களுக்கு அறிவு அரிய அளவு இலானை,
பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம் பயில்கின்ற
பரஞ்சுடரை, பரனை, எண் இல்
பேரானை, பெரும்பற்றப்புலியூரானை, - பேசாத நாள்
எல்லாம் பிறவா நாளே.
[8]
முற்றாத பால் மதியம் சூடினானை, மூ உலகம் தான்
ஆய முதல்வன் தன்னை,
செற்றார்கள் புரம் மூன்றும் செற்றான் தன்னை, திகழ்
ஒளியை, மரகதத்தை, தேனை, பாலை,
குற்றாலத்து அமர்ந்து உறையும் குழகன் தன்னை,
கூத்து ஆட வல்லானை, கோனை, ஞானம்
பெற்றார்கள் பெரும்பற்றப்புலியூரானை,- பேசாத நாள்
எல்லாம் பிறவா நாளே.
[9]
கார் ஒளிய திருமேனிச் செங்கண் மாலும்,
கடிக்கமலத்து இருந்த (அ)அயனும், காணா வண்ணம்
சீர் ஒளிய தழல் பிழம்பு ஆய் நின்ற தொல்லைத்,
திகழ் ஒளியை; சிந்தை தனை மயக்கம் தீர்க்கும்
ஏர் ஒளியை இரு நிலனும் விசும்பும் விண்ணும், ஏழ்
உலகுங் கடந்தண்டத் அப்பால் நின்ற
பேர் ஒளியைப் பெரும்பற்றப் புலியூ ரானைப், சோத
நாள் எல்லாம் பிறவா நாளே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.002   மங்குல் மதி தவழும் மாட
பண் - புக்கதிருத்தாண்டகம் (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
மங்குல் மதி தவழும் மாட வீதி மயிலாப்பில் உள்ளார்; மருகல் உள்ளார்; கொங்கில் கொடுமுடியார்; குற்றாலத்தார்; குடமூக்கின் உள்ளார்; போய்க் கொள்ளம் பூதூர்த் தங்கும் இடம் அறியார்; சால நாளார்; தருமபுரத்து உள்ளார்; தக்களூரார்- பொங்கு வெண்நீறு அணிந்து பூதம் சூழ, புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்தாமே.
[1]
நாகம் அரைக்கு அசைத்த நம்பர் இந் நாள் நனிபள்ளி உள்ளார்; போய் நல்லூர்த் தங்கி பாகப் பொழுது எலாம் பாசூர்த் தங்கி, பரிதி நியமத்தார், பன்னிரு நாள்; வேதமும் வேள்விப் புகையும் ஓவா விரிநீர் மிழலை எழுநாள்-தங்கி, போகமும் பொய்யாப் பொருளும் ஆனார்-புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்தாமே.
வார் ஏறு வனமுலையாள் பாகம் ஆக, மழுவாள் கை ஏந்தி, மயானத்து ஆடி, சீர் ஏறு தண் வயல் சூழ் ஓத வேலித் திரு வாஞ்சியத்தார்; திரு நள்ளாற்றார்; கார் ஏறு கண்டத்தார்; காமற் காய்ந்த கண் விளங்கு நெற்றியார்; கடல் நஞ்சு உண்டார்- போர் ஏறு தாம் ஏறிப் பூதம் சூழ, புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்தாமே.
[4]
கார் ஆர் கமழ் கொன்றைக் கண்ணி சூடி, கபாலம் கை ஏந்தி, கணங்கள் பாட, ஊரார் இடு பிச்சை கொண்டு, உழ(ல்)லும் உத்தமராய் நின்ற ஒருவனார்தாம்: சீர் ஆர் கழல் வணங்கும் தேவதேவர்; திரு ஆரூர்த் திரு மூலட்டானம் மேயார்- போர் ஆர் விடை ஏறிப் பூதம் சூழ, புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்தாமே.
[5]
காது ஆர் குழையினர்; கட்டங்கத்தர்; கயிலாயமாமலையார்; காரோணத்தார்; மூதாயர் மூதாதை இல்லார் போலும்; முதலும் இறுதியும் தாமே போலும்; மாது ஆய மாதர் மகிழ, அன்று, வன் மத வேள் தன் உடலம் காய்ந்தார்-இந்நாள் போது ஆர் சடை தாழப் பூதம் சூழ, புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார் தாமே.
[6]
இறந்தார்க்கும் என்றும் இறவாதார்க்கும் இமையவர்க்கும் ஏகம் ஆய் நின்று, சென்று பிறந்தார்க்கும் என்றும் பிறவாதார்க்கும் பெரியான்; தன் பெருமையே பேச நின்று, மறந்தார் மனத்து என்றும் மருவார் போலும்; மறைக்காட்டு உறையும் மழுவாள் செல்வர்- புறம் தாழ்சடை தாழப் பூதம் சூழ, புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்தாமே.
[7]
குலா வெண்தலைமாலை என்பு பூண்டு, குளிர் கொன்றைத்தார் அணிந்து, கொல் ஏறு ஏறி, கலா வெங்களிற்று உரிவைப்போர்வை மூடி, கை ஓடு அனல் ஏந்தி, காடு உறைவார்; நிலா வெண்மதி உரிஞ்ச நீண்ட மாடம் நிறை வயல் சூழ் நெய்த்தானம் மேய செல்வர்- புலா வெண்தலை ஏந்திப் பூதம் சூழ, புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்தாமே.
[8]
சந்தித்த கோவணத்தர், வெண் நூல் மார்பர்; சங்கரனைக் கண்டீரோ? கண்டோம்-இந் நாள், பந்தித்த வெள்விடையைப் பாய ஏறி, படுதலையில் என்கொலோ ஏந்திக் கொண்டு, வந்து ஈங்கு என் வெள் வளையும் தாமும் எல்லாம், மணி ஆரூர் நின்று, அந்தி கொள்ளக்கொள்ள, பொன் தீ மணிவிளக்குப் பூதம் பற்ற, புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்தாமே.
[9]
பாதங்கள் நல்லார் பரவி ஏத்த, பத்திமையால் பணி செய்யும் தொண்டர்தங்கள் ஏதங்கள் தீர, இருந்தார்போலும்; எழுபிறப்பும் ஆள் உடைய ஈசனார்தாம்- வேதங்கள் ஓதி, ஓர் வீணை ஏந்தி, விடை ஒன்று தாம் ஏறி, வேதகீதர், பூதங்கள் சூழ, புலித்தோல் வீக்கி, புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்தாமே.
[10]
பட்டு உடுத்து, தோல் போர்த்து, பாம்பு ஒன்று ஆர்த்து, பகவனார், பாரிடங்கள் சூழ நட்டம் சிட்டராய், தீஏந்தி, செல்வார் தம்மைத் தில்லைச் சிற்றம்பலத்தே கண்டோம், இந் நாள்; விட்டு இலங்கு சூலமே, வெண் நூல், உண்டே; ஓதுவதும் வேதமே; வீணை உண்டே; கட்டங்கம் கையதே, -சென்று காணீர்!-கறை சேர் மிடற்று எம் கபாலியார்க்கே.
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.003   வெறி விரவு கூவிளநல்-தொங்கலானை, வீரட்டத்தானை,
பண் - ஏழைத்திருத்தாண்டகம் (திருவதிகை வீரட்டானம் )
வெறி விரவு கூவிளநல்-தொங்கலானை, வீரட்டத்தானை, வெள் ஏற்றினானை, பொறி அரவினானை, புள் ஊர்தியானை, பொன்நிறத்தினானை, புகழ் தக்கானை, அறிதற்கு அரிய சீர் அம்மான் தன்னை, அதியரையமங்கை அமர்ந்தான் தன்னை, எறி கெடிலத்தானை, இறைவன் தன்னை, - ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!
ஒரு பிறப்பு இல் அரன் அடியை உணர்ந்தும் காணார்; உயர்கதிக்கு வழி தேடிப் போகமாட்டார்; வரு பிறப்பு ஒன்று உணராது, மாசு பூசி, வழி காணாதவர் போல்வார் மனத்தன் ஆகி, அரு பிறப்பை அறுப்பிக்கும் அதிகை ஊரன் அம்மான் தன் அடி இணையே அணைந்து வாழாது, இருபிறப்பும் வெறுவியராய் இருந்தார் சொல்கேட்டு- ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!
[5]
ஆறு ஏற்க வல்ல சடையான் தன்னை; அஞ்சனம் போலும் மிடற்றான் தன்னை; கூறு ஏற்க, கூறு அமர, வல்லான் தன்னை; கோல் வளைக்கை மாதராள் பாகன்தன்னை; நீறு ஏற்கப் பூசும் அகலத்தானை; நின்மலன் தன்னை; நிமலன் தன்னை; ஏறு ஏற்க ஏறுமா வல்லான் தன்னை;- ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!
[6]
குண்டு ஆக்கனாய் உழன்று, கையில் உண்டு, குவிமுலையார்தம் முன்னே நாணம் இன்றி, உண்டி உகந்து, அமணே நின்றார் சொல் கேட்டு, உடன் ஆகி, உழி தந்தேன், உணர்வு ஒன்று இன்றி; வண்டு உலவு கொன்றை அம்கண்ணியானை, வானவர்கள் ஏத்தப்படுவான் தன்னை, எண் திசைக்கும் மூர்த்தியாய் நின்றான் தன்னை- ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!
[7]
உறி முடித்த குண்டிகை தம் கையில்-தூக்கி, ஊத்தைவாய்ச் சமணர்க்கு ஓர் குண்டு ஆக்க(ன்)னாய், கறி விரவு நெய் சோறு கையில் உண்டு, கண்டார்க்குப் பொல்லாத காட்சி ஆனேன்; மறிதிரை நீர்ப்பவ்வம் நஞ்சு உண்டான் தன்னை, மறித்து ஒரு கால் வல்வினையேன், நினைக்க மாட்டேன்; எறிகெடில நாடர் பெருமான் தன்னை-ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!.
[8]
நிறை ஆர்ந்த நீர்மை ஆய் நின்றான்தன்னை, நெற்றிமேல் கண் ஒன்று உடையான் தன்னை, மறையானை, மாசு ஒன்று இலாதான் தன்னை, வானவர்மேல் மலர் அடியை வைத்தான் தன்னை, கறையானை, காது ஆர் குழையான் தன்னை, கட்டங்கம் ஏந்திய கையான் தன்னை, இறையானை, எந்தைபெருமான் தன்னை;- ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!.
[9]
தொல்லை வான் சூழ் வினைகள் சூழப் போந்து தூற்றியேன்; ஆற்றியேன்; சுடர் ஆய் நின்று வல்லையே இடர் தீர்த்து இங்கு அடிமைகொண்ட, வானவர்க்கும் தானவர்க்கும், பெருமான் தன்னை கொல்லைவாய்க் குருந்து ஒசித்துக் குழலும் ஊதும் கோவலனும், நான்முகனும், கூடி எங்கும் எல்லை காண்பு அரியானை; எம்மான் தன்னை;- ஏழையேன்நான் பண்டு இகழ்ந்த ஆறே!.
[10]
முலை மறைக்கப்பட்டு நீராடாப் பெண்கள் முறைமுறையால், நம் தெய்வம் என்று தீண்டி, தலை பறிக்கும் தன்மையர்கள் ஆகி நின்று, தவமே என்று அவம் செய்து, தக்கது ஓரார்; மலை மறிக்கச் சென்ற இலங்கைக் கோனை மதன் அழியச் செற்ற சேவடியினானை, இலை மறித்த கொன்றை அம்தாரான் தன்னை,- ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!.
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.004   சந்திரனை மா கங்கைத் திரையால்
பண் - அடையாளத்திருத்தாண்டகம் (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
சந்திரனை மா கங்கைத் திரையால் மோதச் சடாமகுடத்து இருத்துமே; சாமவேத- கந்தருவம் விரும்புமே; கபாலம் ஏந்து கையனே: மெய்யனே; கனகமேனிப் பந்து அணவு மெல்விரலாள் பாகன் ஆமே; பசு ஏறுமே; பரமயோகி ஆமே; ஐந்தலைய மாசுணம் கொண்டு அரை ஆர்க்கு(ம்)மே;- அவன் ஆகில் அதிகை வீரட்டன் ஆமே.
[1]
ஏறு ஏறி ஏழ் உலகம் உழிதர்வானே; இமையவர்கள் தொழுது ஏத்த இருக்கின்றானே; பாறு ஏறு படுதலையில் பலி கொள்வானே; பட அரவம் தடமார்பில் பயில்வித்தானே; நீறு ஏறு செழும் பவளக்குன்று ஒப்பானே; நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவித்தானே; ஆறு ஏறு சடைமுடி மேல் பிறை வைத்தானே;-அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.
[2]
முண்டத்தின் பொலிந்து இலங்கு நெற்றியானே; முதல் ஆகி நடு ஆகி முடிவு ஆனானே; கண்டத்தில் வெண் மருப்பின் காறையானே; கதம் நாகம் கொண்டு ஆடும் காட்சியானே; பிண்டத்தின் இயற்கைக்கு ஓர் பெற்றியானே; பெரு நிலம், நீர், தீ, வளி, ஆகாசம், ஆகி அண்டத்துக்கு அப்பால் ஆய் இப் பாலானே;- அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.
[3]
செய்யனே; கரியனே, கண்டம்; பைங்கண் வெள் எயிற்று ஆடு அரவனே; வினைகள் போக வெய்யனே; தண் கொன்றை மிலைத்த சென்னிச் சடையனே; விளங்கு மழுச் சூலம் ஏந்தும் கையனே; காலங்கள் மூன்று ஆனானே; கருப்பு வில் தனிக் கொடும் பூண் காமற் காய்ந்த ஐயனே; பருத்து உயர்ந்த ஆன் ஏற்றானே;- அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.
[4]
பாடுமே, ஒழியாமே நால்வேத(ம்)மும்; படர்சடைமேல் ஒளி திகழப் பனி வெண்திங்கள் சூடுமே; அரை திகழத் தோலும் பாம்பும் சுற்றுமே; தொண்டைவாய் உமை ஓர் பாகம் கூடுமே; குடமுழவம், வீணை, தாளம், குறுநடைய சிறு பூதம் முழக்க, மாக்கூத்து ஆடுமே; அம் தடக்கை அனல் ஏந்து(ம்)மே;- அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.
[5]
ஒழித்திடுமே, உள்குவார் உள்ளத்து உள்ள உறு பிணியும் செறு பகையும்; ஒற்றைக்கண்ணால் விழித்திடுமே, காமனையும் பொடி ஆய் வீழ; வெள்ளப் புனல் கங்கை செஞ்சடைமேல் இழித்திடுமே; ஏழ் உலகும் தான் ஆகு(ம்)மே; இயங்கும் திரிபுரங்கள் ஓர் அம்பி(ன்)னால் அழித்திடுமே; ஆதி மா தவத்து உளானே;- அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.
[6]
குழலோடு, கொக்கரை, கைத்தாளம், மொந்தை, குறள்பூதம் முன் பாடத் தான் ஆடு(ம்)மே; கழல் ஆடு திருவிரலால் கரணம்செய்து, கனவின் கண் திரு உருவம் தான் காட்டு(ம்)மே; எழில் ஆரும் தோள் வீசி நடம் ஆடு(ம்)மே;- ஈமப் புறங்காட்டில் ஏமம்தோறும் அழல் ஆடுமே அட்டமூர்த்தி ஆமே;-அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.
[7]
மால் ஆகி மதம் மிக்க களிறுதன்னை வதைசெய்து, மற்று அதனின் உரிவை கொண்டு, மேலாலும் கீழாலும் தோன்றா வண்ணம், வெம் புலால் கை கலக்க, மெய் போர்த்தானே; கோலாலம் பட வரை நட்டு, அரவு சுற்றி, குரைகடலைத் திரை அலற, கடைந்து கொண்ட ஆலாலம் உண்டு இருண்ட கண்டத்தானே;-அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.
[8]
செம்பொனால் செய்து அழகு பெய்தால் போலும் செஞ்சடை எம்பெருமானே; தெய்வம் நாறும் வம்பின் நாள்மலர்க் கூந்தல் உமையாள் காதல் மணவாளனே; வலங்கை மழுவாள(ன்)னே: நம்பனே; நால்மறைகள் தொழ நின்றானே; நடுங்காதார் புரம் மூன்றும் நடுங்கச் செற்ற அம்பனே; அண்ட கோசத்து உளானே;- அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.
[9]
எழுந்த திரை நதித் துவலை நனைந்த திங்கள் இளநிலாத் திகழ்கின்ற வளர்சடையனே; கொழும் பவளச்செங்கனிவாய்க் காமக்கோட்டி கொங்கை இணை அமர் பொருது கோலம் கொண்ட தழும்பு உளவே; வரைமார்பில் வெண்நூல் உண்டே; சாந்தமொடு சந்தனத்தின் அளறு தங்கி அழுந்திய செந்திரு உருவில் வெண் நீற்றானே;- அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.
[10]
நெடியானும் நான்முகனும் நேடிக் காணா நீண்டானே; நேர் ஒருவர் இல்லாதானே; கொடி ஏறு கோல மா மணிகண்ட(ன்)னே; கொல் வேங்கை அதளனே; கோவணவனே; பொடி ஏறு மேனியனே; ஐயம் வேண்டிப் புவலோகம் திரியுமே; புரிநூலானே; அடியாரை அமருலகம் ஆள்விக்கு(ம்)மே;- அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.005   எல்லாம் சிவன் என்ன நின்றாய்,
பண் - போற்றித்திருத்தாண்டகம் (திருவதிகை வீரட்டானம் )
எல்லாம் சிவன் என்ன நின்றாய், போற்றி!
எரிசுடர் ஆய் நின்ற இறைவா, போற்றி!
கொல் ஆர் மழுவாள்படையாய், போற்றி!
கொல்லும் கூற்று ஒன்றை உதைத்தாய், போற்றி!
கல்லாதார் காட்சிக்கு அரியாய், போற்றி!
கற்றார் இடும்பை களைவாய், போற்றி!
வில்லால் வியன் அரணம் எய்தாய், போற்றி!
வீரட்டம் காதல் விமலா, போற்றி!.
[1]
பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா, போற்றி!
பல் ஊழி ஆய படைத்தாய், போற்றி!
ஓட்டு அகத்தே ஊணா உகந்தாய், போற்றி!
உள்குவார் உள்ளத்து உறைவாய், போற்றி!
காட்டு அகத்தே ஆடல் மகிழ்ந்தாய், போற்றி!
கார்மேகம் அன்ன மிடற்றாய், போற்றி!
ஆட்டுவது ஓர் நாகம் அசைத்தாய், போற்றி!
அலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.
[2]
முல்லை அம் கண்ணி முடியாய், போற்றி!
முழுநீறு பூசிய மூர்த்தி, போற்றி!
எல்லை நிறைந்த குணத்தாய், போற்றி!
ஏழ் நரம்பின் ஓசை படைத்தாய், போற்றி!
சில்லை சிரைத்தலையில் ஊணா, போற்றி!
சென்று அடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய், போற்றி!
தில்லைச் சிற்றம்பலம் மேயாய், போற்றி!
திரு வீரட்டானத்து எம் செல்வா, போற்றி!.
[3]
சாம்பர் அகலத்து அணிந்தாய், போற்றி!
தவநெறிகள் சாதித்து நின்றாய், போற்றி!
கூம்பித் தொழுவார் தம் குற்றேவ(ல்)லைக்
குறிக்கொண்டு இருக்கும் குழகா, போற்றி!
பாம்பும் மதியும் புனலும் தம்மில் பகை தீர்த்து
உடன் வைத்த பண்பா, போற்றி!
ஆம்பல்மலர் கொண்டு அணிந்தாய், போற்றி!
அலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.
[4]
நீறு ஏறு நீலமிடற்றாய், போற்றி!
நிழல் திகழும் வெண்மழுவாள் வைத்தாய், போற்றி!
கூறு ஏறு உமை ஒருபால் கொண்டாய், போற்றி!
கோள் அரவம் ஆட்டும் குழகா, போற்றி!
ஆறு ஏறு சென்னி உடையாய், போற்றி!
அடியார்கட்கு ஆர் அமுதம் ஆனாய், போற்றி!
ஏறு ஏற என்றும் உகப்பாய், போற்றி!
இருங் கெடில வீரட்டத்து எந்தாய், போற்றி!.
[5]
பாடுவார் பாடல் உகப்பாய், போற்றி!
பழையாற்றுப் பட்டீச்சுரத்தாய், போற்றி!
வீடுவார் வீடு அருள வல்லாய், போற்றி!
வேழத்து உரி வெருவப் போர்த்தாய், போற்றி!
நாடுவார் நாடற்கு அரியாய், போற்றி!
நாகம் அரைக்கு அசைத்த நம்பா, போற்றி!
ஆடும் ஆன் அஞ்சு உகப்பாய், போற்றி!
அலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.
[6]
மண் துளங்க ஆடல் மகிழ்ந்தாய், போற்றி!
மால்கடலும் மால்விசும்பும் ஆனாய், போற்றி!
விண் துளங்க மும்மதிலும் எய்தாய், போற்றி!
வேழத்து உரி மூடும் விகிர்தா, போற்றி!
பண் துளங்கப் பாடல் பயின்றாய், போற்றி!
பார் முழுதும் ஆய பரமா, போற்றி!
கண் துளங்கக் காமனை முன் காய்ந்தாய், போற்றி!
கார்க் கெடிலம் கொண்ட கபாலீ, போற்றி!.
[7]
வெஞ்சின வெள் ஏறு ஊர்தி உடையாய், போற்றி!
விரிசடைமேல் வெள்ளம் படைத்தாய், போற்றி!
துஞ்சாப் பலிதேரும் தோன்றால், போற்றி!
தொழுத கை துன்பம் துடைப்பாய், போற்றி!
நஞ்சு ஒடுங்கும் கண்டத்து நாதா, போற்றி!
நால்மறையோடு ஆறு அங்கம் ஆனாய், போற்றி!
அம் சொலாள் பாகம் அமர்ந்தாய், போற்றி!
அலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.
[8]
சிந்தை ஆய் நின்ற சிவனே, போற்றி!
சீபர்ப்பதம் சிந்தைசெய்தாய், போற்றி!
புந்தி ஆய்ப் புண்டரிகத்து உள்ளாய், போற்றி!
புண்ணியனே, போற்றி! புனிதா, போற்றி!
சந்திஆய் நின்ற சதுரா, போற்றி!
தத்துவனே, போற்றி! என் தாதாய், போற்றி!
அந்தி ஆய் நின்ற அரனே, போற்றி!
அலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.
[9]
முக்கணா, போற்றி! முதல்வா, போற்றி!
முருகவேள்தன்னைப் பயந்தாய், போற்றி!
தக்கணா, போற்றி! தருமா, போற்றி!
தத்துவனே, போற்றி! என் தாதாய் போற்றி!
தொக்கு அணா என்று இருவர் தோள் கைகூப்ப,
துளங்காது எரிசுடர் ஆய் நின்றாய், போற்றி!
எக்கண்ணும் கண் இலேன்; எந்தாய், போற்றி!
எறி செடில வீரட்டத்து ஈசா, போற்றி!.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.006   அரவு அணையான் சிந்தித்து அரற்றும்(ம்)
பண் - குறிஞ்சி (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
அரவு அணையான் சிந்தித்து அரற்றும்(ம்) அடி; அருமறையான் சென்னிக்கு அணி ஆம் அடி; சரவணத்தான் கைதொழுது சாரும்(ம்) அடி; சார்ந்தார்கட்கு எல்லாம் சரண் ஆம் அடி; பரவுவார் பாவம் பறைக்கும்(ம்) அடி; பதினெண்கணங்களும் பாடும்(ம்) அடி; திரை விரவு தென் கெடில நாடன்(ன்)அடி திருவீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி.
[1]
கொடுவினையார் என்றும் குறுகா அடி; குறைந்துஅடைந்தார் ஆழாமைக் காக்கும்(ம்) அடி; படு முழவம் பாணி பயிற்றும்(ம்) அடி; பதைத்து எழுந்த வெங் கூற்றைப் பாய்ந்த(வ்) அடி; கடு முரண் ஏறு ஊர்ந்தான் கழல்சேவடி; கடல் வையம் காப்பான் கருதும்(ம்) அடி; நெடு மதியம் கண்ணி அணிந்தான் அடி நிறை கெடில வீரட்டம் நீங்கா அடி.
[2]
வைது எழுவார் காமம், பொய், போகா அடி; வஞ்சவலைப்பாடு ஒன்று இல்லா அடி; கைதொழுது நாம் ஏத்திக் காணும்(ம்) அடி; கணக்கு வழக்கைக் கடந்த(வ்) அடி; நெய்-தொழுது, நாம் ஏத்தி-ஆட்டும்(ம்) அடி; நீள் விசும்பை ஊடு அறுத்து நின்ற(வ்) அடி; தெய்வப்புனல் கெடில நாடன்(ன்) அடி-திரு வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி;
[3]
அரும்பித்த செஞ்ஞாயிறு ஏய்க்கும்(ம்) அடி; அழகு எழுதல் ஆகா அருள் சேவடி; சுரும்பித்த வண்டு இனங்கள் சூழ்ந்த(வ்) அடி; சோமனையும் காலனையும் காய்ந்தவ(வ்) அடி; பெரும் பித்தர் கூடிப் பிதற்றும்(ம்) அடி; பிழைத்தார் பிழைப்பு அறிய வல்ல(வ்) அடி; திருந்து நீர்த் தென்கெடில நாடன்(ன்) அடி திரு வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி.
[4]
ஒரு காலத்து ஒன்று ஆகி நின்ற(வ்) அடி; ஊழிதோறுஊழி உயர்ந்த(வ்) அடி; பொரு கழலும் பல்சிலம்பும் ஆர்க்கும்(ம்) அடி; புகழ்வார் புகழ் தகைய வல்ல(வ்) அடி; இரு நிலத்தார் இன்பு உற்று அங்கு ஏத்தும்(ம்) அடி; இன்பு உற்றார் இட்ட பூ ஏறும்(ம்) அடி; திரு அதிகைத் தென்கெடில நாடன்(ன்) அடி-திரு வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி.
[5]
திருமகட்குச் செந்தாமரை ஆம் அடி; சிறந்தவர்க்குத் தேன் ஆய் விளைக்கும்(ம்) அடி; பொருளவர்க்குப் பொன் உரை ஆய் நின்ற(வ்) அடி; புகழ்வார் புகழ் தகைய வல்ல(வ்) அடி; உரு இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒவ்வா அடி; உரு என்று உணரப்படாத(வ்)அடி; திரு அதிகைத் தென் கெடில நாடன்(ன்) அடி-திரு வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி.
[6]
உரைமாலைஎல்லாம் உடைய(வ்) அடி; உரையால் உணரப்படாத(வ்) அடி; வரைமாதை வாடாமை வைக்கும்(ம்) அடி; வானவர்கள் தாம் வணங்கி வாழ்த்தும்(ம்) அடி; அரைமாத்திரையில் அடங்கும்(ம்) அடி; அகலம் அளக்கிற்பார் இல்லா அடி; கரை மாங் கலிக் கெடில நாடன்(ன்) அடி கமழ் வீரட்டானக் காபாலி(ய்) அடி;
[7]
நறுமலர் ஆய் நாறும் மலர்ச்சேவடி; நடு ஆய் உலகம் நாடு ஆய(வ்) அடி; செறிகதிரும் திங்களும் ஆய் நின்ற(வ்) அடி; தீத்திரள் ஆய் உள்ளே திகழ்ந்த(வ்) அடி; மறு மதியை மாசு கழுவும்(ம்) அடி; மந்திரமும் தந்திரமும் ஆய(வ்) அடி; செறி கெடில நாடர் பெருமான் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி.
[8]
அணியனவும் சேயனவும் அல்லா அடி; அடியார்கட்கு ஆர் அமுதம் ஆய(வ்) அடி; பணிபவர்க்குப் பாங்கு ஆக வல்ல(வ்) அடி; பற்று அற்றார் பற்றும் பவள(வ்) அடி; மணி அடி; பொன் அடி; மாண்பு ஆம் அடி; மருந்து ஆய்ப் பிணி தீர்க்க வல்ல(வ்) அடி; தணிபு ஆடு தண்கெடில நாடன்(ன்) அடி தகை சார் வீரட்டத் தலைவன்(ன்) அடி;,
[9]
அம் தாமரைப்போது அலர்ந்த(வ்) அடி; அரக்கனையும் ஆற்றல் அழித்த(வ்) அடி; முந்துஆகி முன்னே முளைத்த(வ்) அடி; முழங்கு அழல் ஆய் நீண்ட எம் மூர்த்தி(ய்) அடி; பந்து ஆடு மெல்விரலாள் பாகன்(ன்) அடி; பவளத்தடவரையே போல்வான் அடி; வெந்தார் சுடலை நீறு ஆடும்(ம்) அடி-வீரட்டம் காதல் விமலன்(ன்) அடி.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.007   செல்வப் புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
பண் - காப்புத்திருத்தாண்டகம் (திருவதிகை வீரட்டானம் )
சிறை ஆர் புனல் கெடில வீரட்ட(ம்)மும், திருப் பாதிரிப்புலியூர், திரு ஆமாத்தூர், துறை ஆர் வன முனிகள் ஏத்த நின்ற சோற்றுத்துறை, துருத்தி, நெய்த்தான(ம்)மும், - அறை ஆர் புனல் ஒழுகு காவிரீ சூழ் ஐயாற்று அமுதர்-பழனம், நல்லம், கறை ஆர் பொழில் புடை சூழ் கானப்பேரும், கழுக்குன்றும்-தம்முடைய காப்புக்களே.
[3]
திரை ஆர் புனல் கெடில வீரட்ட(ம்)மும், திரு ஆரூர், தேவூர், திரு நெல்லிக்கா, உரையார் தொழ நின்ற ஒற்றியூரும், ஓத்தூரும், மாற்பேறும், மாந்துறையும், வரை ஆர் அருவி சூழ் மாநதியும், மாகாளம், கேதாரம், மா மேரு(வ்)வும்- கரை ஆர் புனல் ஒழுகு காவிரீ சூழ் கடம்பந்துறை உறைவார் காப்புக்களே.
[4]
செழு நீர்ப்-புனல் கெடில வீரட்ட(ம்)மும், திரிபுராந்தகம், தென் ஆர் தேவீச்சுரம், கொழு நீர் புடை சுழிக்கும் கோட்டுக்காவும், குடமூக்கும், கோகரணம், கோலக்காவும், பழி நீர்மை இல்லாப் பனங்காட்டூரும், பனையூர், பயற்றூர், பராய்த்துறையும், கழுநீர் மது விரியும் காளிங்க(ம்)மும் - கணபதீச்சுரத்தார் தம் காப்புக்களே.
[5]
தெய்வப் புனல் கெடில வீரட்ட(ம்)மும், செழுந் தண் பிடவூரும், சென்று நின்று பவ்வம் திரியும் பருப்பத(ம்)மும், பறியலூர் வீரட்டம், பாவநாசம், மவ்வம் திரையும் மணி முத்த(ம்)மும், மறைக்காடும், வாய்மூர், வலஞ்சுழி(ய்)யும், கவ்வை வரிவண்டு பண்ணேபாடும் கழிப்பாலை-தம்முடைய காப்புக்களே.
[6]
தெண் நீர்ப்-புனல் கெடில வீரட்ட(ம்)மும், தீக்காலிவல்லம், திரு வேட்டி(ய்)யும், உண் நீர் ஆர் ஏடகமும், ஊறல், அம்பர், உறையூர், நறையூர், அரண நல்லூர், விண்ணார் விடையான் விளமர், வெண்ணி, மீயச்சூர், வீழிமிழலை, மிக்க கண் ஆர் நுதலார் கரபுர(ம்)மும்-காபாலியார் அவர்தம் காப்புக்களே.
சீர் ஆர் புனல் கெடில வீரட்ட(ம்)மும், திருக்காட்டுப்பள்ளி, திரு வெண்காடும், பாரார் பரவும் சீர்ப் பைஞ்ஞீலியும், பந்தணைநல்லூரும், பாசூர், நல்லம், நீர் ஆர் நிறை வயல் சூழ் நின்றியூரும், நெடுங்களமும், நெல்வெண்ணெய், நெல்வாயி(ல்)லும், கார் ஆர் கமழ் கொன்றைத்தாரார்க்கு என்றும்-கடவூரில் வீரட்டம்-காப்புக்களே.
[9]
சிந்தும் புனல் கெடில வீரட்ட(ம்)மும், திரு வாஞ்சியமும், திரு நள்ளாறும், அம் தண்பொழில் புடை சூழ் அயோகந்தியும், ஆக்கூரும், ஆவூரும், ஆன்பட்டி(ய்)யும், எம்தம் பெருமாற்கு இடம் ஆவது(வ்) இடைச்சுரமும், எந்தை தலைச்சங்காடும், கந்தம் கமழும் கரவீர(ம்)மும், கடம்பூர்க் கரக்கோயில்-காப்புக்களே.
[10]
தேன் ஆர் புனல் கெடில வீரட்ட(ம்)மும், திருச் செம்பொன்பள்ளி, திருப் பூவணமும், வானோர் வணங்கும் மணஞ்சேரி(ய்)யும், மதில் உஞ்சைமாகாளம், வாரணாசி, ஏனோர்கள் ஏத்தும் வெகுளீச்சுரம், இலங்கு ஆர் பருப்பதத்தோடு, ஏண் ஆர் சோலைக் கான் ஆர் மயில் ஆர் கருமாரி(ய்)யும் - கறைமிடற்றார் தம்முடைய காப்புக்களே.
[11]
திரு நீர்ப்-புனல் கெடில வீரட்ட(ம்)மும், திரு அளப்பூர், தெற்கு ஏறு சித்தவடம், உரு நீர் வளம் பெருகு மா நிருப(ம்)மும் - மயிலாப்பில் மன்னினார், மன்னி ஏத்தும் பெருநீர் வளர்சடையான் பேணி நின்ற - பிரமபுரம், சுழியல், பெண்ணாகடம் கருநீலவண்டு அரற்றும் காளத்தி(ய்)யும், கயிலாயம்-தம்முடைய காப்புக்களே.
[12]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.008   விற்று ஊண் ஒன்று இல்லாத
பண் - திருத்தாண்டகம் (திருக்காளத்தி காளத்திநாதர் ஞானப்பூங்கோதையாரம்மை)
விற்று ஊண் ஒன்று இல்லாத நல்கூர்ந்தான் காண், வியன்கச்சிக் கம்பன் காண், பிச்சை அல்லால் மற்று ஊண் ஒன்று இல்லாத மா சதுரன் காண், மயானத்து மைந்தன்காண், மாசு ஒன்று இல்லாப் பொன் தூண் காண், மா மணி நல்குன்று ஒப்பான் காண், பொய்யாது பொழில் ஏழும் தாங்கி நின்ற கல்-தூண் காண்-காளத்தி காணப்பட்ட கண நாதன் காண்;அவன் என் கண் உளானே.
[1]
இடிப்பான் காண், என் வினையை;ஏகம்பன் காண்;எலும்பு ஆபரணன் காண்;எல்லாம் முன்னே முடிப்பான் காண்;மூஉலகும் ஆயினான் காண்; முறைமையால் ஐம்புரியும் வழுவா வண்ணம் படித்தான் தலை அறுத்த பாசுபதன் காண்; பராய்த்துறையான்;பழனம், பைஞ்ஞீலியான் காண்; கடித்தார் கமழ்கொன்றைக் கண்ணியான் காண் - காளத்தியான் அவன், என் கண் உளானே.
[2]
நாரணன் காண், நான்முகன் காண், நால்வேதன் காண், ஞானப் பெருங்கடற்கு ஓர் நாவாய் அன்ன பூரணன் காண், புண்ணியன் காண், புராணன் தான் காண், புரிசடைமேல் புனல் ஏற்ற புனிதன் தான்காண், சாரணன் காண், சந்திரன் காண், கதிரோன் தான் காண், தன்மைக் கண்-தானேகாண், தக்கோர்க்கு எல்லாம் காரணன் காண்-காளத்தி காணப்பட்ட கண நாதன் காண்;அவன் என் கண் உளானே.
[3]
செற்றான் காண், என் வினையை;தீ ஆடீ காண்; திரு ஒற்றியூரான் காண்;சிந்தைசெய்வார்க்கு உற்றான் காண்;ஏகம்பம் மேவினான் காண்; உமையாள் நல்கொழு நன் காண்;இமையோர் ஏத்தும் சொல்-தான் காண்;சோற்றுத்துறை உளான் காண்; சுறாவேந்தன் ஏவலத்தை நீறா நோக்கக் கற்றான் காண்-காளத்தி காணப்பட்ட கணநாதன் காண்;அவன் என் கண் உளானே.
[4]
மனத்து அகத்தான்;தலைமேலான்;வாக்கின் உள்ளான்; வாய் ஆரத் தன் அடியே பாடும் தொண்டர்- இனத்து அகத்தான்;இமையவர்தம் சிரத்தின்மேலான்; ஏழ் அண்டத்து அப்பாலான்;இப் பால் செம்பொன் புனத்து அகத்தான்;நறுங்கொன்றைப் போதின் உள்ளான்; பொருப்பு இடையான்;நெருப்பு இடையான்;காற்றின் உள்ளான்; கனத்து அகத்தான்;கயிலாயத்து உச்சி உள்ளான் காளத்தியான் அவன், என் கண் உளானே.
[5]
எல்லாம் முன் தோன்றாமே தோன்றினான் காண்; ஏகம்பம் மேயான் காண்;இமையோர் ஏத்தப் பொல்லாப் புலன் ஐந்தும் போக்கினான் காண்; புரிசடை மேல் பாய் கங்கை பூரித்தான் காண்; நல்ல விடை மேற்கொண்டு, நாகம் பூண்டு, நளிர் சிரம் ஒன்று ஏந்தி, ஓர் நாண் ஆய் அற்ற கல் ஆடை மேல் கொண்ட காபாலீ காண் - காளத்தியான் அவன், என் கண் உளானே.
[6]
கரி உருவு கண்டத்து எம் கண் உளான் காண்; கண்டன் காண்; வண்டு உண்ட கொன்றையான் காண்; எரி, பவள, வண்ணன் காண், ஏகம்பன் காண்; எண்திசையும் தான் ஆய குணத்தினான் காண்; திரிபுரங்கள் தீ இட்ட தீ ஆடி காண்; தீவினைகள் தீர்த்திடும் என் சிந்தையான் காண்; கரி உரிவை போர்த்து உகந்த காபாலீ காண் - காளத்தியான் அவன், என் கண் உளானே.
[7]
இல் ஆடிச் சில்பலி சென்று ஏற்கின்றான் காண்; இமையவர்கள் தொழுது இறைஞ்ச இருக்கின்றான் காண்; வில் ஆடி வேடனாய் ஓடினான் காண்; வெண் நூலும் சேர்ந்த அகலத்தான் காண்; மல் ஆடு திரள் தோள்மேல் மழுவாளன் காண்; மலைமகள் தன் மணாளன் காண்; மகிழ்ந்து முன்நாள் கல்லாலின் கீழ் இருந்த காபாலீகான் காளத்தியான் அவன், என் கண் உளானே.
[8]
தேனப் பூ வண்டு உண்ட கொன்றையான் காண்; திரு ஏகம்பத்தான் காண்;தேன் ஆர்ந்து உக்க ஞானப் பூங்கோதையாள் பாகத்தான் காண்; நம்பன் காண்;ஞானத்து ஒளி ஆனான் காண்; வானப் பேர் ஊரும் மறிய ஓடி மட்டித்து நின்றான் காண்;வண்டு ஆர் சோலைக் கானப்பேரூரான் காண்;கறைக் கண்டன் காண் - காளத்தியான் அவன், என் கண் உளானே.
[9]
இறையவன் காண்;ஏழ் உலகும் ஆயினான்காண்; ஏழ்கடலும் சூழ் மலையும் ஆயினான் காண்; குறை உடையார் குற்றேவல் கொள்வான் தான் காண்; குடமூக்கில் கீழ்க்கோட்டம் மேவினான் காண்; மறை உடைய வானோர் பெருமான் தான் காண்; மறைக்காட்டு உறையும் மணிகண்டன் காண்; கறை உடைய கண்டத்து எம் காபாலீ காண் - காளத்தியான் அவன், என் கண் உளானே.
[10]
உண்ணா அருநஞ்சம் உண்டான் தான் காண்;ஊழித்தீ அன்னான் காண்;உகப்பார் காணப் பண் ஆரப் பல் இலயம் பாடினான் காண்;பயின்ற நால் வேதத்தின் பண்பினான் காண்; அண்ணாமலையான் காண்;அடியார் ஈட்டம் அடி இணைகள் தொழுது ஏத்த அருளுவான் காண்; கண் ஆரக் காண்பார்க்கு ஓர் காட்சியான் காண் - காளத்தியான் அவன், என் கண் உளானே.
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.009   வண்ணங்கள் தாம் பாடி, வந்து
பண் - திருத்தாண்டகம் (திருவாமாத்தூர் அழகியநாதேசுவரர் அழகியநாயகியம்மை)
வண்ணங்கள் தாம் பாடி, வந்து நின்று, வலி செய்து, வளை கவர்ந்தார்-வகையால் நம்மைக் கண் அம்பால் நின்று எய்து, கனலப் பேசி, கடியது ஓர் விடை ஏறி-காபாலி(ய்)யார்; சுண்ணங்கள் தாம் கொண்டு துதையப் பூசித்தோல் உடுத்து நூல் பூண்டு தோன்றத்தோன்ற அண்ணலார் போகின்றார்;வந்து காணீர்-அழகியரே, ஆமாத்தூர் ஐயனாரே!.
[1]
வெந்தார் வெண்பொடிப் பூசி, வெள்ளை மாலை விரிசடைமேல்-தாம் சூடி, வீணை ஏந்தி, கந்தாரம் தாம் முரலா, போகா நிற்க, :கறை சேர் மணிமிடற்றீர்! ஊர் ஏது? என்றேன்; நொந்தார் போல் வந்து எனது இல்லே புக்கு, நுடங்கு ஏர் இடை மடவாய்! நம் ஊர் கேட்கில், அம் தாமரை மலர் மேல் அளி-வண்டு யாழ் செய் ஆமாத்தூர் என்று, அடிகள் போயினாரே.
[2]
கட்டங்கம் தாம் ஒன்று கையில் ஏந்தி, கடிய விடை ஏறி-காபாலி(ய்)யார்- இட்டங்கள் தாம் பேசி, இல்லே புக்கு, இடும் பலியும் இடக் கொள்ளார்;போவார் அல்லர்; பட்டிமையும் படிறுமே பேசுகின்றார்;பார்ப்பாரைப் பரிசு அழிப்பார் போல்கின்றார், தாம்; அட்டிய சில்பலியும் கொள்ளார்;விள்ளார் - அழகியரே, ஆமாத்தூர் ஐயனாரே!.
[3]
பசைந்த பல பூதத்தர், பாடல் ஆடல்;பட நாகக்கச்சையர்;பிச்சைக்கு என்று அங்கு இசைந்தது ஓர் இயல்பினர்;எரியின் மேனி இமையா முக்கண்ணினர்;நால்வேதத்தர்; பிசைந்த திருநீற்றினர்;பெண் ஓர்பாகம் பிரிவு அறியாப் பிஞ்ஞகனார்;தெண் நீர்க் கங்கை அசைந்த திருமுடியர்;அங்கைத் தீயர் - அழகியரே, ஆமாத்தூர் ஐயனாரே!.
[4]
உருள் உடைய தேர், புரவியோடும், யானை, ஒன்றாலும் குறைவு இல்லை;ஊர்திவெள் ஏறு; இருள் உடைய கண்டத்தர்;செந்தீவண்ணர்; இமையவர்கள் தொழுது ஏத்தும் இறைவனார், தாம்; பொருள் உடையர் அல்லர்;இலரும் அல்லர்; புலித்தோல் உடை ஆகப் பூதம் சூழ, அருள் உடைய அம் கோதை, மாலை மார்பர் - அழகியரே, ஆமாத்தூர் ஐயனாரே!.
[5]
வீறு உடைய ஏறு ஏறி, நீறு பூசி, வெண்தோடு பெய்து, இடங்கை வீணை ஏந்தி, கூறு உடைய மடவாள் ஓர்பாகம் கொண்டு, குழை ஆட, கொடுகொட்டி கொட்டா, வந்து, பாறு உடைய படுதலை ஓர் கையில் ஏந்தி, பலி கொள்வார் அல்லர், படிறே பேசி; ஆறு உடைய சடைமுடி எம் அடிகள் போலும்-அழகியரே, ஆமாத்தூர் ஐயனாரே!.
[6]
கை ஓர் கபாலத்தர்;மானின் தோலர்;கருத்து உடையர்;நிருத்தராய்க் காண்பார் முன்னே; செய்ய திரு மேனி வெண் நீறு ஆடி, திகழ் புன்சடை முடிமேல்-திங்கள் சூடி, மெய் ஒருபாகத்து உமையை வைத்து, மேவார் திரிபுரங்கள் வேவச் செய்து(வ்), ஐயனார் போகின்றார்;வந்து காணீர்-அழகியரே, ஆமாத்தூர் ஐயனாரே!.
[7]
ஒன்றாலும் குறைவு இல்லை;ஊர்தி வெள் ஏறு; ஒற்றியூர் உம் ஊரே? உணரக் கூறீர்! நின்று தான் என் செய்வீர், போவீர் ஆகில்? நெற்றிமேல் கண் காட்டி நிறையும் கொண்டீர்; என்றும் தான் இவ் வகையே இடர் செய்கின்றீர்; இருக்கும் ஊர் இனி அறிந்தோம், ஏகம்ப(ம்)மோ? அன்றித்தான் போகின்றீர், அடிகள்! எம்மோடு; -அழகியரே, ஆமாத்தூர் ஐயனாரே!.
[8]
கல்லலகு தாம் கொண்டு, காளத்தி(ய்)யார், கடிய விடை ஏறி, காணக்காண இல்லமே தாம் புகுதா, இடுமின், பிச்சை! என்றாருக்கு எதிர் எழுந்தேன்;எங்கும் காணேன்; சொல்லாதே போகின்றீர்;உம் ஊர் ஏது? துருத்தி? பழனமோ? நெய்த்தான(ம்)மோ? அல்லலே செய்து அடிகள் போகின்றார், தாம்-அழகியரே, ஆமாத்தூர் ஐயனாரே!.
நீர் உலாம் சடைமுடிமேல்-திங்கள் ஏற்றார்; நெருப்பு ஏற்றார், அங்கையில் நிறையும் ஏற்றார்; ஊர் எலாம் பலி ஏற்றார்;அரவம் ஏற்றார்; ஒலிகடல்வாய் நஞ்சம் மிடற்றில் ஏற்றார்; வார் உலாம் முலை மடவாள் பாகம் ஏற்றார்; மழு ஏற்றார்;மான்மறி ஓர் கையில் ஏற்றார்; பார் உலாம் புகழ் ஏற்றார்;பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே.
[4]
தொண்டர் தொழுது ஏத்தும் சோதி ஏற்றார்; துளங்கா மணி முடியார்; தூய நீற்றார்; இண்டைச் சடை முடியார்; ஈமம் சூழ்ந்த இடு பிணக்காட்டு ஆடலார், ஏமம் தோறும்; அண்டத்துக்கு அப் புறத்தார்; ஆதி ஆனார்; அருக்கனாய், ஆர் அழல் ஆய், அடியார்மேலைப் பண்டை வினை அறுப்பார்; பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே.
[5]
கடம் மன்னு களியானை உரிவை போர்த்தார்; கானப்பேர் காதலார்; காதல்செய்து மடம் மன்னும் அடியார் தம் மனத்தின் உள்ளார்; மான் உரி தோல் மிசைத்தோளார்; மங்கை காண நடம் மன்னி ஆடுவார்; நாகம் பூண்டார்; நால்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார்; படம் மன்னு திருமுடியார்; பைங்கண்ஏற்றார்; பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே.
[6]
முற்றா மதிச் சடையார்; மூவர் ஆனார்; மூஉலகும் ஏத்தும் முதல்வர் ஆனார்; கற்றார்பரவும்கழலார்;திங்கள்,கங்கையாள்,காதலார்; காம்புஏய்தோளி பற்று ஆகும் பாகத்தார்; பால் வெண் நீற்றார்; பான்மையால் ஊழி, உலகம், ஆனார்; பற்றார் மதில் எரித்தார்; பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே.
[7]
கண் அமரும் நெற்றியார்; காட்டார்; நாட்டார்; கன மழுவாள் கொண்டது ஓர் கையார்; சென்னிப் பெண் அமரும் சடைமுடியார்; பேர் ஒன்று இல்லார்; பிறப்பு இலார்; இறப்பு இலார்; பிணி ஒன்று இல்லார்; மண்ணவரும், வானவரும், மற்றையோரும், மறையவரும், வந்து எதிரே வணங்கி ஏத்தப் பண் அமரும் பாடலார்; பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே.
[8]
ஏறு ஏறி ஏழ் உலகும் ஏத்த நின்றார்; இமையவர்கள் எப்பொழுதும் இறைஞ்ச நின்றார்; நீறு ஏறு மேனியார்; நீலம் உண்டார்; நெருப்பு உண்டார்; அங்கை அனலும் உண்டார்; ஆறு ஏறு சென்னியார்; ஆன் அஞ்சு ஆடி; அனல் உமிழும் ஐவாய் அரவும் ஆர்த்தார்; பாறு ஏறு வெண்தலையார், பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே.
[9]
கல் ஊர் கடி மதில்கள் மூன்றும் எய்தார்; காரோணம் காதலார்; காதல்செய்து நல்லூரார்; ஞானத்தார்; ஞானம் ஆனார்; நால்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார்; மல் ஊர் மணி மலையின்மேல் இருந்து, வாள் அரக்கர்கோன் தலையை மாளச் செற்று, பல் ஊர் பலி திரிவார்; பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.011   பிறவாதே தோன்றிய பெம்மான் தன்னை,
பண் - திருத்தாண்டகம் (திருப்புன்கூரும் திருநீடூரும் சிவலோகநாதர், சோமநாதேசுவரர் சொக்கநாயகியம்மை)
பிறவாதே தோன்றிய பெம்மான் தன்னை, பேணாதார் அவர் தம்மைப் பேணாதானை, துறவாதே கட்டு அறுத்த சோதியானை, தூ நெறிக்கும் தூ நெறி ஆய் நின்றான் தன்னை; திறம் ஆய எத்திசையும் தானே ஆகித் திருப் புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை, நிறம் ஆம் ஒளியானை, நீடூரானை,-நீதனேன் என்னே நான் நினையா ஆறே!.
[1]
பின்தானும் முன்தானும் ஆனான் தன்னை, பித்தர்க்குப் பித்தனாய் நின்றான் தன்னை, நன்று ஆங்கு அறிந்தவர்க்கும் தானே ஆகி நல்வினையும் தீவினையும் ஆனான் தன்னை, சென்று ஓங்கி விண் அளவும் தீ ஆனானை, திருப் புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை, நின்று ஆய நீடூர் நிலாவினானை, -நீதனேன் என்னே நான் நினையா ஆறே!.
கலைஞானம் கல்லாமே கற்பித்தானை, கடு நரகம் சாராமே காப்பான் தன்னை, பல ஆய வேடங்கள் தானே ஆகி, பணிவார்கட்கு அங்கு அங்கே பற்று ஆனானை; சிலையால் புரம் எரித்த தீஆடி(ய்)யை, திருப் புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை, நிலை ஆர் மணி மாட நீடூரானை,-நீதனேன் என்னே நான் நினையா ஆறே!.
[4]
நோக்காதே எவ் அளவும் நோக்கினானை, நுணுகாதே யாது ஒன்றும் நுணுகினானை, ஆக்காதே யாது ஒன்றும் ஆக்கினானை, அணுகாதார் அவர் தம்மை அணுகாதானை, தேக்காதே தெண்கடல் நஞ்சு உண்டான் தன்னை, திருப் புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை, நீக்காத பேர் ஒளி சேர் நீடூரானை,-நீதனேன் என்னே நான் நினையா ஆறே!.
உரை ஆர் பொருளுக்கு உலப்பு இலானை, ஒழியாமே எவ் உருவும் ஆனான் தன்னை, புரை ஆய்க் கனம் ஆய் ஆழ்ந்து ஆழாதானை, புதியனவும் ஆய் மிகவும் பழையான் தன்னை திரை ஆர் புனல் சேர் மகுடத்தானை, திருப் புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை, நிரை ஆர் மணி மாட நீடூரானை,-நீதனேன் என்னே நான் நினையா ஆறே!.
[7]
கூர் அரவத்து அணையானும் குளிர்தண்பொய்கை மலரவனும் கூடிச் சென்று அறியமாட்டார்; ஆர் ஒருவர் அவர் தன்மை அறிவார்? தேவர், அறிவோம் என்பார்க்கு எல்லாம் அறியல் ஆகாச் சீர் அரவக் கழலானை, நிழல் ஆர் சோலைத் திருப் புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை, நீர் அரவத் தண்கழனி நீடூரானை,-நீதனேன் என்னே நான் நினையா ஆறே!.
[8]
கை எலாம் நெய் பாய, கழுத்தே கிட்ட, கால் நிமிர்த்து, நின்று உண்ணும் கையர் சொன்ன பொய் எலாம் மெய் என்று கருதிப் புக்குப் புள்ளுவரால் அகப்படாது உய்யப் போந்தேன்; செய் எலாம் செழுங் கமலப் பழன வேலித் திருப் புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை, நெய்தல் வாய்ப் புனல் படப்பை நீடூரானை, -நீதனேன் என்னே நான் நினையா ஆறே!.
[9]
இகழும் ஆறு எங்ஙனே? ஏழைநெஞ்சே! இகழாது பரந்து ஒன்று ஆய் நின்றான் தன்னை, நகழ மால்வரைக்கீழ் இட்டு, அரக்கர்கோனை நலன் அழித்து நன்கு அருளிச்செய்தான் தன்னை, திகழும் மா மதகரியின் உரி போர்த்தானை, திருப் புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை, நிகழுமா வல்லானை, நீடூரானை,-நீதனேன் என்னே நான் நினையா ஆறே!.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.012   ஊன் உடுத்தி, ஒன்பது வாசல்
பண் - திருத்தாண்டகம் (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
ஊன் உடுத்தி, ஒன்பது வாசல் வைத்து(வ்), ஒள் எலும்பு தூணா உரோமம் மேய்ந்து, தாம் எடுத்த கூரை தவிரப் போவார்; தயக்கம் பல படைத்தார், தா(ம்)மரையினார், கான் எடுத்து மா மயில்கள் ஆலும் சோலைக் கழிப்பாலை மேய கபால(அ)ப்பனார்; வான் இடத்தை ஊடு அறுத்து வல்லைச் செல்லும் வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.
[1]
முறை ஆர்ந்த மும்மதிலும் பொடியாச் செற்று, முன்னும் ஆய், பின்னும் ஆய், முக்கண் எந்தை; பிறை ஆர்ந்த சடைமுடிமேல் பாம்பு, கங்கை, பிணக்கம் தீர்த்து உடன் வைத்தார்; பெரிய நஞ்சுக் கறை ஆர்ந்த மிடற்று அடங்கக் கண்ட எந்தை- கழிப்பாலை மேய கபால (அ)ப்பனார்; மறை ஆர்ந்த வாய்மொழியால், மாய, யாக்கை, வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.
[2]
நெளிவு உண்டாக் கருதாதே, நிமலன் தன்னை நினைமின்கள், நித்தலும்! நேரிழையாள் ஆய ஒளி வண்டு ஆர் கருங்குழலி உமையாள் தன்னை ஒருபாகத்து அமர்ந்து, அடியார் உள்கி ஏத்த, களி வண்டு ஆர் கரும் பொழில் சூழ் கண்டல் வேலிக் கழிப்பாலை மேய கபால (அ)ப்பனார்; வளி உண்டு ஆர் மாயக் குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு, அவ்வழியே போதும், நாமே.
[3]
பொடி நாறு மேனியர்; பூதிப் பையர்; புலித்தோலர்; பொங்கு அரவர்; பூணநூலர்; அடி நாறு கமலத்தர்; ஆரூர் ஆதி; ஆன் அஞ்சும் ஆடும் ஆதிரையினார் தாம்- கடி நாறு பூஞ்சோலை கமழ்ந்து நாறும் கழிப்பாலை மேய கபால(அ)ப்பனார்; மடி நாறு மேனி இம் மாயம் நீங்க வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.
[4]
விண் ஆனாய்! விண்ணவர்கள் விரும்பி வந்து, வேதத்தாய்! கீதத்தாய்! விரவி எங்கும் எண் ஆனாய்! எழுத்து ஆனாய்! கடல் ஏழ் ஆனாய்! இறை ஆனாய் எம் இறையே! என்று நிற்கும் கண் ஆனாய்! கார் ஆனாய்! பாரும் ஆனாய்! கழிப்பாலையுள் உறையும் கபால (அ)ப்பனார், மண் ஆன மாயக் குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.
[5]
விண்ணப்ப விச்சாதரர்கள் ஏத்த, விரி கதிரோன், எரி சுடரான், விண்ணும் ஆகி, பண் அப்பன்; பத்தர் மனத்துள் ஏயும் பசுபதி; பாசுபதன்; தேசமூர்த்தி; கண்ணப்பன் கண் அப்பக் கண்டு உகந்தார்- கழிப்பாலை மேய கபால(அ)ப்பனார்; வண்ணப் பிணி மாய யாக்கை நீங்க வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.
[6]
பிணம் புல்கு பீறல் குரம்பை மெய்யாப் பேதப்படுகின்ற பேதை மீர்காள்! நிணம் புல்கு சூலத்தர்; நீலகண்டர்; எண் தோளர்; எண் நிறைந்த குணத்தினாலே கணம் புல்லன் கருத்து உகந்தார்; காஞ்சி உள்ளார்-கழிப்பாலை மேய கபால(அ)ப்பனார்; மணம் புல்கு மாயக் குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.
[7]
இயல்பு ஆய ஈசனை, எந்தைதந்தை, என் சிந்தை மேவி உறைகின்றானை, முயல்வானை, மூர்த்தியை, தீர்த்தம் ஆன தியம்பகன், திரிசூலத்து அனல் நகையன் கயல் பாயும் கண்டல் சூழ்வுண்ட வேலிக் கழிப்பாலை மேய கபால(அ)ப்பனார்; மயல் ஆய மாயக் குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.
[8]
செற்றது ஓர் மனம் ஒழிந்து, சிந்தைசெய்து, சிவமூர்த்தி என்று எழுவார் சிந்தையுள்ளால் உற்றது ஓர் நோய் களைந்து இவ் உலகம் எல்லாம் காட்டுவான்; உத்தமன் தான்; ஓதாது எல்லாம் கற்றது ஓர் நூலினன்; களிறு செற்றான்கழிப்பாலை மேய கபால(அ)ப்பனார்; மற்று இது ஓர் மாயக் குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.
[9]
பொருது அலங்கல் நீள் முடியான்போர் அரக்கன் புட்பகம் தான் பொருப்பின் மீது ஓடாது ஆக, இரு நிலங்கள் நடுக்கு எய்த எடுத்திடுதலும், ஏந்திழையாள் தான் வெருவ, இறைவன் நோக்கிக் கரதலங்கள் கதிர்முடி ஆறு-அஞ்சினோடு கால்விரலால் ஊன்று கழிப்பாலையார், வருதல் அங்கம் மாயக் குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.013   கொடி மாட நீள் தெருவு
பண் - குறிஞ்சி (திருப்புறம்பயம் சாட்சிவரதநாதர் கரும்பன்னசொல்லம்மை)
கொடி மாட நீள் தெருவு கூடல், கோட்டூர், கொடுங்கோளூர், தண் வளவி கண்டியூரும், நடம் ஆடும் நல் மருகல், வைகி; நாளும் நலம் ஆகும் ஒற்றியூர் ஒற்றி ஆக; படு மாலை வண்டு அறையும் பழனம், பாசூர், பழையாறும், பாற்குளமும், கைவிட்டு, இந் நாள் பொடி ஏறும் மேனியராய்ப் பூதம் சூழ, புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே!
[1]
முற்று ஒருவர் போல முழு நீறு ஆடி, முளைத்திங்கள் சூடி, முந்நூலும் பூண்டு, ஒற்று ஒருவர் போல உறங்குவேன் கை ஒளி வளையை ஒன்று ஒன்றா எண்ணுகின்றார்; மற்று ஒருவர் இல்லை, துணை எனக்கு; மால் கொண்டால் போல மயங்குவேற்கு, புற்று அரவக் கச்சு ஆர்த்துப் பூதம் சூழ, புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே!
