Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.001   பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா! எத்தால்
பண் - இந்தளம் (திருவெண்ணெய்நல்லூர் தடுத்தாட்கொண்டவீசுவரர் வேற்கண்மங்கையம்மை)
நாயேன் பல நாளும் நினைப்பு இன்றி, மனத்து உன்னை,
பேய் ஆய்த் திரிந்து எய்த்தேன்; பெறல் ஆகா அருள் பெற்றேன்;
வேய் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
ஆயா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .
[2]
மன்னே! மறவாதே நினைக்கின்றேன், மனத்து உன்னை;
பொன்னே, மணிதானே, வயிர(ம்)மே, பொருது உந்தி
மின் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
அன்னே! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .
[3]
முடியேன்; இனிப் பிறவேன்; பெறின் மூவேன்; பெற்றம் ஊர்தீ!
கொடியேன் பல பொய்யே உரைப்பேனைக் குறிக்கொள், நீ!
செடிஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
அடிகேள்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .
[4]
பாதம் பணிவார்கள் பெறும் பண்டம்(ம்) அது பணியாய்!
ஆதன் பொருள் ஆனேன்; அறிவு இல்லேன்; அருளாளா!
தாது ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
ஆதீ! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .
[5]
தண் ஆர் மதிசூடீ! தழல் போலும் திருமேனீ!
எண்ணார் புரம் மூன்றும் எரியுண்ண(ந்) நகை செய்தாய்!
மண் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
அண்ணா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .
[6]
ஊன் ஆய், உயிர் ஆனாய்; உடல் ஆனாய்; உலகு ஆனாய்;
வான் ஆய், நிலன் ஆனாய்; கடல் ஆனாய்; மலை ஆனாய்;
தேன் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
ஆனாய்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .
[7]
ஏற்றார் புரம் மூன்றும் எரியுண்ணச் சிலை தொட்டாய்!
தேற்றாதன சொல்லித் திரிவேனோ? செக்கர் வான் நீர்
ஏற்றாய்! பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
ஆற்றாய்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .
[8]
மழுவாள் வலன் ஏந்தீ! மறை ஓதீ! மங்கை பங்கா!
தொழுவார் அவர் துயர் ஆயின தீர்த்தல் உன தொழிலே;
செழு வார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
அழகா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .
[9]
கார் ஊர் புனல் எய்தி, கரை கல்லித் திரைக் கையால்
பார் ஊர் புகழ் எய்தி, திகழ் பல் மா மணி உந்தி,
சீர் ஊர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
ஆரூரன் எம்பெருமாற்கு ஆள் அல்லேன் எனல் ஆமே? .
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.002   கோத்திட்டையும் கோவலும் கோவில் கொண்டீர்;
பண் - இந்தளம் (திருப்பரங்குன்றம் பரங்கிரிநாதர் ஆவுடைநாயகியம்மை)
கோத்திட்டையும் கோவலும் கோவில் கொண்டீர்; உம்மைக் கொண்டு உழல்கின்றது ஓர், கொல்லைச் சில்லை, சே, திட்டுக் குத்தித் தெருவே திரியும்; சில பூதமும் நீரும் திசை திசையன; சோத்திட்டு விண்ணோர் பலரும் தொழ, நும் அரைக் கோவணத்தோடு ஒரு தோல் புடைசூழ்ந்து, ஆர்த்திட்டதும் பாம்பு; கைக் கொண்டதும் பாம்பு அடிகேள்! உமக்கு ஆட்செய அஞ்சுதுமே .
[1]
முண்டம் தரித்தீர்; முதுகாடு உறைவீர்; முழுநீறு மெய் பூசுதிர்; மூக்கப் பாம்பைக் கண்டத்திலும் தோளிலும் கட்டி வைத்தீர்; கடலைக் கடைந்திட்டது ஓர் நஞ்சை உண்டீர்; பிண்டம் சுமந்து உம்மொடும் கூடமாட்டோம்; பெரியாரொடு நட்பு இனிது என்று இருத்தும்; அண்டம் கடந்து அப் புறத்தும் இருந்தீர் அடிகேள்! உமக்கு ஆட்செய அஞ்சுதுமே .
[2]
மூடு ஆய முயலகன், மூக்கப் பாம்பு, முடை நாறிய வெண்தலை, மொய்த்த பல் பேய், பாடாவரு பூதங்கள், பாய் புலித்தோல், பரிசு ஒன்று அறியாதன பாரிடங்கள், தோடு ஆர் மலர்க் கொன்றையும், துன் எருக்கும்; துணை மா மணி நாகம் அரைக்கு அசைத்து, ஒன்று ஆடாதனவே செய்தீர்; எம்பெருமான்! அடிகேள்! உமக்கு ஆட்செய அஞ்சுதுமே .
[3]
மஞ்சுண்ட மாலை மதி சூடு சென்னி, மலையான் மடந்தை மணவாள நம்பி! பஞ்சுண்ட அல்குல் பணை மென் முலையாளொடு நீரும் ஒன்று ஆய் இருத்தல் ஒழியீர்; நஞ்சு உண்டு தேவர்க்கு அமுதம் கொடுத்த நலம் ஒன்று அறியோம்; உம் கை நாகம் அதற்கு அஞ்சு உண்டு, படம்; அது போக விடீர் அடிகேள்! உமக்கு ஆட்செய அஞ்சுதுமே .
[4]
பொல்லாப் புறங்காட்டு அகத்து ஆட்டு ஒழியீர்; புலால் வாயன பேயொடு பூச்சு ஒழியீர்; எல்லாம் அறிவீர்; இதுவே அறியீர் என்று இரங்குவேன், எல்லியும் நண்பகலும்; கல்லால் நிழல் கீழ் ஒரு நாள் கண்டதும், கடம்பூர்க் கரக்கோயிலில் முன் கண்டதும், அல்லால் விரகு ஒன்று இலம்; எம்பெருமான்! அடிகேள்! உமக்கு ஆட்செய அஞ்சுதுமே .
[5]
தென்னாத்தெனாத்தெத்தெனா என்று பாடிச் சில்பூதமும் நீரும் திசை திசையன; பல்-நால்மறை பாடுதிர்; பாசூர் உளீர்; படம் பக்கம் கொட்டும் திரு ஒற்றியூரீர்; பண் ஆர் மொழியாளை ஓர் பங்கு உடையீர்; படு காட்டு அகத்து என்றும் ஓர் பற்று ஒழியீர்; அண்ணாமலையேன் என்றீர்; ஆரூர் உளீர் அடிகேள்! உமக்கு ஆட்செய அஞ்சுதுமே .
[6]
சிங்கத்து உரி மூடுதிர்; தேவர் கணம் தொழ நிற்றீர்; பெற்றம் உகந்து ஏறிடுதிர்; பங்கம் பல பேசிடப் பாடும் தொண்டர் தமைப் பற்றிக் கொண்டு ஆண்டு விடவும் கில்லீர்; கங்கைச் சடையீர்! உம் கருத்து அறியோம்; கண்ணும் மூன்று உடையீர்; கண்ணே ஆய் இருந்தால், அங்கத்து உறு நோய் களைந்து ஆளகில்லீர் அடிகேள்! உமக்கு ஆட்செய அஞ்சுதுமே .
[7]
பிணி வண்ணத்த வல்வினை தீர்த்து அருளீர்; பெருங்காட்டு அகத்தில் பெரும் பேயும் நீரும் துணி வண்ணத்தின் மேலும் ஓர் தோல் உடுத்து, சுற்றும் நாகத்தராய், சுண்ண நீறு பூசி, மணி வண்ணத்தின் மேலும் ஓர் வண்ணத்தராய், மற்றும் மற்றும் பல்பல வண்ணத்தராய், அணி வண்ணத்தராய், நிற்றீர்; எம்பெருமான்! அடிகேள்! உமக்கு ஆட்செய அஞ்சுதுமே .
[8]
கோள் ஆளிய குஞ்சரம் கோள் இழைத்தீர்; மலையின் தலை அல்லது கோயில் கொள்ளீர்; வேள் ஆளிய காமனை வெந்து அழிய விழித்தீர்; அது அன்றியும், வேய் புரையும் தோளான் உமை நங்கை ஓர்பங்கு உடையீர்; உடு கூறையும் சோறும் தந்து ஆளகில்லீர்; ஆள் ஆளியவே கிற்றீர்; எம்பெருமான்! அடிகேள்! உமக்கு ஆட்செய அஞ்சுதுமே .
[9]
பாரோடு விண்ணும் பகலும் ஆகி, பனி மால்வரை ஆகி, பரவை ஆகி, நீரோடு தீயும் நெடுங் காற்றும் ஆகி, நெடு வெள்ளிடை ஆகி, நிலனும் ஆகி, தேர் ஓட வரை எடுத்த அரக்கன் சிரம் பத்து இறுத்தீர்; உம் செய்கை எல்லாம் ஆரோடும் கூடா; அடிகேள்! இது என்? அடியோம் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே.
[10]
அடிகேள்! உமக்கு ஆட்செய அஞ்சுதும் என்று அமரர் பெருமானை ஆரூரன் அஞ்சி, முடியால் உலகு ஆண்ட மூவேந்தர் முன்னே மொழிந்த ஆறும் ஓர் நான்கும், ஓர் ஒன்றினையும் படியா, இவை கற்று வல்ல அடியார், பரங்குன்றம் மேய பரமன் அடிக்கே குடி ஆகி, வானோர்க்கும் ஓர் கோவும் ஆகி, குல வேந்தராய் விண் முழுது ஆள்பவரே .
[11]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.003   கல்வாய் அகிலும் கதிர் மா
பண் - இந்தளம் (திருநெல்வாயில் அரத்துறை அரத்துறைநாதர் ஆனந்தநாயகியம்மை)
கல்வாய் அகிலும் கதிர் மா மணியும் கலந்து உந்தி வரும் நிவவின் கரை மேல் நெல்வாயில் அரத்துறை நீடு உறையும், நில வெண்மதி சூடிய, நின்மலனே! நல் வாய் இல்செய்தார், நடந்தார், உடுத்தார், நரைத்தார், இறந்தார் என்று நானிலத்தில் சொல் ஆய்க் கழிகின்றது அறிந்து, அடியேன் தொடர்ந்தேன்; உய்யப் போவது ஓர் சூழல் சொல்லே! .
[1]
கறி மா மிளகும் மிகு வல் மரமும் மிக உந்தி வரும் நிவவின் கரை மேல், நெறி வார் குழலார் அவர் காண, நடம் செய் நெல்வாயில் அரத்துறை நின்மலனே! வறிதே நிலையாத இம் மண்ணுலகில் நரன் ஆக வகுத்தனை; நான் நிலையேன்; பொறி வாயில் இவ் ஐந்தினையும் அவியப் பொருது, உன் அடியே புகும் சூழல் சொல்லே!.