[2]
ஆகாத நஞ்சு உண்ட அந்தி வண்ணர், ஐந்தலைய மாசுணம் கொண்டு, அம் பொன் தோள்மேல் ஏகாசமா இட்டு, ஓடு ஒன்று ஏந்தி வந்து(வ்), இடு, திருவே, பலி! என்றார்க்கு, இல்லே புக்கேன்; பாகு ஏதும் கொள்ளார்; பலியும் கொள்ளார்; பாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கி, போகாத வேடத்தர் பூதம் சூழ, புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே!
[3]
பல் மலிந்த வெண் தலை கையில் ஏந்தி,-பனி முகில் போல் மேனிப் பவந்த நாதர்- நெல் மலிந்த நெய்த்தானம், சோற்றுத்துறை, நியமம், துருத்தியும், நீடூர், பாச்சில், கல் மலிந்து ஓங்கு கழுநீர்க்குன்றம், கடல் நாகைக்காரோணம், கைவிட்டு, இந் நாள் பொன் மலிந்த கோதையரும் தாமும் எல்லாம் புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே!
[4]
செத்தவர் தம் தலைமாலை கையில் ஏந்தி, சிரமாலை சூடி, சிவந்த மேனி மத்தகத்த யானை உரிவை மூடி, மடவாள் அவளோடும் மான் ஒன்று ஏந்தி, அத் தவத்த தேவர் அறுபதின்மர் ஆறுநூறாயிரவர்க்கு ஆடல் காட்டி, புத்தகம் கைக் கொண்டு, புலித்தோல் வீக்கி, புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே!
[5]
நஞ்சு அடைந்த கண்டத்தர், வெண் நீறு ஆடி, நல்ல புலி அதள்மேல் நாகம் கட்டி, பஞ்சு அடைந்த மெல்விரலாள் பாகம் ஆக, பராய்த்துறையேன் என்று ஓர் பவள வண்ணர் துஞ்சு இடையே வந்து, துடியும் கொட்ட, துண்ணென்று எழுந்திருந்தேன்; சொல்லமாட்டேன்; புன்சடையின்மேல் ஓர் புனலும் சூடி, புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே!
[6]
மறி இலங்கு கையர் மழு ஒன்று ஏந்தி, மறைக்காட்டேன் என்று ஓர் மழலை பேசி, செறி இலங்கு திண்தோள்மேல் நீறு கொண்டு, திருமுண்டமா இட்ட திலக நெற்றி நெறி இலங்கு கூந்தலார் பின்பின் சென்று, நெடுங்கண் பனி சோர, நின்று நோக்கி, பொறி இலங்கு பாம்பு ஆர்த்து, பூதம் சூழ, புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே!
[7]
நில்லாதே பல் ஊரும் பலிகள் வேண்டி, நிரைவளையார் பலி பெய்ய நிறையும் கொண்டு, கொல் ஏறும் கொக்கரையும் கொடுகொட்டி(ய்)யும் குடமூக்கில் அங்கு ஒழிய, குளிர் தண் பொய்கை நல்லாடை, நல்லூரே, தவிரேன் என்று நறையூரில்- தாமும் தவிர்வார் போல, பொல்லாத வேடத்தர், பூதம் சூழ, புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே!.
[8]
விரை ஏறு நீறு அணிந்து, ஓர் ஆமை பூண்டு, வெண்தோடு பெய்து, இடங்கை வீணை ஏந்தி, திரை ஏறு சென்னிமேல்-திங்கள் தன்னைத் திசை விளங்க வைத்து, உகந்த செந்தீ வண்ணர், அரை ஏறு மேகலையாள் பாகம் ஆக ஆர் இடத்தில் ஆடல் அமர்ந்த ஐயன் புரை ஏறு தாம் ஏறி, பூதம் சூழ, புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே!.
[9]
கோ ஆய இந்திரன் உள்ளிட்டார் ஆகக் குமரனும், விக்கின விநாயக(ன்)னும், பூ ஆய பீடத்து மேல் அய(ன்)னும், பூமி அளந்தானும், போற்று இசைப்ப; பா ஆய இன் இசைகள் பாடி ஆடிப் பாரிடமும் தாமும் பரந்து பற்றி, பூ ஆர்ந்த கொன்றை பொறிவண்டு ஆர்க்க, புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே!.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.014   நினைந்து உருகும் அடியாரை நைய
பண் - திருத்தாண்டகம் (திருநல்லூர் பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார்; நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்; சினம் திருகு களிற்று உரிவைப் போர்வை வைத்தார்; செழு மதியின்தளிர் வைத்தார்; சிறந்து வானோர்- இனம் துருவி, மணி மகுடத்து ஏற, துற்ற இன மலர்கள் போது அவிழ்ந்து மது வாய்ப் பில்கி நனைந்தனைய திருவடி என் தலைமேல் வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.
[1]
பொன் நலத்த நறுங்கொன்றை சடைமேல் வைத்தார்; புலி உரியின் அதள் வைத்தார்; புனலும் வைத்தார்; மன் நலத்த திரள் தோள்மேல் மழுவாள் வைத்தார்; வார் காதில் குழை வைத்தார்; மதியும் வைத்தார்; மின் நலத்த நுண் இடையாள் பாகம் வைத்தார்; வேழத்தின் உரி வைத்தார்; வெண்நூல் வைத்தார்; நல்-நலத்த திருவடி என் தலைமேல் வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.
[2]
தோடு ஏறும் மலர்க்கொன்றை சடைமேல் வைத்தார்; துன் எருக்கின்வடம் வைத்தார்; துவலை சிந்த, பாடு ஏறு படு திரைகள் எறிய வைத்தார்; பனிமத்தமலர் வைத்தார்; பாம்பும் வைத்தார்; சேடு ஏறு திருநுதல் மேல் நாட்டம் வைத்தார்; சிலை வைத்தார்; மலை பெற்ற மகளை வைத்தார்; நாடு ஏறு திருவடி என் தலைமேல் வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.
[3]
வில் அருளி வரு புருவத்து ஒருத்தி பாகம் பொருத்து ஆகி, விரிசடைமேல் அருவி வைத்தார்; கல் அருளி வரிசிலையா வைத்தார்; ஊராக் கயிலாயமலை வைத்தார்; கடவூர் வைத்தார்; சொல் அருளி அறம் நால்வர்க்கு அறிய வைத்தார்; சுடுசுடலைப் பொடி வைத்தார்; துறவி வைத்தார்; நல் அருளால்-திருவடி என் தலைமேல் வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.
[4]
விண் இரியும் திரிபுரங்கள் எரிய வைத்தார்; வினை, தொழுவார்க்கு, அற வைத்தார்; துறவி வைத்தார்; கண் எரியால் காமனையும் பொடியா வைத்தார்; கடிக்கமலம் மலர் வைத்தார்; கயிலை வைத்தார்; திண் எரியும் தண் புனலும் உடனே வைத்தார்; திசை தொழுது மிசை அமரர் திகழ்ந்து வாழ்த்தி நண்ண(அ)அரிய திருவடி என் தலைமேல் வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.
[5]
உற்று உலவு பிணி உலகத்து எழுமை வைத்தார்; உயிர் வைத்தார்; உயிர் செல்லும் கதிகள் வைத்தார்; மற்று அமரர்கணம் வைத்தார்; அமரர் காணாமறை வைத்தார்; குறைமதியம் வளர வைத்தார்; செற்றம் மலி ஆர்வமொடு காமலோபம் சிறவாத நெறி வைத்தார்; துறவி வைத்தார்; நல்-தவர் சேர் திருவடி என் தலைமேல் வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.
[6]
மாறு மலைந்தார் அரணம் எரிய வைத்தார்; மணி முடிமேல் அர வைத்தார்; அணி கொள் மேனி நீறு மலிந்து எரி ஆடல் நிலவ வைத்தார்; நெற்றிமேல் கண் வைத்தார்; நிலையம் வைத்தார்; ஆறு மலைந்து அறு திரைகள் எறிய வைத்தார்; ஆர்வத்தால் அடி அமரர் பரவ வைத்தார்; நாறு மலர்த்திருவடி என் தலைமேல் வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.
[7]
குலங்கள் மிகு மலை, கடல்கள், ஞாலம், வைத்தார்; குரு மணி சேர் அர வைத்தார்; கோலம் வைத்தார்; உலம் கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார்; உண்டு அருளி விடம் வைத்தார்; எண்தோள் வைத்தார்; நிலம் கிளரும் புனல் கனலுள் அனிலம் வைத்தார்; நிமிர் விசும்பின் மிசை வைத்தார்; நினைந்தார் இந் நாள் நலம் கிளரும் திருவடி என் தலைமேல் வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.
[8]
சென்று உருளும் கதிர் இரண்டும் விசும்பில் வைத்தார்; திசைபத்தும் இரு நிலத்தில் திருந்த வைத்தார்; நின்று அருளி அடி அமரர் வணங்க வைத்தார்; நிறை தவமும் மறை பொருளும் நிலவ வைத்தார்; கொன்று அருளி, கொடுங் கூற்றம் நடுங்கி ஓட, குரைகழல்சேவடி வைத்தார்; விடையும் வைத்தார்; நன்று அருளும் திருவடி என் தலைமேல் வைத்தார்- நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.
[9]
பாம்பு உரிஞ்சி, மதி கிடந்து, திரைகள் ஏங்க, பனிக் கொன்றை சடை வைத்தார்; பணி செய் வானோர் ஆம் பரிசு தமக்கு எல்லாம் அருளும் வைத்தார்; அடு சுடலைப் பொடி வைத்தார்; அழகும் வைத்தார்; ஓம்ப(அ)அரிய வல்வினை நோய் தீர வைத்தார்; உமையை ஒருபால் வைத்தார்; உகந்து வானோர், நாம், பரவும் திருவடி என் தலைமேல் வைத்தார்- நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.
[10]
குலம் கிளரும் வரு திரைகள் ஏழும் வைத்தார்; குரு மணி சேர் மலை வைத்தார்; மலையைக் கையால் உலம் கிளர எடுத்தவன் தோள் முடியும் நோவ ஒருவிரலால் உற வைத்தார்; இறைவா! என்று புலம்புதலும், அருளொடு போர் வாளும் வைத்தார்; புகழ் வைத்தார்; புரிந்து ஆளாக் கொள்ள வைத்தார்; நலம் கிளரும் திருவடி என் தலைமேல் வைத்தார்- நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.015   குருகு ஆம்; வயிரம் ஆம்;
பண் - திருத்தாண்டகம் (திருக்கருகாவூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
குருகு ஆம்; வயிரம் ஆம்; கூறும் நாள் ஆம்; கொள்ளும் கிழமை ஆம்; கோளே தான் ஆம்; பருகா அமுதம் ஆம்; பாலின் நெய் ஆம்; பழத்தின் இரதம் ஆம்; பாட்டின் பண் ஆம்; ஒரு கால் உமையாள் ஓர்பாகனும்(ம்) ஆம்; உள்-நின்ற நாவிற்கு உரையாடி(ய்) ஆம்; கரு ஆய் உலகுக்கு முன்னே தோன்றும் கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.
[1]
வித்து ஆம்; முளை ஆகும்; வேரே தான் ஆம்; வேண்டும் உருவம் ஆம்; விரும்பி நின்ற பத்தாம் அடியர்க்கு ஓர் பாங்கனும்(ம்) ஆம்; பால் நிறமும் ஆம்; பரஞ்சோதி தான் ஆம்; தொத்து ஆம் அமரர்கணம் சூழ்ந்து போற்றத் தோன்றாது, என் உள்ளத்தின் உள்ளே நின்ற கத்து ஆம்; அடியேற்குக் காணா காட்டும் கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.
[2]
பூத் தான் ஆம்; பூவின் நிறத்தானும்(ம்) ஆம்; பூக்குளால் வாசம் ஆய் மன்னி நின்ற கோத் தான் ஆம்; கோல் வளையாள் கூறன் ஆகும்; கொண்ட சமயத்தார் தேவன் ஆகி, ஏத்தாதார்க்கு என்றும் இடரே துன்பம் ஈவான் ஆம்; என் நெஞ்சத்துள்ளே நின்று காத்தான் ஆம், காலன் அடையா வண்ணம்; கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.
[3]
இரவன் ஆம்; எல்லி நடம் ஆடி(ய்) ஆம்; எண் திசைக்கும் தேவன் ஆம்; என் உளான் ஆம்; அரவன் ஆம்; அல்லல் அறுப்பானும்(ம்) ஆம்; ஆகாசமூர்த்தி ஆம்; ஆன் ஏறு ஏறும் குரவன் ஆம்; கூற்றை உதைத்தான் தான் ஆம்; கூறாத வஞ்சக் குயலர்க்கு என்றும் கரவன் ஆம்; காட்சிக்கு எளியானும்(ம்) ஆம்; கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.
[4]
படைத்தான் ஆம்; பாரை இடந்தான் ஆகும்; பரிசு ஒன்று அறியாமை நின்றான் தான் ஆம்; உடைத்தான் ஆம், ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள் அழலால் மூட்டி ஒடுக்கி நின்று(வ்) அடைத்தான் ஆம், சூலம் மழு; ஓர் நாகம் அசைத்தான் ஆம்; ஆன் ஏறு ஒன்று ஊர்ந்தான் ஆகும்; கடைத்தான் ஆம், கள்ளம் அறுவார் நெஞ்சின்; கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.
[5]
மூலன் ஆம்; மூர்த்தி ஆம்; முன்னே தான் ஆம்; மூவாத மேனி முக்கண்ணினான் ஆம்; சீலன் ஆம்; சேர்ந்தார் இடர்கள் தீர்க்கும் செல்வன் ஆம்; செஞ்சுடர்க்கு ஓர் சோதி தான் ஆம்; மாலன் ஆம்; மங்கை ஓர்பங்கன் ஆகும்; மன்று ஆடி ஆம்; வானோர் தங்கட்கு எல்லாம் காலன் ஆம்; காலனைக் காய்ந்தான் ஆகும்; கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.
[6]
அரை சேர் அரவன் ஆம்; ஆலத்தான் ஆம்; ஆதிரை நாளான் ஆம்; அண்ட வானோர் திரை சேர் திருமுடித் திங்களான் ஆம்; தீவினை நாசன், என் சிந்தையான் ஆம்; உரை சேர் உலகத்தார் உள்ளானும்(ம்) ஆம்; உமையாள் ஓர்பாகன் ஆம்; ஓத வேலிக் கரை சேர் கடல் நஞ்சை உண்டான் ஆகும்; கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.
[7]
துடி ஆம்; துடியின் முழக்கம் தான் ஆம்; சொல்லுவார் சொல் எல்லாம் சோதிப்பான் ஆம்; படிதான் ஆம்; பாவம் அறுப்பான் ஆகும்; பால் நீற்றன் ஆம்; பரஞ்சோதிதான் ஆம்; கொடியான் ஆம் கூற்றை உதைத்தான் ஆகும்; கூறாத வஞ்சக் குயலர்க்கு என்றும் கடியான் ஆம்; காட்சிக்கு அரியான் ஆகும்; கண் ஆம்-கருகாவூர் எந்தைத்தானே.
[8]
விட்டு உருவம் கிளர்கின்ற சோதியான் ஆம்; விண்ணவர்க்கும் அறியாத சூழலான் ஆம்; பட்டு, உருவ மால்யானைத் தோல் கீண்டான் ஆம்; பல பலவும் பாணி பயின்றான் தான் ஆம்; எட்டு உருவ-மூர்த்தி ஆம், எண்தோளான் ஆம்; என் உச்சி மேலான் ஆம்; எம்பிரான் ஆம்; கட்டு உருவம் கடியானைக் காய்ந்தான் ஆகும்; கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.
[9]
பொறுத்திருந்த புள் ஊர்வான் உள்ளான் ஆகி, உள் இருந்து, அங்கு உள்-நோய் களைவான் தானாய், செறுத்திருந்த மும் மதில்கள் மூன்றும் வேவச் சிலை குனியத் தீ மூட்டும் திண்மையான் ஆம்; அறுத்திருந்த கையான் ஆம், அம் தார் அல்லி இருந்தானை ஒரு தலையைத் தெரிய நோக்கி; கறுத்திருந்த கண்டம் உடையான் போலும்; கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.
[10]
ஒறுத்தான் ஆம், ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள் அழலை மாட்டி; உடனே வைத்து(வ்) இறுத்தான் ஆம், எண்ணான் முடிகள் பத்தும்; இசைந்தான் ஆம்; இன் இசைகள் கேட்டான் ஆகும்; அறுத்தான் ஆம், அஞ்சும் அடக்கி; அங்கே ஆகாய மந்திரமும் ஆனான் ஆகும்; கறுத்தான் ஆம், காலனைக் காலால் வீழ; கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.016   சூலப்படை உடையார் தாமே போலும்;
பண் - திருத்தாண்டகம் (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
சூலப்படை உடையார் தாமே போலும்; சுடர்த திங்கள் கண்ணி உடையார் போலும்; மாலை மகிழ்ந்து ஒருபால் வைத்தார் போலும்; மந்திரமும் தந்திரமும் ஆனார் போலும்; வேலைக்-கடல் நஞ்சம் உண்டார் போலும்; மேல் வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும்; ஏலக் கமழ் குழலாள் பாகர் போலும்-இடைமருது மேவிய ஈசனாரே.
[1]
கார் ஆர் கமழ் கொன்றைக் கண்ணிபோலும்; கார் ஆனை ஈர் உரிவை போர்த்தார் போலும்; பாரார் பரவப்படுவார் போலும்; பத்துப்பல் ஊழி பரந்தார் போலும்; சீரால் வணங்கப்படுவார் போலும்; திசைஅனைத்தும் ஆய், மற்றும் ஆனார் போலும்; ஏர் ஆர் கமழ் குழலாள் பாகர் போலும்-இடைமருது மேவிய ஈசனாரே!.
பைந்தளிர்க் கொன்றை அம்தாரார் போலும்; படைக்கணாள் பாகம் உடையார் போலும்; அந்திவாய் வண்ணத்து அழகர் போலும்; அணி நீலகண்டம் உடையார் போலும்; வந்த வரவும் செலவும் ஆகி, மாறாது என் உள்ளத்து இருந்தார் போலும்; எம்தம் இடர் தீர்க்க வல்லார் போலும்-இடைமருது மேவிய ஈசனாரே.
[9]
கொன்றை அம் கூவிள மாலை தன்னைக் குளிர்சடைமேல் வைத்து உகந்த கொள்கையாரும், நின்ற அனங்கனை நீறா நோக்கி நெருப்பு உருவம் ஆய் நின்ற நிமலனாரும், அன்று அ(வ்)வ் அரக்கன் அலறி வீழ அரு வரையைக் காலால் அழுத்தினாரும், என்றும் இடு பிச்சை ஏற்று உண்பாரும்-இடைமருது மேவிய ஈசனாரே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.017   ஆறு சடைக்கு அணிவர்; அங்கைத்
பண் - திருத்தாண்டகம் (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
ஆறு சடைக்கு அணிவர்; அங்கைத் தீயர்; அழகர்; படை உடையர்; அம் பொன்தோள் மேல் நீறு தடவந்து, இடபம் ஏறி, நித்தம் பலி கொள்வர்; மொய்த்த பூதம் கூறும் குணம் உடையர்; கோவணத்தர்; கோள் தால வேடத்தர்; கொள்கை சொல்லின், ஈறும் நடுவும் முதலும் ஆவார்-இடைமருது மேவி இடம் கொண்டாரே.
[1]
மங்குல் மதி வைப்பர்; வான நாடர்; மடமான் இடம் உடையர்; மாதராளைப் பங்கில் மிக வைப்பர்; பால் போல் நீற்றர்; பளிக்குவடம் புனைவர்; பாவநாசர்; சங்கு திரை உகளும் சாய்க்காடு ஆள்வர்; சரிதை பல உடையர்; தன்மை சொல்லின், எங்கும் பலி திரிவர்; என் உள் நீங்கார்-இடைமருது மேவி இடம்கொண்டாரே.
தேசர்; திறம் நினைவார் சிந்தை சேரும் செல்வர்; திரு ஆரூர் என்றும் உள்ளார்; வாசம், மலரின்கண்; மான்தோல் போர்ப்பர்; மருவும் கரி உரியர்; வஞ்சக் கள்வர்; நேசர், அடைந்தார்க்கு; அடையாதார்க்கு நிட்டுரவர்; கட்டங்கர்; நினைவார்க்கு என்றும் ஈசர்; புனல் பொன்னித்தீர்த்தர்-வாய்த்த இடைமருது மேவி இடம் கொண்டாரே.
[4]
கரப்பர், கரிய மனக் கள்வர்க்கு; உள்ளம் கரவாதே தம் நினையகிற்பார் பாவம் துரப்பர்; தொடு கடலின் நஞ்சம் உண்பர்; தூய மறை மொழியார்; தீயால் ஒட்டி நிரப்பர்; புரம் மூன்றும் நீறு செய்வர்; நீள் சடையர்; பாய்விடை கொண்டு எங்கும் ஐயம் இரப்பர்; எமை ஆள்வர்; என் உள் நீங்கார்-இடைமருது மேவி இடம் கொண்டாரே.
[5]
கொடி ஆர் இடபத்தர்; கூத்தும் ஆடி, குளிர் கொன்றை மேல் வைப்பர்; கோலம் ஆர்ந்த பொடி ஆரும் மேனியர்; பூதிப் பையர்; புலித்தோலர்; பொங்கு அரவர்; பூண நூலர்; அடியார் குடி ஆவர்; அந்தணாளர் ஆகுதியின் மந்திரத்தார்; அமரர் போற்ற இடி ஆர் களிற்று உரியர்-எவரும் போற்ற இடைமருது மேவி இடம் கொண்டாரே.
[6]
பச்சைநிறம் உடையர்; பாலர்; சாலப் பழையர்; பிழைஎல்லாம் நீக்கி ஆள்வர்; கச்சைக் கதம் நாகம் பூண்ட தோளர்; கலன் ஒன்று கை ஏந்தி, இல்லம் தோறும் பிச்சைக் கொள நுகர்வர்; பெரியர், சால; பிறங்கு சடைமுடியர்; பேணும் தொண்டர் இச்சை மிக அறிவர்; என்றும் உள்ளார்-இடைமருது மேவி இடம் கொண்டாரே.
[7]
கா ஆர் சடைமுடியர்; காரோணத்தர்; கயிலாயம் மன்னினார்; பன்னும் இன்சொல் பா ஆர் பொருளாளர்; வாள் ஆர் கண்ணி பயிலும் திரு உருவம் பாகம் மேயார்; பூ ஆர் புனல் அணவு புன்கூர் வாழ்வர்; புரம் மூன்றும் ஒள் அழலாக் காயத் தொட்ட ஏ ஆர் சிலை மலையர்; எங்கும், தாமே;-இடைமருது மேவி இடம் கொண்டாரே.
[8]
புரிந்தார், நடத்தின்கண்; பூதநாதர்; பொழில் ஆரூர் புக்கு உறைவர்; போந்து தம்மில் பிரிந்து ஆர் அகல் வாய பேயும் தாமும் பிரியார், ஒரு நாளும்; பேணு காட்டில் எரிந்தார் அனல்,-உகப்பர்,-ஏழில் ஓசை; எவ் இடத்தும் தாமே என்று ஏத்துவார் பால் இருந்தார்-இமையவர்கள் போற்ற என்றும் இடைமருது மேவி இடம் கொண்டாரே.
[9]
விட்டு இலங்கு மா மழுவர்; வேலை நஞ்சர்; விடங்கர்; விரிபுனல் சூழ் வெண்காட்டு உள்ளார்; மட்டு இலங்கு தார்-மாலை மார்பில் நீற்றர்; மழபாடியுள் உறைவர்; மாகாளத்தர்; சிட்டு இலங்கு வல் அரக்கர் கோனை அன்று செழு முடியும் தோள் ஐந்நான்கு அடரக் காலால் இட்டு இரங்கி மற்று அவனுக்கு ஈந்தார், வென்றி;- இடைமருது மேவி இடம் கொண்டாரே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.018   வடி ஏறு திரிசூலம் தோன்றும்
பண் - திருத்தாண்டகம் (திருப்பூவணம் பூவணநாதர் மின்னாம்பிகையம்மை)
வடி ஏறு திரிசூலம் தோன்றும் தோன்றும்; வளர் சடைமேல் இளமதியம் தோன்றும் தோன்றும்; கடி ஏறு கமழ் கொன்றைக் கண்ணி தோன்றும்; காதில் வெண் குழைதோடு கலந்து தோன்றும்; இடி ஏறு களிற்று உரிவைப்போர்வை தோன்றும்; எழில் திகழும் திருமுடியும் இலங்கித் தோன்றும் பொடி ஏறு திருமேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
[1]
ஆண் ஆகிப் பெண் ஆய வடிவு தோன்றும்; அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆகித் தோன்றும்; ஊண் ஆகி ஊர் திரிவான் ஆகித் தோன்றும்; ஒற்றை வெண் பிறை தோன்றும்; பற்றார் தம்மேல் சேண் நாக வரைவில்லால் எரித்தல் தோன்றும்; செத்தவர்தம் எலும்பினால் செறியச் செய்த பூண் நாணும் அரை நாணும் பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
[2]
கல்லாலின் நீழலில் கலந்து தோன்றும் கவின் மறையோர் நால்வர்க்கும் நெறிகள் அன்று சொல் ஆகச் சொல்லியவா தோன்றும் தோன்றும்; சூழ் அரவும், மான்மறியும், தோன்றும் தோன்றும்; அல்லாத காலனை முன் அடர்த்தல் தோன்றும்; ஐவகையால் நினைவார் பால் அமர்ந்து தோன்றும்; பொல்லாத புலால் எலும்பு பூண் ஆய்த் தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
[3]
படை மலிந்த மழுவாளும் மானும் தோன்றும்; பன்னிரண்டு கண் உடைய பிள்ளை தோன்றும்; நடை மலிந்த விடையோடு கொடியும் தோன்றும்; நால்மறையின் ஒலி தோன்றும்; நயனம் தோன்றும்; உடை மலிந்த கோவணமும் கீளும் தோன்றும்; ஊரல் வெண் சிரமாலை உலாவித் தோன்றும்; புடை மலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும்- பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
[4]
மயல் ஆகும் தன் அடியார்க்கு அருளும் தோன்றும், மாசு இலாப் புன்சடைமேல் மதியம் தோன்றும்; இயல்பு ஆக இடு பிச்சை ஏற்றல் தோன்றும்; இருங்கடல் நஞ்சு உண்டு இருண்ட கண்டம் தோன்றும்; கயல் பாயக் கடுங் கலுழிக் கங்கை நங்கை ஆயிரம் ஆம் முகத்தினொடு வானில்- தோன்றும். புயல் பாயச் சடை விரித்த பொற்புத் தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
[5]
பார் ஆழி வட்டத்தார் பரவி இட்ட பல்மலரும், நறும்புகையும், பரந்து தோன்றும்; சீர் ஆழித் தாமரையின்மலர்கள் அன்ன திருந்திய மா நிறத்த சேவடிகள் தோன்றும்; ஓர் ஆழித் தேர் உடைய இலங்கை வேந்தன் உடல் துணித்த இடர் பாவம் கெடுப்பித்து, அன்று, போர் ஆழி முன் ஈந்த பொற்புத் தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
[6]
தன் அடியார்க்கு அருள்புரிந்த தகவு தோன்றும்; சதுர்முகனைத் தலை அரிந்த தன்மை தோன்றும்; மின் அனைய நுண் இடையாள் பாகம் தோன்றும்; வேழத்தின் உரி விரும்பிப் போர்த்தல் தோன்றும்; துன்னிய செஞ்சடை மேல் ஓர் புனலும் பாம்பும் தூய மா மதி உடனே வைத்தல் தோன்றும்; பொன் அனைய திருமேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
[7]
செறி கழலும் திருவடியும் தோன்றும் தோன்றும்; திரிபுரத்தை எரிசெய்த சிலையும் தோன்றும்; நெறி அதனை விரித்து உரைத்த நேர்மை தோன்றும்; நெற்றிமேல் கண் தோன்றும்; பெற்றம் தோன்றும்; மறுபிறவி அறுத்து அருளும் வகையும் தோன்றும்; மலைமகளும் சலமகளும் மலிந்து தோன்றும்; பொறி அரவும் இளமதியும் பொலிந்து தோன்றும்- பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
[8]
அருப்பு ஓட்டு முலை மடவாள் பாகம் தோன்றும்; அணி கிளரும் உரும் என்ன அடர்க்கும் கேழல்- மருப்பு ஓட்டு மணிவயிரக்கோவை தோன்றும்; மணம் மலிந்த நடம் தோன்றும்; மணி ஆர் வைகைத் திருக்கோட்டில் நின்றது ஓர் திறமும் தோன்றும்; செக்கர்வான் ஒளி மிக்குத் திகழ்ந்த சோதிப் பொருப்பு ஓட்டி நின்ற திண்புயமும் தோன்றும்- பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
[9]
ஆங்கு அணைந்த சண்டிக்கும் அருளி,அன்று, தன் முடிமேல் அலர்மாலை அளித்தல் தோன்றும்; பாங்கு அணைந்து பணி செய்வார்க்கு அருளி, அன்று, பலபிறவி அறுத்து அருளும் பரிசு தோன்றும்; கோங்கு அணைந்த கூவிளமும் மதமத்த(ம்)மும் குழற்கு அணிந்த கொள்கையொடு கோலம் தோன்றும்; பூங்கணை வேள் உரு அழித்த பொற்புத் தோன்றும்- பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
[10]
ஆர் உருவ உள்குவார் உள்ளத்துள்ளே அவ் உரு ஆய் நிற்கின்ற அருளும் தோன்றும்; வார் உருவப்பூண் முலை நல் மங்கை தன்னை மகிழ்ந்து ஒருபால் வைத்து உகந்த வடிவும் தோன்றும்; நீர் உருவக் கடல் இலங்கை அரக்கர் கோனை நெறு நெறு என அடர்த்திட்ட நிலையும் தோன்றும்; போர் உருவக் கூற்று உதைத்த பொற்புத் தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.019   முளைத்தானை, எல்லார்க்கும் முன்னே தோன்றி;
பண் - திருத்தாண்டகம் (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
விண்ணுலகின் மேலார்கள் மேலான் தன்னை, மேல் ஆடு புரம் மூன்றும் பொடி செய்தானை, பண் நிலவு பைம்பொழில் சூழ் பழனத்தானை, பசும் பொன்னின் நிறத்தானை, பால் நீற்றானை, உள்-நிலவு சடைக்கற்றைக் கங்கையாளைக் கரந்து உமையோடு உடன் ஆகி இருந்தான் தன்னை,- தெள்-நிலவு தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.
[2]
நீர்த்திரளை நீள் சடைமேல் நிறைவித்தானை, நிலம் மருவி நீர் ஓடக் கண்டான் தன்னை, பால்-திரளைப் பயின்று ஆட வல்லான் தன்னை, பகைத்து எழுந்த வெங் கூற்றைப் பாய்ந்தான் தன்னை, கால்-திரள் ஆய் மேகத்தினுள்ளே நின்று கடுங் குரல் ஆய் இடிப்பானை, கண் ஓர் நெற்றித் தீத்திரளை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.
[3]
வானம், இது, எல்லாம் உடையான் தன்னை; வரி அரவக் கச்சானை; வன்பேய் சூழக் கானம் அதில் நடம் ஆட வல்லான் தன்னை, கடைக் கண்ணால் மங்கையையும் நோக்கா; என்மேல் ஊனம் அது எல்லாம் ஒழித்தான் தன்னை; உணர்வு ஆகி அடியேனது உள்ளே நின்ற தேன் அமுதை;-தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.
[4]
ஊரானை, உலகு ஏழ் ஆய் நின்றான் தன்னை, ஒற்றை வெண் பிறையானை, உமையோடு என்றும் பேரானை, பிறர்க்கு என்றும் அரியான் தன்னை, பிணக்காட்டில் நடம் ஆடல் பேயோடு என்றும் ஆரானை, அமரர்களுக்கு அமுது ஈந்தானை, அருமறையால் நான்முகனும் மாலும் போற்றும் சீரானை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.
[5]
மூவனை, மூர்த்தியை, மூவா மேனி உடையானை, மூ உலகும் தானே எங்கும் பாவனை, பாவம் அறுப்பான் தன்னை, படி எழுதல் ஆகாத மங்கையோடும் மேவனை, விண்ணோர் நடுங்கக் கண்டு விரிகடலின் நஞ்சு உண்டு அமுதம் ஈந்த தேவனை,-தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.
[6]
துறந்தார்க்குத் தூ நெறி ஆய் நின்றான் தன்னை, துன்பம் துடைத்து ஆள வல்லான் தன்னை, இறந்தார்கள் என்பே அணிந்தான் தன்னை, எல்லி நடம் ஆட வல்லான் தன்னை; மறந்தார் மதில் மூன்றும் மாய்த்தான் தன்னை, மற்று ஒரு பற்று இல்லா அடியேற்கு என்றும் சிறந்தானை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.
[7]
வாயானை, மனத்தானை, மனத்துள் நின்ற கருத்தானை, கருத்து அறிந்து முடிப்பான் தன்னை, தூயானை, தூ வெள்ளை ஏற்றான் தன்னை, சுடர்த் திங்கள் சடையானை, தொடர்ந்து நின்ற என் தாயானை, தவம் ஆய தன்மையானை, தலை ஆய தேவாதி தேவர்க்கு என்றும் சேயானை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.
[8]
பகைச் சுடர் ஆய்ப் பாவம் அறுப்பான் தன்னை, பழி இலியாய் நஞ்சம் உண்டு அமுது ஈந்தானை, வகைச் சுடர் ஆய் வல் அசுரர் புரம் அட்டானை, வளைவு இலியாய் எல்லார்க்கும் அருள் செய்வானை, மிகைச் சுடரை, விண்ணவர்கள், மேல் அப்பாலை, மேல் ஆய தேவாதிதேவர்க்கு என்றும் திகைச் சுடரை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.
[9]
மலையானை, மா மேரு மன்னினானை, வளர்புன் சடையானை, வானோர் தங்கள் தலையானை, என் தலையின் உச்சி என்றும் தாபித்து இருந்தானை, தானே எங்கும் துலை ஆக ஒருவரையும் இல்லாதானை, தோன்றாதார் மதில் மூன்றும் துவள எய்த சிலையானை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.
[10]
தூர்த்தனைத் தோள் முடிபத்து இறுத்தான் தன்னை, தொல்-நரம்பின் இன் இசை கேட்டு அருள் செய்தானை, பார்த்தனைப் பணி கண்டு பரிந்தான் தன்னை, பரிந்து அவற்குப் பாசுபதம் ஈந்தான் தன்னை, ஆத்தனை, அடியேனுக்கு அன்பன் தன்னை, அளவு இலாப் பல் ஊழி கண்டு நின்ற தீர்த்தனை,-தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.020   ஆதிக்கண்ணான் முகத்தில் ஒன்று சென்று(வ்)
பண் - திருத்தாண்டகம் (திருநள்ளாறு தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)
ஆதிக்கண்ணான் முகத்தில் ஒன்று சென்று(வ்) அல்லாத சொல் உரைக்கத் தன் கை வாளால் சேதித்த திருவடியை, செல்ல நல்ல சிவலோக நெறி வகுத்துக் காட்டுவானை, மா மதியை, மாது ஓர் கூறு ஆயினானை, மா மலர்மேல் அயனோடு மாலும் காணா நாதியை, நம்பியை, நள்ளாற்றானை, -நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.
[1]
படையானை, பாசுபத வேடத்தானை, பண்டு அனங்கற் பார்த்தானை, பாவம் எல்லாம் அடையாமைக் காப்பானை, அடியார் தங்கள் அரு மருந்தை, ஆவா! என்று அருள் செய்வானை, சடையானை, சந்திரனைத் தரித்தான் தன்னை, சங்கத்த முத்து அனைய வெள்ளை ஏற்றின் நடையானை, நம்பியை, நள்ளாற்றானை, -நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.
[2]
பட அரவம் ஒன்று கொண்டு அரையில் ஆர்த்த பராபரனை, பைஞ்ஞீலி மேவினானை, அடல் அரவம் பற்றிக் கடைந்த நஞ்சை அமுது ஆக உண்டானை, ஆதியானை, மடல் அரவம் மன்னு பூங்கொன்றையானை, மாமணியை, மாணிக்குஆய்க் காலன் தன்னை நடல் அரவம் செய்தானை, நள்ளாற்றானை,-நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.
[3]
கட்டங்கம் ஒன்று தம் கையில் ஏந்தி, கங்கணமும் காதில் விடு தோடும் இட்டு, சுட்ட(அ)ங்கம் கொண்டு துதையப் பூசி, சுந்தரனாய்ச் சூலம் கை ஏந்தினானை; பட்ட(அ)ங்கமாலை நிறையச் சூடி, பல்கணமும் தாமும் பரந்த காட்டில் நட்டங்கம் ஆடியை, நள்ளாற்றானை,-நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.
[4]
உலந்தார் தம் அங்கம் கொண்டு உலகம் எல்லாம் ஒரு நொடியில் உழல்வானை, உலப்பு இல் செல்வம் சிலந்தி தனக்கு அருள் செய்த தேவதேவை, திருச் சிராப்பள்ளி எம் சிவலோக(ன்)னை, கலந்தார் தம் மனத்து என்றும் காதலானை, கச்சி ஏகம்பனை, கமழ் பூங்கொன்றை நலம் தாங்கும் நம்பியை, நள்ளாற்றானை,-நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தஆறே!.
[5]
குலம் கொடுத்துக் கோள் நீக்க வல்லான் தன்னை, குலவரையின் மடப்பாவை இடப்பாலானை, மலம் கெடுத்து மா தீர்த்தம் ஆட்டிக் கொண்ட மறையவனை, பிறை தவழ் செஞ்சடையினானை சலம் கெடுத்துத் தயா மூல தன்மம் என்னும் தத்துவத்தின் வழி நின்று தாழ்ந்தோர்க்கு எல்லாம் நலம் கொடுக்கும் நம்பியை, நள்ளாற்றானை,-நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.
[6]
பூ விரியும் மலர்க் கொன்றைச் சடையினானை, புறம்பயத்து எம்பெருமானை, புகலூரானை, மா இரியக் களிறு உரித்த மைந்தன் தன்னை, மறைக்காடும் வலி வலமும் மன்னினானை, தே இரியத் திகழ் தக்கன் வேள்வி எல்லாம் சிதைத்தானை, உதைத்து அவன் தன் சிரம் கொண்டானை, நா விரிய மறை நவின்ற நள்ளாற்றானை,-நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.
குன்றாத மா முனிவன் சாபம் நீங்கக் குரை கழலால் கூற்றுவனைக் குமைத்த கோனை, அன்றாக அவுணர் புரம் மூன்றும் வேவ ஆர் அழல் வாய் ஓட்டி அடர்வித்தானை, சென்று ஆது வேண்டிற்று ஒன்று ஈவான்தன்னை, சிவன் எம்பெருமான் என்று இருப்பார்க்கு என்றும் நன்று ஆகும் நம்பியை, நள்ளாற்றானை,-நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே!.
[9]
இறவாதே வரம் பெற்றேன் என்று மிக்க இராவணனை இருபது தோள் நெரிய ஊன்றி, உறவு ஆகி, இன் இசை கேட்டு, இரங்கி, மீண்டே உற்ற பிணி தவிர்த்து, அருள வல்லான் தன்னை; மறவாதார் மனத்து என்றும் மன்னினானை; மா மதியம், மலர்க் கொன்றை, வன்னி, மத்தம், நறவு, ஆர் செஞ்சடையானை; நள்ளாற்றானை;-நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.021   முடித் தாமரை அணிந்த மூர்த்தி
பண் - திருத்தாண்டகம் (திருஆக்கூர் சுயம்புநாதவீசுவரர் கட்கநேத்திராம்பிகை)
முடித் தாமரை அணிந்த மூர்த்தி போலும்; மூ உலகும் தாம் ஆகி நின்றார் போலும்; கடித்தாமரை ஏய்ந்த கண்ணார் போலும்; கல்லலகு பாணி பயின்றார் போலும்; கொடித் தாமரைக்காடே நாடும் தொண்டர் குற்றேவல் தாம் மகிழ்ந்த குழகர் போலும்; அடித்தாமரை மலர் மேல் வைத்தார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.
[1]
ஓதிற்று ஒரு நூலும் இல்லை போலும்; உணரப்படாதது ஒன்று இல்லை போலும்; காதில் குழை இலங்கப் பெய்தார் போலும்; கவலை, பிறப்பு, இடும்பை, காப்பார் போலும்; வேதத்தோடு ஆறு அங்கம் சொன்னார் போலும்; விடம் சூழ்ந்து இருண்ட மிடற்றார் போலும்; ஆதிக்கு அளவு ஆகி நின்றார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.
[2]
மை ஆர் மலர்க் கண்ணாள் பாகர் போலும்; மணி நீலகண்டம் உடையார் போலும்; நெய் ஆர் திரிசூலம் கையார் போலும்; நீறு ஏறு தோள் எட்டு உடையார் போலும்; வை ஆர் மழுவாள் படையார் போலும்; வளர் ஞாயிறு அன்ன ஒளியார் போலும்; ஐவாய் அரவம் ஒன்று ஆர்த்தார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.
ஏகாசம் ஆம் புலித்தோல் பாம்பு தாழ, இடு வெண்தலை கலனா ஏந்தி, நாளும் மேகாசம் கட்டழித்த வெள்ளிமாலை புனல் ஆர் சடைமுடிமேல் புனைந்தார் போலும்; மா காசம் ஆய வெண்நீரும், தீயும், மதியும், மதி பிறந்த விண்ணும், மண்ணும், ஆகாசம், என்று இவையும் ஆனார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.
[5]
மாது ஊரும் வாள் நெடுங்கண், செவ்வாய், மென்தோள், மலைமகளை மார்பத்து அணைத்தார் போலும்; மூதூர், முதுதிரைகள், ஆனார் போலும்; முதலும் இறுதியும் இல்லார் போலும்; தீது ஊரா நல்வினை ஆய் நின்றார் போலும்; திசை எட்டும் தாமே ஆம் செல்வர் போலும்; ஆதிரைநாள் ஆய் அமர்ந்தார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.
[6]
மால்யானை மத்தகத்தைக் கீண்டார் போலும்; மான்தோல் உடையா மகிழ்ந்தார் போலும்; கோலானைக் கோ அழலால் காய்ந்தார் போலும்; குழவிப்பிறை சடைமேல் வைத்தார் போலும்; காலனைக் காலால் கடந்தார் போலும்; கயிலாயம் தம் இடமாக் கொண்டார் போலும்; ஆல், ஆன் ஐந்து ஆடல், உகப்பார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.
[7]
கண் ஆர்ந்த நெற்றி உடையார் போலும்; காமனையும் கண் அழலால் காய்ந்தார் போலும்; உண்ணா அரு நஞ்சம் உண்டார் போலும்; ஊழித்தீ அன்ன ஒளியார் போலும்; எண்ணாயிரம் கோடி பேரார் போலும்; ஏறு ஏறிச் செல்லும் இறைவர் போலும்; அண்ணாவும், ஆரூரும், மேயார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.
[8]
கடி ஆர் தளிர் கலந்த கொன்றைமாலை, கதிர் போது, தாது அணிந்த கண்ணி போலும்; நெடியானும் சது முகனும் நேட நின்ற, நீல நல் கண்டத்து, இறையார் போலும்; படி ஏல் அழல் வண்ணம் செம்பொன்மேனி மணிவண்ணம், தம் வண்ணம் ஆவார் போலும்; அடியார் புகல் இடம் அது ஆனார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.
[9]
திரையானும் செந்தாமரை மேலானும் தேர்ந்து, அவர்கள் தாம் தேடிக் காணார், நாணும் புரையான் எனப்படுவார் தாமே போலும்; போர் ஏறு தாம் ஏறிச் செல்வார் போலும்; கரையா வரை வில், ஏ, நாகம் நாணா, காலத்தீ அன்ன கனலார் போலும்; வரை ஆர் மதில் எய்த வண்ணர் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.022   பாரார் பரவும் பழனத்தானை, பருப்பதத்தானை,
பண் - திருத்தாண்டகம் (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
பாரார் பரவும் பழனத்தானை, பருப்பதத்தானை, பைஞ்ஞீலியானை, சீரார் செழும் பவளக்குன்று ஒப்பானை, திகழும் திருமுடிமேல்-திங்கள் சூடிப் பேர் ஆயிரம் உடைய பெம்மான் தன்னை, பிறர் தன்னைக் காட்சிக்கு அரியான் தன்னை,- கார் ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகைக்-காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.
[1]
விண்ணோர் பெருமானை, வீரட்ட(ன்)னை, வெண் நீறு மெய்க்கு அணிந்த மேனியானை, பெண்ணானை, ஆணானை, பேடியானை, பெரும்பற்றாத்தண் புலியூர் பேணினானை, அண்ணாமலையானை, ஆன் ஐந்துஆடும் அணி ஆரூர் வீற்றிருந்த அம்மான் தன்னை, கண் ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகைக்-காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.
[2]
சிறை ஆர் வரிவண்டு தேனே பாடும் திரு மறைக்காட்டு எந்தை சிவலோக(ன்)னை, மறை ஆன்ற வாய் மூரும் கீழ் வேளூரும் வலி வலமும் தேவூரும் மன்னி அங்கே உறைவானை, உத்தமனை, ஒற்றியூரில் பற்றி ஆள்கின்ற பரமன் தன்னை,- கறை ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகைக் காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.
[3]
அன்னம் ஆம் பொய்கை சூழ் அம்பரானை, ஆச்சிராம(ந்) நகரும் ஆனைக்காவும், முன்னமே கோயிலாக் கொண்டான் தன்னை, மூ உலகும் தான் ஆய மூர்த்தி தன்னை, சின்னம் ஆம் பல் மலர்கள் அன்றே சூடிச் செஞ்சடைமேல் வெண்மதியம் சேர்த்தினானை,- கன்னி அம்புன்னை சூழ் அம் தண் நாகைக்காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.
[4]
நடை உடைய நல் எருது ஒன்று ஊர்வான் தன்னை; ஞானப் பெருங்கடலை; நல்லூர் மேய, படை உடைய மழுவாள் ஒன்று ஏந்தினானை; பன்மையே பேசும் படிறன் தன்னை; மடை இடையே வாளை உகளும் பொய்கை மருகல் வாய்ச் சோதி மணி கண்ட(ன்)னை;- கடை உடைய நெடுமாடம் ஓங்கு நாகைக்காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.
[5]
புலம் கொள் பூந் தேறல் வாய்ப் புகலிக் கோனை; பூம்புகார்க் கற்பகத்தை; புன்கூர் மேய, அலங்கல் அம் கழனி சூழ் அணி நீர்க் கங்கை அவிர் சடைமேல் ஆதரித்த, அம்மான் தன்னை; இலங்கு தலைமாலை பாம்பு கொண்டே, ஏகாசம் இட்டு இயங்கும் ஈசன் தன்னை;- கலங்கல் கடல் புடை சூழ் அம் தண் நாகைக்காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.
[6]
பொன் மணி அம் பூங்கொன்றை மாலையானை, புண்ணியனை, வெண் நீறு பூசினானை, சில்மணிய மூ இலைய சூலத்தானை, தென் சிராப்பள்ளிச் சிவலோக(ன்)னை, மன் மணியை, வான் சுடலை ஊராப் பேணி வல் எருது ஒன்று ஏறும் மறை வல்லானை,- கல் மணிகள் வெண் திரை சூழ் அம் தண் நாகைக் காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.
அயன் அவனும் மால் அவனும் அறியா வண்ணம், ஆர் அழல் ஆய் நீண்டு, உகந்த அண்ணல் கண்டாய்; துயர் இலங்கை வேந்தன் துளங்க, அன்று, சோதி விரலால் உற வைத்தான் கண்டாய்; பெயர் அ(அ)வற்குப் பேர் அருள்கள் செய்தான் கண்டாய்; பேரும், பெரும் படையோடும், ஈந்தான் கண்டாய்; மயர் உறு வல்வினை நோய் தீர்ப்பான் கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.024   கைம் மான மதகளிற்றின் உரிவையான்காண்;
பண் - திருத்தாண்டகம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
கைம் மான மதகளிற்றின் உரிவையான்காண்; கறைக்கண்டன்காண்; கண் ஆர் நெற்றியான் காண்; அம்மான்காண்; ஆடு அரவு ஒன்று ஆட்டினான்காண்; அனல் ஆடிகாண்; அயில்வாய்ச்சூலத்தான்காண்; எம்மான்காண்; ஏழ் உலகும் ஆயினான்காண்; எரிசுடரோன்காண்; இலங்கும் மழுவாளன்காண்; செம் மானத்து ஒளி அன்ன மேனியான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே.
[1]
ஊன் ஏறு படுதலையில் உண்டியான்காண்; ஓங்காரன்காண்; ஊழி முதல் ஆனான்காண்; ஆன் ஏறு ஒன்று ஊர்ந்து உழலும் ஐயாறான்காண்; அண்டன்காண்; அண்டத்துக்கு அப்பாலன்காண்; மான் ஏறு கரதலத்து எம் மணிகண்டன்காண்; மா தவன்காண்; மா தவத்தின் விளைவு ஆனான்காண்; தேன் ஏறும் மலர்க்கொன்றைக்கண்ணியான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே.
[2]
ஏ வணத்த சிலையால் முப்புரம் எய்தான்காண்; இறையவன்காண்; மறையவன்காண்; ஈசன்தான்காண்; தூ வணத்த சுடர்ச் சூலப்படையினான்காண்; சுடர்மூன்றும் கண் மூன்றாக் கொண்டான் தான்காண்; ஆவணத்தால் என்தன்னை ஆட்கொண்டான் காண்; அனல் ஆடிகாண்; அடியார்க்கு அமிர்து ஆனான்காண்; தீவணத்த திரு உருவின் கரி உருவன்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே.
[3]
கொங்கு வார் மலர்க்கண்ணிக் குற்றாலன்காண்; கொடுமழுவன்காண்; கொல்லைவெள் ஏற்றான்காண்; எங்கள்பால்-துயர் கெடுக்கும் எம்பிரான்காண்; ஏழ்கடலும் ஏழ்மலையும் ஆயினான்காண்; பொங்கு மா கருங்கடல் நஞ்சு உண்டான் தான்காண்; பொன் தூண் காண்; செம்பவளத்திரள் போல்வான்காண்; செங்கண் வாள் அரா, மதியோடு உடன் வைத்தான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே.
[4]
கார் ஏறு நெடுங்குடுமிக் கயிலாயன்காண்; கறைக்கண்டன்காண்; கண் ஆர் நெற்றியான்காண்; போர் ஏறு நெடுங்கொடி மேல் உயர்த்தினான்காண்; புண்ணியன்காண்; எண்ண(அ)ரும் பல் குணத்தினான்காண்; நீர் ஏறு சுடர்ச் சூலப்படையினான்காண்; நின்மலன்காண்; நிகர் ஏதும் இல்லாதான்காண்; சீர் ஏறு திருமால் ஓர்பாகத்தான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே.
[5]
பிறை அரவக் குறுங்கண்ணிச் சடையினான்காண்; பிறப்பு இலிகாண்; பெண்ணோடு ஆண் ஆயினான்காண்; கறை உருவ மணிமிடற்று வெண் நீற்றான்காண்; கழல் தொழுவார் பிறப்பு அறுக்கும் காபாலீகாண்; இறை உருவக் கனவளையாள் இடப்பாகன்காண்; இரு நிலன்காண்; இரு நிலத்துக்கு இயல்பு ஆனான்காண்; சிறை உருவக் களி வண்டு ஆர் செம்மையான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே.
[6]
தலை உருவச் சிரமாலை சூடினான்காண்; தமர் உலகம் தலை கலனாப் பலி கொள்வான் காண்; அலை உருவச் சுடர் ஆழி ஆக்கினான்காண்; அவ் ஆழி நெடுமாலுக்கு அருளினான்காண்; கொலை உருவக் கூற்று உதைத்த கொள்கையான்காண்; கூர் எரி நீர் மண்ணொடு காற்று ஆயினான்காண்; சிலை உருவச் சரம் துரந்த திறத்தினான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே.
[7]
ஐயன்காண், குமரன்காண், ஆதியான்காண்; அடல் மழுவாள் தான் ஒன்று பியில்மேல் ஏந்து கையன்காண்; கடல் பூதப் படையினான்காண்; கண் எரியால் ஐங்கணையோன் உடல் காய்ந்தான்காண்; வெய்யன்காண்; தண்புனல் சூழ் செஞ்சடையான்காண்; வெண் நீற்றான்காண்; விசயற்கு அருள் செய்தான்காண்; செய்யன்காண்; கரியன்காண்; வெளியோன் தான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே.
[8]
மலை வளர்த்த மடமங்கை பாகத்தான்காண்; மயானத்தான்காண்; மதியம் சூடினான்காண்; இலை வளர்த்த மலர்க்கொன்றை மாலையான்காண்; இறையவன்காண்; எறிதிரை நீர்நஞ்சு உண்டான்காண்; கொலை வளர்த்த மூ இலைய சூலத்தான்காண்; கொடுங்குன்றன்காண்; கொல்லை ஏற்றினான் காண்; சிலை வளர்த்த சரம் துரந்த திறத்தினான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே.
[9]
பொன்தாது மலர்க்கொன்றை சூடினான்காண்; புரிநூலன்காண்; பொடி ஆர் மேனியான்காண்; மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதான்காண்; மறை ஓதி காண்; எறிநீர் நஞ்சு உண்டான்காண்; எற்றாலும் குறைவு ஒன்றும் இல்லாதான்காண்-; இறையவன்காண்; மறையவன்காண்; ஈசன் தான்காண்; செற்றார்கள் புரம் மூன்றும் செற்றான் தான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.025   உயிரா வணம் இருந்து, உற்று
பண் - திருத்தாண்டகம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
உயிரா வணம் இருந்து, உற்று நோக்கி, உள்ளக்கிழியின் உரு எழுதி, உயிர் ஆவணம் செய்திட்டு, உன் கைத் தந்தால், உணரப்படுவாரோடு ஒட்டி, வாழ்தி; அயிராவணம் ஏறாது, ஆன் ஏறு ஏறி, அமரர் நாடு ஆளாதே, ஆரூர் ஆண்ட அயிராவணமே! என் அம்மானே! நின் அருள் கண்ணால் நோக்காதார் அல்லாதாரே.
[1]
எழுது கொடி இடையார், ஏழை மென்தோள் இளையார்கள், நம்மை இகழா முன்னம் பழுதுபட நினையேல், பாவி நெஞ்சே! பண்டுதான் என்னோடு பகைதான் உண்டோ? முழுது உலகில் வானவர்கள் முற்றம் கூடி, முடியால் உற வணங்கி, முற்றம் பற்றி, அழுது, திருவடிக்கே பூசை செய்ய இருக்கின்றான் ஊர்போலும், ஆரூர்தானே.
[2]
தேரூரார்; மாவூரார்; திங்களூரார்; திகழ் புன்சடைமுடிமேல்-திங்கள்சூடி; கார் ஊராநின்ற கழனிச் சாயல் கண் ஆர்ந்த நெடுமாடம் கலந்து தோன்றும் ஓர் ஊரா உலகுஎலாம் ஒப்பக் கூடி, உமையாள் மணவாளா! என்று வாழ்த்தி, ஆரூரா! ஆரூரா! என்கின்றார்கள்; அமரர்கள்தம் பெருமானே! எங்கு உற்றாயே?.
[3]
கோவணமோ, தோலோ, உடை ஆவது? கொல் ஏறோ, வேழமோ, ஊர்வதுதான்? பூவணமோ, புறம்பயமோ, அன்று ஆயில்-தான் பொருந்தாதார் வாழ்க்கை திருந்தாமையோ? தீ வணத்த செஞ்சடைமேல்-திங்கள் சூடி, திசை நான்கும் வைத்து உகந்த செந்தீவண்ணர், ஆவணமோ, ஒற்றியோ, அம்மானார் தாம்- அறியேன் மற்று-ஊர் ஆம் ஆறு ஆரூர்தானே?.
[4]
ஏந்து மழுவாளர்; இன்னம்பரா அர்; எரிபவள வண்ணர்; குடமூக்கி(ல்)லார்; வாய்ந்த வளைக்கையாள் பாகம் ஆக வார்சடையார்; வந்து வலஞ்சுழி(ய்)யார்; போந்தார், அடிகள் புறம்பயத்தே; புகலூர்க்கே போயினார்; போர் ஏறு ஏறி; ஆய்ந்தே இருப்பார் போய், ஆரூர் புக்கார்; அண்ணலார் செய்கின்ற கண் மாய(ம்)மே!.
[5]
கரு ஆகி, குழம்பி(இ)இருந்து, கலித்து, மூளைக் கரு நரம்பும் வெள் எலும்பும் சேர்ந்து ஒன்று ஆகி, உரு ஆகிப் புறப்பட்டு, இங்கு ஒருத்தி தன்னால் வளர்க்கப்பட்டு, உயிராரும் கடை போகாரால்; மருவுஆகி, நின் அடியே, மறவேன்; அம்மான்! மறித்து ஒரு கால் பிறப்பு உண்டேல், மறவா வண்ணம்,- திரு ஆரூர் மணவாளா! திருத் தெங்கூராய்! செம்பொன் ஏகம்பனே!- திகைத்திட்டேனே.
[6]
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்; மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்; பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்; பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்; அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்; அகன்றாள், அகலிடத்தார் ஆசாரத்தை; தன்னை மறந்தாள்; தன் நாமம் கெட்டாள்; தலைப்பட்டாள், நங்கை தலைவன் தாளே!.
[7]
ஆடுவாய், நீ நட்டம்; அளவின் குன்றா அவி அடுவார், அருமறையோர்; அறிந்தேன், உன்னை; பாடுவார், தும்புருவும் நாரதாதி; பரவுவார், அமரர்களும் அமரர்கோனும்; தேடுவார், திருமாலும் நான்முக(ன்)னும்; தீண்டுவார், மலைமகளும் கங்கையாளும்; கூடுமே, நாய் அடியேன் செய் குற்றேவல்? குறை உண்டே, திரு ஆரூர் குடிகொண்டீர்க்கே?.
[8]
நீர் ஊரும் செஞ்சடையாய்! நெற்றிக்கண்ணாய்! நிலாத்திங்கள்-துண்டத்தாய்! நின்னைத் தேடி, ஓர் ஊரும் ஒழியாமே ஒற்றித்து எங்கும் உலகம் எலாம் திரிதந்து, நின்னைக் காண்பான், தேர் ஊரும் நெடுவீதி பற்றி நின்று, திருமாலும் நான்முகனும், தேர்ந்தும் காணாது, ஆரூரா! ஆரூரா! என்கின்றார்கள்-அமரர்கள் தம் பெருமானே! ஆரூராயே!.
[9]
நல்லூரே நன்று ஆக நட்டம் இட்டு, நரை ஏற்றைப் பழையாறே பாய ஏறி, பல் ஊரும் பலிதிரிந்து, சேற்றூர் மீதே,-பலர் காண.-தலையாலங்காட்டின் ஊடே, இல் ஆர்ந்த பெருவேளூர்த் தளியே பேணி, இராப் பட்டீச்சுரம் கடந்து மணக்கால் புக்கு(வ்), எல் ஆரும் தளிச்சாத்தங்குடியில் காண, இறைப்பொழுதில் திரு ஆரூர் புக்கார் தாமே.
[10]
கருத்துத் திக்கத நாகம் கையில் ஏந்தி, கருவரை போல் களியானை கதறக் கையால் உரித்து எடுத்துச் சிவந்து, அதன் தோல் பொருந்த மூடி, உமையவளை அச்சுறுத்தும் ஒளி கொள் மேனி, திருத் துருத்தி திருப் பழனம் திரு நெய்த்தானம் திரு ஐயாறு இடம்கொண்ட, செல்வர்; இந்நாள் அரிப் பெருத்த வெள் ஏற்றை அடர ஏறி, அப்பனார், இப் பருவம் ஆரூராரே.
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.026   பாதித் தன் திரு உருவில்
பண் - (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
பாதித் தன் திரு உருவில் பெண் கொண்டானை, பண்டு ஒரு கால் தசமுகனை அழுவித்தானை, வாதித்துத் தட மலரான் சிரம் கொண்டானை, வன் கருப்புச் சிலைக் காமன் உடல் அட்டானை, சோதிச் சந்திரன் மேனி மறுச் செய்தானை, சுடர் அங்கித் தேவனை ஓர் கை கொண்டானை, ஆதித்தன் பல் கொண்ட அம்மான் தன்னை, -ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே!.
[1]
வெற்பு உறுத்த திருவடியால் கூற்று அட்டானை; விளக்கின் ஒளி, மின்னின் ஒளி, முத்தின் சோதி, ஒப்பு உறுத்த திரு உருவத்து ஒருவன்தன்னை; ஓதாதே வேதம் உணர்ந்தான்தன்னை; அப்பு உறுத்த கடல் நஞ்சம் உண்டான்தன்னை, அமுது உண்டார் உலந்தாலும் உலவா தானை- அப்பு உறுத்த நீர் அகத்தே அழல் ஆனானை;- ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே!.
[2]
ஒரு காலத்து ஒரு தேவர் கண் கொண்டானை, ஊழிதோறு ஊழி உயர்ந்தான் தன்னை, வருகாலம் செல்காலம் ஆயினானை, வன் கருப்புச்சிலைக் காமன் உடல் அட்டானை, பொரு வேழக்-களிற்று உரிவைப் போர்வையானை, புள் அரையன் உடல் தன்னைப் பொடி செய்தானை, அரு வேள்வி தகர்த்து எச்சன் தலை கொண்டானை,- ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே!.
[3]
மெய்ப் பால் வெண்நீறு அணிந்த மேனியானை, வெண் பளிங்கின் உடல் பதித்த சோதியானை, ஒப்பானை, ஒப்பு இலா ஒருவன் தன்னை, உத்தமனை, நித்திலத்தை, உலகம் எல்லாம் வைப்பானை, களைவானை, வருவிப்பானை, வல்வினையேன் மனத்து அகத்தே மன்னினானை, அப்பாலைக்கு அப்பாலைக்கு அப்பாலானை,- ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே!.
[4]
பிண்டத்தில் பிறந்தது ஒரு பொருளை; மற்றைப் பிண்டத்தைப் படைத்தானை; பெரிய வேதத்- துண்டத்தில்-துணி பொருளை; சுடுதீ ஆகி, சுழல் கால் ஆய், நீர் ஆகி, பார் ஆய், இற்றைக் கண்டத்தில்-தீதின் நஞ்சு அமுதுசெய்து கண்மூன்று படைத்தது ஒரு கரும்பை; பாலை; அண்டத்துக்கு அப் புறத்தார் தமக்கு வித்தை;- ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே!.
[5]
நீதிஆய், நிலன் ஆகி, நெருப்பு ஆய், நீர் ஆய், நிறை கால் ஆய், இவையிற்றின் நியமம் ஆகி, பாதிஆய், ஒன்று ஆகி, இரண்டு ஆய், மூன்று ஆய், பரமாணு ஆய், பழுத்த பண்கள் ஆகி, சோதி ஆய், இருள் ஆகி, சுவைகள் ஆகி. சுவை கலந்த அப்பால் ஆய், வீடு ஆய், வீட்டின் ஆதி ஆய் அந்தம் ஆய், நின்றான் தன்னை- ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே!.
[6]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.027   பொய்ம் மாயப்பெருங்கடலில் புலம்பாநின்ற
பண் - திருத்தாண்டகம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
பொய்ம் மாயப்பெருங்கடலில் புலம்பாநின்ற புண்ணியங்காள்! தீவினைகாள்! திருவே! நீங்கள் இம் மாயப்பெருங்கடலை அரித்துத் தின்பீர்க்கு இல்லையே, கிடந்ததுதான்; யானேல், வானோர் தம்மானை, தலைமகனை, தண் நல் ஆரூர்த் தடங்கடலை, தொடர்ந்தோரை அடங்கச் செய்யும் எம்மான் தன் அடித் தொடர்வான் உழிதர்கின்றேன்; இடையிலேன்; கெடுவீர்காள்! இடறேன்மி(ன்)னே!.
[1]
ஐம்பெருமாபூதங்காள்! ஒருவீர் வேண்டிற்று ஒருவீர் வேண்டீர்! ஈண்டு இவ் அவனி எல்லாம் உம் பரமே உம் வசமே ஆக்க வல்லீர்க்கு இல்லையே, நுகர் போகம்; யானேல், வானோர் உம்பரும் ஆய் ஊழியும் ஆய் உலகு ஏழ் ஆகி ஒள் ஆரூர் நள் அமிர்து ஆம் வள்ளல், வானோர்- தம் பெருமானாய் நின்ற அரனை, காண்பேன்; தடைப்படுவேனாக் கருதித் தருக்கேன்மி(ன்)னே!.
[2]
சில் உருவில் குறி இருத்தி, நித்தல் பற்றி, செழுங் கணால் நோக்கும் இது ஊகம் அன்று; பல் உருவில்-தொழில் பூண்ட பஞ்சபூதப்-பளகீர்! உம் வசம் அன்றே! யானேல், எல்லாம் சொல் உருவின் சுடர் மூன்று ஆய், உருவம் மூன்று ஆய், தூ நயனம் மூன்று ஆகி, ஆண்ட ஆரூர் நல் உருவில் சிவன் அடியே அடைவேன்; நும்மால் நமைப்புண்ணேன்; கமைத்து நீர் நடமின்க(ள்)ளே!.
[3]
உன் உருவின் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றத்து உறுப்பினது குறிப்பு ஆகும் ஐவீர்! நுங்கள் மன் உருவத்து இயற்கைகளால் சுவைப்பீர்க்கு, ஐயோ! வையகமே போதாதே, யானேல், வானோர் பொன் உருவை, தென் ஆரூர் மன்னு குன்றை, புவிக்கு எழில் ஆம் சிவக்கொழுந்தை, புகுந்து என் சிந்தை தன் உருவைத் தந்தவனை, எந்தை தன்னை, தலைப்படுவேன்; துலைப் படுப்பான் தருக்கேன்மி(ன்)னே!.
[4]
துப்பினை முன் பற்று அறா விறலே! மிக்க சோர்வு படு சூட்சியமே! சுகமே! நீங்கள் ஒப்பனையைப் பாவித்து இவ் உலகம் எல்லாம் உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே; என் தன் வைப்பினை, பொன் மதில் ஆரூர் மணியை, வைகல் மணாளனை, எம்பெருமானை, வானோர் தங்கள் அப்பனை, செப்பட அடைவேன்; நும்மால் நானும் ஆட்டுணேன்; ஓட்டந்து, ஈங்கு அலையேன்மி(ன்)னே;.
[5]
பொங்கு மதமானமே! ஆர்வச் செற்றக்-குரோதமே! உலோபமே! பொறையே! நீங்கள் உங்கள் பெரு மா நிலத்தின் எல்லை எல்லாம் உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே? யானேல், அம் கமலத்து அயனொடு மால் ஆகி, மற்றும் அதற்கு அப்பால் ஒன்று ஆகி, அறிய ஒண்ணாச் செங்கனகத் தனிக் குன்றை, சிவனை, ஆரூர்ச் செல்வனை, சேர்வேன்; நும்மால் செலுத்துணேனே!.
[6]
இடர், பாவம் என, மிக்க துக்க, வேட்கை, வெறுப்பே, என்று அனைவீரும் உலகை ஓடிக் குடைகின்றீர்க்கு உலகங்கள் குலுங்கி நுங்கள் குறி நின்றது அமையாதே? யானேல், வானோர்- அடையார் தம் புரம் மூன்றும் எரிசெய்தானை, அமரர்கள் தம் பெருமானை, அரனை, ஆரூர் உடையானை, கடுகச் சென்று அடைவேன்; நும்மால் ஆட்டுணேன்; ஓட்டந்து ஈங்கு அலையேன்மி(ன்)னே!.
[7]
விரைந்து ஆளும் நல்குரவே! செல்வே! பொல்லா வெகுட்சியே! மகிழ்ச்சியே! வெறுப்பே! நீங்கள் நிரந்து ஓடி மா நிலத்தை அரித்துத் தின்பீர்க்கு இல்லையே, நுகர் போகம்? யானேல், வானோர் கரைந்து ஓட வரு நஞ்சை அமுதுசெய்த கற்பகத்தை, தற்பரத்தை, திரு ஆரூரில் பரஞ்சோதிதனை, காண்பேன்; படேன், நும் பண்பில்; பரிந்து ஓடி ஓட்டந்து பகட்டேன்மி(ன்)னே!.
[8]
மூள்வு ஆய தொழில் பஞ்சேந்திரிய வஞ்ச- முகரிகாள்! முழுதும் இவ் உலகை ஓடி நாள்வாயும் நும்முடைய மம்மர் ஆணை நடாத்துகின்றீர்க்கு அமையாதே? யானேல், வானோர் நீள் வானமுகடு அதனைத் தாங்கி நின்ற நெடுந்தூணை, பாதாளக் கருவை, ஆரூர் ஆள்வானை, கடுகச் சென்று அடைவேன்; நும்மால் ஆட்டுணேன்; ஓட்டந்து ஈங்கு அலையேன்மி(ன்)னே!.
[9]
சுருக்கமொடு, பெருக்கம், நிலை நிற்றல், பற்றித் துப்பறை என்று அனைவீர்! இவ் உலகை ஓடிச் செருக்கி மிகை செலுத்தி உம செய்கை வைகல் செய்கின்றீர்க்கு அமையாதே? யானேல், மிக்க, தருக்கி மிக வரை எடுத்த, அரக்கன் ஆகம் தளர அடி எடுத்து அவன் தன் பாடல் கேட்டு(வ்) இரக்கம் எழுந்து அருளிய எம்பெருமான் பாதத்து இடையிலேன்; கெடுவீர்காள்! இடறேன்மி(ன்)னே!.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.028   நீற்றினையும், நெற்றி மேல் இட்டார்போலும்;
பண் - திருத்தாண்டகம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
நீற்றினையும், நெற்றி மேல் இட்டார்போலும்; நீங்காமே வெள் எலும்பு பூண்டார்போலும்; காற்றினையும் கடிது ஆக நடந்தார்போலும்; கண்ணின்மேல் கண் ஒன்று உடையார்போலும்; கூற்றினையும் குரை கழலால் உதைத்தார்போலும்; கொல் புலித் தோல் ஆடைக் குழகர்போலும்; ஆற்றினையும் செஞ்சடைமேல் வைத்தார்போலும்-அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.
[1]
பரியது ஓர் பாம்பு அரைமேல் ஆர்த்தார்போலும்; பாசுபதம் பார்த்தற்கு அளித்தார்போலும்; கரியது ஓர் களிற்று உரிவை போர்த்தார்போலும்; காபாலம் கட்டங்கக் கொடியார்போலும்; பெரியது ஓர் மலை வில்லா எய்தார்போலும்; பேர் நந்தி என்னும் பெயரார்போலும்; அரியது ஓர் அரணங்கள் அட்டார்போலும்- அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.
[2]
துணி உடையர், தோல் உடையர், என்பார்போலும்; தூய திருமேனிச் செல்வர்போலும்; பிணி உடைய அடியாரைத் தீர்ப்பார்போலும்; பேசுவார்க்கு எல்லாம் பெரியார்போலும்; மணி உடைய மா நாகம் ஆர்ப்பார்போலும்; வாசுகி மா நாணாக வைத்தார் போலும்; அணி உடைய நெடுவீதி நடப்பார்போலும்- அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.
[3]
ஓட்டு அகத்தே ஊண் ஆக உகந்தார்போலும்; ஓர் உரு ஆய்த் தோன்றி உயர்ந்தார்போலும்; நாட்டு அகத்தே நடைபலவும் நவின்றார்போலும்; ஞானப்பெருங்கடற்கு ஓர் நாதர்போலும்; காட்டு அகத்தே ஆடல் உடையார்போலும்; காமரங்கள் பாடித் திரிவார்போலும்; ஆட்டு அகத்தில் ஆன் ஐந்து உகந்தார்போலும் அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.
[4]
ஏனத்து இள மருப்புப் பூண்டார்போலும்; இமையவர்கள் ஏத்த இருந்தார்போலும்; கானக் கல்லால்கீழ் நிழலார்போலும்; கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டர்போலும்; வானத்து இளமதி சேர் சடையார்போலும்; வான் கயிலைவெற்பில் மகிழ்ந்தார்போலும்; ஆனத்து முன் எழுத்து ஆய் நின்றார்போலும்- அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.
[5]
காமனையும் கரி ஆகக் காய்ந்தார்போலும்; கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டர்போலும்; சோமனையும் செஞ்சடைமேல் வைத்தார்போலும்; சொல் ஆகிச் சொல்பொருள் ஆய் நின்றார்போலும்; நா மனையும் வேதத்தார் தாமேபோலும்; நங்கை ஓர்பால் மகிழ்ந்த நம்பர்போலும்; ஆ(ம்)மனையும் திருமுடியார் தாமேபோலும்- அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.
[6]
முடி ஆர் மதி, அரவம், வைத்தார்போலும்; மூ உலகும் தாமே ஆய் நின்றார்போலும்; செடி ஆர் தலைப் பலி கொண்டுஉழல்வார்போலும்; செல் கதிதான் கண்ட சிவனார்போலும்; கடி ஆர் நஞ்சு உண்டு இருண்ட கண்டர்போலும்; கங்காளவேடக் கருத்தர்போலும்; அடியார் அடிமை உகப்பார்போலும்-அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.
[7]
இந்திரத்தை இனிது ஆக ஈந்தார்போலும்; இமையவர்கள் வந்து இறைஞ்சும் இறைவர்போலும்; சுந்தரத்த பொடிதன்னைத் துதைந்தார்போலும்; தூத் தூய திருமேனித் தோன்றல்போலும்; மந்திரத்தை மனத்துள்ளே வைத்தார்போலும்; மா நாகம் நாண் ஆக, வளைத்தார்போலும்; அம் திரத்தே அணியா நஞ்சு உண்டார்போலும்- அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.
[8]
பிண்டத்தைக் காக்கும் பிரானார்போலும்; பிறவி, இறவி, இலாதார்போலும்; முண்டத்து முக்கண் உடையார்போலும்; முழுநீறு பூசும் முதல்வர்போலும்; கண்டத்து இறையே கறுத்தார்போலும்; காளத்தி, காரோணம், மேயார்போலும்; அண்டத்துக்கு அப்புறம் ஆய் நின்றார்போலும்- அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.
[9]
ஒரு காலத்து ஒன்று ஆகி நின்றார்போலும்; ஊழிபல கண்டு இருந்தார்போலும்; பெருகாமே வெள்ளம் தவிர்த்தார்போலும்; பிறப்பு, இடும்பை, சாக்காடு, ஒன்று இல்லார்போலும்; உருகாதார் உள்ளத்து நில்லார்போலும்; உகப்பார்தம் மனத்து என்றும் நீங்கார்போலும்; அருகு ஆக வந்து என்னை, அஞ்சல்! என்பார்-அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.
[10]
நன்றாக நடைபலவும் நவின்றார்போலும்; ஞானப்பெருங்கடற்கு ஓர் நாதர்போலும்; கொன்றாகிக் கொன்றது ஒன்று உண்டார்போலும்; கோள் அரக்கர்கோன் தலைகள் குறைத்தார்போலும்; சென்று ஆர் திரிபுரங்கள் எய்தார்போலும்; திசை அனைத்தும் ஆய், அனைத்தும் ஆனார்போலும்; அன்று ஆகில், ஆயிரம் பேரார்போலும்- அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.029   திருமணியை, தித்திக்கும் தேனை, பாலை,
பண் - திருத்தாண்டகம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
பை ஆடு அரவம் கை ஏந்தினானை, பரிதி போல்-திருமேனிப் பால்நீற்றானை, நெய் ஆடு திருமேனி நிமலன்தன்னை, நெற்றிமேல் மற்றொரு கண் நிறைவித்தானை, செய்யானை, செழும் பவளத்திரள் ஒப்பானை, செஞ்சடைமேல் வெண்திங்கள் சேர்த்தினானை, ஐயாறு மேயானை, ஆரூரானை,-அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!.
[9]
சீர் ஆர் முடிபத்து உடையான்தன்னைத் தேசு அழியத் திருவிரலால் சிதைய நூக்கிப் பேர் ஆர் பெருமை கொடுத்தான்தன்னை, பெண் இரண்டும் ஆணும் ஆய் நின்றான் தன்னை, போர் ஆர் புரங்கள் புரள நூறும் புண்ணியனை, வெண்நீறு அணிந்தான்தன்னை, ஆரானை, ஆரூரில் அம்மான்தன்னை,-அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.030   எம் பந்த வல்வினைநோய் தீர்த்திட்டான்காண்;
பண் - திருத்தாண்டகம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
எம் பந்த வல்வினைநோய் தீர்த்திட்டான்காண்; ஏழ்கடலும் ஏழ் உலகும் ஆயினான்காண்; வம்பு உந்து கொன்றை அம்தார்-மாலையான்காண்; வளர்மதி சேர் கண்ணியன்காண்; வானோர் வேண்ட, அம்பு ஒன்றால் மூ எயிலும் எரிசெய்தான்காண்; அனல் ஆடி, ஆன் அஞ்சும் ஆடினான்காண்- செம்பொன் செய் மணி மாடத் திரு ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன் தானே.
[1]
அக்கு உலாம் அரையினன்காண்; அடியார்க்கு என்றும் ஆர் அமுது ஆய் அண்ணிக்கும் ஐயாற்றான்காண்; கொக்கு, உலாம் பீலியொடு, கொன்றை மாலை, குளிர்மதியும், கூர் அரவும், நீரும், சென்னித் தொக்கு உலாம் சடையினன்காண்; தொண்டர் செல்லும் தூநெறிகாண்-வானவர்கள் துதி செய்து ஏத்தும், திக்கு எலாம் நிறைந்த புகழ்த் திரு ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன் தானே.
[2]
நீர் ஏறு சடைமுடி எம் நிமலன்தான்காண்; நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவித்தான்காண்; வார் ஏறு வனமுலையாள் பாகத்தான்காண்; வளர்மதி சேர் சடையான்காண்; மாதேவன்காண்; கார் ஏறு முகில் அனைய கண்டத்தான்காண்; கல்லாலின்கீழ் அறங்கள் சொல்லினான்காண்- சீர் ஏறு மணி மாடத் திரு ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே.
[3]
கான் ஏறு களிற்று உரிவைப் போர்வையான்காண்; கற்பகம்காண்; காலனை அன்று உதைசெய்தான்காண்; ஊன் ஏறும் உடைதலையில் பலி கொள்வான்காண்; உத்தமன்காண்; ஒற்றியூர் மேவினான்காண்; ஆன் ஏறு ஒன்று அது ஏறும் அண்ணல் தான்காண்; ஆதித்தன் பல் இறுத்த ஆதிதான்காண்- தேன் ஏறு மலர்ச்சோலைத் திரு ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே.
[4]
பிறப்போடு இறப்பு என்றும் இல்லாதான்காண்; பெண் உருவோடு ஆண் உருவம் ஆயினான்காண்; மறப்படும் என் சிந்தை மருள் நீக்கினான்காண்; வானவரும் அறியாத நெறி தந்தான் காண்- நறப் படு பூ மலர், தூபம், தீபம், நல்ல நறுஞ்சாந்தம், கொண்டு ஏத்தி நாளும் வானோர் சிறப்போடு பூசிக்கும் திரு ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே.
[5]
சங்கரன்காண்; சக்கரம் மாற்கு அருள் செய்தான்காண்; தருணேந்து சேகரன்காண்; தலைவன் தான்காண்; அம் கமலத்து அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றை அறுத்தவன்காண்; அணி பொழில் சூழ் ஐயாற்றான்காண்; எங்கள் பெருமான்காண்; என் இடர்கள் போக அருள் செய்யும் இறைவன்காண்- இமையோர் ஏத்தும் செங்கமல வயல் புடை சூழ் திரு ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன் தானே.
[6]
நன்று அருளி, தீது அகற்றும் நம்பிரான்காண்; நால் மறையோடு ஆறு அங்கம் ஆயினான்காண்; மின் திகழும் சோதியான்காண்; ஆதிதான்காண்; வெள் ஏறு நின்று உலவு கொடியினான் காண்; துன்று பொழில் கச்சி ஏகம்பன் தான்காண்; சோற்றுத்துறையான்காண்-சோலை சூழ்ந்த தென்றலால் மணம் கமழும் திரு ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன் தானே.
[7]
பொன் நலத்த நறுங்கொன்றைச் சடையினான்காண்; புகலூரும் பூவணமும் பொருந்தினான்காண்; மின் நலத்த நுண் இடையாள் பாகத்தான்காண்; வேதியன்காண்; வெண்புரிநூல் மார்பினான்காண்; கொல்-நலத்த மூ இலை வேல் ஏந்தினான்காண்; கோலமா நீறு அணிந்த மேனியான்காண்- செந் நலத்த வயல் புடை சூழ் திரு ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன் தானே.
[8]
விண்டவர் தம் புரம் மூன்றும் எரி செய்தான்காண்; வேலை விடம் உண்டு இருண்ட கண்டத்தான்காண்; மண்டலத்தில் ஒளி வளர விளங்கினான்காண்; வாய் மூரும் மறைக்காடும், மருவினான் காண்; புண்டரிகக் கண்ணானும், பூவின்மேலைப் புத்தேளும், காண்பு அரிய புராணன் தான்காண்- தெண் திரை நீர் வயல் புடை சூழ் திரு ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன் தானே.
[9]
செரு வளரும் செங்கண் மால் ஏற்றினான்காண்; தென் ஆனைக்காவன்காண்; தீயில் வீழ, மருவலர் தம் புரம் மூன்றும் எரி செய்தான் காண்; வஞ்சகர் பால் அணுகாத மைந்தன் தான்காண்; அரு வரையை எடுத்தவன் தன் சிரங்கள் பத்தும், ஐந் நான்கு தோளும், நெரிந்து அலற அன்று திருவிரலால் அடர்த்தவன்காண்-திரு ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன் தானே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.031   இடர் கெடும் ஆறு எண்ணுதியேல்,
பண் - திருத்தாண்டகம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
இடர் கெடும் ஆறு எண்ணுதியேல், நெஞ்சே! நீ வா! ஈண்டு ஒளி சேர் கங்கைச் சடையாய்! என்றும், சுடர் ஒளியாய்! உள் விளங்கு சோதீ! என்றும், தூ நீறு சேர்ந்து இலங்கு தோளா! என்றும், கடல் விடம் அது உண்டு இருண்ட கண்டா! என்றும், கலைமான் மறி ஏந்து கையா! என்றும், அடல் விடையாய்! ஆரமுதே! ஆதீ! என்றும், ஆரூரா! என்று என்றே, அலறா நில்லே!.
[1]
செடி ஏறு தீ வினைகள் தீரும் வண்ணம் சிந்தித்தே, நெஞ்சமே! திண்ணம் ஆகப் பொடி ஏறு திருமேனி உடையாய்! என்றும், புரந்தரன் தன் தோள் துணித்த புனிதா! என்றும், அடியேனை ஆள் ஆகக் கொண்டாய்! என்றும், அம்மானே! ஆரூர் எம் அரசே! என்றும், கடி நாறு பொழில் கச்சிக் கம்பா! என்றும், கற்பகமே! என்று என்றே, கதறா நில்லே!.
[2]
நிலை பெறுமாறு எண்ணுதியேல், நெஞ்சே! நீ வா! நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு, புலர்வதன் முன் அலகிட்டு, மெழுக்கும் இட்டு, பூமாலை புனைந்து ஏத்தி, புகழ்ந்து பாடி, தலை ஆரக் கும்பிட்டு, கூத்தும் ஆடி, சங்கரா, சய! போற்றி போற்றி! என்றும், அலை புனல் சேர் செஞ்சடை எம் ஆதீ! என்றும், ஆரூரா! என்று என்றே, அலறா நில்லே!.
[3]
புண்ணியமும் நன்நெறியும் ஆவது எல்லாம் நெஞ்சமே! இது கண்டாய்; பொருந்தக் கேள், நீ: நுண்ணிய வெண் நூல் கிடந்த மார்பா! என்றும், நுந்தாத ஒண்சுடரே! என்றும், நாளும் விண் இயங்கு தேவர்களும் வேதம் நான்கும் விரை மலர் மேல் நான்முகனும் மாலும் கூடி எண்ண (அ)ரிய திருநாமம் உடையாய்! என்றும், எழில் ஆரூரா! என்றே ஏத்தா நில்லே!.
[4]
இழைத்த நாள் எல்லை கடப்பது அன்றால்; இரவினொடு நண்பகலும் ஏத்தி வாழ்த்தி, பிழைத்தது எலாம் பொறுத்து அருள் செய் பெரியோய்! என்றும், பிஞ்ஞகனே! மைஞ் ஞவிலும் கண்டா! என்றும், அழைத்து அலறி, அடியேன் உன் அரணம் கண்டாய், அணி ஆரூர் இடம் கொண்ட அழகா! என்றும், குழல் சடை எம் கோன்! என்றும், கூறு, நெஞ்சே! குற்றம் இல்லை, என்மேல்; நான் கூறினேனே.
[5]
நீப்ப(அ)ரிய பல் பிறவி நீக்கும் வண்ணம் நினைந்திருந்தேன் காண்; நெஞ்சே! நித்தம் ஆகச் சேப் பிரியா வெல் கொடியினானே! என்றும், சிவலோக நெறி தந்த சிவனே! என்றும், ‘பூப் பிரியா நான்முகனும் புள்ளின் மேலைப் புண்டரிகக் கண்ணானும், போற்றி! என்னத் தீப்பிழம்பு ஆய் நின்றவனே! செல்வம் மல்கும் திரு ஆரூரா!’ என்றே சிந்தி, நெஞ்சே!.
[6]
பற்றி நின்ற பாவங்கள் பாற்ற வேண்டில், பரகதிக்குச் செல்வது ஒரு பரிசு வேண்டில், சுற்றி நின்ற சூழ் வினைகள் வீழ்க்க வேண்டில், சொல்லுகேன்; கேள்: நெஞ்சே, துஞ்சா வண்ணம்! உற்றவரும் உறு துணையும் நீயே என்றும், உன்னை அல்லால் ஒரு தெய்வம் உள்கேன் என்றும், புற்று அரவக் கச்சு ஆர்த்த புனிதா! என்றும், பொழில் ஆரூரா! என்றே, போற்றா நில்லே!.
[7]
மதி தருவன், நெஞ்சமே, உஞ்சு போக! வழி ஆவது இது கண்டாய்; வானோர்க்கு எல்லாம் அதிபதியே! ஆரமுதே! ஆதீ! என்றும்; அம்மானே! ஆரூர் எம் ஐயா! என்றும்; துதி செய்து துன்று மலர் கொண்டு தூவிச் சூழும் வலம் செய்து தொண்டு பாடி, கதிர் மதி சேர் சென்னியனே! காலகாலா! கற்பகமே! என்று என்றே கதறா நில்லே!.
[8]
பாசத்தைப் பற்று அறுக்கல் ஆகும்; நெஞ்சே! பரஞ்சோதீ! பண்டரங்கா! பாவநாசா! தேசத்து ஒளி விளக்கே! தேவதேவே! திரு ஆரூர்த் திருமூலட்டானா! என்றும், நேசத்தை நீ பெருக்கி நேர் நின்று உள்கி நித்தலும் சென்று அடிமேல் வீழ்ந்து நின்று, ஏசற்று நின்று, இமையோர் ஏறே! என்றும், எம்பெருமான்! என்று என்றே ஏத்தா நில்லே!.
[9]
புலன்கள் ஐந்தால் ஆட்டுண்டு போது போக்கிப் புறம் புறமே திரியாதே போது, நெஞ்சே! சலம் கொள் சடைமுடி உடைய தலைவா! என்றும், தக்கன் செய் பெரு வேள்வி தகர்த்தாய்! என்றும், இலங்கையர் கோன் சிரம் நெரித்த இறைவா! என்றும், எழில் ஆரூர் இடம்கொண்ட எந்தாய்! என்றும், நலம் கொள் அடி என் தலைமேல் வைத்தாய்! என்றும், நாள்தோறும் நவின்று ஏத்தாய்! நன்மை ஆமே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.032   கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி!
பண் - போற்றித்திருத்தாண்டகம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி! கழல் அடைந்தார் செல்லும் கதியே, போற்றி! அற்றவர்கட்கு ஆர் அமுதம் ஆனாய், போற்றி! அல்லல் அறுத்து அடியேனை ஆண்டாய், போற்றி! மற்று ஒருவர் ஒப்பு இல்லா மைந்தா, போற்றி! வானவர்கள் போற்றும் மருந்தே, போற்றி! செற்றவர் தம் புரம் எரித்த சிவனே, போற்றி! திருமூலட்டானனே, போற்றி போற்றி!.
[1]
வங்கம் மலி கடல் நஞ்சம் உண்டாய், போற்றி! மதயானை ஈர் உரிவை போர்த்தாய், போற்றி! கொங்கு அலரும் நறுங்கொன்றைத் தாராய், போற்றி! கொல் புலித் தோல் ஆடைக் குழகா, போற்றி! அங்கணனே, அமரர்கள் தம் இறைவா, போற்றி! ஆலமர நீழல் அறம் சொன்னாய், போற்றி! செங்கனகத் தனிக் குன்றே, சிவனே, போற்றி! திருமூலட்டானனே, போற்றி போற்றி!.
[2]
மலையான் மடந்தை மணாளா, போற்றி! மழவிடையாய்! நின் பாதம் போற்றி போற்றி! நிலை ஆக என் நெஞ்சில் நின்றாய், போற்றி! நெற்றிமேல் ஒற்றைக் கண் உடையாய், போற்றி! இலை ஆர்ந்த மூ இலை வேல் ஏந்தீ, போற்றி! ஏழ்கடலும் ஏழ் பொழிலும் ஆனாய், போற்றி! சிலையால் அன்று எயில் எரித்த சிவனே, போற்றி! திருமூலட்டானனே, போற்றி போற்றி!.
பூ ஆர்ந்த சென்னிப் புனிதா, போற்றி! புத்தேளிர் போற்றும் பொருளே, போற்றி! தே ஆர்ந்த தேவர்க்கும் தேவே, போற்றி! திருமாலுக்கு ஆழி அளித்தாய், போற்றி! சாவாமே காத்து என்னை ஆண்டாய், போற்றி! சங்கு ஒத்த நீற்று எம் சதுரா, போற்றி! சே ஆர்ந்த வெல் கொடியாய், போற்றி போற்றி! திருமூலட்டானனே, போற்றி போற்றி!.
[9]
பிரமன் தன் சிரம் அரிந்த பெரியோய், போற்றி! பெண் உருவோடு ஆண் உரு ஆய் நின்றாய், போற்றி! கரம் நான்கும் முக்கண்ணும் உடையாய், போற்றி! காதலிப்பார்க்கு ஆற்ற எளியாய், போற்றி! அருமந்த தேவர்க்கு அரசே, போற்றி! அன்று அரக்கன் ஐந் நான்கு தோளும், தாளும், சிரம், நெரித்த சேவடியாய், போற்றி போற்றி! திருமூலட்டானனே, போற்றி போற்றி!.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.033   பொரும் கை மதகரி உரிவைப்
பண் - அரநெறிதிருத்தாண்டகம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
பொரும் கை மதகரி உரிவைப் போர்வையானை, பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தினானை, கரும்பு தரு கட்டியை, இன் அமிர்தை, தேனை, காண்பு அரிய செழுஞ்சுடரை, கனகக் குன்றை, இருங் கனகமதில் ஆரூர் மூலட்டானத்து எழுந்தருளி இருந்தானை, இமையோர் ஏத்தும் அருந்தவனை, அரநெறியில் அப்பன் தன்னை, அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே!.
[1]
கற்பகமும் இரு சுடரும் ஆயினானை, காளத்தி கயிலாய மலை உளானை, வில் பயிலும் மதன் அழிய விழித்தான் தன்னை, விசயனுக்கு வேடுவனாய் நின்றான் தன்னை, பொற்பு அமரும் பொழில் ஆரூர் மூலட்டானம் பொருந்திய எம்பெருமானை, பொருந்தார் சிந்தை அற்புதனை, அரநெறியில் அப்பன் தன்னை, அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே!.
[2]
பாதி ஒரு பெண், முடிமேல் கங்கை யானை, பாசூரும் பரங்குன்றும் மேயான் தன்னை, வேதியனை, தன் அடியார்க்கு எளியான் தன்னை, மெய்ஞ் ஞான விளக்கானை, விரையே நாறும் போது இயலும் பொழில் ஆரூர் மூலட்டானம் புற்று இடம் கொண்டு இருந்தானை, போற்றுவார்கள் ஆதியனை, அரநெறியில் அப்பன் தன்னை, அடைந்து அடையேன் அருவினை நோய் அறுத்த ஆறே!.
[3]
நந்தி பணி கொண்டு அருளும் நம்பன் தன்னை, நாகேச்சுரம் இடமா நண்ணினானை, சந்தி மலர் இட்டு அணிந்து வானோர் ஏத்தும் தத்துவனை, சக்கரம் மாற்கு ஈந்தான் தன்னை, இந்து நுழை பொழில் ஆரூர் மூலட்டானம் இடம் கொண்ட பெருமானை, இமையோர் போற்றும் அந்தணனை, அரநெறியில் அப்பன் தன்னை, அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த வாறே!.
[4]
சுடர்ப் பவளத் திருமேனி வெண் நீற்றானை, சோதிலிங்கத் தூங்கானை மாடத்தானை, விடக்கு இடுகாடு இடம் ஆக உடையான்தன்னை, மிக்க(அ)அரணம் எரியூட்ட வல்லான் தன்னை, மடல் குலவு பொழில் ஆரூர் மூலட்டானம் மன்னிய எம்பெருமானை, மதியார் வேள்வி அடர்த்தவனை, அரநெறியில் அப்பன் தன்னை, அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே!.
[5]
தாய் அவனை, எவ் உயிர்க்கும்; தன் ஒப்பு இல்லாத் தகு தில்லை நடம் பயிலும் தலைவன் தன்னை; மாயவனும், மலரவனும், வானோர், ஏத்த மறி கடல் நஞ்சு உண்டு உகந்த மைந்தன் தன்னை; மேயவனை, பொழில் ஆரூர் மூலட்டானம், விரும்பிய எம்பெருமானை; எல்லாம் முன்னே ஆயவனை; அரநெறியில் அப்பன் தன்னை; அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே!.
[6]
பொருள் இயல் நல் சொல் பதங்கள் ஆயினானை, புகலூரும் புறம்பயமும் மேயான் தன்னை, மருள் இயலும் சிந்தையர்க்கு மருந்து தன்னை, மறைக்காடும் சாய்க்காடும் மன்னினானை, இருள் இயன்ற பொழில் ஆரூர் மூலட்டானத்து இனிது அமரும் பெருமானை, இமையோர் ஏத்த அருளியனை, அரநெறியில் அப்பன் தன்னை, அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே!.
[7]
காலனைக் காலால் காய்ந்த கடவுள் தன்னை, காரோணம் கழிப்பாலை மேயான் தன்னை, பாலனுக்குப் பாற்கடல் அன்று ஈந்தான் தன்னை, பணி உகந்த அடியார்கட்கு இனியான் தன்னை, சேல் உகளும் வயல் ஆரூர் மூலட்டானம் சேர்ந்து இருந்த பெருமானை, பவளம் ஈன்ற ஆலவனை, அரநெறியில் அப்பன் தன்னை, அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே!.
[8]
ஒப்பு ஒருவர் இல்லாத ஒருவன் தன்னை, ஓத்தூரும் உறையூரும் மேவினானை, வைப்பு அவனை, மாணிக்கச் சோதியானை, மாருதமும் தீ வெளி நீர் மண் ஆனானை, மெய்ப் பொருள் ஆய் அடியேனது உள்ளே நின்ற வினை இலியை, திரு மூலட்டானம் மேய அப் பொன்னை, அரநெறியில் அப்பன் தன்னை, அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே!.
[9]
பகலவன் தன் பல் உகுத்த படிறன் தன்னை, பராய்த்துறை பைஞ்ஞீலி இடம் பாவித்தானை, இகலவனை, இராவணனை இடர் செய்தானை, ஏத்தாதார் மனத்து அகத்துள் இருள் ஆனானை, புகழ் நிலவு பொழில் ஆரூர் மூலட்டானம் பொருந்திய எம்பெருமானை, போற்றார் சிந்தை அகலவனை, அரநெறியில் அப்பன் தன்னை, அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே!.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.034   ஒருவனாய் உலகு ஏத்த நின்ற
பண் - திருத்தாண்டகம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
ஒருவனாய் உலகு ஏத்த நின்ற நாளோ? ஓர் உருவே மூ உருவம் ஆன நாளோ? கருவனாய்க் காலனை முன் காய்ந்த நாளோ? காமனையும் கண் அழலால் விழித்த நாளோ? மருவனாய் மண்ணும் விண்ணும் தெரித்த நாளோ? மான்மறி கை ஏந்தி, ஓர் மாது, ஓர்பாகம் திருவினாள் சேர்வதற்கு முன்னோ? பின்னோ? திரு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.
[1]
மலையார் பொன் பாவையொடு மகிழ்ந்த நாளோ? வானவரை வலி அமுதம் ஊட்டி, அந் நாள் நிலை பேறு பெறுவித்து நின்ற நாளோ? நினைப்ப (அ)ரிய தழல் பிழம்பு ஆய் நிமிர்ந்த நாளோ? அலைசாமே அலை கடல் நஞ்சு உண்ட நாளோ? அமரர் கணம் புடை சூழ இருந்த நாளோ? சிலையால் முப்புரம் எரித்த முன்னோ? பின்னோ? திரு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.
[2]
பாடகம் சேர் மெல் அடி நல் பாவையாளும் நீயும் போய் பார்த்தனது பலத்தைக் காண்பான் வேடனாய் வில் வாங்கி எய்த நாளோ? விண்ணவர்க்கும் கண்ணவனாய் நின்ற நாளோ? மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை மணி திகழும் அம்பலத்தை மன்னிக் கூத்தை ஆடுவான் புகுவதற்கு முன்னோ? பின்னோ? அணி ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.
[3]
ஓங்கி-உயர்ந்து எழுந்து நின்ற நாளோ? ஓர் உகம் போல் ஏழ் உகம் ஆய் நின்ற நாளோ? தாங்கிய சீர்த் தலை ஆன வானோர் செய்த தக்கன் தன் பெரு வேள்வி தகர்த்த நாளோ? நீங்கிய நீர்த் தாமரையான் நெடு மாலோடு, நில்லாய், எம்பெருமானே! என்று அங்கு ஏத்தி, வாங்கி, மதி, வைப்பதற்கு முன்னோ? பின்னோ? வளர் ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.
[4]
பாலனாய் வளர்ந்திலாப் பான்மையானே! பணிவார்கட்கு அங்கு அங்கே பற்று ஆனானே! நீல மாமணி கண்டத்து எண் தோளானே! நெரு நலையாய் இன்று ஆகி நாளை ஆகும் சீலமே! சிவலோக நெறியே ஆகும் சீர்மையே! கூர்மையே! குணமே! நல்ல கோலம் நீ கொள்வதற்கு முன்னோ? பின்னோ? குளிர் ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.
[5]
திறம் பலவும் வழி காட்டிச் செய்கை காட்டிச் சிறியையாய்ப் பெரியையாய் நின்ற நாளோ? மறம் பலவும் உடையாரை மயக்கம் தீர்த்து மா முனிவர்க்கு அருள் செய்து அங்கு இருந்த நாளோ? பிறங்கிய சீர்ப் பிரமன் தன் தலை கை ஏந்திப் பிச்சை ஏற்று உண்டு உழன்று நின்ற நாளோ? அறம் பலவும் உரைப்பதற்கு முன்னோ? பின்னோ? அணி ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.
[6]
நிலந்தரத்து நீண்டு உருவம் ஆன நாளோ? நிற்பனவும் நடப்பனவும் நீயே ஆகிக் கலந்து உரைக்கக் கற்பகம் ஆய் நின்ற நாளோ? காரணத்தால் நாரணனைக் கற்பித்து, அன்று, வலம் சுருக்கி வல் அசுரர் மாண்டு வீழ, வாசுகியை வாய் மடுத்து, வானோர் உய்ய, சலந்தரனைக் கொல்வதற்கு முன்னோ? பின்னோ? தண் ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.
[7]
பாதத்தால் முயலகனைப் பாதுகாத்துப் பார் அகத்தே பரஞ்சுடர் ஆய் நின்ற நாளோ? கீதத்தை மிகப் பாடும் அடியார்க்கு என்றும் கேடு இலா வான் உலகம் கொடுத்த நாளோ? பூதத்தான், பொரு நீலி, புனிதன், மேவிப் பொய் உரையா மறை நால்வர், விண்ணோர்க்கு, என்றும் வேதத்தை விரிப்பதற்கு முன்னோ? பின்னோ? விழவு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.
[8]
புகை எட்டும், போக்கு எட்டும், புலன்கள் எட்டும், பூதலங்கள் அவை எட்டும், பொழில்கள் எட்டும், கலை எட்டும், காப்பு எட்டும், காட்சி எட்டும், கழல் சேவடி அடைந்தார் களை கண் எட்டும், நகை எட்டும், நாள் எட்டும், நன்மை எட்டும், நலம் சிறந்தார் மனத்து அகத்து மலர்கள் எட்டும், திகை எட்டும், தெரிப்பதற்கு முன்னோ? பின்னோ? திரு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.
[9]
ஈசனாய், உலகு ஏழும் மலையும் ஆகி, இராவணனை ஈடு அழித்திட்டு, இருந்த நாளோ? வாசமலர் மகிழ் தென்றல் ஆன நாளோ? மதயானை உரி போர்த்து மகிழ்ந்த நாளோ? தாது மலர் சண்டிக்குக் கொடுத்த நாளோ? சகரர்களை மறித்திட்டு ஆட்கொண்ட நாளோ? தேசம் உமை அறிவதற்கு முன்னோ? பின்னோ? திரு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.035   தூண்டு சுடர் மேனித் தூநீறு
பண் - திருத்தாண்டகம் (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
தூண்டு சுடர் மேனித் தூநீறு ஆடி, சூலம் கை ஏந்தி, ஓர் சுழல் வாய் நாகம் பூண்டு, பொறி அரவம் காதில் பெய்து, பொன்சடைகள் அவை தாழ, புரி வெண்நூலர், நீண்டு கிடந்து இலங்கு திங்கள் சூடி, நெடுந்தெருவே வந்து எனது நெஞ்சம் கொண்டார், வேண்டும் நடை நடக்கும் வெள் ஏறு ஏறி; வெண்காடு மேவிய விகிர்தனாரே.
[1]
பாதம் தனிப் பார்மேல் வைத்த பாதர்; பாதாளம் ஏழ் உருவப் பாய்ந்த பாதர்; ஏதம் படா வண்ணம் நின்ற பாதர்; ஏழ் உலகும் ஆய் நின்ற ஏகபாதர்; ஓதத்து ஒலி மடங்கி, ஊர் உண்டு ஏறி, ஒத்து உலகம் எல்லாம் ஒடுங்கிய(ப்)பின், வேதத்து ஒலி கொண்டு, வீணை கேட்பார் வெண்காடு மேவிய விகிர்தனாரே.
[2]
நென்னலை ஓர் ஓடு ஏத்திப் பிச்சைக்கு என்று வந்தார்க்கு, வந்தேன் என்று இல்லே புக்கேன்; அந் நிலையே நிற்கின்றார்; ஐயம் கொள்ளார்; அருகே வருவார் போல் நோக்குகின்றார்; நும் நிலைமை ஏதோ? நும் ஊர்தான் ஏதோ? என்றேனுக்கு ஒன்று ஆகச் சொல்லமாட்டார் மென்முலையார் கூடி விரும்பி ஆடும் வெண்காடு மேவிய விகிர்தனாரே.
[3]
ஆகத்து உமை அடக்கி, ஆறு சூடி, ஐவாய் அரவு அசைத்து, அங்கு ஆன் ஏறு ஏறி, போகம் பல உடைத்து ஆய்ப் பூதம் சூழ, புலித்தோல் உடையாப் புகுந்து நின்றார்; பாகு இடுவான் சென்றேனைப் பற்றி நோக்கி, பரிசு அழித்து, என் வளை கவர்ந்தார், பாவியேனை; மேகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த வெண்காடு மேவிய விகிர்தனாரே.
தொட்டு இலங்கு சூலத்தர்; மழுவாள் ஏந்தி, சுடர்க் கொன்றைத்தார் அணிந்து, சுவைகள் பேசி, பட்டி வெள் ஏறு ஏறி, பலியும் கொள்ளார்; பார்ப்பாரைப் பரிசு அழிப்பார் ஒக்கின்றாரால்; கட்டு இலங்கு வெண்நீற்றர்; கனலப் பேசிக் கருத்து அழித்து வளை கவர்ந்தார்; காலை மாலை விட்டு இலங்கு சடைமுடியர்; வேத நாவர் வெண்காடு மேவிய விகிர்தனாரே.
[6]
பெண்பால், ஒருபாகம்; பேணா வாழ்க்கை; கோள் நாகம் பூண்பனவும்; நாண் ஆம் சொல்லார்; உண்பார், உறங்குவார், ஒவ்வா; நங்காய்! உண்பதுவும் நஞ்சு அன்றே, உலோபி! உண்ணார்; பண்பால் அவிர்சடையர் பற்றி நோக்கி, பாலைப் பரிசு அழிய, பேசுகின்றார் விண்பால் மதி சூடி, வேதம் ஓதி, வெண்காடு மேவிய விகிர்தனாரே.
புள்ளானும் நான்முகனும் புக்கும் போந்தும் காணார், பொறி அழல் ஆய் நின்றான் தன்னை; உள்ளானை; ஒன்று அல்லா உருவினானை; உலகுக்கு ஒரு விளக்கு ஆய் நின்றான் தன்னை; கள் ஏந்து கொன்றை தூய், காலை மூன்றும் ஓவாமே, நின்று தவங்கள் செய்த வெள்ளானை வேண்டும் வரம் கொடுப்பார் வெண்காடு மேவிய விகிர்தனாரே.
[9]
மாக் குன்று எடுத்தோன்தன் மைந்தன் ஆகி மா வேழம் வில்லா மதித்தான் தன்னை நோக்கும் துணைத் தேவர் எல்லாம் நிற்க நொடிவரையில் நோவ விழித்தான் தன்னை; காக்கும் கடல் இலங்கைக் கோமான் தன்னைக் கதிர் முடியும் கண்ணும் பிதுங்க ஊன்றி, வீக்கம் தவிர்த்த விரலார்போலும் வெண்காடு மேவிய விகிர்தனாரே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.036   அலை ஆர் கடல் நஞ்சம்
பண் - திருத்தாண்டகம் (திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
அலை ஆர் கடல் நஞ்சம் உண்டார் தாமே; அமரர்களுக்கு அருள்செய்யும் ஆதி தாமே; கொலை ஆய கூற்றம் உதைத்தார் தாமே; கொல் வேங்கைத் தோல் ஒன்று அசைத்தார் தாமே; சிலையால் புரம் மூன்றும் எரித்தார் தாமே; தீ நோய் களைந்து என்னை ஆண்டார் தாமே; பலி தேர்ந்து அழகு ஆய பண்பர்தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.
[1]
வெள்ளம் ஒரு சடைமேல் ஏற்றார் தாமே; மேலார்கள் மேலார்கள் மேலார் தாமே; கள்ளம் கடிந்து என்னை ஆண்டார் தாமே; கருத்து உடைய பூதப்படையார் தாமே; உள்ளத்து உவகை தருவார் தாமே உறு நோய் சிறு பிணிகள் தீர்ப்பார் தாமே பள்ளப் பரவை நஞ்சு உண்டார் தாமே பழன நகர் எம்பிரானார் தாமே.
[2]
இரவும் பகலும் ஆய் நின்றார் தாமே; எப்போதும் என் நெஞ்சத்து உள்ளார் தாமே; அரவம் அரையில் அசைத்தார் தாமே; அனல் ஆடி அங்கை மறித்தார் தாமே; குரவம் கமழும் குற்றாலர் தாமே; கோலங்கள் மேல் மேல் உகப்பார் தாமே; பரவும் அடியார்க்குப் பாங்கர் தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.
[3]
மாறு இல் மதில் மூன்றும் எய்தார் தாமே; வரி அரவம் கச்சு ஆக ஆர்த்தார் தாமே; நீறு சேர் திருமேனி நிமலர் தாமே; நெற்றி நெருப்புக் கண் வைத்தார் தாமே; ஏறு கொடுஞ் சூலக் கையார் தாமே; என்பு ஆபரணம் அணிந்தார் தாமே; பாறு உண் தலையில் பலியார் தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.
[4]
சீரால் வணங்கப்படுவார் தாமே; திசைக்கு எல்லாம் தேவு ஆகி நின்றார் தாமே; ஆரா அமுதம் ஆனார் தாமே; அளவு இல் பெருமை உடையார் தாமே; நீர் ஆர் நியமம் உடையார் தாமே; நீள்வரை வில் ஆக வளைத்தார் தாமே; பாரார் பரவப்படுவார் தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.
[5]
காலன் உயிர் வௌவ வல்லார் தாமே; கடிது ஓடும் வெள்ளை விடையார் தாமே; கோலம் பலவும் உகப்பார் தாமே; கோள் நாகம் நாண் ஆகப் பூண்டார் தாமே; நீலம் பொலிந்த மிடற்றார் தாமே; நீள்வரையின் உச்சி இருப்பார் தாமே; பால விருத்தரும் ஆனார் தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.
[6]
ஏய்ந்த உமை நங்கை பங்கர் தாமே; ஏழ் ஊழிக்கு அப் புறம் ஆய் நின்றார் தாமே; ஆய்ந்து மலர் தூவ நின்றார் தாமே; அளவு இல் பெருமை உடையார் தாமே; தேய்ந்த பிறை சடைமேல் வைத்தார் தாமே; தீ வாய் அரவு அதனை ஆர்த்தார் தாமே; பாய்ந்த படர் கங்கை ஏற்றார் தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.
[7]
ஓராதார் உள்ளத்தில் நில்லார் தாமே; உள் ஊறும் அன்பர் மனத்தார் தாமே; பேராது என் சிந்தை இருந்தார் தாமே; பிறர்க்கு என்றும் காட்சிக்கு அரியார் தாமே; ஊர் ஆரும் மூஉலகத்து உள்ளார் தாமே; உலகை நடுங்காமல் காப்பார் தாமே; பார் ஆர் முழவத்து இடையார் தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.
[8]
நீண்டவர்க்கு ஓர் நெருப்பு உருவம் ஆனார் தாமே; நேரிழையை ஒரு பாகம் வைத்தார் தாமே; பூண்டு அரவைப் புலித்தோல் மேல் ஆர்த்தார் தாமே; பொன் நிறத்த வெள்ளச்சடையார் தாமே; ஆண்டு உலகு ஏழ் அனைத்தினையும் வைத்தார் தாமே; அங்கு அங்கே சிவம் ஆகி நின்றார் தாமே; பாண்டவரில் பார்த்தனுக்குப் பரிந்தார் தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.037   ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
பண் - திருத்தாண்டகம் (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும் அனல் ஆடி! ஆரமுதே! என்றேன், நானே; கூர் ஆர் மழுவாள் படை ஒன்று ஏந்திக் குறள் பூதப்பல் படையாய்! என்றேன், நானே; பேர் ஆயிரம் உடையாய்! என்றேன், நானே; பிறை சூடும் பிஞ்ஞகனே! என்றேன், நானே; ஆரா அமுதே! என் ஐயாற(ன்)னே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!.
[1]
தீ வாயில் முப்புரங்கள் நீறா நோக்கும் தீர்த்தா! புராணனே! என்றேன், நானே; மூவா மதிசூடி! என்றேன், நானே; முதல்வா! முக்கண்ணனே! என்றேன், நானே; ஏ ஆர் சிலையானே! என்றேன், நானே; இடும்பைக்கடல் நின்றும் ஏற வாங்கி, ஆவா! என்று அருள்புரியும் ஐயாற(ன்)னே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!.
[2]
அம் சுண்ண வண்ணனே! என்றேன், நானே; அடியார்கட்கு ஆர் அமுதே! என்றேன், நானே; நஞ்சு அணி கண்டனே! என்றேன், நானே; நாவலர்கள் நால்மறையே! என்றேன், நானே; நெஞ்சு உணர உள் புக்கு இருந்தபோது நிறையும் அமுதமே! என்றேன், நானே; அஞ்சாதே ஆள்வானே! ஐயாற(ன்)னே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!.
[3]
தொல்லைத் தொடு கடலே! என்றேன், நானே; துலங்கும் இளம்பிறையாய்! என்றேன், நானே; எல்லை நிறைந்தானே! என்றேன், நானே; ஏழ்நரம்பின் இன் இசையாய்! என்றேன், நானே; அல்லல் கடல் புக்கு அழுந்துவேனை வாங்கி அருள்செய்தாய்! என்றேன், நானே; எல்லை ஆம் ஐயாறா! என்றேன், நானே; என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!.
[4]
இண்டைச் சடைமுடியாய்! என்றேன், நானே; இருசுடர் வானத்தாய்! என்றேன், நானே; தொண்டர் தொழப்படுவாய்! என்றேன், நானே; துருத்தி நெய்த்தானத்தாய்! என்றேன், நானே; கண்டம் கறுத்தானே! என்றேன், நானே; கனல் ஆகும் கண்ணானே! என்றேன், நானே; அண்டத்துக்கு அப்பால் ஆம் ஐயாற(ன்)னே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!.
[5]
பற்றார் புரம் எரித்தாய்! என்றேன், நானே; பசுபதீ! பண்டரங்கா! என்றேன், நானே; கற்றார்கள் நாவினாய்! என்றேன், நானே; கடு விடை ஒன்று ஊர்தியாய்! என்றேன், நானே; பற்று ஆனார் நெஞ்சு உளாய்! என்றேன், நானே; பார்த்தற்கு அருள்செய்தாய்! என்றேன், நானே; அற்றார்க்கு அருள்செய்யும் ஐயாற(ன்)னே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!.
[6]
விண்ணோர் தலைவனே! என்றேன், நானே; விளங்கும் இளம்பிறையாய்! என்றேன், நானே; எண்ணார் எயில் எரித்தாய்! என்றேன், நானே; ஏகம்பம் மேயானே! என்றேன், நானே; பண் ஆர் மறை பாடி! என்றேன், நானே; பசுபதீ! பால்நீற்றாய்! என்றேன், நானே; அண்ணா! ஐயாறனே! என்றேன், நானே; என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!.
[7]
அவன் என்று நான் உன்னை அஞ்சாதேனை அல்லல் அறுப்பானே! என்றேன், நானே; சிவன் என்று நான் உன்னை எல்லாம் சொல்ல, செல்வம் தருவானே! என்றேன், நானே; பவன் ஆகி என் உள்ளத்துள்ளே நின்று பண்டைவினை அறுப்பாய்! என்றேன், நானே; அவன் என்றே, ஆதியே! ஐயாற(ன்)னே!என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!
[8]
கச்சி ஏகம்பனே! என்றேன், நானே; கயிலாயா! காரோணா! என்றேன், நானே; நிச்சல் மணாளனே! என்றேன், நானே; நினைப்பார் மனத்து உளாய்! என்றேன், நானே; உச்சம் போது ஏறு ஏறீ! என்றேன், நானே; உள்குவார் உள்ளத்தாய்! என்றேன், நானே; அச்சம் பிணி தீர்க்கும் ஐயாற(ன்)னே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!.
[9]
வில் ஆடி வேடனே! என்றேன், நானே; வெண்நீறு மெய்க்கு அணிந்தாய்! என்றேன், நானே; சொல் ஆய சூழலாய்! என்றேன், நானே; சுலா ஆய தொன்னெறியே! என்றேன், நானே; எல்லாம் ஆய் என் உயிரே! என்றேன், நானே; இலங்கையர்கோன் தோள் இறுத்தாய்! என்றேன், நானே; அல்லா வினை தீர்க்கும் ஐயாற(ன்)னே! என்றுஎன்றே நான் அரற்றி நைகின்றேனே!.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.038   ஓசை ஒலி எலாம் ஆனாய்,
பண் - திருத்தாண்டகம் (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
ஓசை ஒலி எலாம் ஆனாய், நீயே; உலகுக்கு ஒருவனாய் நின்றாய், நீயே; வாசமலர் எலாம் ஆனாய், நீயே; மலையான் மருகனாய் நின்றாய், நீயே; பேசப் பெரிதும் இனியாய், நீயே; பிரானாய் அடி என்மேல் வைத்தாய், நீயே; தேச விளக்கு எலாம் ஆனாய், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.
[1]
நோக்க(அ)ரிய திருமேனி உடையாய், நீயே; நோவாமே நோக்கு அருள வல்லாய், நீயே; காப்ப(அ)ரிய ஐம்புலனும் காத்தாய், நீயே; காமனையும் கண் அழலால் காய்ந்தாய், நீயே; ஆர்ப்ப(அ)ரிய மா நாகம் ஆர்த்தாய், நீயே; அடியான் என்று அடி என்மேல் வைத்தாய், நீயே; தீர்ப்ப (அ)ரிய வல்வினை நோய் தீர்ப்பாய், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ!.
[2]
கனத்து அகத்துக் கடுஞ் சுடர் ஆய் நின்றாய், நீயே; கடல், வரை, வான், ஆகாயம், ஆனாய், நீயே; தனத்து அகத்துத் தலை கலனாக் கொண்டாய், நீயே; சார்ந்தாரைத் தகைந்து ஆள வல்லாய், நீயே; மனத்து இருந்த கருத்து அறிந்து முடிப்பாய், நீயே; மலர்ச் சேவடி என்மேல் வைத்தாய், நீயே; சினத்து இருந்த திரு நீலகண்டன், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.
[3]
வான் உற்ற மா மலைகள் ஆனாய், நீயே; வடகயிலை மன்னி இருந்தாய், நீயே; ஊன் உற்ற ஒளி மழுவாள் படையாய், நீயே; ஒளி மதியோடு, அரவு, புனல், வைத்தாய், நீயே; ஆன் உற்ற ஐந்தும் அமர்ந்தாய், நீயே; அடியான் என்று அடி என்மேல் வைத்தாய், நீயே; தேன் உற்ற சொல் மடவாள் பங்கன், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.
[4]
பெண் ஆண் பிறப்பு இலியாய் நின்றாய், நீயே; பெரியார்கட்கு எல்லாம் பெரியாய், நீயே; உண்ணா அருநஞ்சம் உண்டாய், நீயே; ஊழி முதல்வனாய் நின்றாய், நீயே; கண் ஆய் உலகு எலாம் காத்தாய், நீயே; கழல்சேவடி என்மேல் வைத்தாய், நீயே; திண் ஆர் மழுவாள் படையாய், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.
[5]
உற்றிருந்த உணர்வு எலாம் ஆனாய், நீயே; உற்றவர்க்கு ஓர் சுற்றம் ஆய் நின்றாய், நீயே; கற்றிருந்த கலைஞானம் ஆனாய், நீயே; கற்றவர்க்கு ஓர் கற்பகம் ஆய் நின்றாய், நீயே; பெற்றிருந்த தாய் அவளின் நல்லாய், நீயே; பிரானாய் அடி என்மேல் வைத்தாய், நீயே; செற்றிருந்த திரு நீலகண்டன், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.
[6]
எல்லா உலகமும் ஆனாய், நீயே; ஏகம்பம் மேவி இருந்தாய், நீயே; நல்லாரை நன்மை அறிவாய், நீயே; ஞானச்சுடர் விளக்கு ஆய் நின்றாய், நீயே; பொல்லா வினைகள் அறுப்பாய், நீயே; புகழ்ச் சேவடி என்மேல் வைத்தாய், நீயே; செல்வாய செல்வம் தருவாய், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.
[7]
ஆவினில் ஐந்தும் அமர்ந்தாய், நீயே; அளவு இல் பெருமை உடையாய், நீயே; பூவினில் நாற்றம் ஆய் நின்றாய், நீயே; போர்க் கோலம் கொண்டு எயில் எய்தாய், நீயே; நாவில் நடு உரை ஆய் நின்றாய், நீயே; நண்ணி அடி என்மேல் வைத்தாய், நீயே; தேவர் அறியாத தேவன், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.
[8]
எண் திசைக்கும் ஒண்சுடர் ஆய் நின்றாய், நீயே; ஏகம்பம் மேய இறைவன், நீயே; வண்டு இசைக்கும் நறுங்கொன்றைத் தாராய், நீயே; வாரா உலகு அருள வல்லாய், நீயே; தொண்டு இசைத்து உன் அடி பரவ நின்றாய், நீயே; தூ மலர்ச்சேவடி என்மேல் வைத்தாய், நீயே; திண் சிலைக்கு ஓர் சரம் கூட்ட வல்லாய், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.