[2]
புற்று ஆடு அரவம்(ம்) அரை ஆர்த்து உகந்தாய்! புனிதா! பொரு வெள் விடை ஊர்தியினாய்! எற்றே ஒரு கண் இலன், நின்னை அல்லால், நெல்வாயில் அரத்துறை நின்மலனே! மற்றே ஒரு பற்று இலன்; எம்பெருமான்! வண்டு ஆர் குழலாள் மங்கை பங்கினனே! அற்று ஆர் பிறவிக் கடல் நீந்தி ஏறி, அடியேன் உய்யப் போவது ஓர் சூழல் சொல்லே! .
[3]
கோடு உயர் கோங்கு அலர் வேங்கை அலர் மிக உந்தி வரும் நிவவின் கரை மேல் நீடு உயர் சோலை நெல்வாயில் அரத்துறை நின்மலனே! நினைவார் மனத்தாய்! ஓடு புனல் கரை ஆம், இளமை; உறங்கி விழித்தால் ஒக்கும், இப் பிறவி; வாடி இருந்து வருந்தல் செய்யாது, அடியேன் உய்யப் போவது ஓர் சூழல் சொல்லே!.
[4]
உலவும் முகிலில்-தலை கல் பொழிய, உயர் வேயொடு இழி நிவவின் கரை மேல், நிலவும் மயிலார் அவர் தாம் பயிலும், நெல்வாயில் அரத்துறை நின்மலனே! புலன் ஐந்தும் மயங்கி, அகம் குழைய, பொரு வேல் ஓர் நமன் தமர் தாம் நலிய, அலமந்து மயங்கி அயர்வதன் முன், அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே!.
[5]
ஏலம்(ம்) இலவங்கம் எழில் கனகம் மிக உந்தி வரும் நிவவின் கரை மேல், நீலம் மலர்ப் பொய்கையில் அன்னம் மலி, நெல்வாயில் அரத்துறையாய்! ஒரு நெல்- வால் ஊன்ற வருந்தும் உடம்பு இதனை மகிழாது, அழகா! அலந்தேன், இனி யான்; ஆல(ந்)நிழலில் அமர்ந்தாய்! அமரா! அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே!.
[6]
சிகரம் முகத்தில்-திரள் ஆர் அகிலும் மிக உந்தி வரும் நிவவின் கரை மேல், நிகர் இல் மயிலார் அவர் தாம் பயிலும், நெல் வாயில் அரத்துறை நின்மலனே! மகரக்குழையாய்! மணக்கோலம் அதே பிணக்கோலம் அது ஆம், பிறவி இது தான்; அகரம் முதலின் எழுத்து ஆகி நின்றாய்! அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே! .
[7]
திண் தேர் நெடுவீதி இலங்கையர் கோன் திரள் தோள் இருபஃதும் நெரித்து அருளி, ஞெண்டு ஆடு நெடு வயல் சூழ் புறவின் நெல்வாயில் அரத்துறை நின்மலனே! பண்டே மிக நான் செய்த பாக்கியத்தால், பரஞ்சோதி! நின் நாமம் பயிலப் பெற்றேன்; அண்டா! அமரர்க்கு அமரர் பெருமான்! அடியேன் உய்யப் போவது ஓர் சூழல் சொல்லே! .
[8]
மாணா உரு ஆகி ஓர் மண் அளந்தான், மலர் மேலவன், நேடியும் காண்பு அரியாய்! நீள்நீள் முடி வானவர் வந்து இறைஞ்சும் நெல்வாயில் அரத்துறை நின்மலனே! வாண் ஆர் நுதலார் வலைப்பட்டு, அடியேன், பலவின் கனி ஈஅது போல்வதன் முன், ஆணொடு பெண் ஆம் உரு ஆகி நின்றாய்! அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே!.
[9]
நீர் ஊரும் நெடு வயல் சூழ் புறவின் நெல்வாயில் அரத்துறை நின்மலனைத் தேர் ஊர் நெடுவீதி நல் மாடம் மலி தென் நாவலர் கோன்-அடித்தொண்டன், அணி ஆரூரன்-உரைத்தன நல்-தமிழின் மிகு மாலை ஓர் பத்து இவை கற்று வல்லார் கார் ஊர் களி வண்டு அறை யானை மன்னர்-அவர் ஆகி, ஓர் விண்முழுது ஆள்பவரே .
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.004   தலைக்குத் தலை மாலை அணிந்தது
பண் - இந்தளம் (திருஅஞ்சைக்களம் அஞ்சைக்களத்தீசுவரர் உமையம்மை)
தலைக்குத் தலை மாலை அணிந்தது என்னே? சடைமேல் கங்கை வெள்ளம் தரித்தது என்னே? அலைக்கும் புலித்தோல் கொண்டு அசைத்தது என்னே? அதன் மேல் கதநாகம் கச்சு ஆர்த்தது என்னே? மலைக்கு(ந்) நிகர்-ஒப்பன வன் திரைகள் வலித்து, எற்றி, முழங்கி வலம்புரி கொண்டு, அலைக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே! .
[1]
பிடித்து ஆட்டி ஓர் நாகத்தைப் பூண்டது என்னே? பிறங்கும் சடை மேல் பிறை சூடிற்று என்னே? பொடித்தான் கொண்டு மெய்ம் முற்றும் பூசிற்று என்னே? புகர் ஏறு உகந்து ஏறல் புரிந்தது என்னே? மடித்து, ஓட்டந்து, வன் திரை எற்றியிட, வளர் சங்கம் அங்காந்து முத்தம் சொரிய, அடித்து ஆர் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே! .
[2]
சிந்தித்து எழுவார்க்கு நெல்லிக்கனியே! சிறியார் பெரியார், மனத்து ஏறல் உற்றால்; முந்தித் தொழுவார் இறவார்; பிறவார்; முனிகள் முனியே! அமரர்க்கு அமரா! சந்தித் தடமால் வரை போல்-திரைகள் தணியாது இடறும் கடல் அம்கரை மேல், அந்தித்தலைச் செக்கர்வானே ஒத்தியால் அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே! .
[3]
இழைக்கும்(ம்) எழுத்துக்கு உயிரே ஒத்தியால்; இலையே ஒத்தியால்; உளையே ஒத்தியால்; குழைக்கும் பயிர்க்கு ஓர் புயலே ஒத்தியால்; அடியார் தமக்கு ஓர் குடியே ஒத்தியால் மழைக்கு(ந்) நிகர்-ஒப்பன வன் திரைகள் வலித்து, எற்றி, முழங்கி வலம்புரி கொண்டு அழைக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே! .
[4]
வீடின் பயன் என்? பிறப்பின் பயன் என்? விடை ஏறுவது என், மதயானை நிற்க? கூடும் மலை மங்கை ஒருத்தி உடன் சடை மேல் கங்கையாளை நீ சூடிற்று என்னே? பாடும் புலவர்க்கு அருளும் பொருள் என்? நிதியம் பல செய்த கலச் செலவில் ஆடும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே! .
[5]
இரவத்து இடு காட்டு எரி ஆடிற்று என்னே? இறந்தார் தலையில் பலி கோடல் என்னே? பரவித் தொழுவார் பெறு பண்டம் என்னே? பரமா, பரமேட்டி, பணித்து அருளாய்! உரவத்தொடு, சங்கமொடு இப்பி முத்தம் கொணர்ந்து, எற்றி, முழங்கி வலம்புரி கொண்டு, அரவக் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே!
[6]
ஆக்கும் அழிவும் அமைவும், நீ என்பன், நான்; சொல்லுவார் சொல்பொருள் அவை, நீ என்பன், நான்; நாக்கும் செவியும் கண்ணும், நீ என்பன், நான்; நலனே! இனி நான் உனை நன்கு உணர்ந்தேன்- நோக்கும் நிதியம் பல எத்தனையும் கலத்தில் புகப் பெய்து கொண்டு, ஏற நுந்தி ஆர்க்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே! .
[7]
வெறுத்தேன், மனை வாழ்க்கையை விட்டொழிந்தேன்; விளங்கும் குழைக் காது உடை வேதியனே! இறுத்தாய், இலங்கைக்கு இறை ஆயவனை, தலை பத்தொடு தோள் பல இற்று விழ; கறுத்தாய், கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம்; கடுகப் பிரமன் தலை ஐந்திலும் ஒன்று அறுத்தாய் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே! .
[8]
பிடிக்குக் களிறே ஒத்தியால்; எம்பிரான்! பிரமற்கும் பிரான்; மற்றை மாற்கும் பிரான்; நொடிக்கும் அளவில் புரம் மூன்று எரியச் சிலை தொட்டவனே! உனை நான் மறவேந்- வடிக்கின்றன போல் சில வன் திரைகள் வலித்து, எற்றி, முழங்கி வலம்புரி கொண்டு அடிக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே! .
[9]
எம் தம்(ம்) அடிகள், இமையோர் பெருமான், எனக்கு என்றும் அளிக்கும் மணிமிடற்றன், அம் தண்கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனை, மந்தம் முழவும் குழலும் இயம்பும் வளர் நாவலர் கோன்-நம்பி ஊரன்-சொன்ன சந்தம் மிகு தண் தமிழ் மாலைகள் கொண்டு அடி வீழ வல்லார் தடுமாற்று இலரே .
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.005   நெய்யும் பாலும் தயிரும் கொண்டு
பண் - இந்தளம் (திருஓணகாந்தன்தளி ஓணகாந்தீசுவரர் காமாட்சியம்மை)
நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல் பூசை செய்யல் உற்றார்; கையில் ஒன்றும் காணம் இல்லை, கழல் அடீ தொழுது உய்யின் அல்லால்; ஐவர் கொண்டு இங்கு ஆட்ட ஆடி, ஆழ் குழிப்பட்டு அழுந்துவேனுக்கு, உய்யும் ஆறு ஒன்று அருளிச் செய்யீர் ஓணகாந்தன் தளி உளீரே!.
[1]
திங்கள் தங்கு சடையின் மேல் ஓர் திரைகள் வந்து புரள வீசும் கங்கையாளேல், வாய் திற(வ்)வாள்; கணபதி(ய்)யேல், வயிறு தாரி; அம் கை வேலோன் குமரன், பிள்ளை; தேவியார் கோற்று அடியாளால்; உங்களுக்கு ஆட் செய்ய மாட்டோம் ஓணகாந்தன் தளி உளீரே! .
[2]
பெற்றபோழ்தும் பெறாத போழ்தும், பேணி உன் கழல் ஏத்துவார்கள் மற்று ஓர் பற்று இலர் என்று இரங்கி, மதி உடையவர் செய்கை செய்யீர்; அற்ற போழ்தும் அலந்த போழ்தும், ஆபற் காலத்து, அடிகேள்! உம்மை ஒற்றி வைத்து இங்கு உண்ணல் ஆமோ? ஓணகாந்தன் தளி உளீரே! .