ஆரும் அறியா இடத்தாய், நீயே; ஆகாயம் தேர் ஊர வல்லாய், நீயே; பேரும் பெரிய இலங்கை வேந்தன் பெரிய முடிபத்து இறுத்தாய், நீயே; ஊரும் புரம் மூன்றும் அட்டாய், நீயே; ஒண் தாமரையானும் மாலும் கூடித் தேரும் அடி என்மேல் வைத்தாய், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.039   நீறு ஏறு திருமேனி உடையான்
பண் - திருத்தாண்டகம் (திருமழபாடி வச்சிரத்தம்பேசுவரர் அழகாம்பிகையம்மை)
நீறு ஏறு திருமேனி உடையான் கண்டாய்; நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைத்தான் கண்டாய்; கூறுஆக உமை பாகம் கொண்டான் கண்டாய்; கொடிய விடம் உண்டு இருண்ட கண்டன் கண்டாய்; ஏறு ஏறி எங்கும் திரிவான் கண்டாய்; ஏழ் உலகும் ஏழ்மலையும் ஆனான் கண்டாய்; மாறு ஆனார் தம் அரணம் அட்டான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே.
[1]
கொக்கு இறகு சென்னி உடையான் கண்டாய்; கொல்லை விடை ஏறும் கூத்தன் கண்டாய்; அக்கு அரை மேல் ஆடல் உடையான் கண்டாய்; அனல் அங்கை ஏந்திய ஆதி கண்டாய்; அக்கோடு அரவம் அணிந்தான் கண்டாய்; அடியார்கட்கு ஆர் அமுதம் ஆனான் கண்டாய்; மற்று இருந்த கங்கைச் சடையான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் தானே.
[2]
நெற்றித் தனிக் கண் உடையான் கண்டாய்; நேரிழை ஓர் பாகம் ஆய் நின்றான் கண்டாய்; பற்றிப் பாம்பு ஆட்டும் படிறன் கண்டாய்; பல் ஊர் பலி தேர் பரமன் கண்டாய்; செற்றார் புரம் மூன்றும் செற்றான் கண்டாய்; செழு மா மதி சென்னி வைத்தான் கண்டாய்; மற்று ஒரு குற்றம் இலாதான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் தானே.
[3]
அலை ஆர்ந்த புனல் கங்கைச் சடையான் கண்டாய்; அண்டத்துக்கு அப்பால் ஆய் நின்றான் கண்டாய்; கொலை ஆன கூற்றம் குமைத்தான் கண்டாய்; கொல் வேங்கைத் தோல் ஒன்று உடுத்தான் கண்டாய்; சிலையால்-திரிபுரங்கள் செற்றான் கண்டாய்; செழு மா மதி சென்னி வைத்தான் கண்டாய்; மலை ஆர் மடந்தை மணாளன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் தானே.
[4]
உலந்தார் தம் அங்கம் அணிந்தான் கண்டாய்; உவகையோடு இன் அருள்கள் செய்தான் கண்டாய்; நலம் திகழும் கொன்றைச் சடையான் கண்டாய்; நால்வேதம் ஆறு அங்கம் ஆனான் கண்டாய்; உலந்தார் தலை கலனாக் கொண்டான் கண்டாய்; உம்பரார் தங்கள் பெருமான் கண்டாய் மலர்ந்து ஆர் திருவடி என் தலை மேல் வைத்த மழபாடி மன்னும் மணாளன் தானே.
[5]
தாமரையான் தன் தலையைச் சாய்த்தான் கண்டாய்; தகவு உடையார் நெஞ்சு இருக்கை கொண்டான் கண்டாய்; பூ மலரான் ஏத்தும் புனிதன் கண்டாய்! புணர்ச்சிப் பொருள் ஆகி நின்றான் கண்டாய்; ஏ மருவு வெஞ்சிலை ஒன்று ஏந்தி கண்டாய்; இருள் ஆர்ந்த கண்டத்து இறைவன் கண்டாய்; மா மருவும் கலை கையில் ஏந்தி கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் தானே.
[6]
நீர் ஆகி, நெடுவரைகள் ஆனான் கண்டாய்; நிழல் ஆகி, நீள் விசும்பும் ஆனான் கண்டாய்; பார் ஆகி, பௌவம் ஏழ் ஆனான் கண்டாய்; பகல் ஆகி, வான் ஆகி, நின்றான் கண்டாய்; ஆரேனும் தன் அடியார்க்கு அன்பன் கண்டாய்; அணு ஆகி, ஆதி ஆய், நின்றான் கண்டாய்; வார் ஆர்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் தானே.
[7]
பொன் இயலும் திருமேனி உடையான் கண்டாய்; பூங்கொன்றைத்தார் ஒன்று அணிந்தான் கண்டாய்; மின் இயலும் வார்சடை எம்பெருமான் கண்டாய்; வேழத்தின் உரி விரும்பிப் போர்த்தான் கண்டாய்; தன் இயல்பார் மற்று ஒருவர் இல்லான் கண்டாய்; தாங்க (அ)ரிய சிவம் தானாய் நின்றான் கண்டாய்; மன்னிய மங்கை ஓர் கூறன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் தானே.
[8]
ஆலாலம் உண்டு உகந்த ஆதி கண்டாய்; அடையலர் தம் புரம் மூன்றும் எய்தான் கண்டாய்; காலால் அக் காலனையும் காய்ந்தான் கண்டாய்; கண்ணப்பர்க்கு அருள் செய்த காளை கண்டாய்; பால் ஆரும் மொழி மடவாள் பாகன் கண்டாய்; பசு ஏறிப் பலி திரியும் பண்பன் கண்டாய்; மாலாலும் அறிவு அரிய மைந்தன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் தானே.
[9]
ஒரு சுடர் ஆய், உலகு ஏழும் ஆனான் கண்டாய்; ஓங்காரத்து உள் பொருள் ஆய் நின்றான் கண்டாய்; விரி சுடர் ஆய், விளங்கு ஒளி ஆய், நின்றான் கண்டாய்; விழவு ஒலியும், வேள்வொலியும், ஆனான் கண்டாய்; இரு சுடர் மீது ஓடா இலங்கைக்கோனை ஈடு அழிய இருபது தோள் இறுத்தான் கண்டாய்; மரு சுடரின் மாணிக்கக் குன்று கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் தானே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.040   அலை அடுத்த பெருங்கடல் நஞ்சு
பண் - திருத்தாண்டகம் (திருமழபாடி வச்சிரத்தம்பேசுவரர் அழகாம்பிகையம்மை)
அலை அடுத்த பெருங்கடல் நஞ்சு அமுதா உண்டு, அமரர்கள் தம் தலை காத்த ஐயர்; செம்பொன் சிலை எடுத்து மா நாகம் நெருப்புக் கோத்துத் திரிபுரங்கள் தீ இட்ட செல்வர் போலும்; நிலை அடுத்த பசும் பொன்னால், முத்தால், நீண்ட நிரை வயிரப் பலகையால், குவையாத் துற்ற மலை அடுத்த மழபாடி வயிரத்தூணே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.
[1]
அறை கலந்த குழல், மொந்தை, வீணை, யாழும், அந்தரத்தின் கந்தருவர் அமரர் ஏத்த, மறை கலந்த மந்திரமும் நீரும் கொண்டு வழிபட்டார் வான் ஆளக் கொடுத்தி அன்றே! கறை கலந்த பொழில் கச்சிக் கம்பம் மேய கன வயிரத் திரள் தூணே! கலி சூழ் மாடம் மறை கலந்த மழபாடி வயிரத்தூணே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.
[2]
உரம் கொடுக்கும் இருள் மெய்யர், மூர்க்கர், பொல்லா ஊத்தைவாய்ச் சமணர் தமை உறவாக் கொண்ட பரம் கெடுத்து, இங்கு அடியேனை ஆண்டு கொண்ட பவளத்தின் திரள் தூணே! பசும்பொன் முத்தே! புரம் கெடுத்து, பொல்லாத காமன் ஆகம் பொடி ஆக விழித்து அருளி, புவியோர்க்கு என்றும் வரம் கொடுக்கும் மழபாடி வயிரத்தூணே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.
[3]
ஊன் இகந்து ஊண் உறி கையர் குண்டர், பொல்லா ஊத்தைவாய்ச் சமணர் உறவு ஆகக் கொண்டு ஞான(அ)கம் சேர்ந்து உள்ள வயிரத்தை நண்ணா நாயேனைப் பொருள் ஆக ஆண்டு கொண்ட, மீன் அகம் சேர் வெள்ள நீர் விதியால் சூடும் வேந்தனே! விண்ணவர் தம் பெருமான்! மேக வானகம் சேர் மழபாடி வயிரத்தூணே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.
[4]
சிரம் ஏற்ற நான்முகன் தன் தலையும் மற்றைத் திருமால் தன் செழுந் தலையும் பொன்றச் சிந்தி, உரம் ஏற்ற இரவி பல்-தகர்த்து, சோமன் ஒளிர்கலைகள் பட உழக்கி, உயிரை நல்கி, நரை ஏற்ற விடை ஏறி, நாகம் பூண்ட நம்பியையே, மறை நான்கும் ஓலம் இட்டு வரம் ஏற்கும் மழபாடி வயிரத்தூணே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.
[5]
சினம் திருத்தும் சிறுப் பெரியார் குண்டர் தங்கள் செதுமதியார் தீவினைக்கே விழுந்தேன்; தேடிப் புனம் திருத்தும் பொல்லாத பிண்டி பேணும் பொறி இலியேன் தனைப் பொருளா ஆண்டு கொண்டு, தனம் திருத்துமவர் திறத்தை ஒழியப் பாற்றி, தயா மூலதன் மவழி எனக்கு நல்கி, மனம் திருத்தும் மழபாடி வயிரத்தூணே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.
[6]
சுழித் துணை ஆம் பிறவி வழித் துக்கம் நீக்கும் சுருள் சடை எம்பெருமானே! தூய தெண்நீர் இழிப்ப(அ)ரிய பசுபாசப் பிறப்பை நீக்கும் என் துணையே! என்னுடைய பெம்மான்! தம்மான்! பழிப்ப(அ)ரிய திருமாலும் அயனும் காணாப் பருதியே! சுருதி முடிக்கு அணி ஆய் வாய்த்த, வழித்துணை ஆம், மழபாடி வயிரத்தூணே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.
[7]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.041   வகை எலாம் உடையாயும் நீயே
பண் - திருத்தாண்டகம் (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
வகை எலாம் உடையாயும் நீயே என்றும், வான் கயிலை மேவினாய் நீயே என்றும், மிகை எலாம் மிக்காயும் நீயே என்றும், வெண்காடு மேவினாய் நீயே என்றும், பகை எலாம் தீர்த்து ஆண்டாய் நீயே என்றும், பாசூர் அமர்ந்தாயும் நீயே என்றும், திகை எலாம் தொழச் செல்வாய் நீயே என்றும், நின்ற நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.
[1]
ஆர்த்த எனக்கு அன்பன் நீயே என்றும், ஆதிக்கயிலாயன் நீயே என்றும், கூர்த்த நடம் ஆடி நீயே என்றும், கோடிகா மேய குழகா! என்றும், பார்த்தற்கு அருள் செய்தாய் நீயே என்றும், பழையனூர் மேவிய பண்பா! என்றும், தீர்த்தன் சிவலோகன் நீயே என்றும், நின்ற நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.
[2]
அல் ஆய்ப் பகல் ஆனாய் நீயே என்றும், ஆதிக் கயிலாயன் நீயே என்றும், கல்லால் அமர்ந்தாயும் நீயே என்றும், காளத்திக் கற்பகமும் நீயே என்றும், சொல் ஆய்ப் பொருள் ஆனாய் நீயே என்றும், சோற்றுத்துறை உறைவாய் நீயே என்றும், செல் வாய்த் திரு ஆனாய் நீயே என்றும், நின்ற நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.
[3]
மின் நேர் இடைபங்கன் நீயே என்றும், வெண் கயிலை மேவினாய் நீயே என்றும், பொன் நேர் சடை முடியாய் நீயே என்றும், பூதகண நாதன் நீயே என்றும், என் நா இரதத்தாய் நீயே என்றும், ஏகம்பத்து என் ஈசன் நீயே என்றும், தென்னூர்ப்பதி உளாய் நீயே என்றும், நின்ற நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.
[4]
முந்தி இருந்தாயும் நீயே என்றும், முன் கயிலை மேவினாய் நீயே என்றும், நந்திக்கு அருள்செய்தாய் நீயே என்றும், நடம் ஆடி நள்ளாறன் நீயே என்றும், பந்திப்ப(அ)ரியாயும் நீயே என்றும், பைஞ்ஞீலி மேவினாய் நீயே என்றும், சித்திப்ப(அ)ரியாயும் நீயே என்றும், நின்ற நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.
[5]
தக்கார் அடியார்க்கு நீயே என்றும், தலை ஆர் கயிலாயன் நீயே என்றும், அக்கு ஆரம் பூண்டாயும் நீயே என்றும், ஆக்கூரில்- தான் தோன்றி நீயே என்றும், புக்கு ஆய ஏழ் உலகும் நீயே என்றும், புள்ளிருக்கு வேளுராய் நீயே என்றும், தெக்கு ஆரும் மாகோணத்தானே என்றும், நின்ற நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.
[6]
புகழும் பெருமையாய் நீயே என்றும், பூங் கயிலை மேவினாய் நீயே என்றும், இகழும் தலை ஏந்தி நீயே என்றும், இராமேச்சுரத்து இன்பன் நீயே என்றும், அகழும் மதில் உடையாய் நீயே என்றும், ஆலவாய் மேவினாய் நீயே என்றும், திகழும் மதிசூடி நீயே என்றும், நின்ற நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.
[7]
வானவர்க்கு மூத்து இளையாய் நீயே என்றும், வானக் கயிலாயன் நீயே என்றும், கானம் நடம் ஆடி நீயே என்றும், கடவூரில் வீரட்டன் நீயே என்றும், ஊன் ஆர் முடி அறுத்தாய் நீயே என்றும், ஒற்றியூர் ஆரூராய் நீயே என்றும், தேன் ஆய் அமுது ஆனாய் நீயே என்றும், நின்ற நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.
[8]
தந்தை தாய் இல்லாதாய் நீயே என்றும், தலை ஆர் கயிலாயன் நீயே என்றும், எம் தாய் எம்பிரான் ஆனாய் நீயே என்றும், ஏகம்பத்து என் ஈசன் நீயே என்றும், முந்திய முக்கணாய் நீயே என்றும், மூவலூர் மேவினாய் நீயே என்றும், சிந்தையாய், தேனூராய் நீயே என்றும், நின்ற நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.
[9]
மறித்தான் வலி செற்றாய் நீயே என்றும்; வான் கயிலை மேவினாய் நீயே என்றும்; வெறுத்தார் பிறப்பு அறுப்பாய் நீயே என்றும்; வீழிமிழலையாய் நீயே என்றும்; அறத்தாய், அமுது ஈந்தாய் நீயே என்றும்; யாவர்க்கும் தாங்க ஒணா நஞ்சம் உண்டு, பொறுத்தாய், புலன் ஐந்தும், நீயே என்றும்; நின்ற நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.042   மெய்த்தானத்து அகம்படியுள் ஐவர் நின்று
பண் - திருத்தாண்டகம் (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
மெய்த்தானத்து அகம்படியுள் ஐவர் நின்று வேண்டிற்றுக் குறை முடித்து, வினைக்குக் கூடு ஆம் இத் தானத்து இருந்து, இங்ஙன் உய்வான் எண்ணும் இதனை ஒழி! இயம்பக் கேள்: ஏழை நெஞ்சே! மைத்து ஆன நீள் நயனி பங்கன், வங்கம் வரு திரை நீர் நஞ்சு உண்ட கண்டன், மேய நெய்த்தான நன்நகர் என்று ஏத்தி நின்று, நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.
[1]
ஈண்டா இரும் பிறவி துறவா ஆக்கை-இது நீங்கல் ஆம்; விதி உண்டு என்று சொல்ல வேண்டாவே; நெஞ்சமே! விளம்பக் கேள், நீ; விண்ணவர் தம் பெருமானார், மண்ணில் என்னை ஆண்டான், அன்று அரு வரையால் புரம்மூன்று எய்த அம்மானை, அரி அயனும் காணா வண்ணம் நீண்டான், உறை துறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.
[2]
பரவிப் பலபலவும் தேடி, ஓடி, பாழ் ஆம் குரம்பை இடைக் கிடந்து, வாளா குரவி, குடிவாழ்க்கை வாழ எண்ணி, குலைகை தவிர், நெஞ்சே! கூறக் கேள், நீ; இரவிக்குலம் முதலா வானோர் கூடி எண் இறந்த கோடி அமரர் ஆயம் நிரவிக்க(அ)அரியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.
[3]
அலை ஆர் வினைத் திறம் சேர் ஆக்கையுள்ளே அகப்பட்டு, உள் ஆசை எனும் பாசம் தன்னுள் தலை ஆய், கடை ஆகும் வாழ்வில் ஆழ்ந்து தளர்ந்து, மிக, நெஞ்சமே, அஞ்ச வேண்டா! இலை ஆர் புனக் கொன்றை, எறிநீர், திங்கள், இருஞ்சடைமேல் வைத்து உகந்தான்; இமையோர் ஏத்தும் நிலையான; உறை நிறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.
[4]
தினைத்தனை ஓர் பொறை இலா உயிர் போம் கூட்டைப் பொருள் என்று மிக உன்னி, மதியால் இந்த அனைத்து உலகும் ஆளல் ஆம் என்று பேசும் ஆங்காரம் தவிர், நெஞ்சே! அமரர்க்கு ஆக முனைத்து வரு மதில் மூன்றும் பொன்ற, அன்று, முடுகிய வெஞ்சிலை வளைத்து, செந்தீ மூழ்க நினைத்த பெருங் கருணையன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.
[5]
மிறை படும் இவ் உடல் வாழ்வை மெய் என்று எண்ணி, வினையிலே கிடந்து அழுந்தி, வியவேல், நெஞ்சே! குறைவு உடையார் மனத்து உளான்; குமரன் தாதை; கூத்து ஆடும் குணம் உடையான்; கொலை வேல் கையான்; அறை கழலும் திருவடி மேல் சிலம்பும் ஆர்ப்ப, அவனிதலம் பெயர வரு நட்டம் நின்ற நிறைவு உடையான்; இடம் ஆம் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.
[6]
பேசப் பொருள் அலாப் பிறவி தன்னைப் பெரிது என்று உன் சிறு மனத்தால் வேண்டி, ஈண்டு வாசக்குழல் மடவார் போகம் என்னும் வலைப்பட்டு, வீழாதே வருக, நெஞ்சே! தூசக் கரி உரித்தான்; தூநீறு ஆடித் துதைந்து இலங்கு நூல் மார்பன்; தொடரகில்லா நீசர்க்கு அரியவன்; நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.
[7]
அஞ்சப் புலன் இவற்றால் ஆட்ட ஆட்டுண்டு, அருநோய்க்கு இடம் ஆய உடலின் தன்மை தஞ்சம் எனக் கருதி, தாழேல், நெஞ்சே! தாழக் கருதுதியே? தன்னைச் சேரா வஞ்சம் மனத்தவர்கள் காண ஒண்ணா மணிகண்டன், வானவர் தம் பிரான்! என்று ஏத்தும் நெஞ்சர்க்கு இனியவன், நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.
[8]
பொருந்தாத உடல் அகத்தின் புக்க ஆவி போம் ஆறு அறிந்து அறிந்தே, புலை வாழ்வு உன்னி, இருந்து, ஆங்கு இடர்ப்பட நீ வேண்டா; நெஞ்சே! இமையவர் தம் பெருமான்; அன்று உமையாள் அஞ்ச, கருந்தாள மதகரியை வெருவக் கீறும் கண்ணுதல்; கண்டு அமர் ஆடி, கருதார் வேள்வி; நிரந்தரமா இனிது உறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.
[9]
உரித்து அன்று, உனக்கு இவ் உடலின் தன்மை; உண்மை உரைத்தேன்; விரதம் எல்லாம் தரித்தும் தவம் முயன்றும் வாழா நெஞ்சே! தம்மிடையில் இல்லார்க்கு ஒன்று அல்லார்க்கு அன்னன்; எரி(த்)த்தான்; அனல் உடையான்; எண்தோளானே! எம்பெருமான்! என்று ஏத்தா இலங்கைக் கோனை நெரித்தானை, நெய்த்தானம் மேவினானை, நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.043   நில்லாத நீர் சடைமேல் நிற்பித்தானை;
பண் - திருத்தாண்டகம் (திருப்பூந்துருத்தி புஷ்பவனநாதர் அழகாலமர்ந்தநாயகி)
நில்லாத நீர் சடைமேல் நிற்பித்தானை; நினையா என் நெஞ்சை நினைவித்தானை; கல்லாதன எல்லாம் கற்பித்தானை; காணாதன எல்லாம் காட்டினானை; சொல்லாதன எல்லாம் சொல்லி, என்னைத் தொடர்ந்து, இங்கு அடியேனை ஆளாக்கொண்டு, பொல்லா என் நோய் தீர்த்த புனிதன் தன்னை, புண்ணியனே, பூந்துருத்திக் கண்டேன், நானே.
[1]
குற்றாலம் கோகரணம் மேவினானை; கொடுங் கைக் கருங்கூற்றைப் பாய்ந்தான் தன்னை; உற்று ஆலம்-நஞ்சு உண்டு ஒடுக்கினானை; உணரா என் நெஞ்சை உணர்வித்தானை; பற்று ஆலின்கீழ் அங்கு இருந்தான் தன்னை; பண் ஆர்ந்த வீணை பயின்றான் தன்னை; புற்று ஆடு அரவு ஆர்த்த புனிதன் தன்னை; புண்ணியனை; பூந்துருத்திக் கண்டேன், நானே.
[2]
எனக்கு என்றும் இனியானை, எம்மான் தன்னை, எழில் ஆரும் ஏகம்பம் மேயான் தன்னை, மனக்கு என்றும் வருவானை, வஞ்சர் நெஞ்சில் நில்லானை, நின்றியூர் மேயான் தன்னை, தனக்கு என்றும் அடியேனை ஆளாக்கொண்ட சங்கரனை, சங்கவார் குழையான் தன்னை, புனக் கொன்றைத்தார் அணிந்த புனிதன் தன்னை, பொய் இலியை பூந்துருத்திக் கண்டேன், நானே.
[3]
வெறி ஆர் மலர்க்கொன்றை சூடினானை, வெள்ளானை வந்து இறைஞ்சும் வெண்காட்டானை, அறியாது அடியேன் அகப்பட்டேனை, அல்லல் கடல் நின்றும் ஏற வாங்கி நெறிதான் இது என்று காட்டினானை, நிச்சல் நலி பிணிகள் தீர்ப்பான் தன்னை, பொறி ஆடு அரவு ஆர்த்த புனிதன் தன்னை, பொய் இலியை, பூந்துருத்திக் கண்டேன் நானே.
[4]
மிக்கானை, வெண்நீறு சண்ணித்தானை, விண்டார் புரம் மூன்றும் வேவ நோக்கி நக்கானை, நால் மறைகள் பாடினானை, நல்லார்கள் பேணிப் பரவ நின்ற தக்கானை, தண் தாமரைமேல் அண்ணல் தலை கொண்டு மாத்திரைக்கண் உலகம் எல்லாம் புக்கானை, புண்ணியனை, புனிதன் தன்னை, பொய் இலியை, பூந்துருத்திக் கண்டேன், நானே.
[5]
ஆர்த்தானை, வாசுகியை, அரைக்கு ஓர் கச்சா அசைத்தானை; அழகு ஆய பொன் ஆர் மேனிப் பூத்தானத்தான் முடியைப் பொருந்தா வண்ணம் புணர்த்தானை; பூங்கணையான் உடலம் வேவப் பார்த்தானை; பரிந்தானை; பனி நீர்க்கங்கை படர் சடைமேல் பயின்றானை; பதைப்ப யானை போர்த்தானை; புண்ணியனை; புனிதன் தன்னை; பொய் இலியை; பூந்துருத்திக் கண்டேன், நானே.
[6]
எரித்தானை, எண்ணார் புரங்கள் மூன்றும் இமைப்பு அளவில் பொடி ஆக; எழில் ஆர் கையால் உரித்தானை, மதகரியை உற்றுப் பற்றி; உமை அதனைக் கண்டு அஞ்சி நடுங்கக் கண்டு சிரித்தானை; சீர் ஆர்ந்த பூதம் சூழ, திருச்சடைமேல் -திங்களும் பாம்பும் நீரும் புரித்தானை; புண்ணியனை, புனிதன் தன்னை; பொய் இலியை; பூந்துருத்திக் கண்டேன், நானே.
[7]
வைத்தானை, வானோர் உலகம் எல்லாம், வந்து இறைஞ்சி மலர் கொண்டு நின்று போற்றும் வித்தானை; வேண்டிற்று ஒன்று ஈவான் தன்னை; விண்ணவர் தம் பெருமானை; வினைகள் போக உய்த்தானை; ஒலி கங்கை சடைமேல்-தாங்கி ஒளித்தானை; ஒருபாகத்து உமையோடு ஆங்கே பொய்த்தானை; புண்ணியனை, புனிதன் தன்னை; பொய் இலியை; பூந்துருத்திக் கண்டேன், நானே.
[8]
ஆண்டானை, வானோர் உலகம் எல்லாம்; அந் நாள் அறியாத தக்கன் வேள்வி மீண்டானை, விண்ணவர்களோடும் கூடி; விரை மலர் மேல் நான்முகனும் மாலும் தேர நீண்டானை; நெருப்பு உருவம் ஆனான் தன்னை; நிலை இலார் மும்மதிலும் வேவ, வில்லைப் பூண்டானை; புண்ணியனை; புனிதன் தன்னை; பொய் இலியை; பூந்துருத்திக் கண்டேன், நானே.
[9]
மறுத்தானை, மலை கோத்து அங்கு எடுத்தான் தன்னை, மணி முடியோடு இருபது தோள் நெரியக் காலால் இறுத்தானை; எழு நரம்பின் இசை கேட்டானை; எண் திசைக்கும் கண் ஆனான் சிரம் மேல் ஒன்றை அறுத்தானை; அமரர்களுக்கு அமுது ஈந்தானை; யாவர்க்கும் தாங்க ஒணா நஞ்சம் உண்டு பொறுத்தானை; புண்ணியனை; புனிதன் தன்னை; பொய் இலியை; பூந்துருத்திக் கண்டேன், நானே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.044   மூத்தவனாய் உலகுக்கு முந்தினானே! முறைமையால்
பண் - திருத்தாண்டகம் (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
மூத்தவனாய் உலகுக்கு முந்தினானே! முறைமையால் எல்லாம் படைக்கின்றானே! ஏத்து அவனாய் ஏழ் உலகும் ஆயினானே! இன்பனாய்த் துன்பம் களைகின்றானே! காத்தவனாய் எல்லாம் தான் காண்கின்றானே! கடுவினையேன் தீவினையைக் கண்டு போகத் தீர்த்தவனே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ் ஒளியே! சிவனே! உன் அபயம், நானே.
[1]
தலையவனாய் உலகுக்கு ஓர் தன்மையானே! தத்துவனாய்ச் சார்ந்தார்க்கு இன் அமுது ஆனானே! நிலையவனாய் நின் ஒப்பார் இல்லாதானே! நின்று உணராக் கூற்றத்தைச் சீறிப் பாய்ந்த கொலையவனே! கொல் யானைத் தோல் மேல் இட்ட கூற்றுவனே! கொடி மதில்கள் மூன்றும் எய்த சிலையவனே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ் ஒளியே! சிவனே! உன் அபயம், நானே.
[2]
முற்றாத பால் மதியம் சூடினானே! முளைத்து எழுந்த கற்பகத்தின் கொழுந்து ஒப்பானே! உற்றார் என்று ஒருவரையும் இல்லாதானே! உலகு ஓம்பும் ஒண்சுடரே! ஓதும் வேதம், கற்றானே, எல்லாக் கலைஞான(ம்)மும்! கல்லாதேன் தீவினை நோய் கண்டு போகச் செற்றானே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ் ஒளியே! சிவனே! உன் அபயம், நானே.
[3]
கண்ணவனாய் உலகு எல்லாம் காக்கின்றானே! காலங்கள் ஊழி கண்டு இருக்கின்றானே! விண்ணவனாய் விண்ணவர்க்கும் அருள் செய்வானே! வேதனாய் வேதம் விரித்திட்டானே! எண்ணவனே! எண்ணார் புரங்கள் மூன்றும் இமையாமுன் எரி கொளுவ நோக்கி நக்க திண்ணவனே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ் ஒளியே! சிவனே! உன் அபயம், நானே.
[4]
நம்பனே! நால் மறைகள் ஆயினானே! நடம் ஆட வல்லானே! ஞானக்கூத்தா! கம்பனே! கச்சி மா நகர் உளானே! கடி மதில்கள் மூன்றினையும் பொடியா எய்த அம்பனே! அளவு இலாப் பெருமையானே! அடியார்கட்கு ஆர் அமுதே! ஆன் ஏறு ஏறும் செம்பொனே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ் ஒளியே! சிவனே! உன் அபயம், நானே.
[5]
ஆர்ந்தவனே! உலகு எலாம் நீயே ஆகி அமைந்தவனே! அளவு இலாப் பெருமையானே! கூர்ந்தவனே! குற்றாலம் மேய கூத்தா! கொடு மூ இலையது ஓர் சூலம் ஏந்திப் பேர்ந்தவனே! பிரளயங்கள் எல்லாம் ஆய பெம்மான்! என்று எப்போதும் பேசும் நெஞ்சில் சேர்ந்தவனே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ் ஒளியே! சிவனே! உன் அபயம், நானே.
[6]
வானவனாய் வண்மை மனத்தினானே! மா மணி சேர் வானோர் பெருமான், நீயே; கானவனாய் ஏனத்தின் பின் சென்றானே! கடிய அரணங்கள் மூன்று அட்டானே! தானவனாய்த் தண் கயிலை மேவினானே! தன் ஒப்பார் இல்லாத மங்கைக்கு என்றும் தேனவனே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ் ஒளியே! சிவனே! உன் அபயம், நானே.
[7]
தன்னவனாய், உலகு எல்லாம் தானே ஆகி, தத்துவனாய், சார்ந்தார்க்கு இன் அமுது ஆனானே! என்னவனாய், என் இதயம் மேவினானே! ஈசனே! பாச வினைகள் தீர்க்கும் மன்னவனே! மலை மங்கை பாகம் ஆக வைத்தவனே! வானோர் வணங்கும் பொன்னித் தென்னவனே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ் ஒளியே! சிவனே! உன் அபயம், நானே.
[8]
எறிந்தானே! எண் திசைக்கும் கண் ஆனானே! ஏழ் உலகம் எல்லாம் முன் ஆய் நின்றானே! அறிந்தார் தாம் ஓர் இருவர் அறியா வண்ணம் ஆதியும் அந்தமும் ஆகி அங்கே பிறிந்தானே! பிறர் ஒருவர் அறியா வண்ணம் பெம்மான்! என்று எப்போதும் ஏத்தும் நெஞ்சில் செறிந்தானே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ் ஒளியே! சிவனே! உன் அபயம், நானே.
[9]
மை அனைய கண்டத்தாய்! மாலும் மற்றை வானவரும் அறியாத வண்ணச் சூலக் கையவனே! கடி இலங்கைக் கோனை, அன்று, கால் விரலால் கதிர் முடியும் தோளும் செற்ற மெய்யவனே! அடியார்கள் வேண்டிற்று ஈயும் விண்ணவனே! விண்ணப்பம் கேட்டு நல்கும் செய்யவனே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ் ஒளியே! சிவனே! உன் அபயம், நானே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.045   வண்டு ஓங்கு செங்கமலம் கழுநீர்
பண் - திருத்தாண்டகம் (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
வண்டு ஓங்கு செங்கமலம் கழுநீர் மல்கும் மதமத்தம் சேர் சடை மேல் மதியம் சூடி, திண் தோள்கள் ஆயிரமும் வீசி நின்று, திசை சேர நடம் ஆடி, சிவலோக(ன்)னார் உண்டார் நஞ்சு, உலகுக்கு ஓர் உறுதி வேண்டி; ஒற்றியூர் மேய ஒளி வண்ண(ன்)னார்; கண்டேன், நான் கனவு அகத்தில்; கண்டேற்கு என் தன் கடும் பிணியும் சுடும் தொழிலும் கைவிட்ட(வ்)வே.
[1]
ஆகத்து ஓர் பாம்பு அசைத்து, வெள் ஏறு ஏறி, அணி கங்கை செஞ்சடை மேல் ஆர்க்கச் சூடி, பாகத்து ஓர் பெண் உடையார்; ஆணும் ஆவார்; பசு ஏறி உழி தரும் எம் பரமயோகி; காமத்தால் ஐங்கணையான் தன்னை வீழக் கனலா எரி விழித்த கண் மூன்றி(ன்)னார் ஓமத்தால் நால் மறைகள் ஓதல் ஓவா ஒளி திகழும் ஒற்றியூர் உறைகின்றாரே.
[2]
வெள்ளத்தைச் செஞ்சடை மேல் விரும்பி வைத்தீர்! வெண்மதியும் பாம்பும் உடனே வைத்தீர்! கள்ளத்தை மனத்து அகத்தே கரந்து வைத்தீர்! கண்டார்க்குப் பொல்லாது கண்டீர்! எல்லே கொள்ளத்தான் இசை பாடிப் பலியும் கொள்ளீர்! கோள் அரவும், குளிர்மதியும், கொடியும், காட்டி உள்ளத்தை நீர் கொண்டீர் ஓதல் ஓவா ஒளி திகழும் ஒற்றியூர் உடைய கோவே!.
[3]
நரை ஆர்ந்த விடை ஏறி, நீறு பூசி, நாகம் கச்சு அரைக்கு ஆர்த்து, ஓர் தலை கை ஏந்தி, உரையா வந்து, இல் புகுந்து, பலி தான் வேண்ட, எம் அடிகள்! உம் ஊர்தான் ஏதோ? என்ன, விரையாதே கேட்டியேல், வேல்கண் நல்லாய்! விடும் கலங்கள் நெடுங்கடலுள் நின்று தோன்றும், திரை மோதக் கரை ஏறிச் சங்கம் ஊரும், திரு ஒற்றியூர் என்றார்; தீய ஆறே!.
[4]
மத்தமாகளியானை உரிவை போர்த்து, வானகத்தார் தானகத்தார் ஆகி நின்று, பித்தர் தாம் போல் அங்கு ஓர் பெருமை பேசி, பேதையரை அச்சுறுத்தி, பெயரக் கண்டு, பத்தர்கள் தாம் பலர் உடனே கூடிப் பாடி, பயின்று இருக்கும் ஊர் ஏதோ? பணியீர்! என்ன, ஒத்து அமைந்த உத்தரநாள் தீர்த்தம் ஆக ஒளி திகழும் ஒற்றியூர் என்கின்றாரே.
[5]
கடிய விடை ஏறி, காளகண்டர் கலையோடு மழுவாள் ஓர் கையில் ஏந்தி, இடிய பலி கொள்ளார்; போவார் அல்லர்; எல்லாம் தான் இவ் அடிகள் யார்? என்பாரே; வடிவு உடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை எதிர் கண்டோம்; மயிலாப்புள்ளே செடி படு வெண்தலை ஒன்று ஏந்தி வந்து, திரு ஒற்றியூர் புக்கார், தீய ஆறே!.
[6]
வல்லராய் வானவர்கள் எல்லாம் கூடி வணங்குவார், வாழ்த்துவார், வந்து நிற்பார், எல்லை எம்பெருமானைக் காணோம் என்ன, எவ் ஆற்றால் எவ்வகையால் காணமாட்டார்; நல்லார்கள் நால் மறையோர் கூடி நேடி, நாம் இருக்கும் ஊர் பணியீர், அடிகேள்! என்ன, ஒல்லை தான் திரை ஏறி ஓதம் மீளும் ஒளி திகழும் ஒற்றியூர் என்கின்றாரே.
[7]
நிலைப்பாடே நான் கண்டது; ஏடீ, கேளாய்! நெருநலை நன்பகல இங்கு ஓர் அடிகள் வந்து, கலைப்பாடும் கண்மலரும் கலக்க, நோக்கி, கலந்து பலி இடுவேன்; எங்கும் காணேன்; சலப்பாடே; இனி ஒரு நாள் காண்பேன் ஆகில், தன் ஆகத்து என் ஆகம் ஒடுங்கும் வண்ணம், உலைப்பாடே படத் தழுவி, போகல் ஒட்டேன்-ஒற்றியூர் உறைந்து இங்கே திரிவானையே.
[8]
மண் அல்லை; விண் அல்லை; வலயம் அல்லை; மலை அல்லை; கடல் அல்லை; வாயு அல்லை; எண் அல்லை; எழுத்து அல்லை; எரியும் அல்லை; இரவு அல்லை; பகல் அல்லை; யாவும் அல்லை; பெண் அல்லை; ஆண் அல்லை; பேடும் அல்லை; பிறிது அல்லை; ஆனாயும், பெரியாய்! நீயே; உள்-நல்லை, நல்லார்க்கு, தீயை அல்லை உணர்வு அரிய ஒற்றியூர் உடைய கோவே!.
[9]
மரு உற்ற மலர்க் குழலி மடவாள் அஞ்ச, மலை துளங்கத் திசை நடுங்கச் செறுத்து நோக்கி, செரு உற்ற வாள் அரக்கன் வலிதான் மாள, திருவடியின் விரல் ஒன்றால் அலற ஊன்றி, உரு ஒற்றி அங்கு இருவர் ஓடிக் காண ஓங்கின அவ் ஒள் அழலார் இங்கே வந்து, திரு ஒற்றியூர், நம் ஊர் என்று போனார்; செறி வளைகள் ஒன்று ஒன்றாய்ச் சென்ற ஆறே!.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.046   நம்பனை, நால்வேதம் கரை கண்டானை,
பண் - திருத்தாண்டகம் (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
நம்பனை, நால்வேதம் கரை கண்டானை, ஞானப்பெருங்கடலை, நன்மை தன்னை, கம்பனை, கல்லால் இருந்தான் தன்னை, கற்பகம் ஆய் அடியார்கட்கு அருள் செய்வானை, செம்பொன்னை, பவளத்தை, திரளும் முத்தை, திங்களை, ஞாயிற்றை, தீயை, நீரை, அம்பொன்னை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.
[1]
மின்னானை, மின் இடைச் சேர் உருமினானை, வெண்முகில ஆய் எழுந்து மழை பொழிவான் தன்னை, தன்னானை, தன் ஒப்பார் இல்லாதானை, தாய் ஆகிப் பல் உயிர்க்கு ஓர் தந்தை ஆகி என்னானை, எந்தை பெருமான் தன்னை, இரு நிலமும் அண்டமும் ஆய்ச் செக்கர்வானே அன்னானை, ஆவடு தண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!
[2]
பத்தர்கள் சித்தத்தே பாவித்தானை, பவளக்கொழுந்தினை, மாணிக்கத்தின் தொத்தினை, தூ நெறி ஆய் நின்றான் தன்னை, சொல்லுவார் சொல் பொருளின் தோற்றம் ஆகி வித்தினை, முளைக் கிளையை, வேரை, சீரை, வினை வயத்தின் தன்சார்பை, வெய்ய தீர்க்கும் அத்தனை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.
[3]
பேணிய நல் பிறை தவழ் செஞ்சடையினானை, பித்தர் ஆம் அடியார்க்கு முத்தி காட்டும் ஏணியை, இடர்க் கடலுள் சுழிக்கப்பட்டு இங்கு இளைக்கின்றேற்கு அக் கரைக்கே ஏற வாங்கும் தோணியை, தொண்டனேன் தூய சோதிச் சுலா வெண்குழையானை, சுடர் பொன்காசின் ஆணியை, ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.
[4]
ஒரு மணியை, உலகுக்கு ஓர் உறுதிதன்னை, உதயத்தின் உச்சியை, உரும் ஆனானை, பருமணியை, பாலோடு அஞ்சு ஆடினானை, பவித்திரனை, பசுபதியை, பவளக்குன்றை, திருமணியை, தித்திப்பை, தேன் அது ஆகி, தீம்கரும்பின் இன்சுவையை, திகழும் சோதி அருமணியை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.
[5]
ஏற்றானை, எண்தோள் உடையான் தன்னை, எல்லில் நடம் ஆட வல்லான் தன்னை, கூற்றானை, கூற்றம் உதைத்தான் தன்னை, குரை கடல்வாய் நஞ்சு உண்ட கண்டன் தன்னை, நீற்றானை, நீள் அரவு ஒன்று ஆர்த்தான் தன்னை, நீண்ட சடைமுடிமேல் நீர் ஆர் கங்கை ஆற்றானை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.
[6]
கைம் மான மதகளிற்றை உரித்தான் தன்னை, கடல் வரை வான் ஆகாசம் ஆனான் தன்னை, செம் மானப் பவளத்தை, திகழும் முத்தை, திங்களை, ஞாயிற்றை, தீ ஆனானை, எம்மானை, என் மனமே கோயில் ஆக இருந்தானை, என்பு உருகும் அடியார் தங்கள் அம்மானை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.
[7]
மெய்யானை, பொய்யரொடு விரவாதானை, வெள்ளடையை, தண்நிழலை, வெந்தீ ஏந்தும் கையானை, காமன் உடல் வேவக் காய்ந்த கண்ணானை, கண்மூன்று உடையான் தன்னை, பை ஆடு அரவம் மதி உடனே வைத்த சடையானை, பாய் புலித்தோல் உடையான் தன்னை, ஐயானை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.
[8]
வேண்டாமை வேண்டுவதும் இல்லான் தன்னை, விசயனை முன் அசைவித்த வேடன் தன்னை, தூண்டாமைச் சுடர் விடு நல் சோதி தன்னை, சூலப்படையானை, காலன் வாழ்நாள் மாண்டு ஓட உதை செய்த மைந்தன் தன்னை, மண்ணவரும் விண்ணவரும் வணங்கி ஏத்தும் ஆண்டானை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.
[9]
பந்து அணவு மெல்விரலாள் பாகன் தன்னை, பாடலோடு ஆடல் பயின்றான் தன்னை, கொந்து அணவு நறுங்கொன்றை மாலையானை, கோல மா நீலமிடற்றான் தன்னை, செந்தமிழோடு ஆரியனை, சீரியானை, திரு மார்பில் புரி வெண்நூல் திகழப் பூண்ட அந்தணனை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.
[10]
தரித்தானை, தண்கடல் நஞ்சு, உண்டான் தன்னை; தக்கன் தன் பெரு வேள்வி தகர்த்தான் தன்னை; பிரித்தானை; பிறை தவழ் செஞ்சடையினானை; பெரு வலியால் மலை எடுத்த அரக்கன் தன்னை நெரித்தானை; நேரிழையாள் பாகத்தானை; நீசனேன் உடல் உறு நோய் ஆன தீர அரித்தானை; ஆவடு தண் துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.047   திருவே, என் செல்வமே, தேனே,
பண் - திருத்தாண்டகம் (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
திருவே, என் செல்வமே, தேனே, வானோர் செழுஞ்சுடரே, செழுஞ்சுடர் நல் சோதி மிக்க உருவே, என் உறவே, என் ஊனே, ஊனின் உள்ளமே, உள்ளத்தின் உள்ளே நின்ற கருவே, என் கற்பகமே, கண்ணே, கண்ணின் கருமணியே, மணி ஆடு பாவாய், காவாய், அருஆய வல்வினைநோய் அடையா வண்ணம்! ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.
[1]
மாற்றேன், எழுத்து அஞ்சும் என்தன் நாவில்; மறவேன், திருவருள்கள்; வஞ்சம் நெஞ்சின் ஏற்றேன்; பிற தெய்வம் எண்ணா நாயேன், எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால்; மேல்-தான் நீ செய்வனகள் செய்யக் கண்டு, வேதனைக்கே இடம் கொடுத்து, நாளும் நாளும் ஆற்றேன்; அடியேனை, அஞ்சேல்! என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.
[2]
வரை ஆர் மடமங்கை பங்கா! கங்கை-மணவாளா! வார்சடையாய்! நின்தன் நாமம் உரையா, உயிர் போகப் பெறுவேன் ஆகில், உறு நோய் வந்து எத்தனையும் உற்றால் என்னே? கரையா, நினைந்து, உருகி, கண்ணீர் மல்கி, காதலித்து, நின் கழலே ஏத்தும் அன்பர்க்கு அரையா! அடியேனை, அஞ்சேல்! என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.
[3]
சிலைத்தார் திரிபுரங்கள் தீயில் வேவச் சிலை வளைவித்து உமையவளை அஞ்ச நோக்கிக் கலித்து ஆங்கு இரும்பிடிமேல் கை வைத்து ஓடும் களிறு உரித்த கங்காளா! எங்கள் கோவே! நிலத்தார் அவர் தமக்கே பொறை ஆய், நாளும், நில்லா உயிர் ஓம்பும் நீதனேன் நான் அலுத்தேன்; அடியேனை, அஞ்சேல்! என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.
[4]
நறுமாமலர் கொய்து, நீரில் மூழ்கி, நாள்தோறும் நின் கழலே ஏத்தி, வாழ்த்தி, துறவாத துன்பம் துறந்தேன் தன்னைச் சூழ் உலகில் ஊழ்வினை வந்து உற்றால் என்னே? உறவு ஆகி, வானவர்கள் முற்றும் வேண்ட, ஒலிதிரை நீர்க்கடல் நஞ்சு உண்டு, உய்யக்கொண்ட அறவா! அடியேனை, அஞ்சேல்! என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.
[5]
கோன் நாரணன் அங்கம் தோள்மேல் கொண்டு, கொழு மலரான் தன் சிரத்தைக் கையில் ஏந்தி, கான் ஆர் களிற்று உரிவைப் போர்வை மூடி, கங்காளவேடராய் எங்கும் செல்வீர்; நான் ஆர், உமக்கு, ஓர் வினைக்கேட(ன்)னேன்? நல்வினையும் தீவினையும் எல்லாம் முன்னே ஆனாய்! அடியேனை, அஞ்சேல்! என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.
[6]
உழை உரித்த மான் உரி-தோல் ஆடையானே! உமையவள் தம் பெருமானே! இமையோர் ஏறே! கழை இறுத்த, கருங்கடல் நஞ்சு உண்ட கண்டா! கயிலாயமலையானே! உன்பால் அன்பர் பிழை பொறுத்தி! என்பதுவும், பெரியோய்! நின்தன் கடன் அன்றே? பேர் அருள் உன்பாலது அன்றே? அழை உறுத்து மா மயில்கள் ஆலும் சோலை ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.
[7]
உலந்தார் தலைகலன் ஒன்று ஏத்தி, வானோர் உலகம் பலி திரிவாய்! உன்பால் அன்பு கலந்தார் மனம் கவரும் காதலானே! கனல் ஆடும் கையவனே! ஐயா! மெய்யே மலம் தாங்கு உயிர்ப்பிறவி மாயக் காய மயக்குளே விழுந்து, அழுந்தி, நாளும் நாளும் அலந்தேன்; அடியேனை, அஞ்சேல்! என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.
[8]
பல் ஆர்ந்த வெண்தலை கையில் ஏந்தி, பசு ஏறி, ஊர் ஊரன் பலி கொள்வானே! கல் ஆர்ந்த மலைமகளும் நீயும் எல்லாம் கரிகாட்டில் ஆட்டு உகந்தீர்; கருதீர் ஆகில், எல்லாரும் என் தன்னை இகழ்வர் போலும்; ஏழை அமண்குண்டர், சாக்கியர்கள், ஒன்றுக்கு அல்லாதார் திறத்து ஒழிந்தேன்; அஞ்சேல்! என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.
[9]
துறந்தார் தம் தூ நெறிக்கண் சென்றேன் அல்லேன்; துணைமாலை சூட்ட நான் தூயேன் அல்லேன்; பிறந்தேன் நின் திரு அருளே பேசின் அல்லால் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே; செறிந்து ஆர் மதில் இலங்கைக் கோமான்தன்னைச் செறு வரைக்கீழ் அடர்த்து, அருளிச் செய்கை எல்லாம் அறிந்தேன்; அடியேனை, அஞ்சேல்! என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.048   நல்லான் காண், நால்மறைகள் ஆயினான்
பண் - திருத்தாண்டகம் (திருவலிவலம் மனத்துணைநாதர் வாளையங்கண்ணியம்மை)
நல்லான் காண், நால்மறைகள் ஆயினான் காண், நம்பன் காண், நணுகாதார் புரம் மூன்று எய்த வில்லான் காண், விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண், மெல்லியலாள் பாகன் காண், வேத வேள்விச் சொல்லான் காண், சுடர் மூன்றும் ஆயினான் காண், தொண்டு ஆகிப் பணிவார்க்குத் தொல் வான் ஈய வல்லான் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே.
[1]
ஊனவன் காண், உடல் தனக்கு ஓர் உயிர் ஆனான் காண், உள்ளவன் காண், இல்லவன் காண், உமையாட்கு என்றும் தேன் அவன் காண், திரு அவன் காண், திசை ஆனான் காண், தீர்த்தன் காண், பார்த்தன் தன் பணியைக் கண்ட கானவன் காண், கடல் அவன் காண், மலை ஆனான் காண், களியானை ஈர் உரிவை கதறப் போர்த்த வானவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே.
[2]
ஏயவன் காண்; எல்லார்க்கும் இயல்பு ஆனான் காண்; இன்பன் காண்; துன்பங்கள் இல்லாதான் காண்; தாய் அவன் காண், உலகுக்கு ஓர்; தன் ஒப்பு இல்லாத் தத்துவன் காண்; உத்தமன் காண்; தானே எங்கும் ஆயவன் காண்; அண்டத்துக்கு அப்பாலான் காண்; அகம் குழைந்து, மெய் அரும்பி, அழுவார் தங்கள் வாயவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே.
[3]
உய்த்தவன் காண்; உடல் தனக்கு ஓர் உயிர் ஆனான் காண்; ஓங்காரத்து ஒருவன் காண்; உலகுக்கு எல்லாம் வித்து அவன் காண்; விண் பொழியும் மழை ஆனான் காண்; விளைவு அவன் காண்; விரும்பாதார் நெஞ்சத்து என்றும் பொய்த்தவன் காண்; பொழில் ஏழும் தாங்கினான் காண்; புனலோடு, வளர்மதியும், பாம்பும், சென்னி வைத்தவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே.
[4]
கூற்று அவன் காண், குணம் அவன் காண், குறி ஆனான் காண், குற்றங்கள் அனைத்தும் காண், கோலம் ஆய நீற்றவன் காண், நிழல் அவன் காண், நெருப்பு ஆனான் காண், நிமிர் புன்சடை முடிமேல் நீர் ஆர் கங்கை ஏற்றவன் காண், ஏழ் உலகும் ஆயினான் காண், இமைப்பு அளவில் காமனை முன் பொடி ஆய் வீழ மாற்றவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே.
[5]
நிலையவன் காண்; தோற்று அவன் காண்; நிறை ஆனான் காண்; நீர் அவன் காண்; பார் அவன் காண், ஊர் மூன்று எய்த சிலையவன் காண்; செய்ய வாய், கரிய கூந்தல், தேன்மொழியை ஒருபாகம் சேர்த்தினான் காண்; கலையவன் காண்; காற்று அவன் காண்; காலன் வீழக் கறுத்தவன் காண்; கயிலாயம் என்னும் தெய்வ- மலையவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே.
[6]
பெண் அவன் காண், ஆண் அவன் காண், பெரியோர்க்கு என்றும் பெரியவன் காண், அரி அவன் காண், அயன் ஆனான் காண், எண் அவன் காண், எழுத்து அவன் காண், இன்பக் கேள்வி இசை அவன் காண், இயல் அவன் காண், எல்லாம் காணும் கண் அவன் காண், கருத்து அவன் காண், கழிந்தோர் செல்லும் கதி அவன் காண், மதி அவன் காண், கடல் ஏழ் சூழ்ந்த மண் அவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே.
[7]
முன்னவன் காண், பின்னவன் காண், மூவா மேனி முதல் அவன் காண், முடிவு அவன் காண், மூன்று சோதி அன்னவன் காண், அடியார்க்கும் அண்டத்தார்க்கும் அணியவன் காண், சேயவன் காண், அளவு இல் சோதி மின் அவன் காண், உரும் அவன் காண், திருமால் பாகம் வேண்டினன் காண், ஈண்டு புனல் கங்கைக்கு என்றும் மன்னவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே.
[8]
நெதி அவன் காண், யாவர்க்கும் நினைய ஒண்ணா நீதியன் காண், வேதியன் காண், நினைவார்க்கு என்றும் கதி அவன் காண், கார் அவன் காண், கனல் ஆனான் காண், காலங்கள் ஊழியாக் கலந்து நின்ற பதி அவன் காண், பழம் அவன் காண், இரதம் தான் காண், பாம்போடு திங்கள் பயில வைத்த மதியவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே.
[9]
பங்கயத்தின் மேலானும், பாலன் ஆகி உலகு அளந்த படியானும், பரவிக் காணாது அங்கை வைத்த சென்னியராய், அளக்க மாட்டா அனல் அவன் காண்; அலை கடல் சூழ் இலங்கை வேந்தன் கொங்கு அலர்த்த முடி நெரிய விரலால் ஊன்றும் குழகன் காண்; அழகன் காண்; கோலம் ஆய மங்கையர்க்கு ஓர் கூறன் காண் வானோர் ஏத்தும் வலி வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.049   சந்திரனும் தண்புனலும் சந்தித்தான் காண்;
பண் - திருத்தாண்டகம் (திருகோகர்ணம் (கோகர்ணா) மாபலநாதர் கோகரணநாயகியம்மை)
தந்த வ(அ)த்தன் தன் தலையைத் தாங்கினான் காண்; சாரணன் காண்; சார்ந்தார்க்கு இன் அமுது ஆனான் காண்; கெந்தத்தன் காண்; கெடில வீரட்டன் காண்; கேடு இலி காண்; கெடுப்பார் மற்று இல்லாதான் காண்; வெந்து ஒத்த நீறு மெய் பூசினான் காண்; வீரன் காண்; வியன் கயிலை மேவினான் காண்; வந்து ஒத்த நெடுமாற்கும் அறிவு ஒணான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே.
[2]
தன் உருவம் யாவர்க்கும் தாக்காதான் காண்; தாழ் சடை எம்பெருமான் காண்; தக்கார்க்கு உள்ள பொன் உருவச் சோதி; புனல் ஆடினான் காண்; புராணன் காண்; பூதங்கள் ஆயினான் காண்; மின் உருவ நுண் இடையாள் பாகத்தான் காண்; வேழத்தின் உரி வெருவப் போர்த்தான் தான் காண்; மன் உரு ஆய் மாமறைகள் ஓதினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே.
[3]
ஆறு ஏறு செஞ்சடை எம் ஆரூரன் காண்; அன்பன் காண்; அணி பழனம் மேயான் தான் காண்; நீறு ஏறி நிழல் திகழும் மேனியான் காண்; நிருபன் காண்; நிகர் ஒன்றும் இல்லாதான் காண்; கூறு ஏறு கொடு மழுவாள் படையினான் காண்; கொக்கரையான் காண்; குழு நல் பூதத்தான் காண்; மாறு ஆய மதில்மூன்றும் மாய்வித்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே.
[4]
சென்று அச் சிலை வாங்கிச் சேர்வித்தான் காண்; தியம்பகன் காண்; திரி புரங்கள் மூன்றும் பொன்றப் பொடி ஆக நோக்கினான் காண்; பூதன் காண்; பூதப்படையாளீ காண்; அன்று அப் பொழுதே அருள் செய்தான் காண்; அனல் ஆடி காண்; அடியார்க்கு அமுது ஆனான் காண்; மன்றல்-மணம் கமழும் வார்சடையான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே.
[5]
பிறையோடு பெண் ஒருபால் வைத்தான் தான் காண்; பேரவன் காண்; பிறப்பு ஒன்றும் இல்லாதான் காண்; கறை ஓடு மணிமிடற்றுக் காபாலீ காண்; கட்டங்கன் காண், கையில் கபாலம் ஏந்திப் பறையோடு பல்கீதம் பாடினான் காண்; ஆடினான் காண், பாணி ஆக நின்று; மறையோடு மா கீதம் கேட்டான் தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே.
[6]
மின் அளந்த மேல்முகட்டின் மேல் உற்றான் காண்; விண்ணவர் தம் பெருமான் காண்; மேவில் எங்கும் முன் அளந்த மூவர்க்கும் முதல் ஆனான் காண்; மூ இலை வேல் சூலத்து எம் கோலத்தான் காண்; எண் அளந்து என் சிந்தையே மேவினான் காண்; ஏ வலன் காண்; இமையோர்கள் ஏத்த நின்று, மண் அளந்த மால் அறியா மாயத்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே.
[7]
பின்னுசடை மேல் பிறை சூடினான் காண்; பேர் அருளன் காண்; பிறப்பு ஒன்று இல்லாதான் காண்; முன்னி உலகுக்கு முன் ஆனான் காண்; மூ எயிலும் செற்று உகந்த முதல்வன் தான் காண்; இன்ன உரு என்று அறிவு ஒணாதான் தான் காண்; ஏழ் கடலும் ஏழ் உலகும் ஆயினான் காண்; மன்னும் மடந்தை ஓர் பாகத்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே.
கையால் கயிலை எடுத்தான் தன்னைக் கால் விரலால்-தோள் நெரிய ஊன்றினான் காண்; மெய்யின் நரம்பு இசையால் கேட்பித்தாற்கு மீண்டே அவற்கு அருள்கள் நல்கினான் காண்; பொய்யர் மனத்துப் புறம்பு ஆவான் காண்; போர்ப் படையான் காண்; பொருவார் இல்லாதான் காண்; மை கொள் மணிமிடற்று வார் சடையான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.050   போர் ஆனை ஈர் உரிவைப்
பண் - திருத்தாண்டகம் (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
போர் ஆனை ஈர் உரிவைப் போர்வை யானை, புலி அதளே உடை ஆடை போற்றினானை, பாரானை, மதியானை, பகல் ஆனானை, பல் உயிர் ஆய் நெடுவெளி ஆய்ப் பரந்து நின்ற நீரானை, காற்றானை, தீ ஆனானை, நினையாதார் புரம் எரிய நினைந்த தெய்வத்- தேரானை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.
[1]
சவம் தாங்கு மயானத்துச் சாம்பல் என்பு தலை ஓடு மயிர்க்கயிறு தரித்தான் தன்னை, பவம் தாங்கு பாசு பத வேடத்தானை, பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம் கவர்ந்தானை, கச்சி ஏகம்பன் தன்னை, கழல் அடைந்தான் மேல் கறுத்த காலன் வீழச் சிவந்தானை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.
[2]
அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் சொன்னானை, அகத்தியனை உகப்பானை, அயன் மால் தேட நின்றானை, கிடந்த கடல் நஞ்சு உண்டானை, நேரிழையைக் கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் வென்றானை, மீயச்சூர் மேவினானை, மெல்லியலாள் தவத்தின் நிறை அளக்கல் உற்றுச் சென்றானை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.
[3]
தூயானை, சுடர்ப் பவளச்சோதியானை, தோன்றிய எவ் உயிர்க்கும் துணை ஆய் நின்ற தாயானை, சக்கரம் மாற்கு ஈந்தான் தன்னை, சங்கரனை, சந்தோக சாமம் ஓதும் வாயானை, மந்திரிப்பார் மனத்து உளானை, வஞ்சனையால் அஞ்சு எழுத்தும் வழுத்துவார்க்குச் சேயானை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.
[4]
நல்-தவத்தின் நல்லானை, தீது ஆய் வந்த நஞ்சு அமுது செய்தானை, அமுதம் உண்ட மற்ற(அ)அமரர் உலந்தாலும் உலவாதானை, வருகாலம் செல்காலம் வந்தகாலம் உற்று அவத்தை உணர்ந்தாரும் உணரல் ஆகா ஒரு சுடரை, இரு விசும்பின் ஊர்மூன்று ஒன்றச் செற்றவனை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.
[5]
மை வானம் மிடற்றானை, அவ் வான் மின் போல் வளர் சடைமேல் மதியானை, மழை ஆய் எங்கும் பெய்வானை, பிச்சாடல் ஆடுவானை, பிலவாய பேய்க்கணங்கள் ஆர்க்கச் சூல் அம்பு ஒய்வானை, பொய் இலா மெய்யன் தன்னை, பூதலமும் மண்டலமும் பொருந்தும் வாழ்க்கை செய்வானை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.
[6]
மிக்கானை, குறைந்து அடைந்தார் மேவலானை, வெவ்வேறு ஆய் இரு மூன்று சமயம் ஆகிப் புக்கானை, எப்பொருட்கும் பொது ஆனானை, பொன்னுலகத்தவர் போற்றும் பொருளுக்கு எல்லாம் தக்கானை, தான் அன்றி வேறு ஒன்று இல்லாத் தத்துவனை, தடவரையை நடுவு செய்த திக்கானை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.
[7]
வானவர் கோன் தோள் இறுத்த மைந்தன் தன்னை, வளை குளமும் மறைக்காடும் மன்னினானை, ஊனவனை, உயிரவனை, ஒரு நாள் பார்த்தன் உயர் தவத்தின் நிலை அறியல் உற்றுச் சென்ற கானவனை, கயிலாயம் மேவினானை, கங்கை சேர் சடையானை, கலந்தார்க்கு என்றும் தேனவனை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.