[3]
வல்லது எல்லாம் சொல்லி உம்மை வாழ்த்தினாலும், வாய் திறந்து ஒன்று இல்லை என்னீர்; உண்டும் என்னீர்; எம்மை ஆள்வான் இருப்பது என், நீர்? பல்லை உக்க படுதலையில் பகல் எலாம் போய்ப் பலி திரிந்து இங்கு ஒல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர் ஓணகாந்தன் தளி உளீரே! .
[4]
கூடிக்கூடித் தொண்டர் தங்கள் கொண்ட பாணி குறைபடாமே, ஆடிப் பாடி, அழுது, நெக்கு, அங்கு அன்பு உடையவர்க்கு இன்பம் ஓரீர்; தேடித்தேடித் திரிந்து எய்த்தாலும் சித்தம் என்பால் வைக்க மாட்டீர்; ஓடிப் போகீர்; பற்றும் தாரீர் ஓணகாந்தன் தளி உளீரே!
[5]
வார் இருங்குழல், வாள் நெடுங்கண், மலைமகள் மது விம்மு கொன்றைத்- தார் இருந் தடமார்பு நீங்காத் தையலாள் உலகு உய்ய வைத்த, கார் இரும் பொழில், கச்சி மூதூர்க் காமக்கோட்டம் உண்டாக, நீர் போய் ஊர் இடும் பிச்சை கொள்வது என்னே? ஓணகாந்தன் தளி உளீரே!
[6]
பொய்ம்மையாலே போது போக்கிப் புறத்தும் இல்லை; அகத்தும் இல்லை; மெய்ம்மை சொல்லி ஆளமாட்டீர்; மேலை நாள் ஒன்று இடவும் கில்லீர்; எம்மைப் பெற்றால் ஏதும் வேண்டீர்; ஏதும் தாரீர்; ஏதும் ஓதீர்; உம்மை அன்றே, எம்பெருமான்? ஓணகாந்தன் தளி உளீரே!
[7]
வலையம் வைத்த கூற்றம் ஈவான் வந்து நின்ற வார்த்தை கேட்டு, சிலை அமைத்த சிந்தையாலே திருவடி தொழுது உய்யின் அல்லால், கலை அமைத்த காமச் செற்றக் குரோத லோப மதவர் ஊடு ஐ- உலை அமைத்து இங்கு ஒன்ற மாட்டேன்-ஓணகாந்தன் தளி உளீரே!
[8]
வாரம் ஆகித் திருவடிக்குப் பணி செய் தொண்டர் பெறுவது என்னே? ஆரம் பாம்பு; வாழ்வது ஆரூர்; ஒற்றியூரேல், உ(ம்)மது அன்று; தாரம் ஆகக் கங்கையாளைச் சடையில் வைத்த அடிகேள்! உந்தம் ஊரும் காடு(வ்); உடையும் தோலே ஓணகாந்தன் தளி உளீரே!
[9]
ஓவணம் மேல் எருது ஒன்று ஏறும் ஓணகாந்தன் தளி உளார் தாம் ஆவணம் செய்து, ஆளும் கொண்டு(வ்), அரை துகி(ல்)லொடு பட்டு வீக்கி, கோவணம் மேற்கொண்ட வேடம் கோவை ஆக ஆரூரன் சொன்ன பாவணத் தமிழ் பத்தும் வல்லார்க்குப் பறையும், தாம் செய்த பாவம் தானே.
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.006   படம் கொள் நாகம் சென்னி
பண் - இந்தளம் (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
படம் கொள் நாகம் சென்னி சேர்த்தி, பாய் புலித்தோல் அரையில் வீக்கி, அடங்கலார் ஊர் எரியச் சீறி, அன்று மூவர்க்கு அருள் புரிந்தீர்; மடங்கலானைச் செற்று உகந்தீர்; மனைகள்தோறும் தலை கை ஏந்தி விடங்கர் ஆகித் திரிவது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .
[1]
இழித்து உகந்தீர், முன்னை வேடம்; இமையவர்க்கும் உரைகள் பேணாது, ஒழித்து உகந்தீர்; நீர் முன் கொண்ட உயர் தவத்தை, அமரர் வேண்ட, அழிக்க வந்த காமவேளை, அவனுடைய தாதை காண, விழித்து உகந்த வெற்றி என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .
[2]
படைகள் ஏந்தி, பாரிட(ம்)மும் பாதம் போற்ற, மாதும் நீரும், உடை ஓர் கோவணத்தர் ஆகி உண்மை சொல்லீர்; உண்மை அன்றே! சடைகள் தாழக் கரணம் இட்டு, தன்மை பேசி, இல் பலிக்கு விடை அது ஏறி, திரிவது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .
[3]
பண் உளீராய்ப் பாட்டும் ஆனீர்; பத்தர் சித்தம் பரவிக் கொண்டீர்; கண் உளீராய்க் கருத்தில் உம்மைக் கருதுவார்கள் காணும் வண்ணம் மண் உளீராய் மதியம் வைத்தீர்; வான நாடர் மருவி ஏத்த, விண் உளீராய் நிற்பது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .
[4]
குடம் எடுத்து நீரும் பூவும் கொண்டு, தொண்டர் ஏவல் செய்ய, நடம் எடுத்து ஒன்று ஆடிப் பாடி, நல்குவீர்; நீர் புல்கும் வண்ணம் வடம் எடுத்த கொங்கை மாது ஓர் பாகம் ஆக, வார் கடல் வாய் விடம் மிடற்றில் வைத்தது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே!.
[5]
மாறுபட்ட வனத்து அகத்தில் மருவ வந்த வன் களிற்றைப் பீறி, இட்டம் ஆகப் போர்த்தீர்; பெய் பலிக்கு என்று இல்லம் தோறும் கூறுபட்ட கொடியும் நீரும் குலாவி, ஏற்றை அடர ஏறி, வேறுபட்டுத் திரிவது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .
[6]
காதலாலே கருது தொண்டர் காரணத்தீர் ஆகி நின்றே, பூதம் பாடப் புரிந்து, நட்டம் புவனி ஏத்த ஆட வல்லீர்; நீதி ஆக ஏழில் ஓசை நித்தர் ஆகி, சித்தர் சூழ, வேதம் ஓதித் திரிவது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .
[7]
குரவு, கொன்றை, மதியம், மத்தம், கொங்கை மாதர் கங்கை, நாகம், விரவுகின்ற சடை உடையீர்; விருத்தர் ஆனீர்; கருத்தில் உம்மைப் பரவும் என்மேல் பழிகள் போக்கீர்; பாகம் ஆய மங்கை அஞ்சி வெருவ, வேழம் செற்றது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .
[8]
மாடம் காட்டும் கச்சி உள்ளீர், நிச்சயத்தால் நினைப்பு உளார் பால்; பாடும் காட்டில் ஆடல் உள்ளீர்; பரவும் வண்ணம் எங்ஙனே தான்? நாடும் காட்டில், அயனும் மாலும் நணுகா வண்ணம் அனலும் ஆய வேடம் காட்டி, திரிவது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .
[9]
விரித்த வேதம் ஓத வல்லார் வேலை சூழ் வெண்காடு மேய விருத்தன் ஆய வேதன் தன்னை, விரி பொழில் சூழ் நாவலூரன்- அருத்தியால் ஆரூரன் தொண்டன், அடியன்-கேட்ட மாலை பத்தும் தெரித்த வண்ணம் மொழிய வல்லார் செம்மையாளர், வான் உளாரே .
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.007   மத்தயானை ஏறி, மன்னர் சூழ
பண் - இந்தளம் (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) அயிராவதேசுவரர் வாசமலர்க்குழன்மாதம்மை)
மத்தயானை ஏறி, மன்னர் சூழ வருவீர்காள்! செத்த போதில் ஆரும் இல்லை; சிந்தையுள் வைம்மின்கள்! வைத்த உள்ளம் மாற்ற வேண்டா; வம்மின், மனத்தீரே! அத்தர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே .
[1]
தோற்றம் உண்டேல், மரணம் உண்டு; துயரம், மனை வாழ்க்கை; மாற்றம் உண்டேல், வஞ்சம் உண்டு; நெஞ்ச-மனத்தீரே! நீற்றர், ஏற்றர், நீலகண்டர், நிறை புனல் நீள் சடை மேல் ஏற்றர், கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே .
[2]
செடி கொள் ஆக்கை சென்று சென்று தேய்ந்து ஒல்லை வீழாமுன், வடி கொள் கண்ணார் வஞ்சனையுள் பட்டு மயங்காதே, கொடி கொள் ஏற்றர், வெள்ளை நீற்றர், கோவண ஆடை உடை அடிகள், கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே .
[3]
வாழ்வர் கண்டீர், நம்முள் ஐவர்; வஞ்ச மனத்தீரே! யாவராலும் இகழப்பட்டு, இங்கு அல்லலில் வீழாதே, மூவராயும் இருவராயும் முதல்வன் அவனே ஆம் தேவர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே .
[4]
அரித்து நம்மேல் ஐவர் வந்து, இங்கு ஆறு அலைப்பான் பொருட்டால், சிரித்த பல் வாய் வெண்தலை போய் ஊர்ப்புறம் சேராமுன், வரிக் கொள் துத்தி வாள் அரக்கர் வஞ்சம் மதில் மூன்றும் எரித்த வில்லி எதிர்கொள்பாடி என்பது அடைவோமே .
[5]
பொய்யர் கண்டீர், வாழ்க்கையாளர்; பொத்து அடைப்பான் பொருட்டால் மையல் கொண்டீர்; எம்மோடு ஆடி நீரும், மனத்தீரே! நைய வேண்டா; இம்மை ஏத்த, அம்மை நமக்கு அருளும் ஐயர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே .
[6]
கூசம் நீக்கி, குற்றம் நீக்கி, செற்றம் மனம் நீக்கி, வாசம் மல்கு குழலினார்கள் வஞ்சம் மனை வாழ்க்கை ஆசை நீக்கி, அன்பு சேர்த்தி, என்பு அணிந்து ஏறு ஏறும் ஈசர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே .
[7]
இன்பம் உண்டேல், துன்பம் உண்டு; ஏழை, மனை வாழ்க்கை; முன்பு சொன்ன மோழைமையால், முட்டை மனத்தீரே! அன்பர் அல்லால், அணி கொள் கொன்றை அடிகள் அடி சேரார்; என்பர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே .
[8]
தந்தையாரும் தவ்வையாரும் எள்-தனைச் சார்வு ஆகார்; வந்து நம்மோடு உள் அளாவி வானநெறி காட்டும் சிந்தையீரே! நெஞ்சினீரே! திகழ் மதியம் சூடும் எந்தை கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே .
[9]
குருதி சோர ஆனையின் தோல் கொண்ட குழல் சடையன்; மருது கீறி ஊடு போன மால், அயனும், அறியா, சுருதியார்க்கும் சொல்ல ஒண்ணா, சோதி; எம் ஆதியான்; கருது கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே .
[10]
முத்து நீற்றுப் பவள மேனிச் செஞ்சடையான் உறையும் பத்தர் பந்தத்து எதிர்கொள்பாடிப் பரமனையே பணியச் சித்தம் வைத்த தொண்டர் தொண்டன்-சடையன் அவன் சிறுவன், பத்தன், ஊரன்-பாடல் வல்லார் பாதம் பணிவாரே.
[11]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.008   இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு
பண் - இந்தளம் (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
ஊன் மிசை உதிரக் குப்பை; ஒரு பொருள் இலாத மாயம்; மான் மறித்தனைய நோக்கின் மடந்தைமார் மதிக்கும் இந்த மானுடப் பிறவி வாழ்வு வாழ்வது ஓர் வாழ்வு வேண்டேன்; ஆன் நல்வெள் ஏற்ற ஆரூர் அப்பனே! அஞ்சினேனே.
[2]
அறுபதும் பத்தும், எட்டும், ஆறினோடு அஞ்சு-நான்கும், துறு பறித்தனைய நோக்கின் சொல்லிற்று ஒன்று ஆகச் சொல்லார்; நறு மலர்ப்பூவும் நீரும் நாள் தொறும் வணங்குவார்க்கு(வ்) அறிவினைக் கொடுக்கும் ஆரூர் அப்பனே! அஞ்சினேனே.
[3]
சொல்லிடில் எல்லை இல்லை, சுவை இலாப் பேதை வாழ்வு; நல்லது ஓர் கூரை புக்கு நலம் மிக அறிந்தேன் அல்லேன்; மல்லிகை மாடம் நீடு மருங்கொடு நெருங்கி எங்கும் அல்லி வண்டு இயங்கும் ஆரூர் அப்பனே! அஞ்சினேனே .
[4]
நரம்பினோடு எலும்பு கட்டி நசையினோடு இசைவு ஒன்று இல்லாக் குரம்பை வாய்க் குடி இருந்து குலத்தினால் வாழ மாட்டேன்; விரும்பிய கமழும் புன்னை மாதவித் தொகுதி என்றும் அரும்பு வாய் மலரும் ஆரூர் அப்பனே! அஞ்சினேனே .
[5]
மணம் என மகிழ்வர், முன்னே, மக்கள் தாய் தந்தை சுற்றம், பிணம் எனச் சுடுவர், பேர்த்தே; பிறவியை வேண்டேன், நாயேன்; பணை இடைச் சோலை தோறும் பைம் பொழில் வளாகத்து எங்கள் அணை வினைக் கொடுக்கும் ஆரூர் அப்பனே! அஞ்சினேனே .
[6]
தாழ்வு எனும் தன்மை விட்டு, தனத்தையே மனத்தில் வைத்து, வாழ்வதே கருதி, தொண்டர் மறுமைக்கு ஒன்று ஈயகில்லார்; ஆழ் குழிப்பட்ட போது, அலக்கணில், ஒருவர்க்கு ஆவர்; யாழ் முயன்று இருக்கும் ஆரூர் அப்பனே! அஞ்சினேனே .
[7]
உதிரம் நீர் இறைச்சிக் குப்பை எடுத்தது மலக்குகை(ம்)மேல் வருவது ஓர் மாயக் கூரை வாழ்வது ஓர் வாழ்வு வேண்டேன்; கரிய மால், அயனும், தேடிக் கழல் முடி காண மாட்டா அரியனாய் நின்ற ஆரூர் அப்பனே! அஞ்சினேனே .
[8]
பொய்த் தன்மைத்து ஆய மாயப்போர்வையை, மெய் என்று எண்ணும் வித்தகத்து ஆய வாழ்வு வேண்டி, நான் விரும்பகில்லேன்; முத்தினைத் தொழுது, நாளும் முடிகளால் வணங்குவார்க்கு(வ்) அத் தன்மைத்து ஆகும் ஆரூர் அப்பனே! அஞ்சினேனே .
[9]
தம் சொல் ஆர் அருள் பயக்கும் தமியனேன், தடமுலைக்கண் அம் சொலார் பயிலும் ஆரூர் அப்பனை, ஊரன் அஞ்சி செஞ்சொலால் நயந்த பாடல் சிந்தியா ஏத்த வல்லார், நஞ்சு உலாம் கண்டத்து எங்கள் நாதனை நண்ணுவாரே .
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.009   மலைக்கும்(ம்) மகள் அஞ்ச(ம்) மதகரியை
பண் - இந்தளம் (திருஅரிசிற்கரைப்புத்தூர் படிக்காசுவைத்தவீசுவரர் அழகம்மை)
மலைக்கும்(ம்) மகள் அஞ்ச(ம்) மதகரியை உரித்தீர்; எரித்தீர், வரு முப்புரங்கள்; சிலைக்கும் கொலைச் சே உகந்து ஏறு ஒழியீர்; சில்பலிக்கு இல்கள் தொறும் செலவு ஒழியீர் கலைக் கொம்பும் கரி மருப்பும்(ம்) இடறி, கலவம் மயில் பீலியும் கார் அகிலும் அலைக்கும் புனல் சேர் அரிசில்-தென்கரை அழகு ஆர் திருப்புத்தூர் அழகனீரே! .
[1]
அரு மலரோன் சிரம் ஒன்று அறுத்தீர்; செறுத்தீர், அழல் சூலத்தில் அந்தகனை; திருமகள் கோன் நெடுமால் பல நாள் சிறப்பு ஆகிய பூசனை செய் பொழுதில், ஒரு மலர் ஆயிரத்தில் குறைவா, நிறைவு ஆக ஓர் கண்மலர் சூட்டலுமே, பொரு விறல் ஆழி புரிந்து அளித்தீர் பொழில் ஆர் திருப்புத்தூர்ப் புனிதனீரே!.
[2]
தரிக்கும் தரை, நீர், தழல், காற்று, அந்தரம், சந்திரன், சவிதா, இயமானன், ஆனீர்; சரிக்கும் பலிக்குத் தலை அங்கை ஏந்தி, தையலார் பெய்ய, கொள்வது தக்கது அன்றால் முரிக்கும் தளிர்ச் சந்தனத்தொடு, வேயும், முழங்கும் திரைக் கைகளால் வாரி மோதி
அரிக்கும் புனல் சேர் அரிசில்-தென்கரை அழகு ஆர் திருப்புத்தூர் அழகனீரே! .
[3]
கொடி உடை மும்மதில் வெந்து அழிய, குன்றம் வில்லா, நாணியின் கோல் ஒன்றி(ன்)னால் இடிபட எய்து எரித்தீர், இமைக்கும் அளவில்; உமக்கு ஆர் எதிர்? எம்பெருமான்! கடி படு ங்கணையான், கருப்புச் சிலைக் காமனை, வேவக் கடைக் கண்ணி(ன்)னால் பொடி பட நோக்கியது என்னை கொல்லோ? பொழில் ஆர் திருப்புத்தூர்ப் புனிதனீரே!
[4]
வணங்கித் தொழுவார் அவர், மால், பிரமன், மற்றும் வானவர், தானவர், மா முனிவர்; உணங்கல்-தலையில் பலி கொண்டல் என்னே? உலகங்கள் எல்லாம் உடையீர், உரையீர்! இணங்கிக் கயல் சேல் இளவாளை பாய, இனக்கெண்டை துள்ள, கண்டிருந்த அன்னம் அணங்கிக் குணம் கொள் அரிசில்-தென்கரை அழகு ஆர் திருப்புத்தூர் அழகனீரே!
[5]
அகத்து அடிமை செயும் அந்தணன் தான், அரிசில் புனல் கொண்டு வந்து ஆட்டுகின்றான், மிகத் தளர்வு எய்தி, குடத்தையும் நும் முடி மேல் விழுத்திட்டு, நடுங்குத(ல்)லும், வகுத்து அவனுக்கு, நித்தல் படியும் வரும் என்று ஒரு காசினை நின்ற நன்றிப் புகழ்த்துணை கைப் புகச் செய்து உகந்தீர் பொழில் ஆர் திருப்புத்தூர்ப் புனிதனீரே! .
[6]
பழிக்கும் பெருந் தக்கன் எச்சம் அழிய, பகலோன் முதலாப் பலதேவரையும் தெழித்திட்டு, அவர் அங்கம் சிதைத்தருளும் செய்கை என்னை கொலோ? மை கொள் செம் மிடற்றீர்! விழிக்கும் தழைப் பீலியொடு ஏலம் உந்தி, விளங்கும் மணி முத்தொடு பொன் வரன்றி, அழிக்கும் புனல் சேர் அரிசில்-தென்கரை அழகு ஆர் திருப்புத்தூர் அழகனீரே!
மழைக் கண் மடவாளை ஓர்பாகம் வைத்தீர்; வளர் புன்சடைக் கங்கையை வைத்து உகந்தீர்; முழைக் கொள் அரவொடு என்பு அணிகலனா, முழுநீறு மெய் பூசுதல் என்னைகொலோ? கழைக் கொள் கரும்பும், கதலிக்கனியும், கமுகின் பழுக்காயும், கவர்ந்து கொண்டு இட்டு, அழைக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திருப்புத்தூர் அழகனீரே!
[9]
கடிக்கும்(ம்) அரவால் மலையால் அமரர் கடலைக் கடைய, எழு காளகூடம் ஒடிக்கும்(ம்), உலகங்களை என்று அதனை உமக்கே அமுது ஆக உண்டீர்; உமிழீர் இடிக்கும் மழை வீழ்த்து இழித்திட்டு, அருவி இருபாலும் ஓடி, இரைக்கும் திரைக் கை அடிக்கும் புனல் சேர் அரிசில்-தென்கரை அழகு ஆர் திருப்புத்தூர் அழகனீரே!
[10]
கார் ஊர் மழை பெய்து(ப்) பொழி அருவிக் கழையோடு அகில் உந்திட்டு இருகரையும் போர் ஊர் புனல் சேர் அரிசில்-தென்கரைப் பொழில் ஆர் திருப்புத்தூர்ப் புனிதர் தம்மை, ஆரூரன் அருந்தமிழ் ஐந்தினொடு ஐந்து அழகால் உரைப்பார்களும் கேட்பவரும், சீர் ஊர் தரு தேவர் கணங்களொடும் இணங்கி, சிவலோகம் அது எய்துவரே.
[11]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.010   தேன் நெய் புரிந்து உழல்
பண் - இந்தளம் (திருக்கச்சிஅனேகதங்காவதம் காவதேசுவரர் காமாட்சியம்மை)
தேன் நெய் புரிந்து உழல் செஞ்சடை எம்பெருமானது இடம்; திகழ் ஐங்கணை அக் கோனை எரித்து எரி ஆடி இடம்; குலவானது இடம்; குறையா மறை ஆம் மானை இடத்தது ஓர் கையன் இடம்; மதம் மாறுபடப் பொழியும் மலை போல் யானை உரித்த பிரானது இடம் கலிக் கச்சி அனேகதங்காவதமே .
[1]
கூறு நடைக் குழிகண் பகுவாயன பேய் உகந்து ஆட, நின்று ஓரி இட, வேறுபடக் குடகத்தி(ல்)லை அம்பலவாணன் நின்று ஆடல் விரும்பும் இடம்; ஏறுவிடைக் கொடி எம்பெருமான், இமையோர் பெருமான், உமையாள் கணவன், ஆறு சடைக்கு உடை அப்பன் இடம் கலிக் கச்சி அனேகதங்காவதமே.
[2]
கொடிகள் இடைக் குயில் கூவும் இடம்; மயில் ஆலும்(ம்) இடம்; மழுவாள் உடைய கடி கொள் புனல் சடை கொண்ட நுதல் கறைக்கண்டன் இடம்; பிறைத்துண்டம் முடிச் செடி கொள் வினைப்பகை தீரும் இடம்; திரு ஆரும் இடம்; திரு மார்பு-அகலத்து அடிகள் இடம்(ம்); அழல் வண்ணன் இடம் கலிக் கச்சி அனேகதங்காவதமே.
[3]
கொங்கு நுழைத்தன வண்டு அறை கொன்றையும் கங்கையும் திங்களும் சூடு சடை, மங்குல் நுழை மலை மங்கையை நங்கையை பங்கினில்-தங்க உவந்து அருள் செய், சங்குகுழைச் செவி கொண்டு, அருவித்திரள் பாய, (அ)வியாத் தழல் போல் உடை, தம் அம் கை, மழுத் திகழ் கையன் இடம் கலிக் கச்சி அனேகதங்காவதமே.
[4]
பைத்த படத்தலை ஆடு அரவம் பயில்கின்ற இடம்; பயிலப் புகுவார் சித்தம் ஒரு நெறி வைத்த இடம்; திகழ்கின்ற இடம்; திருவான் அடிக்கே வைத்த மனத்தவர், பத்தர், மனம் கொள வைத்த இடம்; மழுவாள் உடைய அத்தன் இடம்(ம்); அழல்வண்ணன் இடம் கலிக் கச்சி அனேகதங்காவதமே.
[5]
தண்டம் உடைத் தருமன் தமர் என்தமரைச் செயும் வன் துயர் தீர்க்கும் இடம்; பிண்டம் உடைப் பிறவித்தலை நின்று நினைப்பவர் ஆக்கையை நீக்கும் இடம்; கண்டம் உடைக் கரு நஞ்சு கரந்த பிரானது இடம்; கடல் ஏழு கடந்து அண்டம் உடைப் பெருமானது இடம் கலிக் கச்சி அனேகதங்காவதமே .
[6]
கட்டு மயக்கம் அறுத்தவர் கை தொழுது ஏத்தும் இடம்; கதிரோன் ஒளியால் விட்ட இடம்; விடை ஊர்தி இடம்; குயில் பேடை தன் சேவலொடு ஆடும் இடம்; மட்டு மயங்கி அவிழ்ந்த மலர் ஒரு மாதவியோடு மணம் புணரும் அட்ட புயங்கப்பிரானது இடம் கலிக் கச்சி அனேகதங்காவதமே .
[7]
புல்லி இடம்; தொழுது உய்தும் என்னாதவர் தம் புரம் மூன்றும் பொடிப்படுத்த வில்லி இடம்; விரவாது உயிர் உண்ணும் வெங்காலனைக் கால் கொடு வீந்து அவியக் கொல்லி இடம் குளிர் மாதவி, மவ்வல், குரா, வகுளம், குருக்கத்தி, புன்னை, அல்லி இடைப் பெடை வண்டு உறங்கும் கலிக் கச்சி அனேகதங்காவதமே .
[8]
சங்கையவர் புணர்தற்கு அரியான், தளவு ஏல் நகையாள் தவிரா மிகு சீர் மங்கை அவள், மகிழச் சுடுகாட்டு இடை நட்டம் நின்று ஆடிய சங்கரன், எம் அங்கையில் நல் அனல் ஏந்துமவன், கனல் சேர் ஒளி அன்னது ஓர் பேரகலத்து அங்கையவன்(ன்) உறைகின்ற இடம் கலிக் கச்சி அனேகதங்காவதமே .
[9]
வீடு பெறப் பல ஊழிகள் நின்று நினைக்கும் இடம்; வினை தீரும் இடம்; பீடு பெறப் பெரியோர் திடம் கொண்டு மேவினர் தங்களைக் காக்கும் இடம்; பாடும் இடத்து அடியான், புகழ் ஊரன், உரைத்த இம் மாலைகள் பத்தும் வல்லார் கூடும் இடம்; சிவலோகன் இடம் கலிக் கச்சி அனேகதங்காவதமே.
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.011   திரு உடையார், திருமால் அயனாலும்
பண் - இந்தளம் (திருப்பூவணம் பூவணநாதர் மின்னாம்பிகையம்மை)
திரு உடையார், திருமால் அயனாலும் உரு உடையார், உமையாளை ஒர்பாகம் பரிவு உடையார், அடைவார் வினை தீர்க்கும் புரிவு உடையார், உறை பூவணம் ஈதோ! .
[1]
எண்ணி இருந்தும், கிடந்தும், நடந்தும், அண்ணல் எனா நினைவார் வினை தீர்ப்பார்; பண் இசை ஆர் மொழியார் பலர் பாடப் புண்ணியனார்; உறை பூவணம் ஈதோ! .
[2]
தெள்ளிய பேய்பல தம் அவற்றொடு நள் இருள் நட்டம் அது ஆடல் நவின்றோர், புள்ளுவர் ஆகுமவர்க்கு அவர் தாமும் புள்ளுவனார், உறை பூவணம் ஈதோ! .
[3]
நிலன் உடை மான்மறி கையது; தெய்வக் கனல் உடை மா மழு ஏந்தி, ஓர் கையில் அனல் உடையார்; அழகு ஆர்தரு சென்னிப் புனல் உடையார்; உறை பூவணம் ஈதோ!.
[4]
நடை உடை நல் எருது ஏறுவர்; நல்லார் கடை கடைதோறு, இடுமின், பலி! என்பார்; துடி இடை நல் மடவாளொடு மார்பில் பொடி அணிவார்; உறை பூவணம் ஈதோ! .
[5]
மின் அனையாள் திருமேனி விளங்க ஒர் தன் அமர் பாகம் அது ஆகிய சங்கரன், முன் நினையார் புரம் மூன்று எரியூட்டிய பொன் அனையான், உறை பூவணம் ஈதோ! .
[6]
மிக்கு இறை ஏயவன் துன் மதியாய் விட, நக்கு இறையே விரலால் இற ஊன்றி; நெக்கு இறையே நினைவார் தனி நெஞ்சம் புக்கு உறைவான்; உறை பூவணம் ஈதோ! .
[7]
சீரின் மிகப் பொலியும் திருப்பூவணம் ஆர இருப்பு இடமா உறைவான் தனை ஊரன் உரைத்த சொல் மாலைகள் பத்து இவை பாரில் உரைப்பவர் பாவம் அறுப்பரே .
[8]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.012   வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த
பண் - இந்தளம் (திருவாரூர் )
மூலனூர், முதல் ஆய முக்கண்ணன்-முதல்வனூர், நாலனூர், நரை ஏறு உகந்து ஏறிய நம்பன், ஊர் கோலம் நீற்றன்-குற்றாலம், குரங்கணில் முட்டமும், வேலனூர், வெற்றியூர், வெண்ணிக் கூற்றத்து வெண்ணியே.
[3]
தேங்கூரும், திருச் சிற்றம்பலமும், சிராப்பள்ளி, பாங்கு ஊர், எங்கள் பிரான் உறையும் கடம்பந்துறை, பூங்கூரும், பரமன் பரஞ்சோதி பயிலும் ஊர் நாங்கூர் நாட்டு நாங்கூர், நறையூர் நாட்டு நறையூரே .
[4]
குழலை வென்ற மொழி மடவாளை ஓர் கூறன் ஆம், மழலை ஏற்று, மணாளன் இடம் தடமால்வரைக் கிழவன்-கீழை வழி, பழையாறு, கிழையமும், மிழலை நாட்டு மிழலை, வெண்ணி நாட்டு மிழலையே.
[5]
தென்னூர், கைம்மைத் திருச் சுழியல்,-திருக்கானப்பேர், பன் ஊர் புக்கு உறையும் பரமர்க்கு இடம், பாய் நலம் என் ஊர் எங்கள் பிரான் உறையும் திருத் தேவனூர், பொன்னூர் நாட்டுப் பொன்னூர், புரிசை நாட்டுப் புரிசையே.
[6]
ஈழ நாட்டு மாதோட்டம், தென்நாட்டு இராமேச்சுரம், சோழ நாட்டுத் துருத்தி, நெய்த்தானம், திருமலை, ஆழி ஊர் அளநாட்டுக்கு எல்லாம் அணி ஆகிய கீழையில், அரனார்க்கு இடம் கிள்ளி குடி அதே .
[7]
நாளும் நன்னிலம், தென் பனையூர், வட கஞ்சனூர், நீள நீள் சடையான் நெல்லிக்காவு, நெடுங்களம், காள கண்டன் உறையும் கடைமுடி, கண்டியூர், வேளார் நாட்டு வேளூர், விளத்தூர் நாட்டு விளத்தூரே.
[8]
தழலும் மேனியன், தையல் ஓர்பாகம் அமர்ந்தவன், தொழலும் தொல்வினை தீர்க்கின்ற சோதி சோற்றுத்துறை கழலும் கோவை உடையவன், காதலிக்கும்(ம்) இடம் பழனம், பாம்பணி, பாம்புரம், தஞ்சை, தஞ்சாக்கையே.
[9]
மை கொள் கண்டன், எண்தோளன், முக்கண்ணன், வலஞ்சுழி பை கொள் வாள் அரவு ஆட்டித் திரியும் பரமன், ஊர் செய்யில் வாளைகள் பாய்ந்து உகளும் திருப் புன்கூர், நன்று ஐயன் மேய பொழில் அணி ஆவடுதுறை அதே .
[10]
பேணி நாடு அதனில்-திரியும் பெருமான் தனை, ஆணையா அடியார்கள் தொழப்படும் ஆதியை, நாணி, ஊரன்-வனப்பகை அப்பன், வன் தொண்டன்-சொல் பாணியால் இவை ஏத்துவார் சேர் பரலோகமே .