[8]
பரத்தானை; இப் பக்கம் பல ஆனானை; பசுபதியை; பத்தர்க்கு முத்தி காட்டும் வரத்தானை; வணங்குவார் மனத்து உளானை; மாருதம், மால், எரி, மூன்றும் வாய் அம்பு ஈர்க்கு ஆம் சரத்தானை; சரத்தையும் தன் தாள்கீழ் வைத்த தபோதனனை; சடாமகுடத்து அணிந்த பைங்கண் சிரத்தானை; திரு வீழிமிழலையானை; சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.
[9]
அறுத்தானை, அயன் தலைகள் அஞ்சில் ஒன்றை; அஞ்சாதே வரை எடுத்த அரக்கன் தோள்கள் இறுத்தானை; எழு நரம்பின் இசை கேட்டானை; இந்து வினைத் தேய்த்தானை; இரவிதன் பல் பறித்தானை; பகீரதற்கா வானோர் வேண்டப் பரந்து இழியும் புனல் கங்கை பனி போல் ஆகச் செறித்தானை; திரு வீழிமிழலையானை; சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.051   கயிலாய மலை உள்ளார்; காரோணத்தார்;
பண் - திருத்தாண்டகம் (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
கயிலாய மலை உள்ளார்; காரோணத்தார்; கந்த மாதனத்து உளார்; காளத்தி(ய்)யார்; மயிலாடு துறை உளார்; மாகாளத்தார்; வக்கரையார்; சக்கரம் மாற்கு ஈந்தார்; வாய்ந்த அயில்வாய சூலமும், காபால(ம்)மும், அமரும் திருக்கரத்தார்; ஆன் ஏறு ஏறி, வெயில் ஆய சோதி விளங்கும் நீற்றார் வீழிமிழலையே மேவினாரே.
[1]
பூதி அணி பொன்நிறத்தர்; பூணநூலர்; பொங்கு அரவர்; சங்கரர்; வெண்குழை ஓர் காதர்; கேதிசரம் மேவினார்; கேதாரத்தார்; கெடில வட அதிகை வீரட்டத்தார்; மா துயரம் தீர்த்து என்னை உய்யக்கொண்டார்; மழபாடி மேய மணவாள(ன்)னார்; வேதி குடி உளார்; மீயச்சூரார் வீழிமிழலையே மேவினாரே.
பெரும் புலியூர் விரும்பினார்; பெரும் பாழி(ய்)யார்; பெரும் பற்றப்புலியூர் மூலட்டானத்தார்; இரும்புதலார்; இரும்பூளை உள்ளார்; ஏர் ஆர் இன்னம்பரார்; ஈங்கோய் மலையார்; இன்சொல் கரும்பு அனையாள் உமையோடும் கருகாவூரார்; கருப்பறியலூரார்; கரவீரத்தார் விரும்பு அமரர் இரவுபகல் பரவி ஏத்த வீழிமிழலையே மேவினாரே.
அரிச்சந்திரத்து உள்ளார்; அம்பர் உள்ளார்; அரிபிரமர் இந்திரர்க்கும் அரியர் ஆனார்; புரிச்சந்திரத்து உள்ளார்; போகத்து உள்ளார்; பொருப்பு அரையன் மகளோடு விருப்பர் ஆகி எரிச் சந்தி வேட்கும் இடத்தார்; ஏம-கூடத்தார் பாடத் தேன் இசை ஆர் கீதர்; விரிச்சு அங்கை எரிக் கொண்டு அங்கு ஆடும் வேடர் வீழிமிழலையே மேவினாரே.
[10]
புன்கூரார்; புறம்பயத்தார்; புத்தூர் உள்ளார்; பூவணத்தார்; புலிவலத்தார்; வலியின் மிக்க தன் கூர்மை கருதி வரை எடுக்கல் உற்றான் தலைகளொடு மலைகள் அன தாளும் தோளும் பொன் கூரும் கழல் அடி ஓர் விரலால் ஊன்றி, பொருப்பு அதன் கீழ் நெரித்து, அருள்செய் புவன நாதர்; மின் கூரும் சடைமுடியார்; விடையின் பாகர் வீழிமிழலையே மேவினாரே.
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.052   கண் அவன் காண்; கண்
பண் - திருத்தாண்டகம் (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
கண் அவன் காண்; கண் ஒளி சேர் காட்சியான் காண்; கந்திருவம் பாட்டு இசையில் காட்டுகின்ற பண் அவன் காண்; பண் அவற்றின் திறம் ஆனான் காண்; பழம் ஆகிச் சுவை ஆகிப் பயக்கின்றான் காண்; மண் அவன் காண்; தீ அவன் காண்; நீர் ஆனான் காண்; வந்து அலைக்கும் மாருதன் காண்; மழை மேகம் சேர் விண் அவன் காண்; விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே.
தண்மையொடு வெம்மை தான் ஆயினான் காண்; சக்கரம் புள்பாகற்கு அருள்செய்தான் காண்; கண்ணும் ஒரு மூன்று உடைய காபாலீ காண்; காமன் உடல் வேவித்த கண்ணினான் காண்; எண் இல் சமண் தீர்த்து என்னை ஆட்கொண்டான் காண்; இருவர்க்கு எரி ஆய் அருளினான் காண்; விண்ணவர்கள் போற்ற இருக்கின்றான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே.
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.053   மான் ஏறு கரம் உடைய
பண் - திருத்தாண்டகம் (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
மான் ஏறு கரம் உடைய வரதர் போலும்; மால்வரை கால் வளை வில்லா வளைத்தார் போலும்; கான் ஏறு கரி கதற உரித்தார் போலும்; கட்டங்கம், கொடி, துடி, கைக் கொண்டார் போலும்; தேன் ஏறு திரு இதழித்தாரார் போலும்; திருவீழிமிழலை அமர் செல்வர் போலும்; ஆன் ஏறு அது ஏறும் அழகர் போலும் அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.
[1]
சமரம் மிகு சலந்தரன் போர் வேண்டினானைச் சக்கரத்தால் பிளப்பித்த சதுரர் போலும்; நமனை ஒரு கால் குறைத்த நாதர் போலும்; நாரணனை இடப்பாகத்து அடைத்தார் போலும்; குமரனையும் மகன் ஆக உடையார் போலும்; குளிர் வீழிமிழலை அமர் குழகர் போலும்; அமரர்கள் பின் அமுது உண, நஞ்சு உண்டார் போலும் அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.
[2]
நீறு அணிந்த திருமேனி நிமலர் போலும்; நேமி, நெடுமாற்கு, அருளிச் செய்தார் போலும்; ஏறு அணிந்த கொடி உடை எம் இறைவர் போலும்; எயில் மூன்றும் எரிசரத்தால் எய்தார் போலும்; வேறு அணிந்த கோலம் உடை வேடர் போலும்; வியன் வீழிமிழலை உறை விகிர்தர் போலும்; ஆறு அணிந்த சடா மகுடத்து அழகர் போலும் அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.
[3]
கை வேழ முகத்தவனைப் படைத்தார் போலும்; கயாசுரனை அவனால் கொல்வித்தார் போலும்; செய் வேள்வித் தக்கனை முன் சிதைத்தார் போலும்; திசை முகன் தன் சிரம் ஒன்று சிதைத்தார் போலும்; மெய் வேள்வி மூர்த்தி தலை அறுத்தார் போலும்; வியன் வீழிமிழலை இடம் கொண்டார் போலும்; ஐவேள்வி, ஆறு அங்கம், ஆனார் போலும் அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.
[4]
துன்னத்தின் கோவணம் ஒன்று உடையார் போலும்; சுடர் மூன்றும் சோதியும் ஆய்த் யார் போலும்; பொன் ஒத்த திருமேனிப் புனிதர் போலும்; பூதகணம் புடை சூழ வருவார் போலும்; மின் ஒத்த செஞ்சடை வெண்பிறையார் போலும்; வியன் வீழிமிழலை சேர் விமலர் போலும்; அன்னத்தேர் அயன் முடி சேர் அடிகள் போலும் அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.
[5]
மாலாலும் அறிவு அரிய வரதர் போலும்; மறவாதார் பிறப்பு அறுக்க வல்லார் போலும்; நால் ஆய மறைக்கு இறைவர் ஆனார் போலும்; நாம எழுத்து அஞ்சு ஆய நம்பர் போலும்; வேல் ஆர் கை வீரியை முன் படைத்தார் போலும்; வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும்; ஆலாலம் மிடற்று அடக்கி அளித்தார் போலும் அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.
[6]
பஞ்சு அடுத்த மெல்விரலாள் பங்கர் போலும்; பைந்நாகம் அரைக்கு அசைத்த பரமர் போலும்; மஞ்சு அடுத்த மணி நீல கண்டர் போலும்; வட கயிலை மலை உடைய மணாளர் போலும்; செஞ்சடைக்கண் வெண் பிறை கொண்டு அணிந்தார் போலும்; திரு வீழிமிழலை அமர் சிவனார் போலும்; அஞ்சு அடக்கும் அடியவர்கட்கு அணியார் போலும் அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.
[7]
குண்டரொடு பிரித்து எனை ஆட்கொண்டார் போலும்; குடமூக்கில் இடம் ஆக்கிக் கொண்டார் போலும்; புண்டரிகப் புதுமலர் ஆதனத்தார் போலும்; புள் அரசைக் கொன்று உயிர் பின் கொடுத்தார் போலும்; வெண் தலையில் பலி கொண்ட விகிர்தர் போலும்; வியன் வீழிமிழலை நகர் உடையார் போலும்; அண்டத்து உப் புறத்து அப்பால் ஆனார் போலும் அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.
[8]
முத்து அனைய முகிழ் முறுவல் உடையார் போலும்; மொய் பவளக்கொடி அனைய சடையார் போலும்; எத்தனையும் பத்தி செய்வார்க்கு இனியார் போலும்; இரு-நான்கு மூர்த்திகளும் ஆனார் போலும்; மித்திர வச்சிரவணற்கு விருப்பர் போலும்; வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும்; அத்தனொடும் அம்மை எனக்கு ஆனார் போலும் அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.
[9]
கரி உரி செய்து உமை வெருவக் கண்டார் போலும்; கங்கையையும் செஞ்சடை மேல் கரந்தார் போலும்; எரி அது ஒரு கை தரித்த இறைவர் போலும்; ஏனத்தின் கூன் எயிறு பூண்டார் போலும்; விரி கதிரோர் இருவரை முன் வெகுண்டார் போலும்; வியன் வீழிமிழலை அமர் விமலர் போலும்; அரி பிரமர் துதி செய நின்று அளித்தார் போலும் அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.054   ஆண்டானை, அடியேனை ஆளாக்கொண்டு; அடியோடு
பண் - திருத்தாண்டகம் (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) வைத்தியநாதர் தையல்நாயகியம்மை)
ஆண்டானை, அடியேனை ஆளாக்கொண்டு; அடியோடு முடி அயன் மால் அறியா வண்ணம் நீண்டானை; நெடுங்கள மா நகரான் தன்னை; நேமி வான் படையால் நீள் உரவோன் ஆகம் கீண்டானை; கேதாரம் மேவினானை; கேடு இலியை; கிளர் பொறிவாள் அரவோடு என்பு பூண்டானை; புள்ளிருக்கு வேளூரானை; போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!.
[1]
சீர்த்தானை, சிறந்து அடியேன் சிந்தையுள்ளே திகழ்ந்தானை, சிவன் தன்னை, தேவ தேவை,
கூர்த்தானை, கொடு நெடுவேல் கூற்றம் தன்னைக் குரை கழலால் குமைத்து முனி கொண்ட அச்சம்
பேர்த்தானை, பிறப்பு இலியை, இறப்பு ஒன்று இல்லாப் பெம்மானை, கைம்மாவின் உரிவை பேணிப்
போர்த்தானை, புள்ளிருக்கு வேளூரானை, போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!.
இருள் ஆய உள்ளத்தின் இருளை நீக்கி, இடர்பாவம் கெடுத்து, ஏழையேனை உய்யத் தெருளாத சிந்தைதனைத் தெருட்டி, தன் போல் சிவலோக நெறி அறியச் சிந்தை தந்த அருளானை; ஆதி மா தவத்து உளானை; ஆறு அங்கம் நால் வேதத்து அப்பால் நின்ற பொருளானை; புள்ளிருக்கு வேளூரானை; போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!.
[4]
மின் உருவை; விண்ணகத்தில் ஒன்று ஆய், மிக்கு வீசும் கால் தன் அகத்தில் இரண்டு ஆய், செந்தீத்-
தன் உருவில் மூன்று ஆய், தாழ் புனலில் நான்கு ஆய், தரணிதலத்து அஞ்சு ஆகி, எஞ்சாத் தஞ்ச
மன் உருவை; வான் பவளக்கொழுந்தை; முத்தை; வளர் ஒளியை; வயிரத்தை; மாசு ஒன்று இல்லாப்
பொன் உருவை; புள்ளிருக்கு வேளூரானை; போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!.
[5]
அறை ஆர் பொன்கழல் ஆர்ப்ப அணி ஆர் தில்லை அம்பலத்துள் நடம் ஆடும் அழகன் தன்னை, கறை ஆர் மூ இலை நெடுவேல் கடவுள் தன்னை, கடல் நாகைக்காரோணம் கருதினானை, இறையானை, என் உள்ளத்துள்ளே விள்ளாது இருந்தானை, ஏழ்பொழிலும் தாங்கி நின்ற பொறையானை, புள்ளிருக்கு வேளூரானை, போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!.
[6]
நெருப்பு அனைய திருமேனி வெண்நீற்றானை, நீங்காது என் உள்ளத்தினுள்ளே நின்ற விருப்பவனை, வேதியனை, வேதவித்தை, வெண்காடும் வியன்துருத்தி நகரும் மேவி இருப்பவனை, இடை மருதோடு ஈங்கோய் நீங்கா இறையவனை, எனை ஆளும் கயிலை என்னும் பொருப்பவனை, புள்ளிருக்கு வேளூரானை, போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!.
[7]
பேர் ஆயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை, பிரிவு இலா அடியார்க்கு என்றும் வாராத செல்வம் வருவிப்பானை, மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித் தீரா நோய் தீர்த்து அருள வல்லான் தன்னை, திரிபுரங்கள் தீ எழத் திண் சிலை கைக் கொண்ட போரானை, புள்ளிருக்கு வேளூரானை, போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!.
[8]
பண்ணியனை, பைங்கொடியாள் பாகன் தன்னை, படர் சடைமேல் புனல் கரந்த படிறன் தன்னை, நண்ணியனை, என் ஆக்கித் தன் ஆனானை, நால் மறையின் நல் பொருளை, நளிர் வெண்திங்கள் கண்ணியனை, கடிய நடை விடை ஒன்று ஏறும் காரணனை, நாரணனை, கமலத்து ஓங்கும் புண்ணியனை, புள்ளிருக்கு வேளூரானை, போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!.
[9]
இறுத்தானை, இலங்கையர் கோன் சிரங்கள் பத்தும்; எழு நரம்பின் இன் இசை கேட்டு இன்பு உற்றானை; அறுத்தானை, அடியார் தம் அருநோய் பாவம்; அலை கடலில் ஆலாலம் உண்டு கண்டம் கறுத்தானை; கண் அழலால் காமன் ஆகம் காய்ந்தானை; கனல், மழுவும், கலையும், அங்கை பொறுத்தானை; புள்ளிருக்கு வேளூரானை; போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.055   வே(ற்)ற்று ஆகி விண் ஆகி
பண் - குறிஞ்சி (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
வே(ற்)ற்று ஆகி விண் ஆகி நின்றாய், போற்றி!
மீளாமே ஆள் என்னைக் கொண்டாய், போற்றி!
ஊற்று ஆகி உள்ளே ஒளித்தாய், போற்றி!
ஓவாத சத்தத்து ஒலியே, போற்றி!
ஆற்று ஆகி அங்கே அமர்ந்தாய், போற்றி!
ஆறு அங்கம் நால்வேதம் ஆனாய், போற்றி!
காற்று ஆகி எங்கும் கலந்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[1]
பிச்சு ஆடல் பேயோடு உகந்தாய் போற்றி!
பிறவி அறுக்கும் பிரானே, போற்றி!
வைச்சு ஆடல் நன்று மகிழ்ந்தாய், போற்றி!
மருவி என் சிந்தை புகுந்தாய், போற்றி!
பொய்ச் சார் புரம் மூன்றும் எய்தாய், போற்றி!
போகாது என் சிந்தை புகுந்தாய், போற்றி!
கச்சு ஆக நாகம் அசைத்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[2]
மருவார் புரம் மூன்றும் எய்தாய், போற்றி!
மருவி என் சிந்தை புகுந்தாய், போற்றி!
உரு ஆகி என்னைப் படைத்தாய், போற்றி!
உள் ஆவி வாங்கி ஒளித்தாய், போற்றி!
திரு ஆகி நின்ற திறமே, போற்றி!
தேசம் பரவப்படுவாய், போற்றி!
கரு ஆகி ஓடும் முகிலே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
ஊர் ஆகி நின்ற உலகே, போற்றி!
ஓங்கி அழல் ஆய் நிமிர்ந்தாய், போற்றி!
பேர் ஆகி எங்கும் பரந்தாய், போற்றி!
பெயராது என் சிந்தை புகுந்தாய், போற்றி!
நீர் ஆவி ஆன நிழலே, போற்றி!
நேர்வார் ஒருவரையும் இல்லாய், போற்றி!
கார் ஆகி நின்ற முகிலே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[5]
சில் உரு ஆய்ச் சென்று திரண்டாய், போற்றி!
தேவர் அறியாத தேவே, போற்றி!
புல் உயிர்க்கும் பூட்சி புணர்த்தாய், போற்றி!
போகாது என் சிந்தை புகுந்தாய், போற்றி!
பல் உயிர் ஆய்ப் பார்தோறும் நின்றாய், போற்றி!
பற்றி உலகை விடாதாய், போற்றி!
கல் உயிர் ஆய் நின்ற கனலே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[6]
பண்ணின் இசை ஆகி நின்றாய், போற்றி!
பாவிப்பார் பாவம் அறுப்பாய், போற்றி!
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய், போற்றி!
என் சிந்தை நீங்கா இறைவா, போற்றி!
விண்ணும் நிலனும் தீ ஆனாய், போற்றி!
மேலவர்க்கும் மேல் ஆகி நின்றாய், போற்றி!
கண்ணின் மணி ஆகி நின்றாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[7]
இமையாது உயிராது இருந்தாய், போற்றி!
என் சிந்தை நீங்கா இறைவா, போற்றி!
உமை பாகம் ஆகத்து அணைத்தாய், போற்றி!
ஊழி ஏழ் ஆன ஒருவா, போற்றி!
அமையா அரு நஞ்சம் ஆர்ந்தாய், போற்றி!
ஆதி புராணனாய் நின்றாய், போற்றி!
கமை ஆகி நின்ற கனலே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[8]
மூவாய், பிறவாய், இறவாய், போற்றி!
முன்னமே தோன்றி முளைத்தாய், போற்றி!
தேவாதி தேவர் தொழும் தேவே, போற்றி!
சென்று ஏறி எங்கும் பரந்தாய், போற்றி!
ஆவா! அடியேனுக்கு எல்லாம், போற்றி!
அல்லல் நலிய அலந்தேன், போற்றி!
காவாய்! கனகத்திரளே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[9]
நெடிய விசும்போடு கண்ணே, போற்றி!
நீள அகலம் உடையாய், போற்றி!
அடியும் முடியும் இகலி, போற்றி!
அங்கு ஒன்று அறியாமை நின்றாய், போற்றி!
கொடிய வன் கூற்றம் உதைத்தாய், போற்றி!
கோயிலா என் சிந்தை கொண்டாய், போற்றி!
கடிய உருமொடு மின்னே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[10]
உண்ணாது உறங்காது இருந்தாய், போற்றி!
ஓதாதே வேதம் உணர்ந்தாய், போற்றி!
எண்ணா இலங்கைக்கோன் தன்னைப் போற்றி!
இறை விரலால் வைத்து உகந்த ஈசா, போற்றி!
பண் ஆர் இசை இன்சொல் கேட்டாய், போற்றி!
பண்டே என் சிந்தை புகுந்தாய், போற்றி!
கண் ஆய் உலகுக்கு நின்றாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.056   பொறை உடைய பூமி, நீர்,
பண் - போற்றித்திருத்தாண்டகம் (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
பொறை உடைய பூமி, நீர், ஆனாய்! போற்றி!
பூதப்படை ஆள் புனிதா, போற்றி!
நிறை உடைய நெஞ்சின் இடையாய், போற்றி!
நீங்காது என் உள்ளத்து இருந்தாய், போற்றி!
மறை உடைய வேதம் விரித்தாய், போற்றி!
வானோர் வணங்கப்படுவாய், போற்றி!
கறை உடைய கண்டம் உடையாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[1]
முன்பு ஆகி நின்ற முதலே, போற்றி!
மூவாத மேனி முக்கண்ணா, போற்றி!
அன்பு ஆகி நின்றார்க்கு அணியாய், போற்றி!
ஆறு ஏறு சென்னிச் சடையாய், போற்றி!
என்பு ஆகம் எங்கும் அணிந்தாய், போற்றி!
என் சிந்தை நீங்கா இறைவா, போற்றி!
கண் பாவி நின்ற கனலே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[2]
மாலை எழுந்த மதியே, போற்றி!
மன்னி என் சிந்தை இருந்தாய், போற்றி!
மேலை வினைகள் அறுப்பாய், போற்றி!
மேல் ஆடு திங்கள் முடியாய், போற்றி!
ஆலைக் கரும்பின் தெளிவே, போற்றி!
அடியார்கட்கு ஆர் அமுதம் ஆனாய், போற்றி!
காலை முளைத்த கதிரே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[3]
உடலின் வினைகள் அறுப்பாய், போற்றி!
ஒள் எரி வீசும் பிரானே, போற்றி!
படரும் சடைமேல் மதியாய், போற்றி!
பல்கணக் கூத்தப்பிரானே, போற்றி!
சுடரில்-திகழ்கின்ற சோதீ, போற்றி!
தோன்றி என் உள்ளத்து இருந்தாய், போற்றி!
கடலில் ஒளி ஆய முத்தே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[4]
மை சேர்ந்த கண்டம் உடையாய், போற்றி!
மாலுக்கும் ஓர் ஆழி ஈந்தாய், போற்றி!
பொய் சேர்ந்த சிந்தை புகாதாய், போற்றி!
போகாது என் உள்ளத்து இருந்தாய், போற்றி!
மெய் சேரப் பால்வெண்நீறு ஆடீ, போற்றி!
மிக்கார்கள் ஏத்தும் விளக்கே, போற்றி!
கை சேர் அனல் ஏந்தி ஆடீ, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[5]
ஆறு ஏறு சென்னி முடியாய், போற்றி!
அடியார்கட்கு ஆர் அமுது ஆய் நின்றாய், போற்றி!
நீறு ஏறும் மேனி உடையாய், போற்றி!
நீங்காது என் உள்ளத்து இருந்தாய், போற்றி!
கூறு ஏறும் அம் கை மழுவா, போற்றி!
கொள்ளும் கிழமை ஏழ் ஆனாய், போற்றி!
காறு ஏறு கண்டம்-மிடற்றாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[6]
அண்டம் ஏழ் அன்று கடந்தாய், போற்றி!
ஆதிபுராணனாய் நின்றாய், போற்றி!
பண்டை வினைகள் அறுப்பாய், போற்றி!
பாரோர் விண் ஏத்தப்படுவாய், போற்றி!
தொண்டர் பரவும் இடத்தாய், போற்றி!
தொழில் நோக்கி ஆளும் சுடரே, போற்றி!
கண்டம் கறுக்கவும் வல்லாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
செய்ய மலர் மேலான், கண்ணன், போற்றித்
தேடி உணராமை நின்றாய், போற்றி!
பொய்யா நஞ்சு உண்ட பொறையே, போற்றி!
பொருள் ஆக என்னை ஆட்கொண்டாய், போற்றி!
மெய் ஆக ஆன் அஞ்சு உகந்தாய், போற்றி!
மிக்கார்கள் ஏத்தும் குணத்தாய், போற்றி!
கை ஆனை மெய்த்தோல் உரித்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[9]
மேல் வைத்த வானோர் பெருமான், போற்றி!
மேல் ஆடு புரம் மூன்றும் எய்தாய், போற்றி!
சீலத்தான் தென் இலங்கை மன்னன் போற்றிச்
சிலை எடுக்க, வாய் அலற வைத்தாய், போற்றி!
கோலத்தால் குறைவு இல்லான் தன்னை, அன்று,
கொடிது ஆகக் காய்ந்த குழகா, போற்றி!
காலத்தால் காலனையும் காய்ந்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.057   பாட்டு ஆன நல்ல தொடையாய்,
பண் - போற்றித்திருத்தாண்டகம் (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
பாட்டு ஆன நல்ல தொடையாய், போற்றி!
பரிசை அறியாமை நின்றாய், போற்றி!
சூட்டு ஆன திங்கள் முடியாய், போற்றி!
தூ மாலை மத்தம் அணிந்தாய், போற்றி!
ஆட்டு ஆனது அஞ்சும் அமர்ந்தாய், போற்றி!
அடங்கார் புரம் எரிய நக்காய், போற்றி!
காட்டு ஆனை மெய்த்தோல் உரித்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[1]
அதிரா வினைகள் அறுப்பாய், போற்றி!
ஆல நிழல் கீழ் அமர்ந்தாய், போற்றி!
சதுரா, சதுரக் குழையாய், போற்றி!
சாம்பர் மெய் பூசும் தலைவா, போற்றி!
எதிரா உலகம் அமைப்பாய், போற்றி!
என்றும் மீளா அருள் செய்வாய், போற்றி!
கதிர் ஆர் கதிருக்கு ஓர் கண்ணே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[2]
செய்யாய், கரியாய், வெளியாய், போற்றி!
செல்லாத செல்வம் உடையாய், போற்றி!
ஐயாய், பெரியாய், சிறியாய், போற்றி!
ஆகாய வண்ண முடியாய், போற்றி!
வெய்யாய், தணியாய், அணியாய், போற்றி!
வேளாத வேள்வி உடையாய், போற்றி!
கை ஆர் தழல் ஆர் விடங்கா, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[3]
ஆட்சி உலகை உடையாய், போற்றி!
அடியார்க்கு அமுது எலாம் ஈவாய், போற்றி!
சூட்சி சிறிதும் இலாதாய், போற்றி!
சூழ்ந்த கடல் நஞ்சம் உண்டாய், போற்றி!
மாட்சி பெரிதும் உடையாய், போற்றி!
மன்னி என் சிந்தை மகிழ்ந்தாய், போற்றி!
காட்சி பெரிதும் அரியாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
எண் மேலும் எண்ணம் உடையாய், போற்றி!
ஏறு அரிய ஏறும் குணத்தாய், போற்றி!
பண் மேலே பாவித்து இருந்தாய், போற்றி!
பண்ணொடி யாழ் வீணை பயின்றாய், போற்றி!
விண் மேலும் மேலும் நிமிர்ந்தாய், போற்றி!
மேலார்கள் மேலார்கள் மேலாய், போற்றி!
கண் மேலும் கண் ஒன்று உடையாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[7]
முடி ஆர் சடை மேல் மதியாய், போற்றி!
முழுநீறு சண்ணித்த மூர்த்தி, போற்றி!
துடி ஆர் இடை உமையாள் பங்கா, போற்றி!
சோதித்தார் காணாமை நின்றாய், போற்றி!
அடியார் அடிமை அறிவாய், போற்றி!
அமரர் பதி ஆள வைத்தாய், போற்றி!
கடி ஆர் புரம் மூன்றும் எய்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[8]
போற்று இசைத்து உன் அடி பரவ நின்றாய், போற்றி!
புண்ணியனே, நண்ணல் அரியாய், போற்றி!
ஏற்று இசைக்கும் வான்மேல் இருந்தாய், போற்றி!
எண்ணாயிரம்-நூறு பெயராய், போற்றி!
நால்-திசைக்கும் விளக்கு ஆய நாதா, போற்றி!
நான்முகற்கும் மாற்கும் அரியாய், போற்றி!
காற்று இசைக்கும் திசைக்கு எல்லாம் வித்தே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[9]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.058   மண் அளந்த மணி வண்ணர்
பண் - திருத்தாண்டகம் (திருவலம்புரம் வலம்புரநாதர் வடுவகிர்க்கணம்மை)
மண் அளந்த மணி வண்ணர் தாமும், மற்றை மறையவனும், வானவரும், சூழ நின்று கண் மலிந்த திரு நெற்றி உடையார்; ஒற்றைக் கத நாகம் கை உடையார்; காணீர் அன்றே? பண் மலிந்த மொழியவரும், யானும், எல்லாம் பணிந்து இறைஞ்சித் தம்முடைய பின்பின் செல்ல, மண் மலிந்த வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.
[1]
சிலை நவின்று ஒரு கணையால் புரம் மூன்று எய்த தீவண்ணர்; சிறந்து இமையோர் இறைஞ்சி ஏத்த, கொலை நவின்ற களியானை உரிவை போர்த்து, கூத்து ஆடி, திரிதரும் அக் கூத்தர்; நல்ல கலை நவின்ற மறையவர்கள் காணக்காண, கடு விடை மேல், பாரிடங்கள் சூழ, காதல் மலை மகளும் கங்கையும் தாமும் எல்லாம் வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.
[2]
தீக் கூரும் திருமேனி ஒரு பால், மற்றை ஒருபாலும் அரி உருவம் திகழ்ந்த செல்வர்; ஆக்கூரில்-தான் தோன்றி புகுவார் போல, அருவினையேன் செல்வதுமே, அப்பால் எங்கும் நோக்கார், ஒரு இடத்தும்; நூலும் தோலும் துதைந்து இலங்கும் திருமேனி வெண் நீறு ஆடி, வாக்கால் மறை விரித்து, மாயம் பேசி, வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.
[3]
மூவாத மூக்கப் பாம்பு அரையில் சாத்தி மூவர் உரு ஆய முதல்வர்; இந் நாள் கோவாத எரிகணையைச் சிலைமேல் கோத்த குழகனார்; குளிர்கொன்றை சூடி இங்கே போவாரைக் கண்டு அடியேன் பின்பின் செல்ல, புறக்கணித்து, தம்முடைய பூதம் சூழ, வா வா! என உரைத்து, மாயம் பேசி, வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே.
[4]
அனல் ஒரு கையது ஏந்தி, அதளினோடே ஐந்தலைய மா நாகம் அரையில் சாத்தி, புனல் பொதிந்த சடைக்கற்றைப் பொன் போல் மேனிப் புனிதனார், புரிந்து அமரர் இறைஞ்சி ஏத்த, சின விடையை மேற்கொண்டு, திரு ஆரூரும் சிரபுரமும் இடை மருதும் சேர்வார் போல, மனம் உருக, வளை கழல, மாயம் பேசி, வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.
[5]
கறுத்தது ஒரு கண்டத்தர்; காலன் வீழக் காலினால் காய்ந்து உகந்த காபாலி(ய்)யார்; முறித்தது ஒரு தோல் உடுத்து, முண்டம் சாத்தி, முனி கணங்கள் புடை சூழ, முற்றம் தோறும் தெறித்தது ஒரு வீணையராய்ச் செல்வார்; தம் வாய்ச் சிறு முறுவல் வந்து எனது சிந்தை வௌவ, மறித்து ஒரு கால் நோக்காதே, மாயம் பேசி, வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.
[6]
பட்டு உடுத்து, பவளம் போல் மேனி எல்லாம் பசுஞ்சாந்தம் கொண்டு அணிந்து, பாதம் நோவ இட்டு எடுத்து நடம் ஆடி, இங்கே வந்தார்க்கு, எவ் ஊரீர், எம்பெருமான்? என்றேன்; ஆவி விட்டிடும் ஆறு அது செய்து, விரைந்து நோக்கி, வேறு ஓர் பதி புகப் போவார் போல, வட்டணைகள் பட நடந்து, மாயம் பேசி, வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.
[7]
பல்லார் பயில் பழனப் பாசூர் என்று, பழனம் பதி பழைமை சொல்லி நின்றார்; நல்லார் நனி பள்ளி இன்று வைகி, நாளைப் போய், நள்ளாறு சேர்தும் என்றார்; சொல்லார், ஒரு இடமா; தோள் கை வீசி, சுந்தரராய், வெந்த நீறு ஆடி, எங்கும் மல் ஆர் வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.
[8]
பொங்கு ஆடு அரவு ஒன்று கையில் கொண்டு, போர் வெண்மழு ஏந்தி, போகா நிற்பர்; தங்கார் ஒரு இடத்தும், தம்மேல் ஆர்வம் தவிர்த்து அருளார்; தத்துவத்தே நின்றேன் என்பர்; எங்கே இவர் செய்கை? ஒன்று ஒன்று ஒவ்வா; என் கண்ணில் நின்று அகலா வேடம் காட்டி, மங்குல் மதி தவழும் மாட வீதி வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.
[9]
செங்கண் மால் சிலை பிடித்து, சேனையோடும் சேதுபந்தனம் செய்து, சென்று புக்கு, பொங்கு போர் பல செய்து, புகலால் வென்ற போர் அரக்கன் நெடு முடிகள் பொடி ஆய் வீழ, அங்கு ஒரு தம் திரு விரலால் இறையே ஊன்றி, அடர்த்து, அவற்கே அருள் புரிந்த அடிகள், இந் நாள் வங்கம் மலி கடல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.059   தொண்டு இலங்கும் அடியவர்க்கு ஓர்
பண் - திருத்தாண்டகம் (திருவெண்ணியூர் வெண்ணிநாயகர் அழகியநாயகியம்மை)
தொண்டு இலங்கும் அடியவர்க்கு ஓர் நெறியினாரும், தூ நீறு துதைந்து இலங்கும் மார்பினாரும், புண்டரிகத்து அயனொடு மால் காணா வண்ணம் பொங்கு தழல் பிழம்பு ஆய புராணனாரும், வண்டு அமரும் மலர்க் கொன்றை மாலையாரும், வானவர்க்கா நஞ்சு உண்ட மைந்தனாரும், விண்டவர் தம் புரம் மூன்றும் எரி செய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.
[1]
நெருப்பு அனைய மேனிமேல் வெண் நீற்றாரும், நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தாரும், பொருப்பு அரையன் மடப்பாவை இடப்பாலரும், பூந்துருத்தி நகர் மேய புராணனாரும், மருப்பு அனைய வெண் மதியக் கண்ணியாரும், வளை குளமும் மறைக்காடும் மன்னினாரும், விருப்பு உடைய அடியவர் தம் உள்ளத்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.
[2]
கை உலாம் மூ இலை வேல் ஏந்தினாரும், கரி காட்டில் எரி ஆடும் கடவுளாரும், பை உலாம் நாகம் கொண்டு ஆட்டுவாரும், பரவுவார் பாவங்கள் பாற்று வாரும், செய் உலாம் கயல் பாய வயல்கள் சூழ்ந்த திருப் புன்கூர் மேவிய செல்வனாரும், மெய் எலாம் வெண்நீறு சண்ணித்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.
[3]
சடை ஏறு புனல் வைத்த சதுரனாரும், தக்கன் தன் பெருவேள்வி தகர்த்திட்டாரும், உடை ஏறு புலி அதள் மேல் நாகம் கட்டி உண் பலிக்கு என்று ஊர் ஊரின் உழிதர்வாரும், மடை ஏறிக் கயல் பாய வயல்கள் சூழ்ந்த மயிலாடுதுறை உறையும் மணாளனாரும், விடை ஏறு வெல் கொடி எம் விமலனாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.
[4]
மண், இலங்கு நீர், அனல், கால், வானும், ஆகி மற்று அவற்றின் குணம் எலாம் ஆய் நின்றாரும்; பண் இலங்கு பாடலோடு ஆடலாரும்; பருப்பதமும் பாசூரும் மன்னினாரும்; கண் இலங்கு நுதலாரும்; கபாலம் ஏந்திக் கடை தோறும் பலி கொள்ளும் காட்சியாரும்; விண் இலங்கு வெண் மதியக் கண்ணியாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.
[5]
வீடுதனை மெய் அடியார்க்கு அருள் செய்வாரும், வேலை விடம் உண்டு இருண்ட கண்டத்தாரும், கூடலர் தம் மூ எயிலும் எரிசெய்தாரும், குரை கழலால் கூற்றுவனைக் குமை செய்தாரும், ஆடும் அரவு அரைக்கு அசைத்து அங்கு ஆடுவாரும், ஆலமர நீழல் இருந்து அறம் சொன்னாரும், வேடுவனாய் மேல் விசயற்கு அருள் செய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.
[6]
மட்டு இலங்கு கொன்றை அம்தார்-மாலை சூடி, மடவாள் அவளோடு, மான் ஒன்று ஏந்தி, சிட்டு இலங்கு வேடத்தார் ஆகி, நாளும் சில்பலிக்கு என்று ஊர் ஊரின் திரிதர்வாரும்; கட்டு இலங்கு பாசத்தால் வீச வந்த காலன் தன் காலம் அறுப்பார் தாமும்; விட்டு இலங்கு வெண்குழை சேர் காதினாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.
[7]
செஞ்சடைக்கு ஓர் வெண்திங்கள் சூடினாரும், திரு ஆலவாய் உறையும் செல்வனாரும், அஞ்சனக் கண் அரிவை ஒருபாகத்தாரும், ஆறு அங்கம் நால் வேதம் ஆய் நின்றாரும், மஞ்சு அடுத்த நீள் சோலை மாட வீதி மதில் ஆரூர் புக்கு அங்கே மன்னினாரும், வெஞ்சினத்த வேழம் அது உரி செய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.
[8]
வளம் கிளர் மா மதி சூடும் வேணியாரும், வானவர்க்கா நஞ்சு உண்ட மைந்தனாரும், களம் கொள என் சிந்தையுள்ளே மன்னினாரும், கச்சி ஏகம்பத்து எம் கடவுளாரும், உளம் குளிர அமுது ஊறி அண்ணிப்பாரும், உத்தமராய் எத்திசையும் மன்னினாரும், விளங்(கு)கிளரும் வெண்மழு ஒன்று ஏந்தினாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.
[9]
பொன் இலங்கு கொன்றை அம்தார்-மாலை சூடிப் புகலூரும் பூவணமும் பொருந்தினாரும், கொன் இலங்கு மூ இலை வேல் ஏந்தினாரும், குளிர் ஆர்ந்த செஞ்சடை எம் குழகனாரும், தென் இலங்கை மன்னவர் கோன் சிரங்கள் பத்தும் திரு விரலால் அடர்த்து அவனுக்கு அருள் செய்தாரும், மின் இலங்கு நுண் இடையாள் பாகத்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.060   மூத்தவனை, வானவர்க்கு; மூவா மேனி
பண் - திருத்தாண்டகம் (திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை) முத்தீசர் அஞ்சனாட்சியம்மை)
மூத்தவனை, வானவர்க்கு; மூவா மேனி முதலவனை; திரு அரையில் மூக்கப் பாம்பு ஒன்று ஆத்தவனை; அக்கு, அரவம், ஆரம் ஆக அணிந்தவனை; பணிந்து அடியார் அடைந்த அன்போடு ஏத்தவனை; இறுவரையில்-தேனை, ஏனோர்க்கு; இன் அமுதம் அளித்தவனை; இடரை எல்லாம் காத்தவனை; கற்குடியில் விழுமியானை; கற்பகத்தை; கண் ஆரக் கண்டேன், நானே.
[1]
செய்யானை, வெளியானை, கரியான் தன்னை, திசைமுகனை, திசை எட்டும் செறிந்தான் தன்னை, ஐயானை, நொய்யானை, சீரியானை, அணியானை, சேயானை, ஆன் அஞ்சு ஆடும் மெய்யானை, பொய்யாதும் இல்லான் தன்னை, விடையானை, சடையானை, வெறித்த மான் கொள் கையானை, கற்குடியில் விழுமியானை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டேன், நானே.
[2]
மண் அதனில் ஐந்தை; மா நீரில் நான்கை; வயங்கு எரியில் மூன்றை; மாருதத்து இரண்டை; விண் அதனில் ஒன்றை; விரிகதிரை; தண்மதியை, தாரகைகள் தம்மில்; மிக்க எண் அதனில் எழுத்தை; ஏழ் இசையை; காமன் எழில் அழிய எரி உமிழ்ந்த இமையா நெற்றிக்- கண்ணவனை; கற்குடியில் விழுமியானை; கற்பகத்தை;-கண் ஆரக் கண்டேன், நானே.
சங்கை தனைத் தவிர்த்து ஆண்ட தலைவன் தன்னை, சங்கரனை, தழல் உறு தாள் மழுவாள் தாங்கும் அம் கையனை, அங்கம் அணி ஆகத்தானை, ஆகத்து ஓர்பாகத்தே அமர வைத்த மங்கையனை, மதியொடு மாசுணமும் தம்மில் மருவ விரிசடை முடி மேல் வைத்த வான்நீர்க்- கங்கையனை, கற்குடியில் விழுமியானை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டேன், நானே.
[5]
பெண் அவனை, ஆண் அவனை, பேடு ஆனானை, பிறப்பு இலியை, இறப்பு இலியை, பேரா வாணி விண்ணவனை, விண்ணவர்க்கும் மேல் ஆனானை, வேதியனை, வேதத்தின் கீதம் பாடும் பண்ணவனை, பண்ணில் வரு பயன் ஆனானை, பார் அவனை, பாரில் வாழ் உயிர்கட்கு எல்லாம் கண் அவனை, கற்குடியில் விழுமியானை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டேன், நானே.
[6]
பண்டானை, பரந்தானை, குவிந்தான் தன்னை, பாரானை, விண் ஆய் இவ் உலகம் எல்லாம் உண்டானை, உமிழ்ந்தானை, உடையான் தன்னை, ஒருவரும் தன் பெருமைதனை அறிய ஒண்ணா விண்டானை, விண்டார் தம் புரங்கள் மூன்றும் வெவ் அழலில் வெந்து பொடி ஆகி வீழக் கண்டானை, கற்குடியில் விழுமியானை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டேன், நானே.
[7]
வானவனை, வானவர்க்கு மேல் ஆனானை, வணங்கும் அடியார் மனத்துள் மருவிப் புக்க தேன் அவனை, தேவர் தொழு கழலான் தன்னை, செய் குணங்கள் பல ஆகி நின்ற வென்றிக் கோன் அவனை, கொல்லை விடை ஏற்றினானை, குழல் முழவம் இயம்பக் கூத்து ஆட வல்ல கானவனை, கற்குடியில் விழுமியானை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டேன், நானே.
[8]
கொலை யானை உரி போர்த்த கொள்கையானை, கோள் அரியை, கூர் அம்பா வரை மேல் கோத்த சிலையானை, செம்மை தரு பொருளான் தன்னை, திரி புரத்தோர் மூவர்க்குச் செம்மை செய்த தலையானை, தத்துவங்கள் ஆனான் தன்னை, தையல் ஓர்பங்கினனை, தன் கை ஏந்து கலையானை, கற்குடியில் விழுமியானை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டேன், நானே.
[9]
பொழிலானை, பொழில் ஆரும் புன்கூரானை, புறம் பயனை, அறம் புரிந்த புகலூரானை, எழிலானை, இடை மருதின் இடம் கொண்டானை, ஈங்கோய் நீங்காது உறையும் இறைவன் தன்னை, அழல் ஆடு மேனியனை, அன்று சென்று அக் குன்று எடுத்த அரக்கன் தோள் நெரிய ஊன்றும் கழலானை, கற்குடியில் விழுமியானை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டேன், நானே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.061   மாதினை ஓர் கூறு உகந்தாய்!
பண் - திருத்தாண்டகம் (திருக்கன்றாப்பூர் நடுதறிநன்னாயகர் மாதுமைநாயகியம்மை)
மாதினை ஓர் கூறு உகந்தாய்! மறை கொள் நாவா! மதிசூடீ! வானவர்கள் தங்கட்கு எல்லாம் நாதனே! என்று என்று பரவி, நாளும் நைந்து உருகி, வஞ்சகம் அற்று, அன்பு கூர்ந்து, வாதனையால் முப்பொழுதும் பூநீர் கொண்டு, வைகல் மறவாது, வாழ்த்தி, ஏத்தி, காதன்மையால்-தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணல் ஆமே!.
[1]
விடிவதுமே வெண்நீற்றை மெய்யில் பூசி, வெளுத்து அமைந்த கீளொடு கோவணமும் தற்று, செடி உடைய வல்வினை நோய் தீர்ப்பாய்! என்றும், செல் கதிக்கு வழி காட்டும் சிவனே! என்றும், துடி அனைய இடை மடவாள் பங்கா! என்றும், சுடலை தனில் நடம் ஆடும் சோதீ! என்றும், கடிமலர் தூய், தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணல் ஆமே!.
[2]
எவரேனும் தாம் ஆக; இலாடத்து இட்ட திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி, உவராதே, அவர் அவரைக் கண்ட போது உகந்து அடிமைத் திறம் நினைந்து, அங்கு உவந்து நோக்கி, இவர் தேவர், அவர் தேவர், என்று சொல்லி இரண்டு ஆட்டாது ஒழிந்து, ஈசன் திறமே பேணி, கவராதே, தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணல் ஆமே!.
[3]
இலம்; காலம், செல்லா நாள் என்று, நெஞ்சத்து இடையாதே யாவர்க்கும் பிச்சை இட்டு, விலங்காதே, நெறி நின்று, அங்கு அறிவே மிக்கு, மெய் அன்பு மிகப் பெய்து, பொய்யை நீக்கி, துலங்காமே வானவரைக் காத்து நஞ்சம் உண்ட பிரான் அடி இணைக்கே சித்தம் வைத்து, கலங்காதே, தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடு தறியைக் காணல் ஆமே!.
[4]
விருத்தனே! வேலை விடம் உண்ட கண்டா! விரி சடை மேல் வெண்திங்கள் விளங்கச் சூடும் ஒருத்தனே! உமை கணவா! உலக மூர்த்தி! நுந்தாத ஒண்சுடரே! அடியார் தங்கள் பொருத்தனே! என்று என்று புலம்பி, நாளும் புலன் ஐந்தும் அகத்து அடக்கி, புலம்பி நோக்கி, கருத்தினால்-தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணல் ஆமே!.
ஐயினால் மிடறு அடைப்புண்டு, ஆக்கை விட்டு(வ்) ஆவியார் போவதுமே, அகத்தார் கூடி, மையினால் கண் எழுதி, மாலை சூட்டி, மயானத்தில் இடுவதன் முன், மதியம் சூடும் ஐயனார்க்கு ஆள் ஆகி, அன்பு மிக்கு(வ்), அகம் குழைந்து, மெய் அரும்பி, அடிகள் பாதம் கையினால்-தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணல் ஆமே!.
[7]
திருதிமையால் ஐவரையும் காவல் ஏவி, திகையாதே, சிவாய நம என்னும் சிந்தைச் சுருதிதனைத் துயக்கு அறுத்து, துன்ப வெள்ளக்-கடல் நீந்திக் கரை ஏறும் கருத்தே மிக்கு, பருதி தனைப் பல் பறித்த பாவநாசா! பரஞ்சுடரே! என்று என்று பரவி, நாளும் கருதி மிகத் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணல் ஆமே!.
[8]
குனிந்த சிலையால் புரம் மூன்று எரித்தாய்! என்றும், கூற்று உதைத்த குரை கழல் சேவடியாய்! என்றும், தனஞ்சயற்குப் பாசுபதம் ஈந்தாய்! என்றும், தசக்கிரிவன் மலை எடுக்க, விரலால் ஊன்றி, முனிந்து அவன் தன் சிரம் பத்தும் தாளும் தோளும் முரண் அழித்திட்டு, அருள் கொடுத்த மூர்த்தி! என்றும், கனிந்து மிகத் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணல் ஆமே!.
[9]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.062   எத் தாயர், எத் தந்தை,
பண் - திருத்தாண்டகம் (திருவானைக்கா சம்புகேசுவரர் அகிலாண்டநாயகியம்மை)
எத் தாயர், எத் தந்தை, எச் சுற்றத்தார், எம் மாடு சும்மாடு? ஏவர் நல்லார்? செத்தால் வந்து உதவுவார் ஒருவர் இல்லை; சிறு விறகால்-தீ மூட்டிச் செல்லா நிற்பர்; சித்து ஆய வேடத்தாய்! நீடு பொன்னித் திரு ஆனைக்கா உடைய செல்வா! என்தன் அத்தா! உன் பொன்பாதம் அடையப் பெற்றால், அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.
[1]
ஊன் ஆகி, உயிர் ஆகி, அதனுள் நின்ற உணர்வு ஆகி, பிற அனைத்தும் நீயாய், நின்றாய்; நான் ஏதும் அறியாமே என்னுள் வந்து, நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்; தேன் ஆரும் கொன்றையனே! நின்றியூராய்! திரு ஆனைக்காவில் உறை சிவனே! ஞானம்- ஆனாய்! உன் பொன்பாதம் அடையப் பெற்றால், அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.
[2]
ஒப்பு ஆய், இவ் உலகத்தோடு ஒட்டி வாழ்வான், ஒன்று அலாத் தவத்தாரோடு உடனே நின்று, துப்பு ஆரும் குறை அடிசில் துற்றி, நற்று உன் திறம் மறந்து திரிவேனை, காத்து, நீ வந்து எப்பாலும் நுன் உணர்வே ஆக்கி, என்னை ஆண்டவனே! எழில் ஆனைக்காவா! வானோர் அப்பா! உன் பொன்பாதம் அடையப் பெற்றால், அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.
[3]
நினைத்தவர்கள் நெஞ்சுளாய்! வஞ்சக் கள்வா! நிறை மதியம் சடை வைத்தாய்! அடையாது உன்பால் முனைத்தவர்கள் புரம் மூன்றும் எரியச் செற்றாய்! முன் ஆனைத் தோல் போர்த்த முதல்வா! என்றும் கனைத்து வரும் எருது ஏறும் காளகண்டா! கயிலாயமலையா! நின் கழலே சேர்ந்தேன்; அனைத்து உலகும் ஆள்வானே! ஆனைக்காவா! அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.
[4]
இம் மாயப் பிறப்பு என்னும் கடல் ஆம் துன்பத்து- இடைச் சுழிப்பட்டு இளைப்பேனை இளையா வண்ணம், கைம் மான, மனத்து உதவி, கருணை செய்து, காதல் அருள் அவை வைத்தாய்! காண நில்லாய்! வெம் மான மதகரியின் உரிவை போர்த்த வேதியனே! தென் ஆனைக்காவுள் மேய அம்மான்! நின் பொன் பாதம் அடையப்பெற்றால், அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.
[5]
உரை ஆரும் புகழானே! ஒற்றியூராய்! கச்சி ஏகம்பனே! காரோணத்தாய்! விரை ஆரும் மலர் தூவி வணங்குவார் பால் மிக்கானே! அக்கு, அரவம், ஆரம், பூண்டாய்! திரை ஆரும் புனல் பொன்னித் தீர்த்தம் மல்கு திரு ஆனைக்காவில் உறை தேனே! வானோர்- அரையா! உன் பொன்பாதம் அடையப் பெற்றால், அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.
[6]
மை ஆரும் மணிமிடற்றாய்! மாது ஓர் கூறாய்! மான்மறியும், மா மழுவும், அனலும், ஏந்தும் கையானே! காலன் உடல் மாளச் செற்ற கங்காளா! முன் கோளும் விளைவும் ஆனாய்! செய்யானே, திருமேனி! அரியாய்! தேவர்-குலக் கொழுந்தே! தென் ஆனைக்காவுள் மேய ஐயா! உன் பொன்பாதம் அடையப்பெற்றால், அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.
[7]
இலை ஆரும் சூலத்தாய்! எண் தோளானே! எவ் இடத்தும் நீ அலாது இல்லை என்று தலை ஆரக் கும்பிடுவார் தன்மையானே! தழல் மடுத்த மா மேரு, கையில் வைத்த, சிலையானே! திரு ஆனைக்காவுள் மேய தீஆடீ! சிறு நோயால் நலிவுண்டு உள்ளம் அலையாதே, நின் அடியே அடையப்பெற்றால், அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.
[8]
விண் ஆரும் புனல் பொதி செஞ்சடையாய்! வேத- நெறியானே! எறிகடலின் நஞ்சம் உண்டாய்! எண் ஆரும் புகழானே! உன்னை, எம்மான்! என்று என்றே நாவினில் எப்பொழுதும் உன்னி, கண் ஆரக் கண்டிருக்கக் களித்து, எப்போதும், கடிபொழில் சூழ் தென் ஆனைக்காவுள் மேய அண்ணா! நின் பொன்பாதம் அடையப் பெற்றால், அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.
[9]
கொடி ஏயும் வெள் ஏற்றாய்! கூளி பாட, குறள் பூதம் கூத்து ஆட, நீயும் ஆடி, வடிவு ஏயும் மங்கை தனை வைத்த மைந்தா! மதில் ஆனைக்கா உளாய்! மாகாளத்தாய்! படி ஏயும் கடல் இலங்கைக் கோமான் தன்னைப் பரு முடியும் திரள் தோளும் அடர்த்து உகந்த அடியே வந்து, அடைந்து, அடிமை ஆகப் பெற்றால், அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.063   முன் ஆனைத்தோல் போர்த்த மூர்த்தி
பண் - திருத்தாண்டகம் (திருவானைக்கா சம்புகேசுவரர் அகிலாண்டநாயகியம்மை)
முன் ஆனைத்தோல் போர்த்த மூர்த்தி தன்னை; மூவாத சிந்தையே, மனமே, வாக்கே, தன் ஆனையாய் பண்ணி ஏறினானை; சார்தற்கு அரியானை; தாதை தன்னை; என் ஆனைக்கன்றினை; என் ஈசன் தன்னை; எறி நீர்த் திரை உகளும் காவிரீ சூழ் தென் ஆனைக்காவானை; தேனை; பாலை; செழுநீர்த்திரளை; சென்று ஆடினேனே.
[1]
மருந்தானை, மந்திரிப்பார் மனத்து உளானை, வளர் மதி அம் சடையானை, மகிழ்ந்து என் உள்ளத்து இருந்தானை, இறப்பு இலியை, பிறப்பு இலானை, இமையவர் தம் பெருமானை, உமையாள் அஞ்சக் கருந் தான-மதகளிற்றின் உரி போர்த்தானை, கன மழுவாள் படையானை, பலி கொண்டு ஊர் ஊர் திரிந்தானை, திரு ஆனைக்கா உளானை, செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே.
[2]
முற்றாத வெண்திங்கள் கண்ணியானை, முந்நீர் நஞ்சு உண்டு இமையோர்க்கு அமுதம் நல்கும் உற்றானை, பல் உயிர்க்கும் துணை ஆனானை, ஓங்காரத்து உள்பொருளை, உலகம் எல்லாம் பெற்றானை, பின் இறக்கம் செய்வான் தன்னை, பிரான் என்று போற்றாதார் புரங்கள் மூன்றும் செற்றானை, திரு ஆனைக்கா உளானை, செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே.
[3]
கார் ஆரும் கறை மிடற்று எம் பெருமான் தன்னை, காதில் வெண் குழையானை, கமழ் பூங்கொன்றைத்- தாரானை, புலி அதளின் ஆடையானை, தான் அன்றி வேறு ஒன்றும் இல்லா ஞானப் பேரானை, மணி ஆரம் மார்பினானை, பிஞ்ஞகனை, தெய்வ நால்மறைகள் பூண்ட தேரானை, திரு ஆனைக்கா உளானை, செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே.
[4]
பொய் ஏதும் இல்லாத மெய்யன் தன்னை, புண்ணியனை, நண்ணாதார் புரம் நீறு ஆக எய்தானை, செய் தவத்தின் மிக்கான் தன்னை, ஏறு அமரும் பெருமானை, இடம் மான் ஏந்து கையானை, கங்காள வேடத்தானை, கட்டங்கக் கொடியானை, கனல் போல் மேனிச் செய்யானை, திரு ஆனைக்கா உளானை, செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே.
[5]
கலையானை, பரசு தர பாணியானை, கன வயிரத்திரளானை, மணி மாணிக்க- மலையானை, என் தலையின் உச்சியானை, வார்தரு புன்சடையானை, மயானம் மன்னும் நிலையானை, வரி அரவு நாணாக் கோத்து நினையாதார் புரம் எரிய வளைத்த மேருச்- சிலையானை, திரு ஆனைக்கா உளானை, செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே.
[6]
ஆதியனை, எறி மணியின் ஓசையானை, அண்டத்தார்க்கு அறிவு ஒண்ணாது அப்பால் மிக்க சோதியனை, தூ மறையின் பொருளான் தன்னை, சுரும்பு அமரும் மலர்க்கொன்றை தொல்-நூல் பூண்ட வேதியனை, அறம் உரைத்த பட்டன் தன்னை, விளங்கு மலர் அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றைச் சேதியனை, திரு ஆனைக்கா உளானை, செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே.
[7]
மகிழ்ந்தானை, கச்சி ஏகம்பன் தன்னை, மறவாது கழல் நினைந்து வாழ்த்தி ஏத்திப் புகழ்ந்தாரைப் பொன்னுலகம் ஆள்விப்பானை, பூத கணப்படையானை, புறங்காட்டு ஆடல் உகந்தானை, பிச்சையே இச்சிப்பானை, ஒண் பவளத்திரளை, என் உள்ளத்துள்ளே திகழ்ந்தானை, திரு ஆனைக்கா உளானை, செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே.
[8]
நசையானை; நால்வேதத்து அப்பாலானை; நல்குரவும், தீப்பிணி நோய், காப்பான் தன்னை; இசையானை; எண் இறந்த குணத்தான் தன்னை; இடை மருதும் ஈங்கோயும் நீங்காது ஏற்றின் மிசையானை; விரிகடலும், மண்ணும், விண்ணும், மிகு தீயும், புனல், எறி காற்று, ஆகி எட்டுத்- திசையானை; திரு ஆனைக்கா உளானை; செழுநீர்த்திரளை; சென்று ஆடினேனே.
[9]
பார்த்தானை, காமன் உடல் பொடிஆய் வீழ; பண்டு அயன், மால், இருவர்க்கும் அறியா வண்ணம் சீர்த்தானை; செந்தழல் போல் உருவினானை; தேவர்கள் தம் பெருமானை; திறம் உன்னாதே ஆர்த்து ஓடி மலை எடுத்த இலங்கை வேந்தன் ஆண்மை எலாம் கெடுத்து, அவன் தன் இடர் அப்போதே தீர்த்தானை; திரு ஆனைக்கா உளானை; செழுநீர்த்திரளை; சென்று ஆடினேனே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.064   கூற்றுவன் காண், கூற்றுவனைக் குமைத்த
பண் - திருத்தாண்டகம் (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
கூற்றுவன் காண், கூற்றுவனைக் குமைத்த கோன் காண், குவலயன் காண், குவலயத்தின் நீர் ஆனான் காண், காற்று அவன் காண், கனல் அவன் காண், கலிக்கும் மின் காண், கன பவளச்செம்மேனி கலந்த வெள்ளை நீற்றவன் காண், நிலா ஊரும் சென்னியான் காண், நிறை ஆர்ந்த புனல் கங்கை நிமிர்சடை மேல் ஏற்றவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.
[1]
பரந்தவன் காண், பல் உயிர்கள் ஆகி எங்கும்; பணிந்து எழுவார் பாவமும் வினையும் போகத் துரந்தவன் காண்; தூ மலர் அம் கண்ணியான் காண்; தோற்றம், நிலை, இறுதி, பொருள் ஆய் வந்த மருந்து அவன் காண்; வையகங்கள் பொறை தீர்ப்பான் காண்; மலர் தூவி நினைந்து எழுவார் உள்ளம் நீங்காது இருந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.
[2]
நீற்றவன் காண்; நீர் ஆகித் தீ ஆனான் காண்; நிறை மழுவும், தமருகமும், எரியும், கையில்- தோற்றவன் காண்; தோற்றக் கேடு இல்லாதான் காண்; துணை இலி காண்; துணை என்று தொழுவார் உள்ளம் போற்றவன் காண்; புகழ்கள் தமைப் படைத்தான் தான் காண்; பொறி அரவும், விரிசடை மேல், புனலும் கங்கை ஏற்றவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.
[3]
தாய் அவன் காண், உலகிற்கு; தன் ஒப்பு இல்லாத் தத்துவன் காண்; மலை மங்கை பங்கா! என்பார் வாயவன் காண்; வரும் பிறவி நோய் தீர்ப்பான் காண், வானவர்க்கும் தானவர்க்கும் மண்ணுளோர்க்கும்; சேயவன் காண், நினையார்க்கு; சித்தம் ஆரத் திருவடியே உள்கி நினைந்து எழுவார் உள்ளம் ஏயவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.
[4]
அடுத்த ஆனை உரித்தான் காண்.
[5]
அழித்தவன் காண், எயில் மூன்றும் அயில்வாய் அம்பால்; ஐயாறும் இடை மருதும் ஆள்வான் தான் காண்; பழித்தவன் காண், அடையாரை; அடைவார் தங்கள் பற்று அவன் காண்; புற்று அரவம் நாணினான் காண்; சுழித்தவன் காண், முடிக் கங்கை; அடியே போற்றும் தூய மா முனிவர்க்காப் பார்மேல் நிற்க இழித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.
[6]
அசைந்தவன் காண், நடம் ஆடிப் பாடல் பேணி; அழல் வண்ணத்தில்(ல்) அடியும் முடியும் தேடப் பசைந்தவன் காண்; பேய்க் கணங்கள் பரவி ஏத்தும் பான்மையன் காண்; பரவி நினைந்து எழுவார் தம்பால் கசிந்தவன் காண்; கரியின் உரி போர்த்தான் தான் காண்; கடலில் விடம் உண்டு அமரர்க்கு அமுதம் ஈய இசைந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.
[7]
முடித்தவன் காண்; வன்கூற்றை; சீற்றத் தீயால் வலியார் தம் புரம் மூன்றும் வேவச் சாபம் பிடித்தவன் காண்; பிஞ்ஞகன் ஆம் வேடத்தான் காண்; பிணையல் வெறி கமழ் கொன்றை, அரவு, சென்னி முடித்தவன் காண்; மூ இலை நல் வேலினான் காண்; முழங்கி உரும் எனத் தோன்றும் மழை ஆய் மின்னி இடித்தவன் காண்; எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.
[8]
வரும் தவன் காண்; மனம் உருகி நினையாதார்க்கு வஞ்சகன் காண்; அஞ்சு எழுத்தும் நினைவார்க்கு என்றும் மருந்து அவன் காண்; வான் பிணிகள் தீரும் வண்ணம்; வானகமும் மண்ணகமும் மற்றும் ஆகிப் பரந்தவன் காண்; படர் சடை எட்டு உடையான் தான் காண்; பங்கயத்தோன் தன் சிரத்தை ஏந்தி, ஊர் ஊர் இரந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.
[9]
வெம் மான உழுவை அதள்-உரி போர்த்தான் காண்; வேதத்தின் பொருளான் காண் என்று இயம்பி, விம்மா நின்று, அழுவார்கட்கு அளிப்பான் தான்காண்; விடை ஏறித் திரிவான் காண்; நடம் செய் பூதத்து அம்மான் காண்; அகலிடங்கள் தாங்கினான் காண்; அற்புதன் காண்; சொல்பதமும் கடந்து நின்ற எம்மான் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.
[10]
அறுத்தான் காண், அயன் சிரத்தை; அமரர் வேண்ட, ஆழ்கடலின் நஞ்சு உண்டு, அங்கு அணி நீர்க்கங்கை செறுத்தான் காண்; தேவர்க்கும் தேவன் தான் காண்; திசை அனைத்தும் தொழுது ஏத்த, கலை மான் கையில் பொறுத்தான் காண்; புகல் இடத்தை நலிய வந்து பொரு கயிலை எடுத்தவன்தன் முடி, தோள்நால்-அஞ்சு, இறுத்தான் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.065   உரித்தவன் காண், உரக் களிற்றை
பண் - திருத்தாண்டகம் (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
உரித்தவன் காண், உரக் களிற்றை உமையாள் ஒல்க; ஓங்காரத்து ஒருவன் காண்; உணர் மெய்ஞ்ஞானம் விரித்தவன் காண்; விரித்த நால் வேதத்தான் காண்; வியன் உலகில் பல் உயிரை விதியினாலே தெரித்தவன் காண்; சில் உரு ஆய்த் தோன்றி எங்கும் திரண்டவன் காண்; திரிபுரத்தை வேவ வில்லால் எரித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.
[1]
நேசன் காண், நேசர்க்கு; நேசம் தன்பால் இல்லாத நெஞ்சத்து நீசர் தம்மைக் கூசன் காண்; கூசாதார் நெஞ்சு தஞ்சே குடிகொண்ட குழகன் காண்; அழகு ஆர் கொன்றை- வாசன் காண்; மலை மங்கை பங்கன் தான் காண்; வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தும் ஈசன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.
[2]
பொறையவன் காண்; பூமி ஏழ் தாங்கி ஓங்கும் புண்ணியன் காண்; நண்ணிய புண்டரீகப் போதில் மறையவன் காண்; மறையவனைப் பயந்தோன் தான் காண்; வார்சடை மாசுணம் அணிந்து, வளரும் பிள்ளைப்- பிறையவன் காண்; பிறை திகழும் எயிற்றுப் பேழ்வாய்ப் பேயோடு அங்கு இடுகாட்டில் எல்லி ஆடும் இறையவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.
[3]
பார் அவன் காண், விசும்பு அவன் காண், பவ்வம் தான் காண், பனி வரைகள் இரவினொடு பகல் ஆய் நின்ற சீரவன் காண், திசையவன் காண், திசைகள் எட்டும் செறிந்தவன் காண், சிறந்த(அ)டியார் சிந்தை செய்யும் பேரவன் காண், பேர் ஆயிரங்கள் ஏத்தும் பெரியவன் காண், அரியவன் காண், பெற்றம் ஊர்ந்த ஏரவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண், அவன் என் எண்ணத்தானே.
[4]
பெருந் தவத்து எம் பிஞ்ஞகன் காண், பிறை சூடீ காண், பேதையேன் வாதை உறு பிணியைத் தீர்க்கும் மருந்து அவன் காண், மந்திரங்கள் ஆயினான் காண், வானவர்கள் தாம் வணங்கும் மாதேவன் காண், அருந்தவத்தான் ஆயிழையாள் உமையாள் பாகம் அமர்ந்தவன் காண், அமரர்கள் தாம் அர்ச்சித்து ஏத்த இருந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.
[5]
ஆய்ந்தவன் காண், அருமறையோடு அங்கம் ஆறும்; அணிந்தவன் காண், ஆடு அரவோடு என்பும் ஆமை; காய்ந்தவன் காண், கண் அழலால் காமன் ஆகம்; கனன்று எழுந்த காலன் உடல் பொடி ஆய் வீழப் பாய்ந்தவன் காண்; பண்டு பலசருகால் பந்தர் பயின்ற நூல் சிலந்திக்குப் பார் ஆள் செல்வம் ஈந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.
[6]
உமையவளை ஒரு பாகம் சேர்த்தினான் காண், உகந்து ஒலி நீர்க் கங்கை சடை ஒழுக்கினான் காண், இமய வட கயிலைச் செல்வன் தான் காண், இல் பலிக்குச் சென்று உழலும் நல் கூர்ந்தான் காண், சமயம் அவை ஆறினுக்கும் தலைவன் தான் காண், தத்துவன் காண், உத்தமன் காண், தானே ஆய இமையவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.
[7]
தொண்டு படு தொண்டர் துயர் தீர்ப்பான் தான் காண், தூ மலர்ச்சேவடி இணை எம் சோதியான் காண், உண்டு படு விடம் கண்டத்து ஒடுக்கினான் காண், ஒலிகடலில் அமுது அமரர்க்கு உதவினான் காண், வண்டு படு மலர்க் கொன்றை மாலையான் காண், வாள்மதி ஆய் நாள் மீனும் ஆயினான் காண் எண்திசையும் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.
[8]
முந்தை காண், மூவரினும் முதல் ஆனான் காண், மூ இலை வேல் மூர்த்தி காண், முருக வேட்குத் தந்தை காண், தண் கட மா முகத்தினாற்குத் தாதை காண், தாழ்ந்து அடியே வணங்குவார்க்குச் சிந்தைகாண், சிந்தாத சித்தத்தார்க்குச் சிவன் அவன் காண், செங்கண் மால் விடை ஒன்று ஏறும் எந்தை காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.
[9]
பொன் இசையும் புரிசடை எம் புனிதன் தான் காண், பூதகண நாதன் காண், புலித்தோல் ஆடை தன் இசைய வைத்த எழில் அரவினான் காண், சங்க வெண்குழைக் காதின் சதுரன் தான் காண் மின் இசையும் வெள் எயிற்றோன் வெகுண்டு வெற்பை எடுக்க, அடி அடர்ப்ப, மீண்டு அவன் தன் வாயில் இன் இசை கேட்டு, இலங்கு ஒளி வாள் ஈந்தோன், கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.066   தாய் அவனை, வானோர்க்கும் ஏனோருக்கும்
பண் - திருத்தாண்டகம் (திருநாகேச்சரம் சண்பகாரண்ணியேசுவரர் குன்றமுலைநாயகியம்மை)
தாய் அவனை, வானோர்க்கும் ஏனோருக்கும் தலையவனை, மலையவனை, உலகம் எல்லாம் ஆயவனை, சேயவனை, அணியான் தன்னை, அழலவனை, நிழலவனை, அறிய ஒண்ணா மாயவனை, மறையவனை, மறையோர் தங்கள் மந்திரனை, தந்திரனை, வளரா நின்ற தீ அவனை, திரு நாகேச்சுரத்து உளானை, சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே.
[1]
உரித்தானை, மத வேழம் தன்னை; மின் ஆர் ஒளி முடி எம்பெருமானை; உமை ஓர்பாகம் தரித்தானை; தரியலர் தம் புரம் எய்தானை; தன் அடைந்தார் தம் வினை நோய் பாவம் எல்லாம் அரித்தானை; ஆல் அதன் கீழ் இருந்து நால்வர்க்கு அறம், பொருள், வீடு, இன்பம், ஆறு அங்கம், வேதம், தெரித்தானை; திரு நாகேச்சுரத்து உளானை, சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே.
[2]
கார் ஆனை உரி போர்த்த கடவுள் தன்னை; காதலித்து நினையாத கயவர் நெஞ்சில் வாரானை; மதிப்பவர் தம் மனத்து உளானை; மற்று ஒருவர் தன் ஒப்பார், ஒப்பு, இலாத, ஏரானை; இமையவர் தம் பெருமான் தன்னை; இயல்பு ஆகி உலகு எலாம் நிறைந்து மிக்க சீரானை; திரு நாகேச்சுரத்து உளானை, சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே.
[3]
தலையானை, எவ் உலகும் தான் ஆனானை, தன் உருவம் யாவர்க்கும் அறிய ஒண்ணா நிலையானை, நேசர்க்கு நேசன் தன்னை, நீள் வானமுகடு அதனைத் தாங்கி நின்ற மலையானை, வரி அரவு நாணாக் கோத்து வல் அசுரர் புரம் மூன்றும் மடிய எய்த சிலையானை, திரு நாகேச்சுரத்து உளானை, சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே.
[4]
மெய்யானை, தன் பக்கல் விரும்புவார்க்கு; விரும்பாத அரும் பாவியவர்கட்கு என்றும் பொய்யானை; புறங்காட்டில் ஆடலானை; பொன் பொலிந்த சடையானை; பொடி கொள் பூதிப் பையானை; பை அரவம் அசைத்தான் தன்னை; பரந்தானை; பவள மால்வரை போல் மேனிச் செய்யானை; திரு நாகேச்சுரத்து உளானை; சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே.
[5]
துறந்தானை, அறம் புரியாத் துரிசர் தம்மை; தோத்திரங்கள் பல சொல்லி வானோர் ஏத்த நிறைந்தானை; நீர், நிலம், தீ, வெளி, காற்று, ஆகி நிற்பனவும் நடப்பனவும் ஆயினானை; மறந்தானை, தன் நினையா வஞ்சர் தம்மை; அஞ்சு எழுத்தும் வாய் நவில வல்லோர்க்கு என்றும் சிறந்தானை; திரு நாகேச்சுரத்து உளானை; சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே.
[6]
மறையானை, மால் விடை ஒன்று ஊர்தியானை, மால்கடல் நஞ்சு உண்டானை, வானோர் தங்கள்- இறையானை, என் பிறவித்துயர் தீர்ப்பானை, இன்னமுதை, மன்னிய சீர் ஏகம்பத்தில் உறைவானை, ஒருவரும் ஈங்கு அறியா வண்ணம் என் உள்ளத்துள்ளே ஒளித்து வைத்த சிறையானை, திரு நாகேச்சுரத்து உளானை, சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே.
[7]
எய்தானை, புரம் மூன்றும் இமைக்கும் போதில்; இரு விசும்பில் வருபுனலைத் திரு ஆர் சென்னிப் பெய்தானை; பிறப்பு இலியை; அறத்தில் நில்லாப் பிரமன் தன் சிரம் ஒன்றைக் கரம் ஒன்றி(ன்)னால் கொய்தானை; கூத்து ஆட வல்லான் தன்னை; குறி இலாக் கொடியேனை அடியேன் ஆகச் செய்தானை; திரு நாகேச்சுரத்து உளானை; சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே.
[8]
அளியானை, அண்ணிக்கும் ஆன்பால் தன்னை, வான் பயிரை, அப் பயிரின் வாட்டம் தீர்க்கும் துளியானை, அயன் மாலும் தேடிக் காணாச் சுடரானை, துரிசு அறத் தொண்டுபட்டார்க்கு எளியானை, யாவர்க்கும் அரியான் தன்னை, இன் கரும்பின் தன்னுள்ளால் இருந்த தேறல்,- தெளியானை, திரு நாகேச்சுரத்து உளானை, சேராதார் நன் நெறிக் கண் சேராதாரே.
[9]
சீர்த்தானை; உலகு ஏழும் சிறந்து போற்றச் சிறந்தானை; நிறைந்து ஓங்கு செல்வன் தன்னை; பார்த்தானை, மதனவேள் பொடி ஆய் வீழ; பனிமதி அம் சடையானை; புனிதன் தன்னை; ஆர்த்து ஓடி மலை எடுத்த அரக்கன் அஞ்ச அருவிரலால் அடர்த்தானை; அடைந்தோர் பாவம் தீர்த்தானை; திரு நாகேச்சுரத்து உளானை; சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.067   ஆள் ஆன அடியவர்கட்கு அன்பன்
பண் - திருத்தாண்டகம் (திருக்கீழ்வேளூர் அட்சயலிங்கநாதர் வனமுலைநாயகியம்மை)
ஆள் ஆன அடியவர்கட்கு அன்பன் தன்னை, ஆன் அஞ்சும் ஆடியை, நான் அபயம் புக்க தாளானை, தன் ஒப்பார் இல்லாதானை, சந்தனமும் குங்குமமும் சாந்தும் தோய்ந்த தோளானை, தோளாத முத்து ஒப்பானை, தூ வெளுத்த கோவணத்தை அரையில் ஆர்த்த கீளானை, கீழ் வேளூர் ஆளும் கோவை, கேடு இலியை, நாடுமவர் கேடு இலாரே.
[1]
சொல் பாவும் பொருள் தெரிந்து, தூய்மை நோக்கி, தூங்காதார் மனத்து இருளை வாங்காதானை; நல் பான்மை அறியாத நாயினேனை நன்நெறிக்கே செலும் வண்ணம் நல்கினானை; பல்பாவும் வாய் ஆரப் பாடி, ஆடி, பணிந்து, எழுந்து, குறைந்து, அடைந்தார் பாவம் போக்க- கிற்பானை; கீழ்வேளூர் ஆளும் கோவை; கேடு இலியை; நாடுமவர் கேடு இலாரே.
[2]
அளை வாயில் அரவு அசைத்த அழகன் தன்னை, ஆதரிக்கும் அடியவர்கட்கு அன்பே என்றும் விளைவானை, மெய்ஞ்ஞானப் பொருள் ஆனானை, வித்தகனை, எத்தனையும் பத்தர் பத்திக்கு உளைவானை, அல்லாதார்க்கு உளையாதானை, உலப்பு இலியை, உள் புக்கு என் மனத்து மாசு கிளைவானை, கீழ்வேளூர் ஆளும் கோவை, கேடு இலியை, நாடுமவர் கேடு இலாரே.
[3]
தாள் பாவு கமல மலர் தயங்குவானைத் தலை அறுத்து மா விரதம் தரித்தான் தன்னை, கோள் பாவு நாள் எல்லாம் ஆனான் தன்னை, கொடுவினையேன் கொடு நரகக்குழியில் நின்றால் மீட்பானை, வித்துருவின் கொத்து ஒப்பானை, வேதியனை, வேதத்தின் பொருள் கொள் வீணை கேட்பானை, கீழ்வேளூர் ஆளும் கோவை, கேடு இலியை, நாடுமவர் கேடு இலாரே.
[4]
நல்லானை, நரை விடை ஒன்று ஊர்தியானை, நால் வேதத்து ஆறு அங்கம் நணுகமாட்டாச் சொல்லானை, சுடர் மூன்றும் ஆனான் தன்னை, தொண்டு ஆகிப் பணிவார்கட்கு அணியான் தன்னை, வில்லானை, மெல்லியல் ஓர் பங்கன் தன்னை, மெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்க- கில்லானை, கீழ்வேளூர் ஆளும் கோவை, கேடு இலியை, நாடுமவர் கேடு இலாரே.
[5]
சுழித்தானை, கங்கை; மலர் வன்னி, கொன்றை, தூ மத்தம், வாள் அரவம், சூடினானை; அழித்தானை, அரணங்கள் மூன்றும் வேவ; ஆலால-நஞ்சு அதனை உண்டான் தன்னை; விழித்தானை, காமன் உடல் பொடி ஆய் வீழ; மெல்லியல் ஓர் பங்கனை; முன் வேல் நல் ஆனை கிழித்தானை; கீழ்வேளூர் ஆளும் கோவை; கேடு இலியை; நாடுமவர் கேடு இலாரே.
[6]
உளர் ஒளியை, உள்ளத்தினுள்ளே நின்ற ஓங்காரத்து உள்பொருள் தான் ஆயினானை, விளர் ஒளியை விடு சுடர்கள் இரண்டும் ஒன்றும் விண்ணொடு மண் ஆகாசம் ஆயினானை, வளர் ஒளியை, மரகதத்தின் உருவினானை, வானவர்கள் எப்பொழுதும் வாழ்த்தி ஏத்தும் கிளர் ஒளியை, கீழ்வேளூர் ஆளும் கோவை, கேடு இலியை, நாடுமவர் கேடு இலாரே.
[7]
தடுத்தானை, காலனைக் காலால் பொன்ற; தன் அடைந்த மாணிக்கு அன்று அருள் செய்தானை; உடுத்தானை, புலி அதளோடு அக்கும் பாம்பும்; உள்குவார் உள்ளத்தின் உள்ளான் தன்னை; மடுத்தானை, அரு நஞ்சம் மிடற்றுள்-தங்க; வானவர்கள் கூடிய அத் தக்கன் வேள்வி கெடுத்தானை; கீழ்வேளூர் ஆளும் கோவை; கேடு இலியை; நாடுமவர் கேடு இலாரே.
[8]
மாண்டார் எலும்பு அணிந்த வாழ்க்கையானை, மயானத்தில் கூத்தனை, வாள் அரவோடு என்பு பூண்டானை, புறங்காட்டில் ஆடலானை, போகாது என் உள் புகுந்து இடம் கொண்டு என்னை ஆண்டானை, அறிவு அரிய சிந்தையானை, அசங்கையனை, அமரர்கள் தம் சங்கை எல்லாம் கீண்டானை, கீழ்வேளூர் ஆளும் கோவை, கேடு இலியை, நாடுமவர் கேடு இலாரே.
[9]
முறிப்பு ஆன பேசி மலை எடுத்தான் தானும் முதுகு இற, முன்கைந் நரம்பை எடுத்துப் பாட, பறிப்பான் கைச் சிற்றரிவாள் நீட்டினானை; பாவியேன் நெஞ்சு அகத்தே பாதப் போது பொறித்தானை; புரம் மூன்றும் எரி செய்தானை; பொய்யர்களைப் பொய் செய்து போது போக்கிக் கிறிப்பானை; கீழ்வேளூர் ஆளும் கோவை; கேடு இலியை; நாடுமவர் கேடு இலாரே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.068   கருமணியை, கனகத்தின் குன்று ஒப்பானை,
பண் - திருத்தாண்டகம் (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
கருமணியை, கனகத்தின் குன்று ஒப்பானை, கருதுவார்க்கு ஆற்ற எளியான் தன்னை, குருமணியை, கோள் அரவம் ஆட்டுவானை, கொல் வேங்கை அதளானை, கோவண(ன்)னை, அருமணியை, அடைந்தவர்கட்கு அமுது ஒப்பானை, ஆன் அஞ்சும் ஆடியை, நான் அபயம் புக்க திருமணியை, திரு முதுகுன்று உடையான் தன்னை, தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.
[1]
கார் ஒளிய கண்டத்து எம் கடவுள் தன்னை, காபாலி, கட்டங்கம் ஏந்தினானை, பார் ஒளியை, விண் ஒளியை, பாதாள(ன்)னை, பால் மதியம் சூடி ஓர் பண்பன் தன்னை, பேரொளியை, பெண் பாகம் வைத்தான் தன்னை, பேணுவார் தம் வினையைப் பேணி வாங்கும் சீர் ஒளியை, திரு முதுகுன்று உடையான் தன்னை, தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.
[2]
எத்திசையும் வானவர்கள் தொழ நின்றானை, ஏறு ஊர்ந்த பெம்மானை, எம்மான்! என்று பத்தனாய்ப் பணிந்த(அ)டியேன் தன்னைப் பல்-நாள் பாமாலை பாடப் பயில்வித்தானை, முத்தினை, என் மணியை, மாணிக்கத்தை, முளைத்து எழுந்த செம்பவளக் கொழுந்து ஒப்பானை, சித்தனை, என் திரு முதுகுன்று உடையான் தன்னை, தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.
[3]
ஊன் கருவின் உள்-நின்ற சோதியானை, உத்தமனை, பத்தர் மனம் குடி கொண்டானை, கான் திரிந்து காண்டீபம் ஏந்தினானை, கார் மேகமிடற்றானை, கனலை, காற்றை, தான் தெரிந்து அங்கு அடியேனை ஆளாக்கொண்டு தன்னுடைய திருவடி என் தலை மேல் வைத்த தீம் கரும்பை, திரு முதுகுன்று உடையான் தன்னை, தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.
[4]
தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் ஆகி, தாமரை ஆர் நான்முகனும் தானே ஆகி, மிக்கது ஒரு தீவளி நீர் ஆகாசம்(ம்) ஆய், மேல் உலகுக்கு அப்பால் ஆய், இப்பாலானை; அக்கினொடு முத்தினையும் அணிந்து, தொண்டர்க்கு அங்கு அங்கே அறுசமயம் ஆகி நின்ற திக்கினை; என் திரு முதுகுன்று உடையான் தன்னை; தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.
[5]
புகழ் ஒளியை, புரம் எரித்த புனிதன் தன்னை, பொன் பொதிந்த மேனியனை, புராணன் தன்னை, விழவு ஒலியும் விண் ஒலியும் ஆனான் தன்னை, வெண்காடு மேவிய விகிர்தன் தன்னை, கழல் ஒலியும் கைவளையும் ஆர்ப்ப ஆர்ப்ப, கடைதோறும் இடு பிச்சைக்கு என்று செல்லும் திகழ் ஒளியை, திரு முதுகுன்று உடையான் தன்னை, தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.
துறவாதே யாக்கை துறந்தான் தன்னை, சோதி முழு முதல் ஆய் நின்றான் தன்னை, பிறவாதே எவ் உயிர்க்கும் தானே ஆகிப் பெண்ணினோடு ஆண் உரு ஆய் நின்றான் தன்னை, மறவாதே தன் திறமே வாழ்த்தும் தொண்டர் மனத்து அகத்தே அனவரதம் மன்னி நின்ற திறலானை, திரு முதுகுன்று உடையான் தன்னை, தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.
[8]
பொன் தூணை, புலால் நாறு கபாலம் ஏந்திப் புவலோகம் எல்லாம் உழி தந்தானை, முற்றாத வெண் திங்கள் கண்ணியானை, முழு முதல் ஆய் மூஉலகும் முடிவு ஒன்று இல்லாக் கல்-தூணை, காளத்தி மலையான் தன்னை, கருதாதார் புரம் மூன்றும் எரிய அம்பால் செற்றானை, திரு முதுகுன்று உடையான் தன்னை, தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.
[9]
இகழ்ந்தானை இருபது தோள் நெரிய ஊன்றி, எழுநரம்பின் இசை பாட இனிது கேட்டு, புகழ்ந்தானை; பூந்துருத்தி மேயான் தன்னை; புண்ணியனை; விண்ணவர்கள் நிதியம் தன்னை; மகிழ்ந்தானை, மலைமகள் ஓர்பாகம் வைத்து; வளர் மதியம் சடை வைத்து, மால் ஓர்பாகம் திகழ்ந்தானை; திரு முதுகுன்று உடையான் தன்னை; தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.069   ஆராத இன்னமுதை, அம்மான் தன்னை,
பண் - திருத்தாண்டகம் (திருப்பள்ளியின் முக்கூடல் முக்கோணவீசுவரர் மைமேவுங்கண்ணியம்மை)
ஆராத இன்னமுதை, அம்மான் தன்னை, அயனொடு மால் அறியாத ஆதியானை, தார் ஆரும் மலர்க்கொன்றைச் சடையான் தன்னை, சங்கரனை, தன் ஒப்பார் இல்லாதானை, நீரானை, காற்றானை, தீ ஆனானை, நீள் விசும்பு ஆய், ஆழ்கடல்கள் ஏழும் சூழ்ந்த பாரானை, பள்ளியின் முக்கூடலானை, பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே!.
[1]
விடையானை, விண்ணவர்கள் எண்ணத்தானை, வேதியனை, வெண்திங்கள் சூடும் சென்னிச் சடையானை, சாமம் போல் கண்டத்தானை, தத்துவனை, தன் ஒப்பார் இல்லாதானை, அடையாதார் மும்மதிலும் தீயில் மூழ்க அடு கணை கோத்து எய்தானை, அயில் கொள் சூலப்- படையானை, பள்ளியின் முக்கூடலானை, பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே!.
போர்த்தானை, ஆனையின் தோல்; புரங்கள் மூன்றும் பொடி ஆக எய்தானை; புனிதன் தன்னை; வார்(த்)த்தாங்கு வனமுலையாள் பாகன் தன்னை; மறிகடலுள் நஞ்சு உண்டு, வானோர் அச்சம் தீர்த்தானை; தென் திசைக்கே காமன் செல்ல, சிறிது அளவில் அவன் உடலம் பொடியா அங்கே பார்த்தானை; பள்ளியின் முக்கூடலானை; பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே!.
[4]
அடைந்தார் தம் பாவங்கள், அல்லல், நோய்கள், அருவினைகள், நல்குரவு, செல்லா வண்ணம் கடிந்தானை; கார்முகில் போல் கண்டத்தானை; கடுஞ் சினத்தோன் தன் உடலை நேமியாலே; தடிந்தானை; தன் ஒப்பார் இல்லாதானை; தத்துவனை; உத்தமனை; நினைவார் நெஞ்சில் படிந்தானை; பள்ளியின் முக்கூடலானை; பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே!.
[5]
கரந்தானை, செஞ்சடை மேல் கங்கை வெள்ளம்; கனல் ஆடு திருமேனி, கமலத்தோன் தன் சிரம் தாங்கு கையானை; தேவதேவை; திகழ் ஒளியை; தன் அடியே சிந்தை செய்வார் வருந்தாமைக் காப்பானை; மண் ஆய், விண் ஆய், மறிகடல் ஆய், மால் விசும்பு ஆய், மற்றும் ஆகி, பரந்தானை; பள்ளியின் முக்கூடலானை; பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே!.
[6]
நதி ஆரும் சடையானை, நல்லூரானை, நள்ளாற்றின் மேயானை, நல்லத்தானை, மது வாரும் பொழில் புடை சூழ் வாய்மூரானை, மறைக்காடு மேயானை, ஆக்கூரானை, நிதியாளன் தோழனை, நீடூரானை, நெய்த்தானம் மேயானை, ஆரூர் என்னும் பதியானை, பள்ளியின் முக்கூடலானை, பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே!.
[7]
நல்-தவனை; நால்மறைகள் ஆயினானை; நல்லானை; நணுகாதார் புரங்கள் மூன்றும் செற்றவனை; செஞ்சடை மேல்-திங்கள் சூடும், திரு ஆரூர்த் திரு மூலட்டானம் மேய, கொற்றவனை; கூர் அரவம் பூண்டான் தன்னை; குறைந்து அடைந்து தன் திறமே கொண்டாற்கு என்றும் பற்றவனை; பள்ளியின் முக்கூடலானை; பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே!.
[8]
ஊனவனை, உடலவனை, உயிர் ஆனானை, உலகு ஏழும் ஆனானை, உம்பர் கோவை, வானவனை, மதி சூடும் வளவியானை, மலைமகள் முன் வராகத்தின் பின்பே சென்ற கானவனை, கயிலாயமலை உளானை, கலந்து உருகி நைவார் தம் நெஞ்சினுள்ளே பானவனை, பள்ளியின் முக்கூடலானை, பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே!.
[9]
தடுத்தானைத் தான் முனிந்து தன் தோள் கொட்டித் தடவரையை இருபது தோள் தலையினாலும் எடுத்தானைத் தாள்விரலால் மாள ஊன்றி, எழு நரம்பின் இசை பாடல் இனிது கேட்டு, கொடுத்தானை, பேரோடும் கூர்வாள் தன்னை; குரை கழலால் கூற்றுவனை மாள, அன்று, படுத்தானை; பள்ளியின் முக்கூடலானை; பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே!.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.070   தில்லைச் சிற்றம்பலமும், செம்பொன்பள்ளி, தேவன்குடி,
பண் - தக்கேசி (பொது -க்ஷேத்திரக்கோவை )
தில்லைச் சிற்றம்பலமும், செம்பொன்பள்ளி, தேவன்குடி, சிராப்பள்ளி, தெங்கூர், கொல்லிக் குளிர் அறைப்பள்ளி, கோவல்-வீரட்டம், கோகரணம், கோடிகாவும், முல்லைப் புறவம் முருகன் பூண்டி, முழையூர், பழையாறை, சத்தி முற்றம், கல்லில்-திகழ் சீர் ஆர் காளத்தியும், கயிலாய நாதனையே காணல் ஆமே.
[1]
ஆரூர் மூலட்டானம், ஆனைக்காவும், ஆக்கூரில்-தான் தோன்றி மாடம், ஆவூர், பேரூர், பிரமபுரம், பேராவூரும், பெருந்துறை, காம்பீலி, பிடவூர், பேணும் கூர் ஆர் குறுக்கை வீரட்டான(ம்)மும், கோட்டூர், குடமூக்கு, கோழம்ப(ம்)மும், கார் ஆர் கழுக்குன்றும், கானப்பேரும், கயிலாய நாதனையே காணல் ஆமே.
நறையூரில் சித்தீச்சரம், நள்ளாறு, நாரையூர், நாகேச்சுரம், நல்லூர், நல்ல துறையூர், சோற்றுத்துறை, சூலமங்கை, தோணிபுரம், துருத்தி, சோமீச்சுரம், உறையூர், கடல் ஒற்றியூர், ஊற்றத்தூர், ஓமாம்புலியூர், ஓர் ஏடகத்தும், கறையூர், கருப்பறியல், கன்றாப்பூரும், கயிலாய நாதனையே காணல் ஆமே.
[10]
புலி வலம், புத்தூர், புகலூர், புன்கூர், புறம்பயம், பூவணம், பொய்கை நல்லூர், வலிவலம், மாற்பேறு, வாய்மூர், வைகல், வலஞ்சுழி, வாஞ்சியம், மருகல், வன்னி நிலம் மலி நெய்த்தானத்தோடு, எத்தானத்தும் நிலவு பெருங்கோயில், பல கண்டால், தொண்டீர்! கலி வலி மிக்கோனைக் கால்விரலால் செற்ற கயிலாய நாதனையே காணல் ஆமே.
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.071   பொருப்பள்ளி, வரை வில்லாப் புரம்
பண் - திருத்தாண்டகம் (பொது -அடைவுத் திருத்தாண்டகம் )
பொருப்பள்ளி, வரை வில்லாப் புரம் மூன்று எய்து, புலந்து அழிய, சலந்தரனைப் பிளந்தான், பொன் சக்- கரப்பள்ளி, திருக்காட்டுப்பள்ளி, கள் ஆர் கமழ் கொல்லி அறைப்பள்ளி, கலவம் சாரல் சிரப்பள்ளி, சிவப்பள்ளி, செம்பொன்பள்ளி, செழு நனிபள்ளி, தவப்பள்ளி, சீர் ஆர் பரப்பள்ளி, என்று என்று பகர்வோர் எல்லாம் பரலோகத்து இனிது ஆகப் பாலிப்பாரே.
[1]
காவிரியின் கரைக் கண்டிவீரட்டானம், கடவூர் வீரட்டானம், காமரு சீர் அதிகை மேவிய வீரட்டானம், வழுவை வீரட்டம், வியன் பறியல் வீரட்டம், விடை ஊர்திக்கு இடம் ஆம் கோவல் நகர் வீரட்டம், குறுக்கை வீரட்டம், கோத்திட்டைக் குடிவீரட்டானம், இவை கூறி நாவில் நவின்று உரைப்பார்க்கு நணுகச் சென்றால், நமன் தமரும், சிவன்தமர்! என்று அகல்வர், நன்கே.
[2]
நல் கொடி மேல் விடை உயர்த்த நம்பன் செம்பங்குடி, நல்லக்குடி, நளி நாட்டியத்தான் குடி, கற்குடி, தென்களக்குடி, செங்காட்டங்குடி, கருந்திட்டைக்குடி, கடையக்குடி, காணுங்கால் விற்குடி, வேள்விக்குடி, நல் வேட்டக்குடி, வேதிகுடி, மாணிகுடி, விடைவாய்க்குடி, புற்குடி, மாகுடி, தேவன்குடி, நீலக்குடி, புதுக்குடியும், போற்ற இடர் போகும் அன்றே.
பெருக்கு ஆறு சடைக்கு அணிந்த பெருமான் சேரும் பெருங்கோயில் எழுபதினோடு எட்டும், மற்றும் கரக்கோயில், கடிபொழில் சூழ் ஞாழற்கோயில், கருப்பறியல் பொருப்பு அனைய கொகுடிக்கோயில், இருக்கு ஓதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும் இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில், திருக்கோயில் சிவன் உறையும் கோயில் சூழ்ந்து, தாழ்ந்து, இறைஞ்ச, தீவினைகள் தீரும் அன்றே.
[5]
மலையார் தம் மகளொடு மாதேவன் சேரும் மறைக்காடு; வண்பொழில் சூழ் தலைச்சங்காடு; தலையாலங்காடு; தடங்கடல் சூழ் அம் தண் சாய்க்காடு; தெள்ளு புனல் கொள்ளிக்காடு; பலர் பாடும் பழையனூர் ஆலங்காடு; பனங்காடு; பாவையர்கள் பாவம் நீங்க, விலை ஆடும் வளை திளைக்க, குடையும் பொய்கை வெண்காடும்; அடைய வினை வேறு ஆம் அன்றே.
[6]
கடு வாயர் தமை நீக்கி என்னை ஆட்கொள் கண் நுதலோன் நண்ணும் இடம் அண்ணல் வாயில், நெடுவாயில், நிறை வயல் சூழ் நெய்தல் வாயில், நிகழ் முல்லை வாயிலொடு, ஞாழல் வாயில், மடு ஆர் தென் மதுரை நகர் ஆலவாயில், மறிகடல் சூழ் புனவாயில், மாடம் நீடு குடவாயில், குணவாயில், ஆன எல்லாம் புகுவாரைக் கொடுவினைகள் கூடா அன்றே.
[7]
நாடகம் ஆடி(இ)டம் நந்திகேச்சுரம், மா காளேச்சுரம், நாகேச்சுரம், நாகளேச்சுரம், நன்கு ஆன கோடீச்சுரம், கொண்டீச்சுரம், திண்டீச்சுரம், குக்குடேச்சுரம், அக்கீச்சுரம், கூறுங்கால் ஆடகேச்சுரம், அகத்தீச்சுரம், அயனீச்சுரம், அத்தீச்சுரம், சித்தீச்சுரம், அம் தண் கானல் ஈடு திரை இராமேச்சுரம், என்று என்று ஏத்தி இறைவன் உறை சுரம் பலவும் இயம்புவோமே.
[8]
கந்த மாதனம், கயிலைமலை, கேதாரம், காளத்தி, கழுக்குன்றம், கண் ஆர் அண்ணா, மந்தம் ஆம் பொழில் சாரல் வடபர்ப்பதம், மகேந்திர மா மலை நீலம், ஏமகூடம் விந்த மா மலை, வேதம், சையம், மிக்க வியன் பொதியில் மலை, மேரு, உதயம், அத்தம், இந்து சேகரன் உறையும் மலைகள் மற்றும் ஏத்துவோம், இடர் கெட நின்று ஏத்துவோமே.
[9]
நள்ளாறும், பழையாறும், கோட்டாற்றோடு, நலம் திகழும் நாலாறும், திரு ஐயாறும், தெள்ளாறும்; வளைகுளமும், தளிக்குளமும், நல் இடைக்குளமும், திருக்குளத்தோடு; அஞ்சைக்களம், விள்ளாத நெடுங்களம், வேட்களம்; நெல்லிக்கா, கோலக்கா, ஆனைக்கா, வியன் கோடி(க்)கா; கள் ஆர்ந்த கொன்றையான் நின்ற ஆறும், குளம், களம், கா, என அனைத்தும் கூறுவோமே.
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.072   அலை ஆர் புனல் கங்கை
பண் - திருத்தாண்டகம் (திருவலஞ்சுழி காப்பகத்தீசுவரர் மங்களநாயகியம்மை)
அலை ஆர் புனல் கங்கை நங்கை காண அம்பலத்தில் அருநட்டம் ஆடி, வேடம் தொலையாத வென்றியார், நின்றியூரும் நெடுங்களமும் மேவி, விடையை மேற்கொண்டு, இலை ஆர் படை கையில் ஏந்தி, எங்கும் இமையவரும் உமையவளும் இறைஞ்சி ஏத்த, மலை ஆர் திரள் அருவிப் பொன்னி சூழ்ந்த வலஞ்சுழியே புக்கு, இடமா மன்னினாரே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.073   கருமணி போல் கண்டத்து அழகன்
பண் - திருத்தாண்டகம் (திருவலஞ்சுழியும் திருக்கொட்டையூரும் கபர்த்தீசுவரர், சுந்தரகோடீசுவரர் பெரியநாயகியம்மை, பந்தாடுநாயகியம்மை)
கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய்; கல்லால் நிழல் கீழ் இருந்தான் கண்டாய்; பரு மணி மா நாகம் பூண்டான் கண்டாய்; பவளக்குன்று அன்ன பரமன் கண்டாய்; வரு மணி நீர்ப்பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்; மாதேவன் கண்டாய்; வரதன் கண்டாய் குருமணி போல் அழகு அமரும் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.
[1]
கலைக் கன்று தங்கு கரத்தான் கண்டாய்; கலை பயில்வோர் ஞானக்கண் ஆனான் கண்டாய்; அலைக் கங்கை செஞ்சடை மேல் ஏற்றான கண்டாய்; அண்ட கபாலத்து அப்பாலான் கண்டாய்; மலைப் பண்டம் கொண்டு வரும் நீர்ப் பொன்னி வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய் குலைத் தெங்கு அம்சோலை சூழ் கொட்டையூரில் கோடிச்சுரத்து உறையும் கோமான் தானே.
[2]
செந்தாமரைப் போது அணிந்தான் கண்டாய்; சிவன் கண்டாய்; தேவர் பெருமான் கண்டாய்; பந்து ஆடு மெல் விரலாள் பாகன் கண்டாய்; பாலோடு, நெய், தயிர், தேன், ஆடி கண்டாய்; மந்தாரம் உந்தி வரும் நீர்ப்பொன்னி வலஞ்சுழியில் மன்னும் மணாளன் கண்டாய் கொந்து ஆர் பொழில் புடை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.
[3]
பொடி ஆடும் மேனிப் புனிதன் கண்டாய்; புள் பாகற்கு ஆழி கொடுத்தான் கண்டாய்; இடி ஆர் கடு முழக்கு ஏறு ஊர்ந்தான் கண்டாய்; எண் திசைக்கும் விளக்கு ஆகி நின்றான் கண்டாய்; மடல் ஆர் திரை புரளும் காவிரீ வாய் வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய் கொடி ஆடு நெடு மாடக் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.
[4]
அக்கு, அரவம், அரைக்கு அசைத்த அம்மான் கண்டாய்; அருமறைகள் ஆறு அங்கம் ஆனான் கண்டாய்; தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் கண்டாய்; சதாசிவன் காண்; சலந்தரனைப் பிளந்தான் கண்டாய்; மைக் கொள் மயில்-தழை கொண்டு வரும் நீர்ப்பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்; மழுவன் கண்டாய் கொக்கு அமரும் வயல் புடை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.
[5]
சண்டனை நல் அண்டர் தொழச் செய்தான் கண்டாய்; சதாசிவன் கண்டாய்; சங்கரன் தான் கண்டாய்; தொண்டர் பலர் தொழுது ஏத்தும் கழலான் கண்டாய்; சுடர் ஒளி ஆய்த் தொடர்வு அரிது ஆய் நின்றான் கண்டாய்; மண்டு புனல் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்; மா முனிவர் தம்முடைய மருந்து கண்டாய் கொண்டல் தவழ் கொடி மாடக் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.
[6]
அணவு அரியான் கண்டாய்; அமலன் கண்டாய்; அவி நாசி கண்டாய்; அண்டத்தான் கண்டாய்; பண மணி மா நாகம் உடையான் கண்டாய்; பண்டரங்கன் கண்டாய்; பகவன் கண்டாய்; மணல் வரும் நீர்ப்பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்; மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய் குணம் உடை நல் அடியார் வாழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.
[7]
விரை கமழும் மலர்க் கொன்றைத் தாரான் கண்டாய்; வேதங்கள் தொழ நின்ற நாதன் கண்டாய்; அரை அதனில் புள்ளி அதள் உடையான் கண்டாய்; அழல் ஆடி கண்டாய்; அழகன் கண்டாய்; வரு திரை நீர்ப்பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்; வஞ்ச மனத்தவர்க்கு அரிய மைந்தன் கண்டாய் குரவு அமரும் பொழில் புடை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.
[8]
தளம் கிளரும் தாமரை ஆதனத்தான் கண்டாய்; தசரதன் தன் மகன் அசைவு தவிர்த்தான் கண்டாய்; இளம்பிறையும் முதிர் சடை மேல் வைத்தான் கண்டாய்; எட்டு-எட்டு இருங் கலையும் ஆனான் கண்டாய்; வளம் கிளர் நீர்ப்பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்; மா முனிகள் தொழுது எழு பொன் கழலான் கண்டாய் குளம் குளிர் செங்குவளை கிளர் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.
[9]
விண்டார் புரம் மூன்று எரித்தான் கண்டாய்; விலங்கலில் வல் அரக்கன் உடல் அடர்த்தான் கண்டாய்; தண் தாமரையானும், மாலும், தேடத் தழல் பிழம்பு ஆய் நீண்ட கழலான் கண்டாய்; வண்டு ஆர் பூஞ்சோலை வலஞ்சுழியான் கண்டாய்; மாதேவன் கண்டாய் மறையோடு அங்கம் கொண்டாடு வேதியர் வாழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.074   சொல்லானை, பொருளானை, சுருதியானை, சுடர்
பண் - திருத்தாண்டகம் (திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)
சொல்லானை, பொருளானை, சுருதியானை, சுடர் ஆழி நெடுமாலுக்கு அருள் செய்தானை, அல்லானை, பகலானை, அரியான் தன்னை, அடியார்கட்கு எளியானை, அரண் மூன்று எய்த வில்லானை, சரம் விசயற்கு அருள் செய்தானை, வெங்கதிரோன் மா முனிவர் விரும்பி ஏத்தும் நல்லானை, தீ ஆடும் நம்பன் தன்னை, நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே.
[1]
பஞ்சுண்ட மெல் அடியாள் பங்கன் தன்னை; பாரொடு, நீர், சுடர், படர் காற்று, ஆயினானை; மஞ்சுண்ட வான் ஆகி, வானம் தன்னில் மதி ஆகி, மதி சடை மேல் வைத்தான் தன்னை; நெஞ்சுண்டு என் நினைவு ஆகி நின்றான் தன்னை; நெடுங்கடலைக் கடைந்தவர் போய் நீங்க, ஓங்கும் நஞ்சு உண்டு, தேவர்களுக்கு அமுது ஈந்தானை; நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே.
[2]
மூவாது யாவர்க்கும் மூத்தான் தன்னை, முடியாதே முதல் நடுவு முடிவு ஆனானை, தேவாதி தேவர்கட்கும் தேவன் தன்னை, திசைமுகன் தன் சிரம் ஒன்று சிதைத்தான் தன்னை, ஆ வாத அடல் ஏறு ஒன்று உடையான் தன்னை, அடியேற்கு நினைதோறும் அண்ணிக்கின்ற நாவானை, நாவினில் நல் உரை ஆனானை, நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே.
[3]
செம்பொன்னை, நன் பவளம் திகழும் முத்தை, செழுமணியை, தொழுமவர் தம் சித்தத்தானை, வம்பு அவிழும் மலர்க்கணை வேள் உலக்க நோக்கி மகிழ்ந்தானை, மதில் கச்சி மன்னுகின்ற கம்பனை, எம் கயிலாய மலையான் தன்னை, கழுகினொடு காகுத்தன் கருதி ஏத்தும் நம்பனை, எம்பெருமானை, நாதன் தன்னை, நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே.
[4]
புரை உடைய கரி உரிவைப் போர்வையானை, புரிசடை மேல் புனல் அடைத்த புனிதன் தன்னை, விரை உடைய வெள் எருக்கு அம் கண்ணியானை, வெண்நீறு செம்மேனி விரவினானை, வரை உடைய மகள் தவம் செய் மணாளன் தன்னை, வரு பிணிநோய் பிரிவிக்கும் மருந்து தன்னை, நரை விடை நல் கொடி உடைய நாதன் தன்னை, நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே.
தக்கனது வேள்வி கெடச் சாடினானை, தலை கலனாப் பலி ஏற்ற தலைவன் தன்னை, கொக்கரை சச்சரி வீணைப் பாணியானை, கோள் நாகம் பூண் ஆகக் கொண்டான் தன்னை, அக்கினொடும் என்பு அணிந்த அழகன் தன்னை, அறுமுகனோடு ஆனை முகற்கு அப்பன் தன்னை, நக்கனை, வக்கரையானை, நள்ளாற்றானை, நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே.
[7]
அரிபிரமர் தொழுது ஏத்தும் அத்தன் தன்னை, அந்தகனுக்கு அந்தகனை, அளக்கல் ஆகா எரி புரியும் இலிங்கபுராணத்து உளானை, எண் ஆகிப் பண் ஆர் எழுத்து ஆனானை, திரிபுரம் செற்று ஒருமூவர்க்கு அருள் செய்தானை, சிலந்திக்கும் அரசு அளித்த செல்வன் தன்னை, நரி விரவு காட்டு அகத்தில் ஆடலானை, நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே.
[8]
ஆலாலம் மிடற்று அணியா அடக்கினானை; ஆல் அதன் கீழ் அறம் நால்வர்க்கு அருள்செய்தானை; பால் ஆகி, தேன் ஆகி, பழமும் ஆகி, பைங்கரும்பு ஆய், அங்கு அருந்தும் சுவை ஆனானை, மேல் ஆய வேதியர்க்கு வேள்வி ஆகி, வேள்வியினின் பயன் ஆய விமலன் தன்னை; நால் ஆய மறைக்கு இறைவன் ஆயினானை; நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே.
[9]
மீளாத ஆள் என்னை உடையான் தன்னை, வெளி செய்த வழிபாடு மேவினானை, மாளாமை மறையவனுக்கு உயிரும் வைத்து வன்கூற்றின் உயிர் மாள உதைத்தான் தன்னை, தோள் ஆண்மை கருதி வரை எடுத்த தூர்த்தன் தோள்வலியும் தாள்வலியும் தொலைவித்து ஆங்கே நாளோடு வாள் கொடுத்த நம்பன் தன்னை, நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.075   சொல் மலிந்த மறைநான்கு ஆறு
பண் - திருத்தாண்டகம் (திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் மடந்தைபாகேசுவரர் பெரியநாயகியம்மை)
சொல் மலிந்த மறைநான்கு ஆறு அங்கம் ஆகிச் சொல் பொருளும் கடந்த சுடர்ச் சோதி போலும்; கல் மலிந்த கயிலை மலைவாணர் போலும்; கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டர் போலும்; மல் மலிந்த மணி வரைத்திண் தோளர் போலும்; மலை அரையன் மடப்பாவை மணாளர் போலும்; கொன் மலிந்த மூ இலைவேல் குழகர் போலும் குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே.
[1]
கான் நல் இளங் கலி மறவன் ஆகி, பார்த்தன் கருத்து அளவு செருத் தொகுதி கண்டார் போலும்; ஆன் நல் இளங் கடு விடை ஒன்று ஏறி, அண்டத்து அப்பாலும் பலி திரியும் அழகர் போலும் தேன் நல் இளந் துவலை மலி தென்றல் முன்றில் செழும் பொழில் பூம்பாளை விரி தேறல் நாறும், கூனல் இளம்பிறை தடவு கொடி கொள், மாடக் குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே.
[2]
நீறு அலைத்த திரு உருவும், நெற்றிக் கண்ணும், நிலா அலைத்த பாம்பினொடு, நிறை நீர்க்கங்கை- ஆறு அலைத்த சடைமுடியும், அம் பொன்தாளும், அடியவர்க்குக் காட்டி அருள் புரிவார் போலும்; ஏறு அலைத்த நிமிர் கொடி ஒன்று உடையர் போலும்; ஏழ் உலகும் தொழு கழல் எம் ஈசர் போலும்; கூறு அலைத்த மலை மடந்தை கொழுநர் போலும் குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே.
[3]
தக்கனது பெரு வேள்வி தகர்த்தார் போலும்; சந்திரனைக் கலை கவர்ந்து தரித்தார் போலும்; செக்கர் ஒளி, பவள ஒளி, மின்னின் சோதி, செழுஞ் சுடர்த்தீ, ஞாயிறு, எனச் செய்யர் போலும் மிக்க திறல் மறையவரால் விளங்கு வேள்வி மிகு புகை போய் விண் பொழிய, கழனி எல்லாம் கொக்கு இனிய கனி சிதறித் தேறல் பாயும் குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே.
[4]
காலன் வலி தொலைத்த கழல் காலர் போலும்; காமன் எழில் அழல் விழுங்கக் கண்டார் போலும்; ஆல் அதனில் அறம் நால்வர்க்கு அளித்தார் போலும்; ஆணொடு பெண் அலி அல்லர், ஆனார், போலும்; நீல உரு, வயிர நிரை, பச்சை, செம்பொன், நெடும் பளிங்கு, என்று அறிவு அரிய நிறத்தார் போலும் கோல மணி கொழித்து இழியும் பொன்னி நன்நீர்க் குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே.
[5]
முடி கொண்ட வளர்மதியும், மூன்று ஆய்த் தோன்றும் முளைஞாயிறு அன்ன மலர்க்கண்கள் மூன்றும், அடி கொண்ட சிலம்பு ஒலியும், அருள் ஆர் சோதி அணி முறுவல் செவ்வாயும், அழகு ஆய்த் தோன்ற; துடி கொண்ட இடை மடவாள் பாகம் கொண்டு; சுடர்ச் சோதிக்கடல் செம்பொன் மலை போல், இந் நாள் குடி கொண்டு என் மனத்து அகத்தே புகுந்தார் போலும் குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே.
[6]
கார் இலங்கு திரு உருவத்தவற்கும், மற்றைக் கமலத்தில் காரணற்கும், காட்சி ஒண்ணாச் சீர் இலங்கு தழல்பிழம்பின் சிவந்தார் போலும்; சிலை வளைவித்து அவுணர் புரம் சிதைத்தார் போலும்; பார், இலங்கு புனல், அனல், கால், பரமாகாசம், பருதி, மதி, சுருதியும் ஆய், பரந்தார் போலும்; கூர் இலங்கு வேல் குமரன் தாதை போலும் குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே.
[7]
பூச் சூழ்ந்த பொழில் தழுவு புகலூர் உள்ளார்; புறம் பயத்தார்; அறம் புரி பூந்துருத்தி புக்கு, மாச் சூழ்ந்த பழனத்தார்; நெய்த்தானத்தார்; மா தவத்து வளர் சோற்றுத்துறையார்; நல்ல தீச் சூழ்ந்த திகிரி திருமாலுக்கு ஈந்து, திரு ஆனைக்காவில் ஓர் சிலந்திக்கு அந் நாள் கோச் சோழர் குலத்து அரசு கொடுத்தார் போலும் குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே.
[8]
பொங்கு அரவர்; புலித்தோலர்; புராணர்; மார்பில் பொறி கிளர் வெண்பூண நூல் புனிதர் போலும்; சங்கு அரவக் கடல் முகடு தட்டவிட்டு, சதுர நடம் ஆட்டு உகந்த சைவர் போலும்; அங்கு அரவத் திருவடிக்கு ஆட்பிழைப்ப, தந்தை- அந்தணனை அற எறிந்தார்க்கு, அருள் அப்போதே கொங்கு அரவச் சடைக் கொன்றை கொடுத்தார் போலும் குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே.
[9]
ஏவி, இடர்க்கடல் இடைப் பட்டு இளைக்கின்றேனை இப் பிறவி அறுத்து ஏற வாங்கி, ஆங்கே கூவி, அமருலகு அனைத்தும் உருவிப் போக, குறியில் அறுகுணத்து ஆண்டு கொண்டார் போலும் தாவி முதல் காவிரி, நல் யமுனை, கங்கை, சரசுவதி, பொற்றாமரைப் புட்கரணி, தெண்நீர்க் கோவியொடு, குமரி வரு தீர்த்தம் சூழ்ந்த குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே.
[10]
செறி கொண்ட சிந்தை தனுள் தெளிந்து தேறித் தித்திக்கும் சிவபுவனத்து அமுதம் போலும்; நெறி கொண்ட குழலி உமை பாகம் ஆக, நிறைந்து அமரர் கணம் வணங்க நின்றார் போலும்; மறி கொண்ட கரதலத்து எம் மைந்தர் போலும்; மதில் இலங்கைக் கோன் மலங்க, வரைக்கீழ் இட்டு, குறி கொண்ட இன் இசை கேட்டு, உகந்தார் போலும் குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே.
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.076   புரிந்து அமரர் தொழுது ஏத்தும்
பண் - திருத்தாண்டகம் (திருப்புத்தூர் புத்தூரீசர் சிவகாமியம்மை)
புரிந்து அமரர் தொழுது ஏத்தும் புகழ் தக்கோன் காண், போர் விடையின் பாகன் காண், புவனம் ஏழும் விரிந்து பல உயிர் ஆகி விளங்கினான் காண், விரைக் கொன்றைக் கண்ணியன் காண், வேதம் நான்கும் தெரிந்து முதல் படைத்தோனைச் சிரம் கொண்டோன் காண், தீர்த்தன் காண், திருமால் ஓர் பங்கத்தான் காண் திருந்து வயல் புடை தழுவு திருப் புத்தூரில்-திருத் தளியான் காண்; அவன் என் சிந்தையானே.
[1]
வார் ஆரும் முலை மங்கை பங்கத்தான் காண்; மாமறைகள் ஆயவன் காண்; மண்ணும், விண்ணும், கூர் ஆர் வெந்தழலவனும், காற்றும், நீரும், குலவரையும், ஆயவன் காண்; கொடு நஞ்சு உண்ட கார் ஆரும் கண்டன் காண்; எண்தோளன் காண், கயிலை மலைப்-பொருப்பன் காண் விருப்போடு என்றும் தேர் ஆரும் நெடுவீதித் திருப் புத்தூரில்-திருத் தளியான் காண்; அவன் என் சிந்தையானே.
[2]
மின் காட்டும் கொடி மருங்குல் உமையாட்கு என்றும் விருப்பவன் காண், பொருப்பு வலிச் சிலைக் கையோன் காண், நன் பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி நல் கனகக்கிழி தருமிக்கு அருளினோன் காண் பொன் காட்டக் கடிக்கொன்றை, மருங்கே நின்ற புனக் காந்தள் கை காட்ட, கண்டு வண்டு தென் காட்டும் செழும் புறவின்திருப் புத்தூரில்- திருத் தளியான் காண்; அவன் என் சிந்தையானே.
[3]
ஏடு ஏறு மலர்க்கமலத்து அயனும், மாலும், இந்திரனும், பணிந்து ஏத்த இருக்கின்றான் காண்; தோடு ஏறும் மலர்க்கடுக்கை, வன்னி, மத்தம், துன்னிய செஞ்சடையான் காண்; துகள் தீர் சங்கம் மாடு ஏறி முத்து ஈனும் கானல் வேலி மறைக்காட்டு - மாமணி காண் வளம் கொள் மேதி சேடு ஏறி மடுப் படியும் திருப் புத்தூரில்-திருத் தளியான் காண்; அவன் என் சிந்தையானே.
[4]
கரு மருவு வல்வினை நோய் காற்றினான் காண், கா மரு பூங் கச்சி ஏகம்பத்தான் காண், பெரு மருவு பேர் உலகில் பிணிகள் தீர்க்கும் பெரும்பற்றத் தண்புலியூர் மன்று ஆடீ காண், தரு மருவு கொடைத் தடக்கை அளகைக்கோன் தன் சங்காத்தி, ஆரூரில்-தனி யானை காண் திரு மருவு பொழில் புடை சூழ் திருப் புத்தூரில்- திருத் தளியான் காண்; அவன் என் சிந்தையானே.
[5]
காம்பு ஆடு தோள் உமையாள் காண, நட்டம் கலந்து ஆடல் புரிந்தவன் காண்; கையில் வெய்ய பாம்பு ஆட, படுதலையில் பலி கொள்வோன் காண்; பவளத்தின் பருவரை போல் படி மத்தான் காண்; தாம்பு ஆடு சின விடையே பகடாக் கொண்ட சங்கரன் காண்; பொங்கு அரவக்கச்சையோன் காண் சேம்பு ஆடு வயல் புடை சூழ் திருப் புத்தூரில்- திருத் தளியான் காண்; அவன் என் சிந்தையானே.
[6]
வெறி விரவு மலர்க்கொன்றை, விளங்கு திங்கள், வன்னியொடு, விரிசடை மேல் மிலைச்சினான் காண்; பொறி விரவு கதம் நாகம், அக்கினோடு பூண்டவன் காண்; பொரு புலித்தோல் ஆடையான் காண்; அறிவு அரிய நுண்பொருள்கள் ஆயினான் காண்; ஆயிரம் பேர் உடையவன் காண் அம் தண் கானல் செறி பொழில் சூழ் மணி மாடத் திருப் புத்ரில்- திருத் தளியான் காண்; அவன் என் சிந்தையானே.
[7]
புக்கு அடைந்த வேதியற்கு ஆய்க் காலற் காய்ந்த புண்ணியன் காண்; வெண் நகை வெள்வளையாள் அஞ்ச, மிக்கு எதிர்ந்த கரி வெருவ, உரித்த கோன் காண்; வெண்மதியைக் கலை சேர்த்த திண்மையோன் காண்; அக்கு அரும்பு பெரும் புன்னை நெருங்கு சோலை ஆரூருக்கு அதிபதி காண் அம் தண் தென்றல் திக்கு அணைந்து வரு மருங்கில்-திருப் புத்தூரில்- திருத் தளியான் காண்; அவன் என் சிந்தையானே.
[8]
பற்றவன் காண், ஏனோர்க்கும் வானோருக்கும்; பராபரன் காண்; தக்கன் தன் வேள்வி செற்ற கொற்றவன் காண்; கொடுஞ்சினத்தை அடங்கச் செற்று, ஞானத்தை மேல் மிகுத்தல் கோளாக் கொண்ட பெற்றியன் காண்; பிறங்கு அருவிக் கழுக்குன்றத்து எம் பிஞ்ஞகன் காண்; பேர் எழில் ஆர் காமவேளைச் செற்றவன் காண் சீர் மருவு திருப் புத்தூரில்-திருத் தளியான் காண்; அவன் என் சிந்தையானே.