[11]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.013   மலை ஆர் அருவித்திரள் மா
பண் - தக்கராகம் (திருத்துறையூர் (திருத்தளூர்) துறையூரப்பர் பூங்கோதையம்மை)
மலை ஆர் அருவித்திரள் மா மணி உந்தி, குலை ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால், கலை ஆர் அல்குல் கன்னியர் ஆடும், துறையூர்த் தலைவா! உனை வேண்டிக்கொள்வேன், தவநெறியே.
[1]
மத்தம் மதயானையின் வெண் மருப்பு உந்தி, முத்தம் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால், பத்தர் பயின்று ஏத்திப் பரவும், துறையூர் அத்தா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .
[2]
கந்தம் கமழ் கார் அகில் சந்தனம் உந்திச் செந்தண் புனல் வந்து இழி பெண்ணை வடபால், மந்தி பல மா நடம் ஆடும், துறையூர் எந்தாய்! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .
[3]
அரும்பு ஆர்ந்தன மல்லிகை சண்பகம் சாடி, சுரும்பு ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால், கரும்பு ஆர் மொழிக் கன்னியர் ஆடும், துறையூர் விரும்பா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .
[4]
பாடு ஆர்ந்தன மாவும் பலாக்களும் சாடி, நாடு ஆர வந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால், மாடு ஆர்ந்தன மாளிகை சூழும், துறையூர் வேடா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .
[5]
மட்டு ஆர் மலர்க் கொன்றையும் வன்னியும் சாடி, மொட்டு ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால், கொட்டு ஆட்டொடு பாட்டு ஒலி ஓவா, துறையூர்ச் சிட்டா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .
[6]
மாது ஆர் மயில் பீலியும் வெண் நுரை உந்தி, தாது ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால், போது ஆர்ந்தன பொய்கைகள் சூழும், துறையூர் நாதா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .
[7]
கொய்யா மலர்க் கோங்கொடு வேங்கையும் சாடி, செய் ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால், மை ஆர் தடங்கண்ணியர் ஆடும், துறையூர் ஐயா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .
[8]
விண் ஆர்ந்தன மேகங்கள் நின்று பொழிய, மண் ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால், பண் ஆர் மொழிப் பாவையர் ஆடும், துறையூர் அண்ணா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .
[9]
மா வாய் பிளந்தானும், மலர் மிசையானும், ஆவா! அவர் தேடித் திரிந்து அலமந்தார்; பூ ஆர்ந்தன பொய்கைகள் சூழும் துறையூர்த் தேவா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே.
[10]
செய் ஆர் கமலம் மலர் நாவலூர் மன்னன், கையால்-தொழுது ஏத்தப்படும் துறையூர் மேல் பொய்யாத் தமிழ் ஊரன், உரைத்தன வல்லார், மெய்யே பெறுவார்கள், தவநெறிதானே .
[11]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.014   வைத்தனன் தனக்கே, தலையும் என்
பண் - தக்கராகம் (திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) மாற்றறிவரதர் பாலசுந்தரியம்மை)
வைத்தனன் தனக்கே, தலையும் என் நாவும் நெஞ்சமும்; வஞ்சம் ஒன்று இன்றி உய்த்தனன் தனக்கே, திருவடிக்கு அடிமை; உரைத்தக்கால், உவமனே ஒக்கும்; பைத்த பாம்பு ஆர்த்து ஓர் கோவணத்தோடு பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் பித்தரே ஒத்து ஓர் நச்சிலர் ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .
[1]
அன்னையே! என்னேன்; அத்தனே! என்னேன்; அடிகளே அமையும் என்று இருந்தேன்; என்னையும், ஒருவன் உளன் என்று கருதி, இறை இறை திரு அருள் காட்டார்; அன்னம் ஆம் பொய்கை சூழ்தரு பாச்சிலாச்சிராமத்து உறை அடிகள் பின்னையே அடியார்க்கு அருள் செய்வது ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .
[2]
உற்றபோது அல்லால் உறுதியை உணரேன்; உள்ளமே அமையும் என்று இருந்தேன்; செற்றவர் புரம் மூன்று எரி எழச் செற்ற, செஞ்சடை, நஞ்சு அடை கண்டர், அற்றவர்க்கு அருள் செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள் தாம், யாது சொன்னாலும், பெற்ற போது உகந்து, பெறாவிடில் இகழில், இவர் அலாது இல்லையோ, பிரானார்?.
[3]
நாச் சில பேசி, நமர் பிறர் என்று, நன்று தீது என்கிலர்; மற்று ஓர் பூச்சு இலை; நெஞ்சே! பொன் விளை கழனிப் புள் இனம் சிலம்பும் ஆம் பொய்கைப் பாச்சிலாச்சிராமத்து அடிகள் என்று இவர் தாம் பலரையும் ஆட்கொள்வர்; பரிந்து ஓர் பேச்சு இலர்; ஒன்றைத் தர இலர் ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .
[4]
வரிந்த வெஞ்சிலையால் அந்தரத்து எயிலை வாட்டிய வகையினரேனும், புரிந்த அந் நாளே புகழ் தக்க; அடிமை போகும் நாள் வீழும் நாள் ஆகிப் பரிந்தவர்க்கு அருள்செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள் தாம், யாது சொன்னாலும், பிரிந்து இறைப் போதில் பேர்வதே ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .
[5]
செடித் தவம் செய்வார் சென்றுழிச் செல்லேன்; தீவினை செற்றிடும் என்று அடித்தவம் அல்லால் ஆரையும் அறியேன்; ஆவதும் அறிவர், எம் அடிகள்; படைத்தலைச் சூலம் பற்றிய கையர், பாச்சிலாச்சிராமத்து எம் பரமர், பிடித்த வெண்நீறே பூசுவது ஆனால், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .
[6]
கையது கபாலம்; காடு உறை வாழ்க்கை; கட்டங்கம் ஏந்திய கையர்; மெய்யது புரிநூல்; மிளிரும் புன்சடை மேல் வெண்திங்கள் சூடிய விகிர்தர்; பை அரவு அல்குல் பாவையர் ஆடும் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர்; மெய்யரே ஒத்து ஓர் பொய் செய்வது ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்?.
[7]
நிணம் படும் உடலை நிலைமை என்று ஓரேன்; நெஞ்சமே தஞ்சம் என்று இருந்தேன்; கணம் படிந்து ஏத்தி, கங்குலும் பகலும் கருத்தினால் கைதொழுது எழுவேன்; பணம் படும் அரவம் பற்றிய கையர், பாச்சிலாச்சிராமத்து எம் பரமர், பிணம் படு காட்டில் ஆடுவது ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்?.
[8]
குழைத்து வந்து ஓடிக் கூடுதி, நெஞ்சே! குற்றேவல் நாள்தொறும் செய்வான்; இழைத்த நாள் கடவார்; அன்பிலரேனும், எம்பெருமான்! என்று எப்போதும் அழைத்தவர்க்கு அருள் செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள் தாம், யாது சொன்னாலும், பிழைத்தது பொறுத்து ஒன்று ஈகிலர் ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்?.
[9]
துணிப்படும் உடையும் சுண்ண வெண்நீறும் தோற்றமும் சிந்தித்துக் காணில், மணிப் படு கண்டனை வாயினால் கூறி, மனத்தினால்-தொண்டனேன் நினைவேன்; பணிப் படும் அரவம் பற்றிய கையர், பாச்சிலாச்சிராமத்து எம் பரமர், பிணிப்பட ஆண்டு, பணிப்பு இலர் ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .
[10]
ஒருமையே அல்லேன், எழுமையும் அடியேன்; அடியவர்க்கு அடியனும் ஆனேன்; உரிமையால் உரியேன்; உள்ளமும் உருகும்; ஒண் மலர்ச் சேவடி காட்டாய்; அருமை ஆம் புகழார்க்கு அருள் செயும் பாச்சிலாச்சிராமத்து எம் அடிகள், பெருமைகள் பேசிச் சிறுமைகள் செய்யில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .
[11]
ஏசின அல்ல; இகழ்ந்தன அல்ல; எம்பெருமான்! என்று எப்போதும் பாயின புகழான், பாச்சிலாச்சிராமத்து அடிகளை அடி தொழப் பல்-நாள் வாயினால் கூறி மனத்தினால் நினைவான், வள வயல் நாவல் ஆரூரன், பேசின பேச்சைப் பொறுக்கிலர் ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .
[12]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.015   பூண் நாண் ஆவது ஓர்
பண் - தக்கராகம் (திருநாட்டியத்தான்குடி கரிநாதேசுவரர் மலர்மங்கையம்மை)
பூண் நாண் ஆவது ஓர் அரவம் கண்டு அஞ்சேன்; புறங்காட்டு ஆடல் கண்டு இகழேன்; பேணீர் ஆகிலும் பெருமையை உணர்வேன்; பிறவேன் ஆகிலும் மறவேன்; காணீர் ஆகிலும் காண்பன், என் மனத்தால்; கருதீர் ஆகிலும், கருதி, நானேல், உம் அடி பாடுதல் ஒழியேன்-நாட்டியத்தான் குடி நம்பீ! .
[1]
கச்சு ஏர் பாம்பு ஒன்று கட்டி நின்று, இடுகாட்டு எல்லியில் ஆடலைக் கவர்வன்; துச்சேன் என் மனம் புகுந்திருக்கின்றமை சொல்லாய், திப்பிய மூர்த்தீ! வைச்சே இடர்களைக் களைந்திட வல்ல மணியே! மாணிக்க வண்ணா! நச்சேன், ஒருவரை, நான் உம்மை அல்லால்; நாட்டியத்தான் குடி நம்பீ!.
[2]
அஞ்சாதே உமக்கு ஆட்செய வல்லேன்; யாதினுக்கு ஆசைப்படுகேன்? பஞ்சு ஏர் மெல் அடி மாமலை மங்கை பங்கா! எம் பரமேட்டீ! மஞ்சு ஏர் வெண்மதி செஞ்சடை வைத்த மணியே! மாணிக்கவண்ணா! நஞ்சு ஏர் கண்டா! வெண்தலை ஏந்தீ! நாட்டியத்தான் குடி நம்பீ! .
[3]
கல்லேன் அல்லேன், நின் புகழ்; அடிமை கல்லாதே பல கற்றேன்; நில்லேன் அல்லேன், நின் வழி; நின்றார்-தம்முடை நீதியை நினைய வல்லேன் அல்லேன்; பொன் அடி பரவ-மாட்டேன்; மறுமையை நினைய, நல்லேன் அல்லேன், நான் உமக்கு அல்லால்; நாட்டியத்தான் குடி நம்பீ!.
[4]
மட்டு ஆர் பூங்குழல் மலைமகள் கணவனைக் கருதார் தமைக் கருதேன்; ஒட்டீர் ஆகிலும் ஒட்டுவன், அடியேன்; உம் அடி அடைந்தவர்க்கு அடிமைப் பட்டேன் ஆகிலும் பாடுதல் ஒழியேன்; பாடியும் நாடியும் அறிய நட்டேன் ஆதலால் நான் மறக்கில்லேன்-நாட்டியத்தான் குடி நம்பீ! .