[9]
உரம் மதித்த சலந்தரன் தன் ஆகம் கீண்ட ஓர் ஆழி படைத்தவன் காண், உலகு சூழும் வரம் மதித்த கதிரவனைப் பல் கொண்டான் காண், வானவர்கோன் புயம் நெரித்த வல்லாளன் காண், அர மதித்துச் செம்பொன்னின் ஆரம் பூணா அணிந்தவன் காண், அலைகடல் சூழ் இலங்கை வேந்தன் சிரம் நெரித்த சேவடி காண் திருப் புத்தூரில்-திருத் தளியான் காண்; அவன் என் சிந்தையானே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.077   பாட அடியார், பரவக் கண்டேன்;
பண் - திருத்தாண்டகம் (திருவாய்மூர் வாய்மூரீசுவரர் பாலினுநன்மொழியம்மை)
பாட அடியார், பரவக் கண்டேன்; பத்தர் கணம் கண்டேன்; மொய்த்த பூதம் ஆடல் முழவம் அதிரக் கண்டேன்; அங்கை அனல் கண்டேன்; கங்கையாளைக் கோடல், அரவு, ஆர் சடையில் கண்டேன்; கொக்கின் இதழ் கண்டேன்; கொன்றை கண்டேன்; வாடல்-தலை ஒன்று கையில் கண்டேன்-வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!.
[1]
பாலின் மொழியாள் ஓர் பாகம் கண்டேன்; பதினெண்கணமும் பயிலக் கண்டேன்; நீல நிறமுண்ட கண்டம் கண்டேன்; நெற்றி-நுதல் கண்டேன்; பெற்றம் கண்டேன்; காலைக் கதிர் செய் மதியம் கண்டேன்; கரந்தை திருமுடிமேல்-தோன்றக் கண்டேன்; மாலைச் சடையும் முடியும் கண்டேன்-வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!.
[2]
மண்ணைத் திகழ நடம் அது ஆடும், வரை சிலம்பு ஆர்க்கின்ற, பாதம் கண்டேன்; விண்ணில்-திகழும் முடியும் கண்டேன்; வேடம் பல ஆம் சரிதை கண்டேன்; நண்ணிப் பிரியா மழுவும் கண்டேன்; நாலுமறை அங்கம் ஓதக் கண்டேன்; வண்ணம் பொலிந்து-இலங்கு கோலம் கண்டேன்- வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!.
[3]
விளைத்த பெரும் பத்தி கூர, நின்று மெய் அடியார் தம்மை விரும்பக் கண்டேன்; இளைக்கும் கதம் நாகம் மேனி கண்டேன்; என் பின்கலம் திகழ்ந்து தோன்றக் கண்டேன்; திளைக்கும் திருமார்பில் நீறு கண்டேன்; சேண் ஆர் மதில் மூன்றும் பொன்ற, அன்று, வளைத்த வரிசிலையும் கையில் கண்டேன்- வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!.
[4]
கான் மறையும் போதகத்தின் உரிவை கண்டேன்; காலில் கழல் கண்டேன்; கரியின் தோல் கொண்டு ஊன் மறையப் போர்த்த வடிவும் கண்டேன்; உள்க மனம்வைத்த உணர்வும் கண்டேன்; நால் மறையானோடு நெடிய மாலும் நண்ணி வரக் கண்டேன்; திண்ணம் ஆக மான்மறி தம் கையில் மருவக் கண்டேன்- வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!.
[5]
அடி ஆர் சிலம்பு ஒலிகள் ஆர்ப்பக் கண்டேன்; அவ் அவர்க்கே ஈந்த கருணை கண்டேன்; முடி ஆர் சடைமேல் அரவம் மூழ்க மூரிப் பிறை போய் மறையக் கண்டேன்; கொடி, ஆர், அதன்மேல் இடபம் கண்டேன்; கோவணமும் கீளும் குலாவக் கண்டேன்; வடி ஆரும் மூ இலை வேல் கையில் கண்டேன்- வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!.
[6]
குழை ஆர் திருத்தோடு காதில் கண்டேன்; கொக்கரையும் சச்சரியும் கொள்கை கண்டேன்; இழை ஆர் புரி நூல் வலத்தே கண்டேன்; ஏழ் இசை யாழ், வீணை, முரலக் கண்டேன்; தழை ஆர் சடை கண்டேன்; தன்மை கண்டேன்; தக்கையொடு தாளம் கறங்கக் கண்டேன்; மழை ஆர் திருமிடறும் மற்றும் கண்டேன்- வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!.
[7]
பொருந்தாத செய்கை பொலியக் கண்டேன்; போற்று இசைத்து விண்ணோர் புகழக் கண்டேன்; பரிந்தார்க்கு அருளும் பரிசும் கண்டேன்; பார் ஆகிப் புனல் ஆகி நிற்கை கண்டேன்; விருந்து ஆய்ப் பரந்த தொகுதி கண்டேன்; மெல்லியலும் விநாயகனும் தோன்றக் கண்டேன்; மருந்து ஆய்ப் பிணி தீர்க்கும் ஆறு கண்டேன்- வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!.
[8]
மெய் அன்பர் ஆனார்க்கு அருளும் கண்டேன்; வேடுவனாய் நின்ற நிலையும் கண்டேன்; கை அம்பு அரண் எரித்த காட்சி கண்டேன்; கங்கணமும், அங்கைக் கனலும், கண்டேன்; ஐயம் பல ஊர் திரியக் கண்டேன்; அன்றவன் தன் வேள்வி அழித்து உகந்து, வையம் பரவ இருத்தல் கண்டேன்-வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!.
[9]
கலங்க இருவர்க்கு அழல் ஆய் நீண்ட காரணமும் கண்டேன்; கரு ஆய் நின்று, பலங்கள் தரித்து, உகந்த பண்பும் கண்டேன்; பாடல் ஒலி எலாம் கூடக் கண்டேன்; இலங்கைத் தலைவன் சிரங்கள் பத்தும் இறுத்து, அவனுக்கு ஈந்த பெருமை கண்டேன்; வலங்கைத் தலத்துள் அனலும் கண்டேன்- வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.078   ஒன்றா உலகு அனைத்தும் ஆனார்
பண் - திருத்தாண்டகம் (திருவாலங்காடு (பழையனூர்) ஊர்த்ததாண்டவேசுவரர் வண்டார்குழலியம்மை)
ஒன்றா உலகு அனைத்தும் ஆனார் தாமே; ஊழி தோறு ஊழி உயர்ந்தார் தாமே; நின்று ஆகி எங்கும் நிமிர்ந்தார் தாமே; நீர், வளி, தீ, ஆகாசம், ஆனார் தாமே; கொன்று ஆரும் கூற்றை உதைத்தார் தாமே; கோலப் பழனை உடையார் தாமே; சென்று ஆடு தீர்த்தங்கள் ஆனார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.
[1]
மலைமகளைப் பாகம் அமர்ந்தார் தாமே; வானோர் வணங்கப்படுவார் தாமே; சலமகளைச் செஞ்சடைமேல் வைத்தார் தாமே; சரண் என்று இருப்பார்கட்கு அன்பர் தாமே; பலபலவும் வேடங்கள் ஆனார் தாமே; பழனை பதியா உடையார் தாமே; சிலை மலையா மூஎயிலும் அட்டார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.
[2]
ஆ உற்ற ஐந்தும் உகந்தார் தாமே; அளவு இல் பெருமை உடையார் தாமே; பூ உற்ற நாற்றம் ஆய் நின்றார் தாமே; புனிதப் பொருள் ஆகி நின்றார் தாமே; பா உற்ற பாடல் உகப்பார் தாமே; பழனை பதியா உடையார் தாமே; தே உற்று அடி பரவ நின்றார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.
[3]
நாறு பூங்கொன்றை முடியார் தாமே; நால்மறையோடு ஆறு அங்கம் சொன்னார் தாமே; மாறு இலா மேனி உடையார் தாமே; மா மதியம் செஞ்சடைமேல் வைத்தார் தாமே; பாறினார் வெண்தலையில் உண்டார் தாமே; பழனை பதியா உடையார் தாமே; தேறினார் சித்தத்து இருந்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.
[4]
அல்லும் பகலும் ஆய் நின்றார் தாமே; அந்தியும் சந்தியும் ஆனார் தாமே; சொல்லும் பொருள் எலாம் ஆனார் தாமே; தோத்திரமும் சாத்திரமும் ஆனார் தாமே; பல் உரைக்கும் பா எலாம் ஆனார் தாமே; பழனை பதியா உடையார் தாமே; செல்லும் நெறி காட்ட வல்லார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.
[5]
தொண்டு ஆய்ப் பணிவார்க்கு அணியார் தாமே; தூ நீறு அணியும் சுவண்டர் தாமே; தண் தாமரையானும் மாலும் தேட, தழல் உரு ஆய் ஓங்கி, நிமிர்ந்தார் தாமே; பண் தான் இசை பாட நின்றார் தாமே; பழனை பதியா உடையார் தாமே; திண்தோள்கள் எட்டும் உடையார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.
[6]
மை ஆரும் கண்டம்-மிடற்றார் தாமே; மயானத்தில் ஆடல் மகிழ்ந்தார் தாமே; ஐயாறும், ஆரூரும், ஆனைக்காவும், அம்பலமும், கோயிலாக் கொண்டார் தாமே; பை ஆடு அரவம் அசைத்தார் தாமே; பழனை பதியா உடையார் தாமே; செய்யாள் வழிபட நின்றார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.
[7]
விண் முழுதும் மண் முழுதும் ஆனார் தாமே; மிக்கோர்கள் ஏத்தும் குணத்தார் தாமே; கண் விழியாக் காமனையும் காய்ந்தார் தாமே; காலங்கள், ஊழி, கடந்தார் தாமே; பண் இயலும் பாடல் உகப்பார் தாமே; பழனை பதியா உடையார் தாமே; திண் மழுவாள் ஏந்து கரத்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.
[8]
கார் ஆர் கடல் நஞ்சை உண்டார் தாமே; கயிலை மலையை உடையார் தாமே; ஊர் ஆக ஏகம்பம் உகந்தார் தாமே; ஒற்றியூர் பற்றி இருந்தார் தாமே; பாரார் புகழப்படுவார் தாமே; பழனை பதியா உடையார் தாமே; தீராத வல்வினை நோய் தீர்ப்பார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.
[9]
மாலைப் பிறை சென்னி வைத்தார் தாமே; வண் கயிலை மா மலையை வந்தியாத, நீலக் கடல் சூழ், இலங்கைக் கோனை நெரிய விரலால் அடர்த்தார் தாமே; பால் ஒத்த மேனி நிறத்தார் தாமே; பழனை பதியா உடையார் தாமே; சீலத்தார் ஏத்தும் திறத்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.079   தொண்டர்க்குத் தூநெறி ஆய் நின்றான்
பண் - திருத்தாண்டகம் (திருத்தலையாலங்காடு ஆடவல்லவீசுவரர் திருமடந்தையம்மை)
தொண்டர்க்குத் தூநெறி ஆய் நின்றான் தன்னை, சூழ் நரகில் வீழாமே காப்பான் தன்னை, அண்டத்துக்கு அப்பாலைக்கு அப்பாலானை, ஆதிரை நாள் ஆதரித்த அம்மான் தன்னை, முண்டத்தின் முளைத்து எழுந்த தீ ஆனானை, மூ உருவத்து ஓர் உரு ஆய் முதல் ஆய் நின்ற தண்டத்தில்-தலையாலங்காடன் தன்னை, சாராதே சால நாள் போக்கினேனே!.
[1]
அக்கு இருந்த அரையானை, அம்மான் தன்னை, அவுணர் புரம் ஒரு நொடியில் எரி செய்தானை, கொக்கு இருந்த மகுடத்து எம் கூத்தன் தன்னை, குண்டலம் சேர் காதானை, குழைவார் சிந்தை புக்கு இருந்து போகாத புனிதன் தன்னை, புண்ணியனை, எண்ண(அ)ரும் சீர்ப் போகம் எல்லாம் தக்கு இருந்த தலையாலங்காடன் தன்னை, சாராதே சால நாள் போக்கினேனே!.
சிவன் ஆகி, திசைமுகனாய், திருமால் ஆகி, செழுஞ் சுடர் ஆய், தீ ஆகி, நீரும் ஆகி, புவன் ஆகி, புவனங்கள் அனைத்தும் ஆகி, பொன் ஆகி, மணி ஆகி, முத்தும் ஆகி, பவன் ஆகி, பவனங்கள் அனைத்தும் ஆகி, பசு ஏறி, திரிவான் ஓர் பவனாய், நின்ற தவன் ஆய தலையாலங்காடன் தன்னை சாராதே சால நாள் போக்கினேனே!.
[4]
கங்கை எனும் கடும் புனலைக் கரந்தான் தன்னை, கா மரு பூம்பொழில் கச்சிக் கம்பன் தன்னை, அம் கையினில் மான் மறி ஒன்று ஏந்தினானை, ஐயாறு மேயானை, ஆரூரானை, பங்கம் இலா அடியார்க்குப் பரிந்தான் தன்னை, பரிதிநியமத்தானை, பாசூரானை, சங்கரனை, தலையாலங்காடன் தன்னை, சாராதே சால நாள் போக்கினேனே!.
[5]
விடம் திகழும் அரவு அரை மேல் வீக்கினானை, விண்ணவர்க்கும் எண்ண(அ)ரிய அளவினானை, அடைந்தவரை அமருலகம் ஆள்விப்பானை, அம்பொன்னை, கம்ப மா களிறு அட்டானை, மடந்தை ஒருபாகனை, மகுடம் தன்மேல் வார்புனலும் வாள் அரவும் மதியும் வைத்த தடங்கடலை, தலையாலங்காடன் தன்னை, சாராதே சால நாள் போக்கினேனே!.
[6]
விடை ஏறிக் கடைதோறும் பலி கொள்வானை, வீரட்டம் மேயானை, வெண் நீற்றானை, முடை நாறும் முதுகாட்டில் ஆடலானை, முன்னானை, பின்னானை, அந் நாளானை, உடை ஆடை உரி-தோலே உகந்தான் தன்னை, உமை இருந்த பாகத்துள் ஒருவன் தன்னை, சடையானை, தலையாலங்காடன் தன்னை, சாராதே சால நாள் போக்கினேனே!.
[7]
கரும்பு இருந்த கட்டிதனை, கனியை, தேனை, கன்றாப்பின் நடுதறியை, காறையானை, இரும்பு அமர்ந்த மூ இலைவேல் ஏந்தினானை, என்னானை, தென் ஆனைக்காவான் தன்னை, சுரும்பு அமரும் மலர்க்கொன்றை சூடினானை, தூயானை, தாய் ஆகி உலகுக்கு எல்லாம் தரும் பொருளை, தலையாலங்காடன் தன்னை, சாராதே சால நாள் போக்கினேனே!.
[8]
பண்டு அளவு நரம்பு ஓசைப் பயனை, பாலை, படுபயனை, கடுவெளியை, கனலை, காற்றை, கண்ட(அ)ளவில் களி கூர்வார்க்கு எளியான் தன்னை, காரணனை, நாரணனை, கமலத்தோனை, எண் தள இல் என் நெஞ்சத்துள்ளே நின்ற எம்மானை, கைம்மாவின் உரிவை பேணும் தண்டு அரனை, தலையாலங்காடன் தன்னை, சாராதே சால நாள் போக்கினேனே!.
[9]
கைத்தலங்கள் இருபது உடை அரக்கர் கோமான் கயிலை மலை அது தன்னைக் கருதாது ஓடி, முத்து இலங்கு முடி துளங்க வளைகள் எற்றி முடுகுதலும், திருவிரல் ஒன்று அவன் மேல் வைப்ப, பத்து இலங்கு வாயாலும் பாடல் கேட்டு, பரிந்து, அவனுக்கு இராவணன் என்று ஈந்த நாமத் தத்துவனை; தலையாலங்காடன் தன்னை; சாராதே சால நாள் போக்கினேனே!.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.080   பாரானை; பாரினது பயன் ஆனானை;
பண் - திருத்தாண்டகம் (திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)
பாரானை; பாரினது பயன் ஆனானை; படைப்பு ஆகிப் பல் உயிர்க்கும் பரிவோன் தன்னை; ஆராத இன்னமுதை, அடியார் தங்கட்கு, அனைத்து உலகும் ஆனானை; அமரர் கோனை; கார் ஆரும் கண்டனை; கயிலை வேந்தை; கருதுவார் மனத்தானை; காலற் செற்ற சீரானை; செல்வனை; திரு மாற்பேற்று எம் செம்பவளக்குன்றினை; சென்று அடைந்தேன், நானே.
[1]
விளைக்கின்ற நீர் ஆகி, வித்தும் ஆகி, விண்ணோடு மண் ஆகி, விளங்கு செம்பொன் துளைக்கின்ற துளை ஆகி, சோதி ஆகி, தூண்ட(அ)ரிய சுடர் ஆகி, துளக்கு இல் வான் மேல் முளைக்கின்ற கதிர் மதியும் அரவும் ஒன்றி முழங்கு ஒலி நீர்க்கங்கையொடு மூவாது என்றும் திளைக்கின்ற சடையானை; திரு மாற்பேற்று எம் செம்பவளக்குன்றினை; சென்று அடைந்தேன், நானே.
[2]
மலைமகள் தம்கோன் அவனை, மாநீர் முத்தை, மரகதத்தை, மாமணியை, மல்கு செல்வக் கலை நிலவு கையானை, கம்பன் தன்னை, காண்பு இனிய செழுஞ்சுடரைக், கனகக் குன்றை, விலை பெரிய வெண் நீற்று மேனியானை, மெய்யடியார் வேண்டுவதே வேண்டுவானை, சிலை நிலவு கரத்தானை, திரு மாற்பேற்று எம் செம்பவளக்குன்றினை, சென்று அடைந்தேன், நானே.
[3]
உற்றானை, உடல் தனக்கு ஓர் உயிர் ஆனானை, ஓங்காரத்து ஒருவனை, அங்கு உமை ஓர்பாகம் பெற்றானை, பிஞ்ஞகனை, பிறவாதானை, பெரியனவும் அரியனவும் எல்லாம் முன்னே கற்றானை, கற்பனவும் தானே ஆய கச்சி ஏகம்பனை, காலன் வீழச் செற்றானை, திகழ் ஒளியை, திரு மாற்பேற்று எம் செம்பவளக்குன்றினை; சென்று அடைந்தேன், நானே.
[4]
நீறு ஆகி, நீறு உமிழும் நெருப்பும் ஆகி, நினைவு ஆகி, நினைவு இனிய மலையான் மங்கை கூறு ஆகி, கூற்று ஆகி, கோளும் ஆகி, குணம் ஆகி, குறையாத உவகைக் கண்ணீர் ஆறாத ஆனந்தத்து அடியார் செய்த அநாசாரம் பொறுத்து அருளி, அவர்மேல் என்றும் சீறாத பெருமானை; திரு மாற்பேற்று எம் செம்பவளக்குன்றினை; சென்று அடைந்தேன், நானே.
[5]
மருவு இனிய மறைப் பொருளை, மறைக்காட்டானை, மறப்பு இலியை, மதி ஏந்து சடையான் தன்னை, உரு நிலவும் ஒண்சுடரை, உம்பரானை, உரைப்பு இனிய தவத்தானை, உலகின் வித்தை, கரு நிலவு கண்டனை, காளத்தி(ய்)யை, கருதுவார் மனத்தானை, கல்விதன்னை, செரு நிலவு படையானை, திரு மாற்பேற்று எம் செம்பவளக்குன்றினை, சென்று அடைந்தேன், நானே.
[6]
பிறப்பானை, பிறவாத பெருமையானை, பெரியானை, அரியானை, பெண் ஆண் ஆய நிறத்தானை, நின் மலனை, நினையாதாரை நினையானை, நினைவோரை நினைவோன் தன்னை, அறத்தானை, அறவோனை, ஐயன் தன்னை, அண்ணல் தனை, நண்ண(அ)ரிய அமரர் ஏத்தும் திறத்தானை, திகழ் ஒளியை, திரு மாற்பேற்று எம் செம்பவளக்குன்றினை, சென்று அடைந்தேன், நானே.
[7]
வானகத்தில் வளர் முகிலை, மதியம் தன்னை, வணங்குவார் மனத்தானை, வடிவு ஆர் பொன்னை, ஊன் அகத்தில் உறுதுணையை, உலவாதானை, ஒற்றியூர் உத்தமனை, ஊழிக் கன்றை, கானகத்துக் கருங்களிற்றை, காளத்தி(ய்)யை, கருதுவார் கருத்தானை, கருவை, மூலத் தேன் அகத்தில் இன்சுவையை, திரு மாற்பேற்று எம் செம்பவளக்குன்றினை, சென்று அடைந்தேன், நானே.
[8]
முற்றாத முழுமுதலை; முளையை; மொட்டை; முழுமலரின் மூர்த்தியை; முனியாது என்றும் பற்று ஆகிப் பல் உயிர்க்கும் பரிவோன் தன்னை; பராபரனை; பரஞ்சுடரை; பரிவோர் நெஞ்சில் உற்றானை; உயர் கருப்புச் சிலையோன் நீறு ஆய் ஒள் அழல்வாய் வேவ உறும் நோக்கத்தானை; செற்றானை, திரிபுரங்கள்; திரு மாற்பேற்று எம் செம்பவளக்குன்றினை; சென்று அடைந்தேன், நானே.
[9]
விரித்தானை, நால் மறையோடு அங்கம் ஆறும்; வெற்பு எடுத்த இராவணனை விரலால் ஊன்றி நெரித்தானை; நின்மலனை; அம்மான் தன்னை; நிலா நிலவு செஞ்சடைமேல் நிறை நீர்க்கங்கை தரித்தானை; சங்கரனை; சம்புதன்னை; தரியலர்கள் புரம்மூன்றும் தழல்வாய் வேவச் சிரித்தானை; திகழ் ஒளியை; திரு மாற்பேற்று எம் செம்பவளக்குன்றினை; சென்று அடைந்தேன், நானே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.081   கண் தலம் சேர் நெற்றி
பண் - திருத்தாண்டகம் (திருக்கோடி (கோடிக்கரை) கோடீசுவரர் வடிவாம்பிகையம்மை)
கண் தலம் சேர் நெற்றி இளங்காளை கண்டாய்; கல் மதில் சூழ் கந்த மாதனத்தான் கண்டாய்; மண்தலம் சேர் மயக்கு அறுக்கும் மருந்து கண்டாய்; மதில் கச்சி ஏகம்பம் மேயான் கண்டாய்; விண்தலம் சேர் விளக்கு ஒளி ஆய் நின்றான் கண்டாய்; மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய்; கொண்டல் அம் சேர் கண்டத்து எம் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.
[1]
வண்டு ஆடு பூங்குழலாள் பாகன் கண்டாய்; மறைக்காட்டு உறையும் மணாளன் கண்டாய்; பண்டு ஆடும் பழவினைநோய் தீர்ப்பான் கண்டாய்; பரலோக நெறி காட்டும் பரமன் கண்டாய்; செண்டு ஆடி அவுணர் புரம் செற்றான் கண்டாய்; திரு ஆரூர்த் திருமூலட்டானன் கண்டாய்; கொண்டாடும் அடியவர் தம் மனத்தான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.
[2]
அலை ஆர்ந்த புனல் கங்கைச் சடையான் கண்டாய்; அடியார்கட்கு ஆர் அமுதம் ஆனான் கண்டாய்; மலை ஆர்ந்த மடமங்கை பங்கன் கண்டாய்; வானோர்கள் முடிக்கு அணி ஆய் நின்றான் கண்டாய்; இலை ஆர்ந்த திரிசூலப்படையான் கண்டாய்; ஏழ் உலகும் ஆய் நின்ற எந்தை கண்டாய்; கொலை ஆர்ந்த குஞ்சரத் தோல் போர்த்தான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.
[3]
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லான் கண்டாய்; மயிலாடுதுறை இடமா மகிழ்ந்தான் கண்டாய்; புற்று ஆடு அரவு அணிந்த புனிதன் கண்டாய்; பூந்துருத்திப் பொய் இலியாய் நின்றான் கண்டாய்; அற்றார்கட்கு அற்றானாய் நின்றான் கண்டாய்; ஐயாறு அகலாத ஐயன் கண்டாய்; குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.
[4]
வார் ஆர்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்; மாற்பேறு காப்பா மகிழ்ந்தான் கண்டாய்; போர் ஆர்ந்த மால்விடை ஒன்று ஊர்வான் கண்டாய்; புகலூரை அகலாத புனிதன் கண்டாய்; நீர் ஆர்ந்த நிமிர்சடை ஒன்று உடையான் கண்டாய்; நினைப்பார் தம் வினைப்பாரம் இழிப்பான் கண்டாய்; கூர் ஆர்ந்த மூ இலை வேல் படையான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.
[5]
கடி மலிந்த மலர்க்கொன்றைச் சடையான் கண்டாய்; கண் அப்ப விண் அப்புக் கொடுத்தான் கண்டாய்; படி மலிந்த பல்பிறவி அறுப்பான் கண்டாய்; பற்று அற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய்; அடி மலிந்த சிலம்பு அலம்பத் திரிவான் கண்டாய்; அமரர் கணம் தொழுது ஏத்தும் அம்மான் கண்டாய்; கொடி மலிந்த மதில்-தில்லைக் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.
[6]
உழை ஆடு கரதலம் ஒன்று உடையான் கண்டாய்; ஒற்றியூர் ஒற்றியா உடையான் கண்டாய்; கழை ஆடு கழுக்குன்றம் அமர்ந்தான் கண்டாய்; காளத்திக் கற்பகம் ஆய் நின்றான் கண்டாய்; இழை ஆடும் எண் புயத்த இறைவன் கண்டாய்; என் நெஞ்சத்துள்-நீங்கா எம்மான் கண்டாய்; குழை ஆட நடம் ஆடும் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.
[7]
படம் ஆடு பன்னகக்கச்சு அசைத்தான் கண்டாய்; பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய்; நடம் ஆடி ஏழ் உலகும் திரிவான் கண்டாய்; நால்மறையின் பொருள் கண்டாய்; நாதன் கண்டாய்; கடம் ஆடு களிறு உரித்த கண்டன் கண்டாய்; கயிலாயம் மேவி இருந்தான் கண்டாய்; குடம் ஆடி இடம் ஆகக் கொண்டான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.
[8]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.082   வானத்து இளமதியும் பாம்பும் தன்னில்
பண் - திருத்தாண்டகம் (திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயவனேசுவரர் குயிலின்நன்மொழியம்மை)
வானத்து இளமதியும் பாம்பும் தன்னில் வளர் சடைமேல் ஆதரிப்ப வைத்தார் போலும்; தேனைத் திளைத்து உண்டு வண்டு பாடும் தில்லை நடம் ஆடும் தேவர் போலும்; ஞானத்தின் ஒண் சுடர் ஆய் நின்றார் போலும்; நன்மையும் தீமையும் ஆனார் போலும்; தேன் ஒத்து அடியார்க்கு இனியார் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
[1]
விண்ணோர் பரவ நஞ்சு உண்டார் போலும்; வியன் துருத்தி வேள்விக்குடியார் போலும்; அண்ணாமலை உறையும் அண்ணல் போலும்; அதியரைய மங்கை அமர்ந்தார் போலும்; பண் ஆர் களி வண்டு பாடி ஆடும் பராய்த்துறையுள் மேய பரமர் போலும் திண் ஆர் புகார் முத்து அலைக்கும் தெண்நீர்த் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
[2]
கான் இரிய வேழம் உரித்தார் போலும்; காவிரிப் பூம்பட்டினத்து உள்ளார் போலும்; வான் இரிய வரு புரம் மூன்று எரித்தார் போலும்; வட கயிலை மலை அது தம் இருக்கை போலும்; ஊன் இரியத் தலை கலனா உடையார் போலும்; உயர் தோணிபுரத்து உறையும் ஒருவர் போலும் தேன் இரிய மீன் பாயும் தெண்நீர்ப் பொய்கைத் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
[3]
ஊன் உற்ற வெண்தலை சேர் கையர்போலும்; ஊழி பல கண்டு இருந்தார் போலும்; மான் உற்ற கரதலம் ஒன்று உடையார் போலும்; மறைக்காட்டுக் கோடி மகிழ்ந்தார் போலும்; கான் உற்ற ஆடல் அமர்ந்தார் போலும்; காமனையும் கண் அழலால் காய்ந்தார் போலும் தேன் உற்ற சோலை திகழ்ந்து தோன்றும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
[4]
கார் மல்கு கொன்றை அம்தாரார் போலும்; காலனையும் ஓர் உதையால் கண்டார் போலும்; பார் மல்கி ஏத்தப்படுவார் போலும்; பருப்பதத்தே பல் ஊழி நின்றார் போலும்; ஊர் மல்கு பிச்சைக்கு உழன்றார் போலும்; ஓத்தூர் ஒருநாளும் நீங்கார் போலும்; சீர் மல்கு பாடல் உகந்தார் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
[5]
மா வாய் பிளந்து உகந்த மாலும், செய்ய- மலரவனும், தாமேயாய் நின்றார் போலும்; மூவாத மேனி முதல்வர் போலும்; முதுகுன்றமூதூர் உடையார் போலும்; கோ ஆய முனிதன்மேல் வந்த கூற்றைக் குரை கழலால், அன்று, குமைத்தார் போலும்; தேவாதிதேவர்க்கு அரியார் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
[6]
கடு வெளியோடு ஓர் ஐந்தும் ஆனார் போலும்; காரோணத்து என்றும் இருப்பார் போலும்; இடி குரல் வாய்ப் பூதப்படையார் போலும்; ஏகம்பம் மேவி இருந்தார் போலும்; படி ஒருவர் இல்லாப் படியார் போலும்; பாண்டிக்கொடு முடியும் தம் ஊர் போலும்; செடி படு நோய் அடியாரைத் தீர்ப்பார் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
அல்லல் அடியார்க்கு அறுப்பார் போலும்; அமருலகம் தம் அடைந்தார்க்கு ஆட்சிபோலும்; நல்லமும் நல்லூரும் மேயார் போலும்; நள்ளாறு நாளும் பிரியார் போலும்; முல்லை முகை நகையாள் பாகர் போலும்; முன்னமே தோன்றி முளைத்தார் போலும்; தில்லை நடம் ஆடும் தேவர் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
[9]
உறைப்பு உடைய இராவணன் பொன்மலையைக் கையால் ஊக்கம் செய்து எடுத்தலுமே, உமையாள் அஞ்ச, நிறைப் பெருந்தோள் இருபதும் பொன் முடிகள் பத்தும் நிலம் சேர, விரல் வைத்த நிமலர் போலும்; பிறைப்பிளவு சடைக்கு அணிந்த பெம்மான் போலும்; பெண் ஆண் உரு ஆகி நின்றார் போலும்; சிறப்பு உடைய அடியார்கட்கு இனியார் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.083   விண் ஆகி, நிலன் ஆகி,
பண் - திருத்தாண்டகம் (திருப்பாசூர் பாசூர்நாதர் பசுபதிநாயகியம்மை)
விண் ஆகி, நிலன் ஆகி, விசும்பும் ஆகி, வேலை சூழ் ஞாலத்தார் விரும்புகின்ற எண் ஆகி, எழுத்து ஆகி, இயல்பும் ஆகி, ஏழ் உலகும் தொழுது ஏத்திக் காண நின்ற கண் ஆகி, மணி ஆகி, காட்சி ஆகி, காதலித்து அங்கு அடியார்கள் பரவ நின்ற பண் ஆகி, இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்த ஆறே!.
[1]
வேதம் ஓர் நான்கு ஆய், ஆறு அங்கம் ஆகி, விரிக்கின்ற பொருட்கு எல்லாம் வித்தும் ஆகி, கூதல் ஆய், பொழிகின்ற மாரி ஆகி, குவலயங்கள் முழுதும் ஆய், கொண்டல் ஆகி, காதலால் வானவர்கள், போற்றி! என்று கடிமலர்கள் அவை தூவி ஏத்த நின்ற பாதி ஓர் மாதினனை; பாசூர் மேய பரஞ்சுடரை; கண்டு அடியேன் உய்ந்த ஆறே!.
[2]
தடவரைகள் ஏழும் ஆய், காற்றும் ஆய், தீ ஆய், தண் விசும்பு ஆய், தண் விசும்பின் உச்சி ஆகி, கடல் வலயம் சூழ்ந்தது ஒரு ஞாலம் ஆகி, காண்கின்ற கதிரவனும் மதியும் ஆகி, குடமுழவச் சதிவழியே அனல் கை ஏந்திக் கூத்து ஆட வல்ல குழகன் ஆகி, பட அரவு ஒன்று அது ஆட்டிப் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்த ஆறே!.
[3]
நீர் ஆரும் செஞ்சடை மேல் அரவம் கொன்றை நிறை மதியம் உடன் சூடி, நீதியாலே சீர் ஆரும் மறை ஓதி, உலகம் உய்யச் செழுங் கடலைக் கடைந்த கடல் நஞ்சம் உண்ட கார் ஆரும் கண்டனை; கச்சி மேய கண்ணுதலை; கடல் ஒற்றி கருதினானை; பாரோரும் விண்ணோரும் பரசும் பாசூர்ப் பரஞ்சுடரை; கண்டு அடியேன் உய்ந்த ஆறே!.
[4]
வேடனாய் விசயன் தன் வியப்பைக் காண்பான், வில் பிடித்து, கொம்பு உடைய ஏனத்தின் பின், கூடினார் உமை அவளும் கோலம் கொள்ள, கொலைப் பகழி உடன் கோத்து கோரப் பூசல்; ஆடினார், பெருங்கூத்துக் காளி காண; அருமறையோடு ஆறு அங்கம் ஆய்ந்து கொண்டு, பாடினார், நால்வேதம்; பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்த ஆறே!.
[5]
புத்தியினால் சிலந்தியும் தன் வாயின் நூலால் பொதுப் பந்தர் அது இழைத்துச் சருகால் மேய்ந்த சித்தியினால், அரசு ஆண்டு சிறப்புச் செய்யச் சிவகணத்துப் புகப் பெய்தார்; திறலால் மிக்க வித்தகத்தால் வெள்ளானை விள்ளா அன்பு விரவியவா கண்டு, அதற்கு வீடு காட்டி, பத்தர்களுக்கு இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்த ஆறே!.
[6]
இணை ஒருவர் தாம் அல்லால் யாரும் இல்லார்; இடை மருதோடு ஏகம்பத்து என்றும் நீங்கார்; அணைவு அரியர், யாவர்க்கும்; ஆதிதேவர்; அருமந்த நன்மை எலாம் அடியார்க்கு ஈவர்; தணல் முழுகு பொடி ஆடும் செக்கர் மேனித் தத்துவனை, சாந்து அகிலின் அளறு தோய்ந்த பணை முலையாள் பாகனை, எம் பாசூர் மேய பரஞ்சுடரை, கண்டு அடியேன் உய்ந்த ஆறே!.
[7]
அண்டவர்கள் கடல் கடைய, அதனுள்-தோன்றி, அதிர்ந்து எழுந்த ஆலாலம் வேலை ஞாலம் எண்திசையும் சுடுகின்ற ஆற்றைக் கண்டு, இமைப்பு அளவில் உண்டு இருண்ட கண்டர்; தொண்டர் வண்டு படு மதுமலர்கள் தூவி நின்று, வானவர்கள் தானவர்கள் வணங்கி, ஏத்தும் பண்டரங்க வேடனை; எம் பாசூர் மேய பரஞ்சுடரை; கண்டு அடியேன் உய்ந்த ஆறே!.
[8]
ஞாலத்தை உண்ட திருமாலும், மற்றை நான்முகனும், அறியாத நெறியார்; கையில் சூலத்தால் அந்தகனைச் சுருளக் கோத்து, தொல் உலகில் பல் உயிரைக் கொல்லும் கூற்றைக் கால(த்)த்தால் உதைசெய்து, காதல் செய்த அந்தணனைக் கைக்கொண்ட செவ்வான் வண்ணர்; பால் ஒத்த வெண்நீற்றர்; பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்த ஆறே!.
[9]
வேந்தன், நெடு முடி உடைய அரக்கர் கோமான், மெல்லியலாள் உமை வெருவ, விரைந்திட்டு, ஓடி, சாந்தம் என நீறு அணிந்தான் கயிலை வெற்பைத் தடக்கைகளால் எடுத்திடலும், தாளால் ஊன்றி ஏந்து திரள் திண் தோளும் தலைகள் பத்தும் இறுத்து, அவன் தன் இசை கேட்டு, இரக்கம் கொண்ட, பாந்தள் அணி சடைமுடி, எம் பாசூர் மேய, பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்த ஆறே!.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.084   பெருந்தகையை, பெறற்கு அரிய மாணிக்கத்தை,
பண் - திருத்தாண்டகம் (திருச்செங்காட்டங்குடி கணபதீசுவரர் திருக்குழல்மாதம்மை)
பெருந்தகையை, பெறற்கு அரிய மாணிக்கத்தை, பேணி நினைந்து எழுவார் தம் மனத்தே மன்னி இருந்த மணி விளக்கு அதனை, நின்ற பூமேல் எழுந்தருளி இருந்தானை, எண்தோள் வீசி அருந் திறல் மாநடம் ஆடும் அம்மான் தன்னை, அம் கனகச்சுடர்க் குன்றை, அன்று ஆலின்கீழ்த் திருந்து மறைப்பொருள் நால்வர்க்கு அருள் செய்தானை, செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.
[1]
துங்க நகத்தால் அன்றித் தொலையா வென்றித் தொகு திறல் அவ் இரணியனை ஆகம் கீண்ட அம் கனகத்திருமாலும், அயனும், தேடும் ஆர் அழலை; அநங்கன் உடல் பொடி ஆய் வீழ்ந்து மங்க, நகத் தான் வல்ல மருந்து தன்னை; வண் கயிலை மாமலைமேல் மன்னி நின்ற, செங்கனகத்திரள் தோள், எம் செல்வன் தன்னை; செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.
[2]
உருகு மனத்து அடியவர்கட்கு ஊறும் தேனை, உம்பர் மணி முடிக்கு அணியை, உண்மை நின்ற பெருகு நிலைக் குறியாளர் அறிவு தன்னை, பேணிய அந்தணர்க்கு மறைப்பொருளை, பின்னும் முருகு விரி நறுமலர் மேல் அயற்கும் மாற்கும் முழுமுதலை, மெய்த் தவத்தோர் துணையை, வாய்த்த திருகுகுழல் உமை நங்கை பங்கன் தன்னை, செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.
[3]
கந்த மலர்க் கொன்றை அணி சடையான் தன்னை; கதிர்விடு மா மணி பிறங்கு கனகச்சோதிச் சந்த மலர்த் தெரிவை ஒரு பாகத்தானை; சராசர நல்-தாயானை; நாயேன் முன்னைப் பந்தம் அறுத்து, ஆள் ஆக்கி, பணி கொண்டு, ஆங்கே பன்னிய நூல்-தமிழ்மாலை பாடுவித்து, என் சிந்தை மயக்கு அறுத்த திரு அருளினானை; செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.
[4]
நஞ்சு அடைந்த கண்டத்து நாதன் தன்னை, நளிர்மலர்ப்-பூங்கணை வேளை நாசம் ஆக வெஞ்சினத்தீ விழித்தது ஒரு நயனத்தானை, வியன்கெடில வீரட்டம் மேவினானை, மஞ்சு அடுத்த நீள் சோலை மாட வீதி மதில் ஆரூர் இடம் கொண்ட மைந்தன் தன்னை, செஞ் சினத்த திரிசூலப்படையான் தன்னை, செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.
[5]
கன்னியை அங்கு ஒரு சடையில் கரந்தான் தன்னை, கடவூரில் வீரட்டம் கருதினானை, பொன்னி சூழ் ஐயாற்று எம் புனிதன் தன்னை, பூந்துருத்தி நெய்த்தானம் பொருந்தினானை, பன்னிய நால்மறை விரிக்கும் பண்பன் தன்னை, பரிந்து இமையோர் தொழுது ஏத்தி, பரனே! என்று சென்னிமிசைக்கொண்டு அணி சேவடியினானை, செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.
[6]
எத்திக்கும் ஆய் நின்ற இறைவன் தன்னை; ஏகம்பம் மேயானை; இல்லாத் தெய்வம் பொத்தித் தம் மயிர் பறிக்கும் சமணர் பொய்யில் புக்கு அழுந்தி வீழாமே, போத வாங்கி, பத்திக்கே வழி காட்டி, பாவம் தீர்த்து, பண்டை வினைப் பயம் ஆன எல்லாம் போக்கி, தித்தித்து, என் மனத்துள்ளே ஊறும் தேனை; செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.
[7]
கல்லாதார் மனத்து அணுகாக் கடவுள் தன்னை; கற்றார்கள் உற்று ஓரும் காதலானை; பொல்லாத நெறி உகந்தார் புரங்கள் மூன்றும் பொன்றி விழ, அன்று, பொரு சரம் தொட்டானை; நில்லாத நிணக்குரம்பைப் பிணக்கம் நீங்க, நிறை தவத்தை அடியேற்கு நிறைவித்து, என்றும் செல்லாத செந்நெறிக்கே செல்விப்பானை; செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.
[8]
அரிய பெரும் பொருள் ஆகி நின்றான் தன்னை; அலைகடலில் ஆலாலம் அமுது செய்த கரியது ஒரு கண்டத்து, செங்கண் ஏற்று, கதிர் விடு மா மணி பிறங்கு காட்சியானை; உரிய பல தொழில் செய்யும் அடியார் தங்கட்கு உலகம் எலாம் முழுது அளிக்கும் உலப்பு இலானை; தெரிவை ஒருபாகத்துச் சேர்த்தினானை; செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.
[9]
போர் அரவம் மால்விடை ஒன்று ஊர்தியானை, புறம் பயமும் புகலூரும் மன்னினானை, நீர் அரவச் செஞ்சடை மேல் நிலா வெண்திங்கள் நீங்காமை வைத்தானை, நிமலன் தன்னை, பேர் அரவப் புட்பகத்தேர் உடைய வென்றிப் பிறங்கு ஒளி வாள் அரக்கன் முடி இடியச் செற்ற சீர் அரவக் கழலானை, செல்வன் தன்னை, செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.085   ஆர்த்தான் காண், அழல் நாகம்
பண் - திருத்தாண்டகம் (திருமுண்டீச்சுரம் முண்டீசுவரர் கானார்குழலியம்மை)
ஆர்த்தான் காண், அழல் நாகம் அரைக்கு நாணா; அடியவர்கட்கு அன்பன் காண்; ஆனைத்தோலைப் போர்த்தான் காண்; புரிசடை மேல் புனல் ஏற்றான் காண்; புறங்காட்டில் ஆடல் புரிந்தான் தான் காண்; காத்தான் காண், உலகு ஏழும் கலங்கா வண்ணம், கனை கடல் வாய் நஞ்சு அதனைக் கண்டத்துள்ளே! சேர்த்தான் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண்; அவன் என் சிந்தையானே.
[1]
கருத்தன் காண்; கமலத்தோன் தலையில் ஒன்றைக் காய்ந்தான் காண்; பாய்ந்த நீர் பரந்த சென்னி ஒருத்தன் காண்; உமையவள் ஓர்பாகத்தான் காண்; ஓர் உருவின் மூஉரு ஆய், ஒன்று ஆய், நின்ற விருத்தன் காண்; விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண்; மெய் அடியார் உள்ளத்தே விரும்பி நின்ற திருத்தன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண்; அவன் என் சிந்தையானே.
[2]
நம்பன்காண், நரை விடை ஒன்று ஏறினான் காண், நாதன் காண், கீதத்தை நவிற்றினான் காண்; இன்பன் காண், இமையா முக்கண்ணினான் காண், ஏசற்று மனம் உருகும் அடியார் தங்கட்கு அன்பன் காண், ஆர் அழல் அது ஆடினான் காண், அவன், இவன் என்று யாவர்க்கும் அறிய ஒண்ணாச் செம்பொன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண்; அவன் என் சிந்தையானே.
[3]
மூவன் காண்; மூவர்க்கும் முதல் ஆனான் காண்; முன்னும் ஆய், பின்னும் ஆய், முடிவு ஆனான் காண்; காவன் காண்; உலகுக்கு ஓர் கண் ஆனான் காண்; கங்காளன் காண்; கயிலை மலையினான் காண்; ஆவன் காண்; ஆ அகத்து அஞ்சு ஆடினான் காண்; ஆர் அழல் ஆய் அயற்கு அரிக்கும் அறிய ஒண்ணாத் தேவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண்; அவன் என் சிந்தையானே.
[4]
கானவன் காண், கானவனாய்ப் பொருதான் தான் காண், கனல் ஆட வல்லான் காண், கையில் ஏந்தும் மானவன் காண், மறை நான்கும் ஆயினான் காண், வல் ஏறு ஒன்று அது ஏற வல்லான் தான் காண், ஊனவன் காண், உலகத்துக்கு உயிர் ஆனான் காண், உரை அவன் காண், உணர்வு அவன் காண், உணர்ந்தார்க்கு என்றும் தேன் அவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண்; அவன் என் சிந்தையானே.
[5]
உற்றவன் காண், உறவு எல்லாம் ஆவான் தான் காண், ஒழிவு அற நின்று எங்கும் உலப்பு இலான் காண், புற்று அரவே ஆடையும் ஆய்ப் பூணும் ஆகிப் புறங்காட்டில் எரி ஆடல் புரிந்தான் தான் காண், நல்-தவன் காண், அடி அடைந்த மாணிக்கு ஆக நணுகியது ஓர் பெருங் கூற்றைச் சேவடியினால் செற்றவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன்
[6]
உதைத்தவன் காண், உணராத தக்கன் வேள்வி உருண்டு ஓட; தொடர்ந்து அருக்கன் பல்லை எல்லாம் தகர்த்தவன் காண்; தக்கன் தன் தலையைச் செற்ற தலையவன் காண்; மலைமகள் ஆம் உமையைச் சால மதிப்பு ஒழிந்த வல் அமரர் மாண்டார் வேள்வி வந்து அவி உண்டவரோடும் அதனை எல்லாம் சிதைத்தவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண்; அவன் என் சிந்தையானே.
[7]
உரிந்த உடையார் துவரால் உடம்பை மூடி உழிதரும் அவ் ஊமர் அவர் உணரா வண்ணம் பரிந்தவன் காண் பனிவரை மீப் பண்டம் எல்லாம் பறித்து, உடனே நிரந்து வரு பாய் நீர்ப்பெண்ணை, நிரந்து வரும் இருகரையும் தடவா ஓடி, நின்மலனை வலம் கொண்டு, நீள நோக்கி, திரிந்து உலவு திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண்; அவன் என் சிந்தையானே.
[8]
அறுத்தவன் காண், அடியவர்கள் அல்லல் எல்லாம்; அரும்பொருள் ஆய் நின்றவன் காண்; அநங்கன் ஆகம் மறுத்தவன் காண்; மலை தன்னை மதியாது ஓடி, மலைமகள் தன் மனம் நடுங்க, வானோர் அஞ்ச, கறுத்தவனாய், கயிலாயம் எடுத்தோன் கையும் கதிர் முடியும் கண்ணும் பிதுங்கி ஓடச் செறுத்தவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண்; அவன் என் சிந்தையானே.
[9]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.086   கரு ஆகிக் கண்ணுதலாய் நின்றான்
பண் - திருத்தாண்டகம் (திருஆலம்பொழில் ஆத்மநாதீசுவரர் ஞானாம்பிகையம்மை)
கரு ஆகிக் கண்ணுதலாய் நின்றான் தன்னை, கமலத்தோன் தலை அரிந்த காபாலி(ய்)யை, உரு ஆர்ந்த மலை மகள் ஓர் பாகத்தானை, உணர்வு எலாம் ஆனானை, ஓசை ஆகி வருவானை, வலஞ்சுழி எம் பெருமான் தன்னை, மறைக்காடும் ஆவடு தண்துறையும் மேய திருவானை, தென்பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை, சிந்தி, நெஞ்சே!.
[1]
உரித்தானை, களிறு அதன் தோல் போர்வை ஆக; உடையானை, உடை புலியின் அதளே ஆக; தரித்தானை, சடை அதன் மேல் கங்கை, அங்கைத் தழல் உருவை; விடம் அமுதா உண்டு, இது எல்லாம் பரித்தானை; பவள மால்வரை அன்னானை; பாம்பு அணையான் தனக்கு, அன்று, அங்கு ஆழி நல்கிச் சிரித்தானை; தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம் பொழிலானை; சிந்தி, நெஞ்சே!.
[2]
உரு மூன்று ஆய் உணர்வின் கண் ஒன்று ஆனானை; ஓங்கார மெய்ப்பொருளை; உடம்பிலுள்ளால் கரு ஈன்ற வெங்களவை அறிவான் தன்னை; காலனைத் தன் கழல் அடியால் காய்ந்து, மாணிக்கு அருள் ஈன்ற ஆரமுதை; அமரர் கோனை; அள் ஊறி, எம்பெருமான்! என்பார்க்கு என்றும் திரு ஈன்ற தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை; சிந்தி, நெஞ்சே!.
[3]
பார் முழுது ஆய் விசும்பு ஆகிப் பாதாளம்(ம்) ஆம் பரம்பரனை; சுரும்பு அமரும் குழலாள் பாகத்து ஆர் அமுது ஆம் அணி தில்லைக் கூத்தன் தன்னை; வாட்போக்கி அம்மானை; எம்மான்! என்று வாரம் அது ஆம் அடியார்க்கு வாரம் ஆகி, வஞ்சனை செய்வார்க்கு என்றும் வஞ்சன் ஆகும் சீர் அரசை; தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை; சிந்தி, நெஞ்சே!.
[4]
வரை ஆர்ந்த மடமங்கை பங்கன் தன்னை; வானவர்க்கும் வானவனை; மணியை; முத்தை; அரை ஆர்ந்த புலித்தோல் மேல் அரவம் ஆர்த்த அம்மானை; தம்மானை, அடியார்க்கு என்றும்; புரை ஆர்ந்த கோவணத்து எம் புனிதன் தன்னை; ந்துருத்தி மேயானை; புகலூரானை; திரை ஆர்ந்த தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை; சிந்தி, நெஞ்சே!.
[5]
விரிந்தானை; குவிந்தானை; வேதவித்தை; வியன் பிறப்போடு இறப்பு ஆகி நின்றான் தன்னை; அரிந்தானை, சலந்தரன் தன் உடலம் வேறா; ஆழ்கடல் நஞ்சு உண்டு இமையோர் எல்லாம் உய்யப் பரிந்தானை; பல் அசுரர் புரங்கள் மூன்றும் பாழ்படுப்பான், சிலை மலை நாண் ஏற்றி, அம்பு தெரிந்தானை; தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை; சிந்தி, நெஞ்சே!.
[6]
பொல்லாத என் அழுக்கில் புகுவான், என்னைப் புறம் புறமே சோதித்த புனிதன் தன்னை; எல்லாரும் தன்னையே இகழ, அந் நாள், இடு, பலி! என்று அகம் திரியும் எம்பிரானை; சொல்லாதார் அவர் தம்மைச் சொல்லாதானை; தொடர்ந்து தன் பொன் அடியே பேணுவாரைச் செல்லாத நெறி செலுத்த வல்லான் தன்னை; திரு ஆலம்பொழிலானை, சிந்தி, நெஞ்சே!.
[7]
ஐந்தலைய நாக அணைக் கிடந்த மாலோடு அயன் தேடி நாட(அ)ரிய அம்மான் தன்னை, பந்து அணவு மெல்விரலாள் பாகத்தானை, பராய்த்துறையும் வெண்காடும் பயின்றான் தன்னை, பொந்து உடைய வெண்தலையில் பலி கொள்வானை, பூவணமும் புறம் பயமும் பொருந்தினானை, சிந்திய வெந்தீவினைகள் தீர்ப்பான் தன்னை, திரு ஆலம்பொழிலானை, சிந்தி, நெஞ்சே!.
[8]
கையில் உண்டு உழல்வாரும் சாக்கியரும், கல்லாத வன்மூடர்க்கு, அல்லாதானை; பொய் இலாதவர்க்கு என்றும் பொய் இலானை; பூண் நாகம் நாண் ஆகப், பொருப்பு வில்லா, கையின் ஆர் அம்பு எரி கால் ஈர்க்குக் கோலா, கடுந் தவத்தோர் நெடும் புரங்கள் கனல்வாய் வீழ்த்த செய்யின் ஆர் தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை; சிந்தி, நெஞ்சே!.
[9]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.087   வானவன் காண்; வானவர்க்கும் மேல்
பண் - திருத்தாண்டகம் (திருச்சிவபுரம் பிரமபுரிநாயகர் பெரியநாயகியம்மை)
வானவன் காண்; வானவர்க்கும் மேல் ஆனான் காண்; வடமொழியும் தென் தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண்; ஆன் ஐந்தும் ஆடினான் காண்; ஐயன் காண்; கையில் அனல் ஏந்தி ஆடும் கானவன் காண்; கானவனுக்கு அருள் செய்தான் காண்; கருதுவார் இதயத்துக் கமலத்து ஊறும் தேன் அவன் காண்; சென்று அடையாச் செல்வன் தான் காண்; சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே.
[1]
நக்கன் காண்; நக்க(அ)ரவம் அரையில் ஆர்த்த நாதன் காண்; பூதகணம் ஆட ஆடும் சொக்கன் காண்; கொக்கு இறகு சூடினான் காண்; துடி இடையாள் துணை முலைக்குச் சேர்வு அது ஆகும் பொக்கன் காண்; பொக்கணத்த வெண்நீற்றான் காண்; புவனங்கள் மூன்றினுக்கும் பொருள் ஆய் நின்ற திக்கன் காண்; செக்கர் அது திகழும் மேனிச் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே.
[2]
வம்பின் மலர்க்குழல் உமையாள் மணவாளன் காண்; மலரவன், மால், காண்பு அரிய மைந்தன் தான் காண்; கம்ப மதக்கரி பிளிற உரி செய்தோன் காண்; கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டத்தோன் காண்; அம்பர் நகர்ப் பெருங்கோயில் அமர்கின்றான் காண்; அயவந்தி உள்ளான் காண்; ஐயாறன் காண்; செம்பொன் எனத் திகழ்கின்ற உருவத்தான் காண்; சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே.
[3]
பித்தன் காண்; தக்கன் தன் வேள்வி எல்லாம் பீடு அழியச் சாடி, அருள்கள் செய்த முத்தன் காண்; முத்தீயும் ஆயினான் காண்; முனிவர்க்கும் வானவர்க்கும் முதல் ஆய் மிக்க அத்தன் காண்; புத்தூரில் அமர்ந்தான் தான் காண்; அரிசில் பெருந்துறையே ஆட்சி கொண்ட சித்தன் காண்; சித்தீச்சுரத்தான் தான் காண்; சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே.
[4]
தூயவன் காண்; நீறு துதைந்த மேனி துளங்கும் பளிங்கு அனைய சோதியான் காண்; தீ அவன் காண்; தீ அவுணர் புரம் செற்றான் காண்; சிறுமான் கொள் செங்கை எம்பெருமான் தான் காண்; ஆயவன் காண்; ஆரூரில் அம்மான் தான் காண்; அடியார்கட்கு ஆர் அமுதம் ஆயினான் காண்; சேயவன் காண்; சேமநெறி ஆயினான் காண்; சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே.
[5]
பார் அவன் காண்; பார் அதனில் பயிர் ஆனான் காண்; பயிர் வளர்க்கும் துளி அவன் காண்; துளியில் நின்ற நீர் அவன் காண்; நீர் சடைமேல் நிகழ்வித்தான் காண்; நில வேந்தர் பரிசு ஆக நினைவு உற்று ஓங்கும் பேரவன் காண்; பிறை எயிற்று வெள்ளைப் பன்றி பிரியாது, பலநாளும் வழிபட்டு, ஏத்தும் சீரவன் காண்; சீர் உடைய தேவர்க்கு எல்லாம் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே.
[6]
வெய்யவன் காண்; வெய்ய கனல் ஏந்தினான் காண்; வியன் கெடில வீரட்டம் மேவினான் காண்; மெய்யவன் காண்; பொய்யர் மனம் விரவாதான் காண்; வீணையோடு இசைந்து மிகு பாடல் மிக்க கையவன் காண்; கையில் மழு ஏந்தினான் காண்; காமன் அங்கம் பொடி விழித்த கண்ணினான் காண்; செய்யவன் காண்; செய்யவளை மாலுக்கு ஈந்த சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே.
[7]
கலை ஆரும் நூல் அங்கம் ஆயினான் காண்; கலை பயிலும் கருத்தன் காண்; திருத்தம் ஆகி, மலை ஆகி, மறி கடல் ஏழ் சூழ்ந்து நின்ற மண் ஆகி, விண் ஆகி, நின்றான் தான் காண்; தலை ஆய மலை எடுத்த தகவு இலோனைத் தகர்ந்து விழ, ஒரு விரலால் சாதித்து, ஆண்ட சிலை ஆரும் மடமகள் ஓர் கூறன் தான் காண்; சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே.
[8]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.088   ஆர் ஆரும் மூ இலை
பண் - திருத்தாண்டகம் (திருஓமாம்புலியூர் துயர்தீர்த்தசெல்வர் பூங்கொடியம்மை)
ஆர் ஆரும் மூ இலை வேல் அங்கையானை; அலை கடல் நஞ்சு அயின்றானை; அமரர் ஏத்தும் ஏர் ஆரும் மதி பொதியும் சடையினானை; எழுபிறப்பும் எனை ஆளா உடையான் தன்னை; ஊர் ஆரும் பட நாகம் ஆட்டுவானை; உயர் புகழ் சேர்தரும் ஓமாம்புலியூர் மன்னும் சீர் ஆரும் வடதளி எம் செல்வன் தன்னை; சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே!.
[1]
ஆதியான், அரி அயன், என்று அறிய ஒண்ணா அமரர் தொழும் கழலானை; அமலன் தன்னை; சோதி மதி கலை தொலைய, தக்கன், எச்சன், சுடர் இரவி அயில் எயிறு, தொலைவித்தானை; ஓதி மிக அந்தணர்கள் எரி மூன்று ஓம்பும் உயர் புகழ் ஆர் தரும் ஓமாம்புலியூர் மன்னும் தீது இல் திரு வடதளி எம் செல்வன் தன்னை; சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே!.
[2]
வரும் மிக்க மதயானை உரித்தான் தன்னை; வானவர் கோன் தோள் அனைத்தும் மடிவித்தானை; தரு மிக்க குழல் உமையாள் பாகன் தன்னை; சங்கரன் எம்பெருமானை; தரணி தன்மேல் உரு மிக்க மணி மாடம் நிலாவு வீதி, உத்தமர் வாழ்தரும், ஓமாம்புலியூர் மன்னும் திரு மிக்க வடதளி எம் செல்வன் தன்னை; சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே!.
[3]
அன்றினவர் புரம் மூன்றும் பொடி ஆய் வேவ அழல் விழித்த கண்ணானை; அமரர்கோனை; வென்றி மிகு காலன் உயிர் பொன்றி வீழ விளங்கு திருவடி எடுத்த விகிர்தன் தன்னை; ஒன்றிய சீர் இரு பிறப்பர் முத்தீ ஓம்பும், உயர் புகழ் நால்மறை, ஓமாம்புலியூர் நாளும் தென்றல் மலி வடதளி எம் செல்வன் தன்னை; சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே!.
[4]
பாங்கு உடைய எழில் அங்கி அருச்சனை முன் விரும்பப் பரிந்து அவனுக்கு அருள் செய்த பரமன் தன்னை; பாங்கு இலா நரகு அதனில்-தொண்டர் ஆனார் பாராத வகை பண்ண வல்லான் தன்னை; ஓங்கு மதில் புடை தழுவும் எழில் ஓமாம்புலியூர், உயர் புகழ் அந்தணர் ஏத்த, உலகர்க்கு என்றும் தீங்கு இல், திரு வடதளி எம் செல்வன் தன்னை; சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே!.
[5]
அருந்தவத்தோர் தொழுது ஏத்தும் அம்மான் தன்னை; ஆராத இன்னமுதை; அடியார் தம்மேல் வரும் துயரம் தவிர்ப்பானை; உமையாள் நங்கை-மணவாள நம்பியை; என் மருந்து தன்னை; பொருந்து புனல் தழுவு வயல் நிலவு, துங்கப் பொழில் கெழுவு தரும், ஓமாம்புலியூர் நாளும் திருந்து திரு வடதளி எம் செல்வன் தன்னை; சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே!.
[6]
மலையானை; வரும் மலை அன்று உரிசெய்தானை; மறையானை; மறையாலும் அறிய ஒண்ணாக் கலையானை; கலை ஆரும் கையினானை; கடிவானை, அடியார்கள் துயரம் எல்லாம்; உலையாத அந்தணர்கள் வாழும் ஓமாம்புலியூர் எம் உத்தமனை; புரம் மூன்று எய்த சிலையானை; வடதளி எம் செல்வன் தன்னை; சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே!.
[7]
சேர்ந்து ஓடும் மணிக் கங்கை சூடினானை, செழு மதியும் பட அரவும் உடன் வைத்தானை, சார்ந்தோர்கட்கு இனியானை, தன் ஒப்பு இல்லாத் தழல் உருவை, தலைமகனை, தகை நால்வேதம் ஓர்ந்து ஓதிப் பயில்வார் வாழ்தரும் ஓமாம்புலியூர் உள்ளானை, கள்ளாத அடியார் நெஞ்சில் சேர்ந்தானை, வடதளி எம் செல்வன் தன்னை, சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே!.
[8]
வார் கெழுவு முலை உமையாள் வெருவ அன்று மலை எடுத்த வாள் அரக்கன் தோளும் தாளும் ஏர் கெழுவு சிரம் பத்தும் இறுத்து, மீண்டே இன் இசை கேட்டு இருந்தானை; இமையோர் கோனை; பார் கெழுவு புகழ் மறையோர் பயிலும் மாட, பைம்பொழில் சேர்தரும், ஓமாம்புலியூர் மன்னும் சீர் கெழுவு வடதளி எம் செல்வன் தன்னை; சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே!.
[9]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.089   அல்லி மலர் நாற்றத்து உள்ளார்
பண் - திருத்தாண்டகம் (திருஇன்னம்பர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
அல்லி மலர் நாற்றத்து உள்ளார் போலும்; அன்பு உடையர் சிந்தை அகலார் போலும்; சொல்லின், அருமறைகள் தாமே போலும்; தூநெறிக்கு வழி காட்டும் தொழிலார் போலும்; வில்லின் புரம் மூன்று எரித்தார் போலும்; வீங்கு இருளும் நல் வெளியும் ஆனார் போலும்; எல்லி நடம் ஆட வல்லார் போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே.
[1]
கோழிக் கொடியோன் தன் தாதைபோலும்; கொம்பனாள் பாகம் குளிர்ந்தார் போலும்; ஊழி முதல்வரும் தாமே போலும்; உள்குவார் உள்ளத்தின் உள்ளார் போலும்; ஆழித்தேர் வித்தகரும் தாமே போலும்; அடைந்தவர்கட்கு அன்பராய் நின்றார் போலும்; ஏழு பிறவிக்கும் தாமேபோலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே.
[2]
தொண்டர்கள் தம் தகவின் உள்ளார் போலும்; தூநெறிக்கும் தூ நெறி ஆய் நின்றார் போலும்; பண்டு இருவர் காணாப் படியார் போலும்; பத்தர்கள் தம் சித்தத்து இருந்தார் போலும்; கண்டம் இறையே கறுத்தார் போலும்; காமனையும் காலனையும் காய்ந்தார் போலும்; இண்டைச் சடை சேர் முடியார் போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே.
[3]
வானத்து இளந்திங்கள் கண்ணி தன்னை வளர் சடை மேல் வைத்து உகந்த மைந்தர் போலும்; ஊன் ஒத்த வேல் ஒன்று உடையார் போலும்; ஒளி நீறு பூசும் ஒருவர் போலும்; தானத்தின் முப்பொழுதும் தாமே போலும்; தம்மின் பிறர் பெரியார் இல்லை போலும்; ஏனத்து எயிறு இலங்கப் பூண்டார் போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே.
[4]
சூழும் துயரம் அறுப்பார் போலும்; தோற்றம் இறுதி ஆய் நின்றார் போலும்; ஆழும் கடல் நஞ்சை உண்டார் போலும்; ஆடல் உகந்த அழகர் போலும்; தாழ்வு இல் மனத்தேனை ஆளாக்கொண்டு, தன்மை அளித்த தலைவர் போலும்; ஏழு பிறப்பும் அறுப்பார் போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே.
[5]
பாதத்து அணையும் சிலம்பர் போலும்; பார் ஊர் விடை ஒன்று உடையார் போலும்; பூதப்படை ஆள் புனிதர் போலும்; பூம் புகலூர் மேய புராணர் போலும்; வேதப் பொருள் ஆய் விளைவார் போலும்; வேடம் பரவித் திரியும் தொண்டர் ஏதப்படா வண்ணம் நின்றார் போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே.
[6]
பல் ஆர் தலை ஓட்டில் ஊணார் போலும்; பத்தர்கள் தம் சித்தத்து இருந்தார் போலும்; கல்லாதார் காட்சிக்கு அரியார் போலும்; கற்றவர்கள் ஏதம் களைவார் போலும்; பொல்லாத பூதப்படையார் போலும்; பொருகடலும் ஏழ்மலையும் தாமே போலும்; எல்லாரும் ஏத்தத் தகுவார் போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே.
[7]
மட்டு மலியும் சடையார் போலும்; மாதை ஓர் பாகம் உடையார் போலும்; கட்டம் பிணிகள் தவிர்ப்பார் போலும்; காலன் தன் வாழ்நாள் கழிப்பார் போலும்; நட்டம் பயின்று ஆடும் நம்பர் போலும்; ஞாலம், எரி, நீர், வெளி, கால், ஆனார் போலும்; எட்டுத் திசைகளும் தாமே போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே.
[8]
கரு உற்ற காலத்தே என்னை ஆண்டு கழல் போது தந்து, அளித்த கள்வர் போலும்; செருவில் புரம் மூன்றும் அட்டார் போலும்; தேவர்க்கும் தேவர் ஆம் செல்வர் போலும்; மருவில் பிரியாத மைந்தர் போலும்; மலர் அடிகள் நாடி வணங்கல் உற்ற இருவர்க்கு ஒருவராய் நின்றார் போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே.
[9]
அலங்கல் சடை தாழ, ஐயம் ஏற்று(வ்), அரவம் அரை ஆர்க்க வல்லார் போலும்; வலங்கை மழு ஒன்று உடையார் போலும்; வான் தக்கன் வேள்வி சிதைத்தார் போலும்; விலங்கல் எடுத்து உகந்த வெற்றியானை விறல் அழித்து, மெய்ஞ்ஞரம்பால் கீதம் கேட்டு, அன்று, இலங்கு சுடர் வாள் கொடுத்தார் போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.090   மூ இலை நல் சூலம்
பண் - திருத்தாண்டகம் (திருக்கஞ்சனூர் அக்கினீசுவரர் கற்பகநாயகியம்மை)
மூ இலை நல் சூலம் வலன் ஏந்தினானை, மூன்று சுடர்க் கண்ணானை, மூர்த்தி தன்னை, நாவலனை, நரை விடை ஒன்று ஏறுவானை, நால் வேதம் ஆறு அங்கம் ஆயினானை, ஆவினில் ஐந்து உகந்தானை, அமரர் கோவை, அயன் திருமால் ஆனானை, அனலோன் போற்றும் காவலனை, கஞ்சனூர் ஆண்ட கோவை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டு உய்ந்தேனே!.
[1]
தலை ஏந்து கையானை, என்பு ஆர்த்தானை, சவம் தாங்கு தோளானை, சாம்பலானை, குலை ஏறு நறுங்கொன்றை முடிமேல் வைத்துக் கோள் நாகம் அசைத்தானை, குலம் ஆம் கைலை- மலையானை, மற்று ஒப்பார் இல்லாதானை, மதி கதிரும் வானவரும் மாலும் போற்றும் கலையானை, கஞ்சனூர் ஆண்ட கோவை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டு உய்ந்தேனே!.
[2]
தொண்டர் குழாம் தொழுது ஏத்த அருள் செய்வானை; சுடர் மழுவாள் படையானை; சுழி வான் கங்கைத் தெண் திரைகள் பொருது இழி செஞ்சடையினானை; செக்கர் வான் ஒளியானை; சேராது எண்ணிப் பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம் பாழ்படுத்து, தலை அறுத்து, பல் கண் கொண்ட கண்டகனை; கஞ்சனூர் ஆண்ட கோவை; கற்பகத்தை; கண் ஆரக் கண்டு உய்ந்தேனே!.
[3]
விண்ணவனை, மேரு வில்லா உடையான் தன்னை, மெய் ஆகிப் பொய் ஆகி விதி ஆனானை, பெண்ணவனை, ஆண் அவனை, பித்தன் தன்னை, பிணம் இடுகாடு உடையானை, பெருந் தக்கோனை, எண்ணவனை, எண்திசையும் கீழும் மேலும் இரு விசும்பும் இரு நிலமும் ஆகித் தோன்றும் கண்ணவனை, கஞ்சனூர் ஆண்ட கோவை; கற்பகத்தை; கண் ஆரக் கண்டு உய்ந்தேனே!.
[4]
உருத்திரனை, உமாபதியை, உலகு ஆனானை, உத்தமனை, நித்திலத்தை, ஒருவன் தன்னை, பருப்பதத்தை, பஞ்சவடி மார்பினானை, பகல் இரவு ஆய் நீர் வெளி ஆய்ப் பரந்து நின்ற நெருப்பு அதனை, நித்திலத்தின் தொத்து ஒப்பானை, நீறு அணிந்த மேனியராய் நினைவார் சிந்தைக் கருத்தவனை, கஞ்சனூர் ஆண்ட கோவை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டு உய்ந்தேனே!.
[5]
ஏடு ஏறு மலர்க்கொன்றை, அரவு, தும்பை, இளமதியம், எருக்கு, வான் இழிந்த கங்கை, சேடு எறிந்த சடையானை; தேவர் கோவை; செம் பொன் மால்வரையானை; சேர்ந்தார் சிந்தைக் கேடு இலியை; கீழ்வேளூர் ஆளும் கோவை; கிறி பேசி, மடவார் பெய் வளைகள் கொள்ளும் காடவனை; கஞ்சனூர் ஆண்ட கோவை; கற்பகத்தை; கண் ஆரக் கண்டு உய்ந்தேனே!.
[6]
நாரணனும் நான்முகனும் அறியாதானை, நால்வேதத்து உருவானை, நம்பி தன்னை, பாரிடங்கள் பணி செய்யப் பலி கொண்டு உண்ணும் பால்வணனை, தீவணனை, பகல் ஆனானை, வார் பொதியும் முலையாள் ஓர் கூறன் தன்னை, மான் இடங்கை உடையானை, மலிவு ஆர் கண்டம் கார் பொதியும் கஞ்சனூர் ஆண்ட கோவை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டு உய்ந்தேனே!.
[7]
வானவனை, வலி வலமும் மறைக்காட்டானை, மதி சூடும் பெருமானை, மறையோன் தன்னை, ஏனவனை, இமவான் தன் பேதையோடும் இனிது இருந்த பெருமானை, ஏத்துவார்க்குத் தேனவனை, தித்திக்கும் பெருமான் தன்னை, தீது இலா மறையவனை, தேவர் போற்றும் கானவனை, கஞ்சனூர் ஆண்ட கோவை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டு உய்ந்தேனே!.
[8]
நெருப்பு உருவு திருமேனி வெண்நீற்றானை, நினைப்பார் தம் நெஞ்சானை, நிறைவு ஆனானை, தருக்கு அழிய முயலகன் மேல்-தாள் வைத்தானை, சலந்தரனைத் தடிந்தோனை, தக்கோர் சிந்தை விருப்பவனை, விதியானை, வெண்நீற்றானை, விளங்கு ஒளிஆய், மெய் ஆகி, மிக்கோர் போற்றும் கருத்தவனை, கஞ்சனூர் ஆண்ட கோவை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டு உய்ந்தேனே!.
[9]
மடல் ஆழித் தாமரை ஆயிரத்தில் ஒன்று மலர்க்கண் இடந்து இடுதலுமே, மலி வான் கோலச் சுடர் ஆழி நெடுமாலுக்கு அருள் செய்தானை; தும்பி உரி போர்த்தானை; தோழன் விட்ட அடல் ஆழித் தேர் உடைய இலங்கைக் கோனை அரு வரைக்கீழ் அடர்த்தானை; அருள் ஆர் கருணைக்- கடலானை; கஞ்சனூர் ஆண்ட கோவை; கற்பகத்தை; கண் ஆரக் கண்டு உய்ந்தேனே!.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.091   பன்னிய செந்தமிழ் அறியேன்; கவியேல்
பண் - திருத்தாண்டகம் (திருவெறும்பூர் )
பன்னிய செந்தமிழ் அறியேன்; கவியேல் மாட்டேன்; எண்ணோடு பண் நிறைந்த கலைகள் ஆய- தன்னையும் தன் திறத்து அறியாப் பொறி இலேனைத் தன் திறமும் அறிவித்து, நெறியும் காட்டி, அன்னையையும் அத்தனையும் போல, அன்பு ஆய் அடைந்தேனைத் தொடர்ந்து, என்னை ஆளாக் கொண்ட தென் எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை, செழுஞ்சுடரை, சென்று அடையப் பெற்றேன், நானே.
[1]
பளிங்கின் நிழலுள் பதித்த சோதியானை, பசுபதியை, பாசுபத வேடத்தானை, விளிந்து எழுந்த சலந்தரனை வீட்டினானை, வேதியனை, விண்ணவனை, மேவி வையம் அளந்தவனை, நான்முகனை, அல்லல் தீர்க்கும் அருமருந்தை, ஆம் ஆறு அறிந்து என் உள்ளம் தெளிந்து எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை, செழுஞ்சுடரை, சென்று அடையப் பெற்றேன், நானே.
[2]
கருவை; என் தன் மனத்து இருந்த கருத்தை; ஞானக் கடுஞ்சுடரை; படிந்து கிடந்து அமரர் ஏத்தும் உருவை; அண்டத்து ஒரு முதலை; ஓத வேலி உலகில் நிறை தொழில் இறுதி நடு ஆய் நின்ற, மருவை வென்ற குழல் மடவாள் பாகம் வைத்த, மயானத்து, மாசிலா மணியை; வாசத் திரு எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை; செழுஞ்சுடரை; சென்று அடையப் பெற்றேன், நானே.
[3]
பகழி பொழிந்து அடல் அரக்கர் புரங்கள் மூன்றும் பாழ்படுத்த பரஞ்சுடரை, பரிந்து தன்னைப் புகழும் அன்பர்க்கு இன்பு அமரும் அமுதை, தேனை, புண்ணியனை, புவனி அது முழுதும் போத உமிழும் அம் பொன் குன்றத்தை, முத்தின் தூணை, உமையவள் தம் பெருமானை, இமையோர் ஏத்தும் திகழ் எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை, செழுஞ்சுடரை, சென்று அடையப் பெற்றேன், நானே.
[4]
பாரிடங்கள் உடன் பாடப் பயின்று நட்டம் பயில்வானை, அயில்வாய சூலம் ஏந்தி நேரிடும் போர் மிக வல்ல நிமலன் தன்னை, நின்மலனை, அம் மலர் கொண்ட (அ)அயனும் மாலும் பார் இடந்தும் மேல் உயர்ந்தும் காணா வண்ணம் பரந்தானை, நிமிர்ந்து முனி கணங்கள் ஏத்தும் சீர் எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை, செழுஞ்சுடரை, சென்று அடையப் பெற்றேன், நானே.
[5]
கார் முகில் ஆய்ப் பொழிவானை, பொழிந்த முந்நீர் கரப்பானை, கடிய நடை விடை ஒன்று ஏறி ஊர் பலவும் திரிவானை, ஊர் அது ஆக ஒற்றியூர் உடையனாய் முற்றும் ஆண்டு பேர் எழுத்து ஒன்று உடையானை, பிரமனோடு மாலவனும் இந்திரனும் மந்திரத்தால் ஏத்தும் சீர் எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை, செழுஞ்சுடரை, சென்று அடையப் பெற்றேன், நானே.
[6]
நீள் நிலமும், அம் தீயும், நீரும், மற்றை நெறி இலங்கும் மிகு காலும், ஆகாச(ம்)மும், வாள் நிலவு தாரகையும், மண்ணும், விண்ணும், மன் உயிரும், என் உயிரும், தான் ஆம் செம்பொன் ஆணி! என்றும், அஞ்சன மாமலையே! என்றும், அம் பவளத்திரள்! என்றும், அறிந்தோர் ஏத்தும் சேண் எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை; செழுஞ்சுடரை; சென்று அடையப் பெற்றேன், நானே.
[7]
அறம் தெரியா, ஊத்தைவாய், அறிவு இல் சிந்தை ஆரம்பக் குண்டரோடு, அயர்த்து நாளும் மறந்தும் அரன் திருவடிகள் நினைய மாட்டா மதி இலியேன் வாழ்வு எல்லாம் வாளா; மண்மேல் பிறந்த நாள் நாள் அல்ல, வாளா; ஈசன் பேர் பிதற்றிச் சீர் அடிமைத் திறத்து உள் அன்பு செறிந்து எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை, செழுஞ்சுடரை, சென்று அடையப் பெற்றேன், நானே.
[8]
அறிவு இலங்கு மனத்தானை, அறிவார்க்கு அன்றி அறியாதார் தம் திறத்து ஒன்று அறியாதானை, பொறி இலங்கு வாள் அரவம் புனைந்து பூண்ட புண்ணியனை, பொரு திரைவாய் நஞ்சம் உண்ட குறி இலங்கு மிடற்றானை, மடல்-தேன் கொன்றைச் சடையானை, மடைதோறும் கமலம் மென் பூச் செறி எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை, செழுஞ்சுடரை, சென்று அடையப் பெற்றேன், நானே.
[9]
அருந்தவத்தின் பெரு வலியால் அறிவது அன்றி, அடல் அரக்கன் தடவரையை எடுத்தான் திண்தோள் முரிந்து, நெரிந்து, அழிந்து, பாதாளம் உற்று, முன் கை நரம்பினை எடுத்துக் கீதம் பாட, இருந்தவனை; ஏழ் உலகும் ஆக்கினானை; எம்மானை; கைம்மாவின் உரிவை போர்த்த, திருந்து எறும்பியூர் மலைமேல், மாணிக்கத்தை; செழுஞ்சுடரை, சென்று அடையப் பெற்றேன், நானே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.092   மூ இலை வேல் கையானை,
பண் - திருத்தாண்டகம் (திருக்கழுக்குன்றம் வேதகிரீசுவரர் பெண்ணினல்லாளம்மை)
மூ இலை வேல் கையானை, மூர்த்தி தன்னை, முது பிணக்காடு உடையானை, முதல் ஆனானை, ஆவினில் ஐந்து உகந்தானை, அமரர் கோனை, ஆலாலம் உண்டு உகந்த ஐயன் தன்னை, பூவினின் மேல் நான்முகனும் மாலும் போற்றப் புணர்வு அரிய பெருமானை, புனிதன் தன்னை, காவலனை, கழுக்குன்றம் அமர்ந்தான் தன்னை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டேன், நானே.
[1]
பல் ஆடுதலை சடை மேல் உடையான் தன்னை, பாய் புலித்தோல் உடையானை, பகவன் தன்னை, சொல்லோடு பொருள் அனைத்தும் ஆனான் தன்னை, சுடர் உருவில் என்பு அறாக் கோலத்தானை, அல்லாத காலனை முன் அடர்த்தான் தன்னை, ஆலின் கீழ் இருந்தானை, அமுது ஆனானை, கல் ஆடை புனைந்து அருளும் காபாலி(ய்)யை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டேன், நானே.
[2]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.093   நேர்ந்து ஒருத்தி ஒருபாகத்து அடங்கக்
பண் - திருத்தாண்டகம் (பலவகைத் திருத்தாண்டகம் )
நேர்ந்து ஒருத்தி ஒருபாகத்து அடங்கக் கண்டு, நிலை தளர ஆயிரம் மா முகத்தினோடு பாய்ந்து ஒருத்தி படர் சடை மேல் பயிலக் கண்டு, பட அரவும் பனி மதியும் வைத்த செல்வர்- தாம் திருத்தித் தம் மனத்தை ஒருக்காத் தொண்டர்! தனித்து ஒரு தண்டு ஊன்றி மெய் தளரா முன்னம் பூந்துருத்தி பூந்துருத்தி என்பீர் ஆகில், பொல்லாப் புலால்-துருத்தி போக்கல் ஆமே.
[1]
ஐத் தானத்து அக மிடறு சுற்றி ஆங்கே அகத்து அடைந்தால யாதொன்றும் இடுவார் இல்லை; மைத் தானக் கண் மடவார் தங்களோடு மாயம் மனை வாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்! பைத் தானத்து ஒண்மதியும் பாம்பும் நீரும் படர் சடை மேல் வைத்து உகந்த பண்பன் மேய நெய்த்தானம் நெய்த்தானம் என்பீர் ஆகில், நிலாவாப் புலால்-தானம் நீக்கல் ஆமே.
இழவு ஒன்று தாம் ஒருவர்க்கு இட்டு ஒன்று ஈயார்; ஈன்று எடுத்த தாய் தந்தை பெண்டீர் மக்கள் கழல் நம் கோவை ஆதல் கண்டும், தேறார்; களித்த மனத்தராய்க் கருதி வாழ்வீர்! அழல் நம்மை நீக்குவிக்கும், அரையன் ஆக்கும், அமருலகம் ஆள்விக்கும், அம்மான் மேய பழனம் பழனமே என்பீர் ஆகில், பயின்று எழுந்த பழ வினை நோய் பாற்றல் ஆமே.
[4]
ஊற்றுத்துறை ஒன்பது உள்-நின்று ஓரீர்; ஒக்க அடைக்கும் போது உணர மாட்டீர்; மாற்றுத்துறை வழி கொண்டு ஓடாமுன்னம், மாயம் மனை வாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்! வேற்றுத் தொழில் பூண்டார் புரங்கள் மூன்றும் வெவ் அழல்வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீர் ஆகில், துயர் நீங்கித் தூ நெறிக்கண் சேரல் ஆமே.
[5]
கலம் சுழிக்கும் கருங்கடல் சூழ் வையம் தன்னில் கள்ளக் கடலில் அழுந்தி, வாளா நலம் சுழியா, எழும் நெஞ்சே! இன்பம் வேண்டில், நம்பன் தன் அடி இணைக்கே நவில்வாய் ஆகில், அலம் சுழிக்கும் மன் நாகம் தன்னால் மேய, அருமறையோடு ஆறு அங்கம் ஆனார் கோயில், வலஞ்சுழியே வலஞ்சுழியே என்பீர் ஆகில், வல்வினைகள் தீர்ந்து வான் ஆளல் ஆமே.
[6]
தண்டி, குண்டோதரன், பிங்கிருடி, சார்ந்த புகழ் நந்தி, சங்கு கன்னன், பண்டை உலகம் படைத்தான் தானும், பாரை அளந்தான், பல்லாண்டு இசைப்ப; திண்டி வயிற்றுச் சிறு கண் பூதம்-சில பாட; செங்கண் விடை ஒன்று ஊர்வான் கண்டியூர் கண்டியூர் என்பீர் ஆகில், கடுக நும் வல்வினையைக் கழற்றல் ஆமே.
[7]
விடம், மூக்கப் பாம்பே போல், சிந்தி, நெஞ்சே! வெள் ஏற்றான் தன் தமரைக் கண்டபோது வடம் ஊக்க மா முனிவர் போலச் சென்று, மா தவத்தார் மனத்து உளார், மழுவாள் செல்வர், படம் மூக்கப் பாம்பு அணையில் பள்ளியானும் பங்கயத்து மேல் அயனும் பரவிக் காணா, குடமூக்கே குடமூக்கே என்பீர் ஆகில், கொடுவினைகள் தீர்ந்து அரனைக் குறுகல் ஆமே.
[8]
தண் காட்ட, சந்தனமும் தவள நீறும்; தழை அணுகும் குறுங் கொன்றை மாலை சூடி; கண் காட்டா, கருவரை போல்-அனைய காஞ்சிக் கார் மயில் அம் சாயலார் கலந்து காண; எண் காட்டாக் காடு அங்கு இடமா நின்று(வ்) எரி வீசி; இரவு ஆடும் இறைவர் மேய வெண்காடே வெண்காடே என்பீர் ஆகில், வீடாத வல்வினை நோய் வீட்டல் ஆமே.
[9]
தந்தை யார்? தாய் யார்? உடன் பிறந்தார், தாரம், ஆர்? புத்திரர் ஆர்? தாம் தாம் ஆரே? வந்த ஆறு எங்ஙனே? போம் ஆறு ஏதோ? மாயம் ஆம்; இதற்கு ஏதும் மகிழ வேண்டா! சிந்தையீர்! உமக்கு ஒன்று சொல்லக் கேண்மின்: திகழ் மதியும் வாள் அரவும் திளைக்கும் சென்னி எந்தையார் திருநாமம் நமச்சிவாய என்று எழுவார்க்கு இரு விசும்பில் இருக்கல் ஆமே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.094   இரு நிலன் ஆய், தீ
பண் - புறநீர்மை (நின்றத் திருத்தாண்டகம் )
இரு நிலன் ஆய், தீ ஆகி, நீரும் மாகி, இயமானனாய், எறியும் காற்றும் மாகி, அரு நிலைய திங்கள் ஆய், ஞாயிறு ஆகி, ஆகாசம் ஆய், அட்ட மூர்த்தி யாகி, பெரு நலமும் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறர் உருவும் தம் உருவும் தாமே யாகி, நெருநலை ஆய், இன்று ஆகி, நாளை யாகி, நிமிர் புன்சடை அடிகள் நின்ற வாறே!.
[1]
மண் ஆகி, விண் ஆகி, மலையும் மாகி, வயிரமும் ஆய், மாணிக்கம் தானே யாகி, கண் ஆகி, கண்ணுக்கு ஓர் மணியும் மாகி, கலை ஆகி, கலை ஞானம் தானே யாகி, பெண் ஆகி, பெண்ணுக்கு ஓர் ஆணும் மாகி, பிரளயத்துக்கு அப்பால் ஓர் அண்டம் மாகி, எண் ஆகி எண்ணுக்கு ஓர் எழுத்தும் மாகி, எழும் சுடர் ஆய் எம் அடிகள் நின்ற வாறே!.
[2]
கல் ஆகி, களறு ஆகி, கானும் மாகி, காவிரி ஆய், கால் ஆறு ஆய், கழியும் மாகி, புல் ஆகி, புதல் ஆகி, பூடும் மாகி, புரம் ஆகி, புரம் மூன்றும் கெடுத்தான் ஆகி, சொல் ஆகி, சொல்லுக்கு ஓர் பொருளும் மாகி, சுலாவு ஆகி, சுலாவுக்கு ஓர் சூழல் ஆகி, நெல் ஆகி, நிலன் ஆகி, நீரும் மாகி, நெடுஞ்சுடர் ஆய் நிமிர்ந்து, அடிகள் நின்ற வாறே!.
[3]
காற்று ஆகி, கார் முகில் ஆய், காலம் மூன்று ஆய், கனவு ஆகி, நனவு ஆகி, கங்குல் ஆகி, கூற்று ஆகி, கூற்று உதைத்த கொல் களிறும் மாகி, குரை கடல் ஆய், குரை கடற்கு ஓர் கோமானு மாய், நீற்றானாய், நீறு ஏற்ற மேனி யாகி, நீள் விசும்பு ஆய், நீள் விசும்பின் உச்சி யாகி, ஏற்றானாய், ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி, எழும் சுடர் ஆய், எம் அடிகள் நின்ற வாறே.
[4]
தீ ஆகி, நீர் ஆகி, திண்மை ஆகி, திசை யாகி, அத் திசைக்கு ஓர் தெய்வம் மாகி, தாய் ஆகி, தந்தையாய், சார்வும் ஆகி, தாரகையும் ஞாயிறும் தண் மதியும் மாகி, காய் ஆகி, பழம் மாகி, பழத்தில் நின்ற இரதங்கள் நுகர்வானும் தானே யாகி, நீ ஆகி, நான் ஆகி, நேர்மை யாகி, நெடுஞ்சுடர் ஆய், நிமிர்ந்து அடிகள் நின்ற வாறே.
[5]
அங்கம் ஆய், ஆதி ஆய், வேதம் மாகி, அருமறையோடு ஐம்பூதம் தானே யாகி, பங்கம் ஆய், பல சொல்லும் தானே யாகி, பால் மதியோடு ஆதி ஆய், பான்மை யாகி, கங்கை ஆய், காவிரி ஆய், கன்னி ஆகி, கடல் ஆகி, மலை யாகி, கழியும் மாகி, எங்கும் ஆய், ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி, எழும் சுடர் ஆய், எம் அடிகள் நின்ற வாறே.
[6]
மாதா பிதா ஆகி, மக்கள் ஆகி, மறி கடலும் மால் விசும்பும் தானே யாகி, கோதாவிரி ஆய், குமரி ஆகி, கொல் புலித் தோல் ஆடைக் குழகன் ஆகி, போது ஆய் மலர் கொண்டு போற்றி நின்று புனைவார் பிறப்பு அறுக்கும் புனிதன் ஆகி, ஆதானும் என நினைந்தார்க்கு எளிதே யாகி, அழல் வண்ண வண்ணர் தாம் நின்ற வாறே!.
[7]
ஆ ஆகி, ஆவினில் ஐந்தும் ஆகி, அறிவு ஆகி, அழல் ஆகி, அவியும் மாகி, நா ஆகி, நாவுக்கு ஓர் உரையும் மாகி, நாதனாய், வேதத்தின் உள்ளோன் ஆகி, பூ ஆகி, பூவுக்கு ஓர் நாற்றம் மாகி, பூக்குளால் வாசம் ஆய் நின்றான் ஆகி, தே ஆகி, தேவர் முதலும் ஆகி, செழுஞ்சுடர் ஆய், சென்று அடிகள் நின்ற வாறே!.
[8]
நீர் ஆகி, நீள் அகலம் தானே யாகி, நிழல் ஆகி, நீள் விசும்பின் உச்சி யாகி, பேர் ஆகி, பேருக்கு ஓர் பெருமை யாகி, பெரு மதில்கள் மூன்றினையும் எய்தான் ஆகி, ஆரேனும் தன் அடைந்தார் தம்மை எல்லாம் ஆட்கொள்ள வல்ல எம் ஈசனார் தாம் பார் ஆகி, பண் ஆகி, பாடல் ஆகி, பரஞ்சுடர் ஆய், சென்று அடிகள் நின்ற வாறே!.
[9]
மால் ஆகி, நான்முகனாய், மா பூதம்(ம்) ஆய், மருக்கம் ஆய், அருக்கம் ஆய், மகிழ்வும் மாகி, பால் ஆகி, எண்திசைக்கும் எல்லை யாகி, பரப்பு ஆகி, பரலோகம் தானே யாகி, பூலோக புவலோக சுவலோகம்(ம்) ஆய், பூதங்கள் ஆய், புராணன் தானே யாகி, ஏலாதன எலாம் ஏல்விப்பானாய், எழும் சுடர் ஆய், எம் அடிகள் நின்ற வாறே!.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.095   அப்பன் நீ, அம்மை நீ,
பண் - திருத்தாண்டகம் (பொது -தனித் திருத்தாண்டகம் )
அப்பன் நீ, அம்மை நீ, ஐயனும் நீ,| அன்பு உடைய மாமனும் மாமியும் நீ, ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ,| ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ, துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ,| துணை ஆய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ, இப் பொன் நீ, இம் மணி நீ, இம் முத்து(ந்)நீ,| இறைவன் நீ-ஏறு ஊர்ந்த செல்வன் நீயே.
[1]
வெம்ப வருகிற்பது அன்று, கூற்றம் நம்மேல்;| வெய்ய வினைப் பகையும் பைய நையும்; எம் பரிவு தீர்ந்தோம்; இடுக்கண் இல்லோம்;| எங்கு எழில் என் ஞாயிறு? எளியோம் அல்லோம் அம் பவளச் செஞ்சடை மேல் ஆறு சூடி,| அனல் ஆடி, ஆன் அஞ்சும் ஆட்டு உகந்த செம்பவள வண்ணர், செங்குன்ற வண்ணர்,| செவ்வான வண்ணர், என் சிந்தையாரே.
[2]
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே? அடக்குவித்தால் ஆர் ஒருவர் அடங்காதாரே? ஓட்டுவித்தால் ஆர் ஒருவர் ஓடாதாரே? உருகுவித்தால் ஆர் ஒருவர் உருகாதாரே? பாட்டுவித்தால் ஆர் ஒருவர் பாடாதாரே? பணிவித்தால் ஆர் ஒருவர் பணியாதாரே? காட்டுவித்தால் ஆர் ஒருவர் காணாதாரே? காண்பார் ஆர், கண்ணுதலாய்! காட்டாக்காலே?.
[3]
நல் பதத்தார் நல் பதமே! ஞானமூர்த்தீ! | நலஞ்சுடரே! நால் வேதத்து அப்பால் நின்ற சொல் பதத்தார் சொல் பதமும் கடந்து நின்ற | சொலற்கு அரிய சூழலாய்! இது உன் தன்மை; நிற்பது ஒத்து நிலை இலா நெஞ்சம் தன்னுள் | நிலாவாத புலால் உடம்பே புகுந்து நின்ற கற்பகமே! யான் உன்னை விடுவேன் அல்லேன் |-கனகம், மா மணி, நிறத்து எம் கடவுளானே!.
[4]
திருக்கோயில் இல்லாத திரு இல் ஊரும், | திரு வெண் நீறு அணியாத திரு இல் ஊரும், பருக்கு ஓடிப் பத்திமையால் பாடா ஊரும், | பாங்கினொடு பல தளிகள் இல்லா ஊரும், விருப்போடு வெண் சங்கம் ஊதா ஊரும், | விதானமும் வெண்கொடியும் இல்லா ஊரும், அருப்போடு மலர் பறித்து இட்டு உண்ணா ஊரும், | அவை எல்லாம் ஊர் அல்ல; அடவி- காடே!.
[5]
திருநாமம் அஞ்சு எழுத்தும் செப்பார் ஆகில், | தீ வண்ணர் திறம் ஒரு கால் பேசார் ஆகில், ஒருகாலும் திருக்கோயில் சூழார் ஆகில், | உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணார் ஆகில், அருநோய்கள் கெட வெண்நீறு அணியார் ஆகில், | அளி அற்றார்; பிறந்த ஆறு ஏதோ என்னில், பெரு நோய்கள் மிக நலிய, பெயர்த்தும் செத்தும் | பிறப்பதற்கே தொழில் ஆகி, இறக்கின்றாரே!.
[6]
நின் ஆவார் பிறர் இன்றி நீயே ஆனாய்; | நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய்; மன் ஆனாய்; மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய்; | மறை நான்கும் ஆனாய்; ஆறு அங்கம் ஆனாய்; பொன் ஆனாய்; மணி ஆனாய்; போகம் ஆனாய்; | பூமிமேல் புகழ் தக்க பொருளே! உன்னை, என் ஆனாய்! என் ஆனாய்! என்னின் அல்லால், | ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே?.
[7]
அத்தா! உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்; | அருள் நோக்கில்-தீர்த்த நீர் ஆட்டிக் கொண்டாய்; எத்தனையும் அரியை நீ எளியை ஆனாய்; | எனை ஆண்டு கொண்டு இரங்கி ஏன்று கொண்டாய்; பித்தனேன், பேதையேன், பேயேன், நாயேன், | பிழைத் தனகள் அத்தனையும் பொறுத்தாய் அன்றே! இத்தனையும் எம் பரமோ? ஐய! ஐயோ! | எம்பெருமான் திருக்கருணை இருந்த ஆறே!.
[8]
குலம் பொல்லேன்; குணம் பொல்லேன்; குறியும் பொல்லேன்; | குற்றமே பெரிது உடையேன்; கோலம் ஆய நலம் பொல்லேன்; நான் பொல்லேன்; ஞானி அல்லேன்; | நல்லாரோடு இசைந்திலேன்; நடுவே நின்ற விலங்கு அல்லேன்; விலங்கு அல்லாது ஒழிந்தேன் அல்லேன்; | வெறுப்பனவும் மிகப் பெரிதும் பேச வல்லேன்; இலம் பொல்லேன்; இரப்பதே ஈய மாட்டேன்; |என் செய்வான் தோன்றினேன், ஏழையேனே?.
[9]
சங்க நிதி பதும நிதி இரண்டும் தந்து | தரணியொடு வான் ஆளத் தருவரேனும், மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம்,| மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லார் ஆகில் அங்கம் எலாம் குறைந்து அழுகு தொழுநோயரா(அ)ய் | ஆ உரித்துத் தின்று உழலும் புலையரேனும், கங்கை வார் சடைக் கரந்தார்க்கு அன்பர் ஆகில்,| அவர் கண்டீர், நாம் வணங்கும் கடவுளாரே!.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.096   ஆமயம் தீர்த்து அடியேனை ஆளாக்
பண் - திருத்தாண்டகம் (பொது -தனித் திருத்தாண்டகம் )
ஆமயம் தீர்த்து அடியேனை ஆளாக் கொண்டார்; அதிகை வீரட்டானம் ஆட்சி கொண்டார்; தாமரையோன் சிரம் அரிந்து கையில் கொண்டார்; தலை அதனில் பலி கொண்டார்; நிறைவு ஆம் தன்மை வாமனனார் மா காயத்து உதிரம் கொண்டார்; மான் இடம் கொண்டார்; வலங்கை மழுவாள் கொண்டார்; காமனையும் உடல் கொண்டார், கண்ணால் நோக்கி; கண்ணப்பர் பணியும் கொள் கபாலியாரே.
[1]
முப்புரி நூல் வரை மார்பில் முயங்கக் கொண்டார்; முது கேழல் முளை மருப்பும் கொண்டார், பூணா; செப்பு உருவம் முலை மலையாள் பாகம் கொண்டார்; செம்மேனி வெண் நீறு திகழக் கொண்டார்; துப்புரவு ஆர் சுரி சங்கின் தோடு கொண்டார்; சுடர் முடி சூழ்ந்து, அடி அமரர் தொழவும் கொண்டார்; அப் பலி கொண்டு ஆயிழையார் அன்பும் கொண்டார் அடியேனை ஆள் உடைய அடிகளாரே.
[2]
முடி கொண்டார்; முளை இள வெண் திங்களோடு மூசும் இள நாகம் உடன் ஆகக் கொண்டார்; அடி கொண்டார், சிலம்பு அலம்பு கழலும் ஆர்ப்ப; அடங்காத முயலகனை அடிக்கீழ்க் கொண்டார்; வடி கொண்டு ஆர்ந்து இலங்கும் மழு வலங்கைக் கொண்டார்; மாலை இடப்பாகத்தே மருவக் கொண்டார்; துடி கொண்டார்; கங்காளம் தோள் மேல் கொண்டார் சூலை தீர்த்து அடியேனை ஆட்கொண்டாரே.
[3]
பொக்கணமும் புலித்தோலும் புயத்தில் கொண்டார்; பூதப்படைகள் புடை சூழக் கொண்டார்; அக்கினொடு பட அரவம் அரை மேல் கொண்டார்; அனைத்து உலகும் படைத்து அவையும் அடங்கக் கொண்டார்; கொக்கு இறகும் கூவிளமும் கொண்டை கொண்டார்; கொடியானை அடல் ஆழிக்கு இரையாக் கொண்டார்; செக்கர் நிறத் திருமேனி திகழக் கொண்டார் செடியேனை ஆட்கொண்ட சிவனார் தாமே.
பாரிடங்கள் பல கருவி பயிலக் கொண்டார்; பவள நிறம் கொண்டார்; பளிங்கும் கொண்டார்; நீர் அடங்கு சடை முடி மேல் நிலாவும் கொண்டார்; நீல நிறம் கோலம் நிறை மிடற்றில் கொண்டார்; வார் அடங்கு வனமுலையார் மையல் ஆகி வந்து இட்ட பலி கொண்டார்; வளையும் கொண்டார்; ஊர் அடங்க, ஒற்றி நகர் பற்றிக் கொண்டார் உடல் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே.
[6]
அணி தில்லை அம்பலம் ஆடு அரங்காக் கொண்டார்; ஆலால அரு நஞ்சம் அமுதாக் கொண்டார்; கணி வளர் தார்ப் பொன் இதழிக் கமழ்தார் கொண்டார்; காதல் ஆர் கோடி கலந்து இருக்கை கொண்டார்; மணி பணத்த அரவம் தோள்வளையாக் கொண்டார்; மால் விடை மேல் நெடுவீதி போதக் கொண்டார்; துணி புலித்தோலினை ஆடை உடையாக் கொண்டார்; சூலம் கைக் கொண்டார் தொண்டு எனைக் கொண்டாரே.
[7]
பட மூக்கப் பாம்பு அணையானோடு, வானோன், பங்கயன், என்று அங்கு அவரைப் படைத்துக் கொண்டார்; குட மூக்கில் கீழ்க்கோட்டம் கோயில் கொண்டார்; கூற்று உதைத்து ஓர் வேதியனை உய்யக் கொண்டார்; நெடு மூக்கின் கரியின் உரி மூடிக் கொண்டார்; நினையாத பாவிகளை நீங்கக் கொண்டார்; இடம் ஆக்கி இடை மருதும் கொண்டார், பண்டே; என்னை இந் நாள் ஆட்கொண்ட இறைவர் தாமே.
[8]
எச்சன் இணை தலை கொண்டார்; பகன் கண் கொண்டார்; இரவிகளில் ஒருவன் பல் இறுத்துக் கொண்டார்; மெச்சன் விதாத்திரன் தலையும் வேறாக் கொண்டார்; விறல் அங்கி கரம் கொண்டார்; வேள்வி காத்து, உச்ச நமன் தாள் அறுத்தார்; சந்திரனை உதைத்தார்; உணர்வு இலாத் தக்கன் தன் வேள்வி எல்லாம் அச்சம் எழ அழித்துக் கொண்டு, அருளும் செய்தார் அடியேனை ஆட்கொண்ட அமலர் தாமே.
[9]
சடை ஒன்றில் கங்கையையும் தரித்துக் கொண்டார்; சாமத்தின் இசை வீணை தடவிக் கொண்டார்; உடை ஒன்றில் புள்ளி உழைத்தோலும் கொண்டார்; உள்குவார் உள்ளத்தை ஒருக்கிக் கொண்டார்; கடை முன்றில் பலி கொண்டார்; கனலும் கொண்டார்; காபால வேடம் கருதிக் கொண்டார்; விடை வென்றிக் கொடி அதனில் மேவக் கொண்டார் வெந்துயரம் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே.
[10]
குரா மலரோடு, அரா, மதியம், சடை மேல் கொண்டார்; குடமுழ, நந்தீசனை, வாசகனாக் கொண்டார்; சிராமலை தம் சேர்வு இடமாத் திருந்தக் கொண்டார்; தென்றல் நெடுந்தேரோனைப் பொன்றக் கொண்டார்; பராபரன் என்பது தமது பேராக் கொண்டார்; பருப்பதம் கைக்கொண்டார்; பயங்கள் பண்ணி இராவணன் என்று அவனைப் பேர் இயம்பக் கொண்டார் இடர் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே.
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.097   அண்டம் கடந்த சுவடும் உண்டோ?
பண் - திருத்தாண்டகம் (பொது -வினாவிடைத் திருத்தாண்டகம் )
அண்டம் கடந்த சுவடும் உண்டோ? அனல் அங்கை ஏந்திய ஆடல் உண்டோ? பண்டை எழுவர் படியும் உண்டோ? பாரிடங்கள் பல சூழப் போந்தது உண்டோ? கண்டம் இறையே கறுத்தது உண்டோ? கண்ணின் மேல் கண் ஒன்று கண்டது உண்டோ? தொண்டர்கள் சூழத் தொடர்ச்சி உண்டோ? சொல்லீர், எம்பிரானாரைக் கண்ட ஆறே!.
[1]
எரிகின்ற இள ஞாயிறு அன்ன மேனி இலங்கிழை ஓர்பால் உண்டோ? வெள் ஏறு உண்டோ? விரிகின்ற பொறி அரவத் தழலும் உண்டோ? வேழத்தின் உரி உண்டோ? வெண்நூல் உண்டோ? வரி நின்ற பொறி அரவச் சடையும் உண்டோ? அச் சடை மேல் இளமதியம் வைத்தது உண்டோ? சொரிகின்ற புனல் உண்டோ? சூலம் உண்டோ? சொல்லீர், எம்பிரானாரைக் கண்ட ஆறே!.
[2]
நிலா மாலை செஞ்சடை மேல் வைத்தது உண்டோ? நெற்றி மேல் கண் உண்டோ? நீறு சாந்தோ? புலால் நாறு வெள் எலும்பு பூண்டது உண்டோ? பூதம் தற் சூழ்ந்தனவோ? போர் ஏறு உண்டோ? கலாம் மாலை வேல் கண்ணாள் பாகத்து உண்டோ? கார்க் கொன்றை மாலை கலந்தது உண்டோ? சுலா மாலை ஆடு அரவம் தோள் மேல் உண்டோ? சொல்லீர், எம்பிரானாரைக் கண்ட ஆறே.
[3]
பண் ஆர்ந்த வீணை பயின்றது உண்டோ? பாரிடங்கள் பல சூழப் போந்தது உண்டோ? உண்ணா அரு நஞ்சம் உண்டது உண்டோ? ஊழித்தீ அன்ன ஒளிதான் உண்டோ? கண் ஆர் கழல் காலற் செற்றது உண்டோ? காமனையும் கண் அழலால் காய்ந்தது உண்டோ? எண்ணார் திரிபுரங்கள் எய்தது உண்டோ? எவ் வகை, எம்பிரானாரைக் கண்ட ஆறே?.
[4]
நீறு உடைய திருமேனி பாகம் உண்டோ? நெற்றி மேல் ஒற்றைக் கண் முற்றும் உண்டோ? கூறு உடைய கொடு மழுவாள் கையில் உண்டோ? கொல் புலித் தோல் உடை உண்டோ? கொண்ட வேடம் ஆறு உடைய சடை உண்டோ? அரவம் உண்டோ? அதன் அருகே பிறை உண்டோ? அளவு இலாத ஏறு உடைய கொடி உண்டோ? இலயம் உண்டோ? எவ் வகை, எம்பிரானாரைக் கண்ட ஆறே?.
[5]
பட்டமும் தோடும் ஓர் பாகம் கண்டேன்; பார் திகழப் பலி திரிந்து போதக் கண்டேன்; கொட்டி நின்று இலயங்கள் ஆடக் கண்டேன்; குழை காதில், பிறை சென்னி, இலங்கக் கண்டேன்; கட்டங்கக் கொடி திண்தோள் ஆடக் கண்டேன்; கனம் மழுவாள் வலங்கையில் இலங்கக் கண்டேன்; சிட்டனைத் திரு ஆலவாயில் கண்டேன்-தேவனைக் கனவில் நான் கண்ட ஆறே!.
[6]
அலைத்து ஓடு புனல் கங்கை சடையில் கண்டேன்; அலர் கொன்றைத்தார் அணிந்த ஆறு கண்டேன்; பலிக்கு ஓடித் திரிவார் கைப் பாம்பு கண்டேன்; பழனம் புகுவாரைப் பகலே கண்டேன்; கலிக் கச்சி மேற்றளியே இருக்கக் கண்டேன்; கறை மிடறும் கண்டேன்; கனலும் கண்டேன்; வலித்து உடுத்த மான் தோல் அரையில் கண்டேன் -மறை வல்ல மா தவனைக் கண்ட ஆறே!.
[7]
நீறு ஏறு திருமேனி நிகழக் கண்டேன்; நீள் சடைமேல் நிறை கங்கை ஏறக் கண்டேன்; கூறு ஏறு கொடு மழுவாள் கொள்ளக் கண்டேன்; கொடு கொட்டி, கை அலகு, கையில் கண்டேன்; ஆறு ஏறு சென்னி அணி மதியும் கண்டேன்; அடியார்கட்கு ஆர் அமுதம் ஆகக் கண்டேன்; ஏறு ஏறி இந் நெறியே போதக் கண்டேன்-இவ் வகை எம்பெருமானைக் கண்ட ஆறே!.
[8]
விரையுண்ட வெண் நீறு தானும் உண்டு; வெண் தலை கை உண்டு; ஒரு கை வீணை உண்டு; சுரை உண்டு; சூடும் பிறை ஒன்று உண்டு; சூலமும் தண்டும் சுமந்தது உண்டு(வ்); அரையுண்ட கோவண ஆடை உண்டு(வ்); அலிக்கோலும் தோலும் அழகா உண்டு(வ்); இரை உண்டு அறியாத பாம்பும் உண்டு(வ்) இமையோர் பெருமான் இலாதது என்னே?
[9]
மைப் படிந்த கண்ணாளும் தானும் கச்சி-மயானத்தான், வார்சடையான் என்னின், அல்லான்; ஒப்பு உடையன் அல்லன்; ஒருவன் அல்லன்; ஓர் ஊரன் அல்லன்; ஓர் உவமன் இ(ல்)லி; அப் படியும் அந் நிறமும் அவ் வண்ண(ம்)மும் அவன் அருளே கண் ஆகக் காணின் அல்லால், இப் படியன், இந் நிறத்தன், இவ் வண்ணத்தன், இவன் இறைவன் என்று எழுதிக் காட்ட ஒணாதே.
[10]
பொன் ஒத்த மேனி மேல் பொடியும் கண்டேன்; புலித்தோல் உடை கண்டேன்; புணரத் தன்மேல் மின் ஒத்த நுண் இடையாள் பாகம் கண்டேன்; மிளிர்வது ஒரு பாம்பும் அரை மேல் கண்டேன்; அன்னத் தேர் ஊர்ந்த அரக்கன் தன்னை அலற அடர்த்திட்ட அடியும் கண்டேன்; சின்ன மலர்க் கொன்றைக் கண்ணி கண்டேன்- சிவனை நான் சிந்தையுள் கண்ட ஆறே!.
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.098   நாம் ஆர்க்கும் குடி அல்லோம்;
பண் - திருத்தாண்டகம் (பொது - மறுமாற்றம் )
நாம் ஆர்க்கும் குடி அல்லோம்; நமனை அஞ்சோம்;
நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;
ஏமாப்போம்; பிணி அறியோம்; பணிவோம் அல்லோம்;
இன்பமே, எந்நாளும், துன்பம் இல்லை;
தாம் ஆர்க்கும் குடி அல்லாத் தன்மை ஆன சங்கரன்,
நல் சங்க வெண்குழை ஓர் காதின்
கோமாற்கே, நாம் என்றும் மீளா ஆள் ஆய்க்
கொய்ம்மலர்ச் சேவடி இணையே குறுகினோமே.
[1]
அகலிடமே இடம் ஆக ஊர்கள் தோறும்
அட்டு உண்பார், இட்டு உண்பார், விலக்கார், ஐயம்;
புகல் இடம் ஆம் அம்பலங்கள்; பூமிதேவி
உடன் கிடந்தால் புரட்டாள்; பொய் அன்று, மெய்யே;
இகல் உடைய விடை உடையான் ஏன்று கொண்டான்;
இனி ஏதும் குறைவு இலோம்; இடர்கள் தீர்ந்தோம்;
துகில் உடுத்துப் பொன் பூண்டு திரிவார் சொல்லும்
சொல் கேட்கக் கடவோமோ? துரிசு அற்றோமே.
[2]
வார் ஆண்ட கொங்கையர் சேர் மனையில் சேரோம்;
மாதேவா! மாதேவா! என்று வாழ்த்தி,
நீர் ஆண்ட புரோதாயம் ஆடப் பெற்றோம்;
நீறு அணியும் கோலமே நிகழப் பெற்றோம்;
கார் ஆண்ட மழை போலக் கண்ணீர் சோரக்
கல் மனமே நல் மனமாக் கரையப் பெற்றோம்;
பார் ஆண்டு பகடு ஏறித் வருவார் சொல்லும்
பணி கேட்கக் கடவோமோ? பற்று அற்றோமே.
[3]
உறவு ஆவார், உருத்திர பல் கணத்தினோர்கள்;
உடுப்பன கோவணத்தொடு கீள் உள ஆம் அன்றே;
செறு வாரும் செற மாட்டார்; தீமை தானும்
நன்மை ஆய்ச் சிறப்பதே; பிறப்பில் செல்லோம்;
நறவு ஆர் பொன் இதழி நறுந் தாரோன்
சீர் ஆர் நமச்சிவாயம் சொல்ல வல்லோம், நாவால்;
சுறவு ஆரும் கொடியானைப் பொடியாக் கண்ட
சுடர் நயனச் சோதியையே தொடர்வு உற்றோமே.
[4]
என்றும் நாம் யாவர்க்கும் இடைவோம் அல்லோம்;
இரு நிலத்தில் எமக்கு எதிர் ஆவாரும் இல்லை;
சென்று நாம் சிறு தெய்வம் சேர்வோம் அல்லோம்;
சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்;
ஒன்றினால் குறை உடையோம் அல்லோம் அன்றே;
உறு பிணியார் செறல் ஒழிந்திட்டு ஓடிப் போனார்;
பொன்றினார் தலை மாலை அணிந்த
சென்னிப் புண்ணியனை நண்ணிய புண்ணியத்து உளோமே.
[5]
மூ உருவில் முதல் உருவாய், இரு-நான்கு
ஆன மூர்த்தியே! என்று முப்பத்து மூவர்-
தேவர்களும் மிக்கோரும் சிறந்து வாழ்த்தும்
செம்பவளத் திருமேனிச் சிவனே! என்னும்
நா உடையார் நமை ஆள உடையார் அன்றே;
நாவல் அம் தீவு அகத்தினுக்கு நாதர் ஆன
காவலரே ஏவி விடுத்தாரேனும்,
கடவம் அலோம்; கடுமையொடு களவு அற்றோமே.
[6]
நிற்பனவும், நடப்பனவும், நிலனும், நீரும்,
நெருப்பினொடு, காற்று ஆகி, நெடு வான் ஆகி,
அற்பமொடு பெருமையும் ஆய், அருமை ஆகி, அன்பு
உடையார்க்கு எளிமையது ஆய், அளக்கல் ஆகாத்
தற்பரம் ஆய், சதாசிவம் ஆய், தானும் யானும்
ஆகின்ற தன்மையனை நன்மையோடும்
பொற்பு உடைய பேசக் கடவோம்; பேயர்
பேசுவன பேசுதுமோ? பிழை அற்றோமே.
[7]
ஈசனை, எவ் உலகினுக்கும் இறைவன் தன்னை,
இமையவர் தம் பெருமானை, எரி ஆய் மிக்க
தேசனை, செம்மேனி வெண் நீற்றானை,
சிலம்பு அரையன் பொன் பாவை நலம் செய்கின்ற
நேசனை, நித்தலும் நினையப் பெற்றோம்;
நின்று உண்பார் எம்மை நினையச் சொன்ன
வாசகம் எல்லாம் மறந்தோம் அன்றே;
வந்தீர் ஆர்? மன்னவன் ஆவான் தான் ஆரே?.
[8]
சடை உடையான்; சங்கக் குழை ஓர் காதன்;
சாம்பலும் பாம்பும் அணிந்த மேனி,
விடை உடையான்; வேங்கை அதள் மேல் ஆடை,
வெள்ளி போல் புள்ளி உழை- மான்தோல் சார்ந்த
உடை, உடையான்; நம்மை உடையான் கண்டீர்;
உம்மோடு மற்றும் உளராய் நின்ற
படை உடையான் பணி கேட்கும் பணியோம் அல்லோம்;
பாசம் அற வீசும் படியோம், நாமே.
[9]
நா ஆர நம்பனையே பாடப் பெற்றோம்;
நாண் அற்றார் நள்ளாமே விள்ளப் பெற்றோம்;
ஆவா! என்று எமை ஆள்வான், அமரர் நாதன்,
அயனொடு மாற்கு அறிவு அரிய அனல் ஆய் நீண்ட
தேவாதி தேவன், சிவன், என் சிந்தை சேர்ந்து இருந்தான்;
தென் திசைக்கோன் தானே வந்து,
கோ ஆடி, குற்றேவல் செய்க என்றாலும்,
குணம் ஆகக் கொள்ளோம்; எண் குணத்து உளோமே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.099   எண்ணுகேன்; என் சொல்லி எண்ணுகேனோ,
பண் - திருத்தாண்டகம் (திருப்புகலூர் அக்கினீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
எண்ணுகேன்; என் சொல்லி எண்ணுகேனோ, எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால்? கண் இலேன்! மற்று ஓர் களை கண் இல்லேன், கழல் அடியே கை தொழுது காணின் அல்லால்; ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்; ஒக்க அடைக்கும் போது உணர மாட்டேன்; புண்ணியா! உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே!.
[1]
அங்கமே பூண்டாய்! அனல் ஆடினாய்! ஆதிரையாய்! ஆல் நிழலாய்! ஆன் ஏறு ஊர்ந்தாய்! பங்கம் ஒன்று இல்லாத படர் சடையினாய்! பாம்பொடு திங்கள் பகை தீர்த்து ஆண்டாய்! சங்கை ஒன்று இன்றியே தேவர் வேண்டச் சமுத்திரத்தின் நஞ்சு உண்டு, சாவா மூவாச் சிங்கமே! உன் அடிக்கே போதுகின்றேன் திருப் புகலூர் மேவிய தேவதேவே!.
[2]
பை அரவக் கச்சையாய்! பால் வெண் நீற்றாய்! பளிக்குக் குழையினாய்! பண் ஆர் இன்சொல் மை விரவு கண்ணாளைப் பாகம் கொண்டாய்! மான்மறி கை ஏந்தினாய்! வஞ்சக் கள்வர்- ஐவரையும் என்மேல்-தரவு அறுத்தாய்; அவர் வேண்டும் காரியம் இங்கு ஆவது இல்லை; பொய் உரையாது உன் அடிக்கே போதுகின்றேன்- பூம் புகலூர் மேவிய புண்ணியனே!.
[3]
தெருளாதார் மூ எயிலும் தீயில் வேவச் சிலை வளைத்து, செங் கணையால் செற்ற தேவே! மருளாதார் தம் மனத்தில் வாட்டம் தீர்ப்பாய்! மருந்து ஆய்ப் பிணி தீர்ப்பாய், வானோர்க்கு என்றும்! அருள் ஆகி, ஆதி ஆய், வேதம் ஆகி, அலர் மேலான் நீர் மேலான் ஆய்ந்தும் காணாப் பொருள் ஆவாய்! உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே!.
[4]
நீர் ஏறு செஞ்சடை மேல் நிலா வெண் திங்கள் நீங்காமை வைத்து உகந்த நீதியானே! பார் ஏறு படுதலையில் பலி கொள்வானே! பண்டு அநங்கற் காய்ந்தானே! பாவநாசா! கார் ஏறு முகில் அனைய கண்டத்தானே! கருங்கைக் களிற்று உரிவை கதறப் போர்த்த போர் ஏறே! உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே!.
[5]
விரிசடையாய்! வேதியனே! வேத கீதா! விரி பொழில் சூழ் வெண் காட்டாய்! மீயச் சூராய்! திரிபுரங்கள் எரி செய்த தேவதேவே! திரு ஆரூர்த் திரு மூலட்டானம் மேயாய்! மருவு இனியார் மனத்து உளாய்! மாகாளத்தாய்! வலஞ்சுழியாய்! மா மறைக்காட்டு எந்தாய்! என்றும் புரிசடையாய்! உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே!.
[6]
தே ஆர்ந்த தேவனை, தேவர் எல்லாம் திருவடி மேல் அலர் இட்டு, தேடி நின்று, நா ஆர்ந்த மறை பாடி, நட்டம் ஆடி, நான்முகனும் இந்திரனும் மாலும் போற்ற, கா ஆர்ந்த பொழில்-சோலைக் கானப்பேராய்! கழுக்குன்றத்து உச்சியாய்! கடவுளே! நின் பூ ஆர்ந்த பொன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே!.
[7]
நெய் ஆடி! நின்மலனே! நீலகண்டா! நிறைவு உடையாய்! மறை வல்லாய்! நீதியானே! மை ஆடு கண் மடவாள் பாகத்தானே! மான் தோல் உடையாய்! மகிழ்ந்து நின்றாய்! கொய் ஆடு கூவிளம் கொன்றை மாலை கொண்டு, அடியேன் நான் இட்டு, கூறி நின்று பொய்யாத சேவடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே!.
[8]
துன்னம் சேர் கோவணத்தாய்! தூய நீற்றாய்! துதைந்து இலங்கு வெண் மழுவாள் கையில் ஏந்தி, தன் அணையும் தண் மதியும் பாம்பும் நீரும் சடை முடிமேல் வைத்து உகந்த தன்மையானே! அன்ன நடை மடவாள் பாகத்தானே! அக்கு ஆரம் பூண்டானே! ஆதியானே! பொன் அம்கழல் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே!.
[9]
ஒருவரையும் அல்லாது உணராது, உள்ளம்; உணர்ச்சித் தடுமாற்றத்துள்ளே நின்ற இருவரையும் மூவரையும் என்மேல் ஏவி, இல்லாத தரவு அறுத்தாய்க்கு இல்லேன்; ஏலக் கருவரை சூழ் கானல் இலங்கை வேந்தன் கடுந் தேர் மீது ஓடாமைக் காலால் செற்ற பொரு வரையாய்! உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே!.
[10]
This page was last modified on Sat, 20 Jul 2024 00:11:37 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org