[5]
படப் பால்-தன்மையின், நான் பட்டது எல்லாம் படுத்தாய் என்று அல்லல் பறையேன்; குடப் பாச்சில்(ல்) உறை கோ! குளிர் வானே! கோனே! கூற்று உதைத்தானே! மடப் பால்-தயிரொடு நெய் மகிழ்ந்து ஆடும் மறை ஓதீ! மங்கை பங்கா! நடப்பீர் ஆகிலும் நடப்பன், உம் அடிக்கே; நாட்டியத்தான் குடி நம்பீ! .
[6]
ஐவாய் அரவினை மதி உடன் வைத்த அழகா! அமரர்கள் தலைவா! எய்வான் வைத்தது ஓர் இலக்கினை அணை தர நினைந்தேன், உள்ளம் உள்ளளவும்; உய்வான் எண்ணி வந்து உம் அடி அடைந்தேன்; உகவீர் ஆகிலும் உகப்பன்; நைவான் அன்று, உமக்கு ஆட்பட்டது, அடியேன்; நாட்டியத்தான் குடி நம்பீ! .
[7]
கலியேன், மானுட வாழ்க்கை ஒன்று ஆக; கருதிடின் கண்கள் நீர் பில்கும்; பலி தேர்ந்து உண்பது ஓர் பண்பு கண்டு இகழேன்; பசுவே ஏறிலும் பழியேன்; வலியே ஆகிலும் வணங்குதல் ஒழியேன்; மாட்டேன்; மறுமையை நினையேன்; நலியேன் ஒருவரை, நான் உமை அல்லால்; நாட்டியத்தான் குடி நம்பீ!.
[8]
குண்டாடிச் சமண் சாக்கியப் பேய்கள் கொண்டார் ஆகிலும், கொள்ளக் கண்டாலும், கருதேன்; எருது ஏறும் கண்ணா! நின் அலது அறியேன்; தொண்டாடித் தொழுவார் தொழக் கண்டு தொழுதேன், என் வினை போக; நண்டு ஆடும் வயல்-தண்டலை வேலி நாட்டியத்தான் குடி நம்பீ! .
[9]
கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற கொடிறன், கோட்புலி, சென்னி நாடு ஆர் தொல்புகழ் நாட்டியத்தான் குடி நம்பியை நாளும் மறவா, சேடு ஆர் பூங்குழல் சிங்கடி அப்பன்-திரு ஆரூரன்-உரைத்த, பாடீர் ஆகிலும், பாடுமின், தொண்டீர்! பாட, நும் பாவம் பற்று அறுமே.
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.016   குரும்பை முலை மலர்க் குழலி
பண் - தக்கராகம் (கலயநல்லூர் (சாக்கோட்டை) அமிர்தகலைநாதர் அமிர்தவல்லியம்மை)
குரும்பை முலை மலர்க் குழலி கொண்ட தவம் கண்டு, குறிப்பினொடும் சென்று, அவள் தன் குணத்தினை நன்கு அறிந்து, விரும்பு வரம் கொடுத்து, அவளை வேட்டு, அருளிச்செய்த விண்ணவர்கோன்; கண் நுதலோன்; மேவிய ஊர் வினவில் அரும்பு அருகே சுரும்பு அருவ, அறுபதம் பண் பாட, அணி மயில்கள் நடம் ஆடும் அணி பொழில் சூழ் அயலில் கரும்பு அருகே கருங்குவளை கண்வளரும், கழனிக் கமலங்கள் முகம் மலரும், கலய நல்லூர் காணே .
[1]
செரு மேவு சலந்தரனைப் பிளந்த சுடர் ஆழி செங்கண் மலர் பங்கயமாச் சிறந்தானுக்கு அருளி, இருள் மேவும் அந்தகன் மேல்-திரிசூலம் பாய்ச்சி, இந்திரனைத் தோள் முரித்த இறையவன் ஊர் வினவில் பெரு மேதை மறை ஒலியும், பேரி-முழவு ஒலியும், பிள்ளை இனம் துள்ளி விளையாட்டு ஒலியும், பெருக; கருமேதி புனல் மண்ட; கயல் மண்ட, கமலம்; களி வண்டின் கணம் இரியும் கலய நல்லூர் காணே .
[2]
இண்டை மலர் கொண்டு, மணல் இலிங்கம் அது இயற்றி, இனத்து ஆவின் பால் ஆட்ட, இடறிய தாதையைத் தாள் துண்டம் இடு சண்டி அடி அண்டர் தொழுது ஏத்தத் தொடர்ந்து அவனைப் பணி கொண்ட விடங்கனது ஊர் வினவில் மண்டபமும் கோபுரமும் மாளிகை சூளிகையும், மறை ஒலியும் விழவு ஒலியும் மறுகு நிறைவு எய்தி, கண்டவர்கள் மனம் கவரும், புண்டரிகப் பொய்கைக் காரிகையார் குடைந்து ஆடும், கலய நல்லூர் காணே.
[3]
மலை மடந்தை விளையாடி வளை ஆடு கரத்தால் மகிழ்ந்து அவள் கண் புதைத்தலுமே, வல் இருள் ஆய் எல்லா- உலகு உடன் தான் மூட, இருள் ஓடும் வகை, நெற்றி ஒற்றைக் கண் படைத்து உகந்த உத்தமன் ஊர் வினவில் அலை அடைந்த புனல் பெருகி, யானை மருப்பு இடறி அகிலொடு சந்து உந்தி, வரும் அரிசிலின் தென் கரை மேல், கலை அடைந்து கலி கடி அந்தணர் ஓமப் புகையால் கணமுகில் போன்ற(அ)ணி கிளரும், கலய நல்லூர் காணே .
[4]
நிற்பானும், கமலத்தில் இருப்பானும், முதலா நிறைந்து அமரர் குறைந்து இரப்ப, நினைந்தருளி, அவர்க்கு ஆய் வெற்பு ஆர் வில், அரவு நாண், எரி அம்பால், விரவார் புரம் மூன்றும் எரிவித்த விகிர்தன் ஊர் வினவில் சொல்பால பொருள் பால சுருதி ஒரு நான்கும் தோத்திரமும் பல சொல்லித் துதித்து, இறை தன் திறத்தே கற்பாரும் கேட்பாரும் ஆய், எங்கும் நன்கு ஆர் கலை பயில் அந்தணர் வாழும் கலய நல்லூர் காணே .
[5]
பெற்றிமை ஒன்று அறியாத தக்கனது வேள்விப் பெருந் தேவர் சிரம் தோள் பல் கரம் கண் பீடு அழியச் செற்று, மதிக்கலை சிதையத் திருவிரலால்-தேய்வித்து, அருள் பெருகு சிவபெருமான் சேர் தரும் ஊர் வினவில் தெற்று கொடி முல்லையொடு மல்லிகை செண்பகமும் திரை பொருது வரு புனல் சேர் அரிசிலின் தென் கரை மேல், கற்றினம் நல் கரும்பின் முளை கறி கற்க, கறவை கமழ் கழுநீர் கவர் கழனி, கலய நல்லூர் காணே .
[6]
இலங்கையர் கோன் சிரம்பத்தோடு இருபது திண் தோளும் இற்று அலற ஒற்றை விரல் வெற்பு அதன் மேல் ஊன்றி, நிலம் கிளர் நீர் நெருப்பொடு காற்று ஆகாசம் ஆகி, நிற்பனவும் நடப்பன ஆம் நின்மலன் ஊர் வினவில் பலங்கள் பல திரை உந்தி, பரு மணி பொன் கொழித்து, பாதிரி சந்து அகிலினொடு கேதகையும் பருங்கி, கலங்கு புனல் அலம்பி வரும் அரிசிலின் தென் கரை மேல், கயல் உகளும் வயல் புடை சூழ், கலய நல்லூர் காணே .
[7]
மால் அயனும் காண்பு அரிய மால் எரி ஆய் நிமிர்ந்தோன், வன்னி மதி சென்னிமிசை வைத்தவன், மொய்த்து எழுந்த வேலை விடம் உண்ட மணிகண்டன், விடை ஊரும் விமலன், உமையவளோடு மேவிய ஊர் வினவில் சோலை மலி குயில் கூவ, கோல மயில் ஆல, சுரும்பொடு வண்டு இசை முரல, பசுங்கிளி சொல்-துதிக்க, காலையிலும் மாலையிலும் கடவுள் அடி பணிந்து கசிந்த மனத்தவர் பயிலும் கலய நல்லூர் காணே .
[8]
பொரும் பலம் அது உடை அசுரன் தாரகனைப் பொருது பொன்றுவித்த பொருளினை முன் படைத்து உகந்த புனிதன், கரும்புவிலின் மலர் வாளிக் காமன் உடல் வேவக் கனல் விழித்த கண் நுதலோன், கருதும் ஊர் வினவில் இரும் புனல் வெண் திரை பெருகி, ஏலம், இலவங்கம், இருகரையும் பொருது அலைக்கும் அரிசிலின் தென் கரை மேல், கரும் பு(ன்)னை வெண் முத்து அரும்பிப் பொன்மலர்ந்து பவளக் கவின் காட்டும் கடி பொழில் சூழ், கலய நல்லூர் காணே .
[9]
தண் கமலப் பொய்கை புடை சூழ்ந்து அழகு ஆர் தலத்தில்-தடம் கொள் பெருங் கோயில்தனில்,-தக்க வகையாலே வண் கமலத்து அயன் முன் நாள் வழிபாடு செய்ய, மகிழ்ந்து அருளி இருந்த பரன் மருவிய ஊர் வினவில் வெண் கவரி கரும்பீலி வேங்கையொடு கோங்கின் விரை மலரும் விரவு புனல் அரிசிலின் தென் கரை மேல், கண் கமுகின் பூம்பாளை மது வாசம் கலந்த கமழ் தென்றல் புகுந்து உலவு, கலய நல்லூர் காணே .
[10]
தண் புனலும் வெண் மதியும் தாங்கிய செஞ்சடையன், தாமரையோன் தலை கலனாக் காமரம் முன் பாடி உண் பலி கொண்டு உழல் பரமன், உறையும் ஊர், நிறை நீர் ஒழுகு புனல் அரிசிலின் தென் கலய நல்லூர் அதனை, நண்பு உடைய நன் சடையன் இசை ஞானி சிறுவன், நாவலர் கோன், ஆரூரன் நாவின் நயந்து உரை செய் பண் பயிலும் பத்தும் இவை பத்தி செய்து நித்தம் பாட வல்லார், அல்லலொடு பாவம் இலர், தாமே .
[11]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.017   கோவலன் நான்முகன் வானவர் கோனும்
பண் - நட்டராகம் (திருநாவலூர் (திருநாமநல்லூர்) நாவலீசுவரர் சுந்தராம்பிகை)
கோவலன் நான்முகன் வானவர் கோனும் குற்றேவல் செய்ய, மேவலர் முப்புரம் தீ எழுவித்தவர், ஓர் அம்பினால்; ஏவலனார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்ட நாவலனார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே .
[1]
தன்மையினால் அடியேனைத் தாம் ஆட்கொண்ட நாள், சபை முன் வன்மைகள் பேசிட, வன் தொண்டன் என்பது ஓர் வாழ்வு தந்தார்; புன்மைகள் பேசவும், பொன்னைத் தந்து என்னைப் போகம் புணர்த்த நன்மையினார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே .
[2]
வேகம் கொண்டு ஓடிய வெள்விடை ஏறி ஓர் மெல்லியலை ஆகம் கொண்டார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்டார்; போகம் கொண்டார், கடல் கோடியில் மோடியை; பூண்பது ஆக நாகம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே.
[3]
அஞ்சும் கொண்டு ஆடுவர், ஆவினில்; சேவினை ஆட்சி கொண்டார்; தஞ்சம் கொண்டார், அடிச்சண்டியை, தாம் என வைத்து உகந்தார்; நெஞ்சம் கொண்டார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்டு நஞ்சம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே .
[4]
உம்பரார் கோனைத் திண்தோள் முரித்தார்; உரித்தார், களிற்றை; செம்பொன் ஆர் தீவண்ணர்; தூ வண்ண நீற்றர்; ஓர் ஆவணத்தால், எம்பிரானார், வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்ட நம்பிரானார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே .
[5]
கோட்டம் கொண்டார், குட மூக்கிலும் கோவலும் கோத்திட்டையும்; வேட்டம் கொண்டார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்டார்; ஆட்டம் கொண்டார், தில்லைச் சிற்றம்பலத்தே; அருக்கனை முன் நாட்டம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே.
[6]
தாய் அவளாய், தந்தை ஆகி, சாதல் பிறத்தல் இன்றி, போய் அகலாமைத் தன் பொன் அடிக்கு என்னைப் பொருந்த வைத்த வேயவனார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்ட நாயகனார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே.
[7]
வாய் ஆடி, மாமறை ஓதி ஓர் வேதியன் ஆகி வந்து; தீ ஆடியார்; சினக் கேழலின் பின் சென்று ஓர் வேடுவனாய், வேய் ஆடியார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்ட நாயாடியார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே .
[8]
படம் ஆடு பாம்பு அணையானுக்கும், பாவை நல்லாள் தனக்கும், வடம் ஆடு மால்விடை ஏற்றுக்கும், பாகனாய் வந்து ஒரு நாள் இடம் ஆடியார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்ட நடம் ஆடியார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே .
[9]
மிடுக்கு உண்டு என்று ஓடி ஓர் வெற்பு எடுத்தான் வலியை நெரித்தார்; அடக்கம் கொண்டு ஆவணம் காட்டி நல் வெண்ணெயூர் ஆளும் கொண்டார்; தடுக்க ஒண்ணாதது ஓர் வேழத்தினை உரித்திட்டு உமையை நடுக்கம் கண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே .
[10]
நாதனுக்கு ஊர், நமக்கு ஊர், நரசிங்கமுனை அரையன் ஆதரித்து ஈசனுக்கு ஆட்செயும் ஊர், அணி நாவலூர் என்று ஓத நல்-தக்க வன்தொண்டன்-ஆரூரன்-உரைத்த தமிழ் காதலித்தும் கற்றும் கேட்பவர் தம் வினைக்கட்டு அறுமே.
[11]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.018   மூப்பதும் இல்லை; பிறப்பதும் இல்லை;
பண் - நட்டராகம் (திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் )
மூப்பதும் இல்லை; பிறப்பதும் இல்லை; இறப்பது இல்லை; சேர்ப்பு அது காட்டு அகத்து; ஊரினும் ஆக; சிந்திக்கின்-அல்லால், காப்பது வேள்விக்குடி, தண்துருத்தி; எம் கோன் அரைமேல் ஆர்ப்பது நாகம்; அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! .
[1]
கட்டக் காட்டின்(ன்) நடம் ஆடுவர்; யாவர்க்கும் காட்சி ஒண்ணார்; சுட்ட வெண் நீறு அணிந்து ஆடுவர்; பாடுவர்; தூய நெய்யால் வட்டக்குண்டத்தில் எரி வளர்த்து ஓம்பி மறை பயில்வார் அட்டக் கொண்டு, உண்பது; அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! .
[2]
பேரும் ஓர் ஆயிரம் பேர் உடையார்; பெண்ணோடு ஆணும் அல்லர்; ஊரும் அது ஒற்றியூர்; மற்றை ஊர் பெற்றவா நாம் அறியோம்; காரும் கருங்கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம் கறுத்தார்க்கு ஆரம் பாம்பு ஆவது; அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! .
[3]
ஏனக்கொம்பும்(ம்) இள ஆமையும் பூண்டு, அங்கு ஓர் ஏறும் ஏறி, கானக்-காட்டில்-தொண்டர் கண்டன சொல்லியும், காமுறவே, மானைத்தோல் ஒன்றை உடுத்து, புலித்தோல் பியற்கும் இட்டு, யானைத்தோல் போர்ப்பது; அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! .
[4]
ஊட்டிக் கொண்டு உண்பது ஓர் ஊண் இலர், ஊர் இடு பிச்சை அல்லால்; பூட்டிக் கொண்டு ஏற்றினை ஏறுவர்; ஏறி ஓர் பூதம் தம்பால் பாட்(ட்)டிக் கொண்டு உண்பவர்; பாழிதொறும் பல பாம்பு பற்றி ஆட்டிக் கொண்டு, உண்பது; அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே!.
[5]
குறவனார் தம்மகள், தம் மகனார் மணவாட்டி; கொல்லை மறவனாராய், அங்கு ஓர் பன்றிப் பின் போவது மாயம் கண்டீர்; இறைவனார், ஆதியார், சோதியராய், அங்கு ஓர் சோர்வு படா அறவனார் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! .
[6]
பித்தரை ஒத்து ஒரு பெற்றியர்; நற்ற(வ்)வை, என்னைப் பெற்ற; முற்ற(வ்)வை, தம் அ(ன்)னை, தந்தைக்கும் தவ்வைக்கும் தம்பிரானார்; செத்தவர் தம் தலையில் பலி கொள்வதே செல்வம் ஆகில், அத் தவம் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே!.
[7]
உம்பரான், ஊழியான், ஆழியான், ஓங்கி மலர் உறைவான், தம் பரம் அல்லவர்; சிந்திப்பவர் தடுமாற்று அறுப்பார்; எம் பரம் அல்லவர்; என் நெஞ்சத் துள்ளும் இருப்பது ஆகில், அம்பரம் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! .
[8]
இந்திரனுக்கும் இராவணனுக்கும் அருள் புரிந்தார்; மந்திரம் ஓதுவர்; மாமறை பாடுவர்; மான்மறியர்; சிந்துரக் கண்ணனும், நான்முகனும்(ம்), உடன் ஆய்த் தனியே அந்தரம் செல்வது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! .
[9]
கூடலர் மன்னன், குல நாவலூர்க் கோன், நலத் தமிழைப் பாட வல்ல(ப்) பரமன்(ன்) அடியார்க்கு அடிமை வழுவா நாட வல்ல(த்) தொண்டன், ஆரூரன், ஆட்படும் ஆறு சொல்லிப் பாட வல்லார் பரலோகத்து இருப்பது பண்டம் அன்றே.
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.019   அற்றவனார், அடியார் தமக்கு; ஆயிழை
பண் - நட்டராகம் (திருநின்றியூர் மகாலட்சுமியீசுவரர் உலகநாயகியம்மை)
அற்றவனார், அடியார் தமக்கு; ஆயிழை பங்கினர் ஆம்; பற்றவனார்; எம் பராபரர் என்று பலர் விரும்பும் கொற்றவனார்; குறுகாதவர் ஊர் நெடு வெஞ்சரத்தால் செற்றவனார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே .
[1]
வாசத்தின் ஆர் மலர்க் கொன்றை உள்ளார்; வடிவு ஆர்ந்த நீறு பூசத்தினார்; புகலி(ந்)நகர் போற்றும் எம் புண்ணியத்தார்; நேசத்தினால் என்னை ஆளும் கொண்டார்; நெடுமால் கடல் சூழ் தேசத்தினார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே.
[2]
அம் கையில் மூ இலை வேலர்; அமரர் அடி பரவ, சங்கையை நீங்க, அருளித் தடங்கடல் நஞ்சம் உண்டார்; மங்கை ஒர்பாகர்; மகிழ்ந்த இடம் வளம் மல்கு புனல் செங்கயல் பாயும் வயல் பொலியும் திரு நின்றியூரே .
[3]
ஆறு உகந்தார், அங்கம்; நால்மறையார்; எங்கும் ஆகி அடல் ஏறு உகந்தார், இசை ஏழ் உகந்தார்; முடிக் கங்கை தன்னை வேறு உகந்தார்; விரிநூல் உகந்தார்; பரி சாந்தம் அதா நீறு உகந்தார்; உறையும்(ம்) இடம் ஆம் திரு நின்றியூரே.
[4]
வஞ்சம் கொண்டார் மனம் சேரகில்லார்; நறு நெய் தயிர் பால் அஞ்சும் கொண்டு ஆடிய வேட்கையினார்; அதிகைப் பதியே தஞ்சம் கொண்டார்; தமக்கு என்றும் இருக்கை, சரண் அடைந்தார் நெஞ்சம், கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே .
[5]
ஆர்த்தவர், ஆடு அரவம்(ம்) அரைமேல்; புலி ஈர் உரிவை போர்த்தவர்; ஆனையின் தோல் உடல் வெம் புலால் கை அகலப் பார்த்தவர்; இன் உயிர், பார், படைத்தான் சிரம் அஞ்சில் ஒன்றைச் சேர்த்தவருக்கு உறையும்(ம்) இடம் ஆம் திரு நின்றியூரே .
[6]
தலை இடை ஆர் பலி சென்று அகம் தோறும் திரிந்த செல்வர்; மலை உடையாள் ஒரு பாகம் வைத்தார்; கல்-துதைந்த நன்நீர்- அலை உடையார்; சடை எட்டும் சுழல, அரு நடம் செய் நிலை உடையார்; உறையும்(ம்) இடம் ஆம் திரு நின்றியூரே .
[7]
எட்டு உகந்தார், திசை; ஏழ் உகந்தார், எழுத்து; ஆறும் அன்பர் இட்டு உகந்து ஆர் மலர்ப் பூசை இச்சிக்கும் இறைவர்; முன்நாள் பட்டு உகும் பார் இடைக் காலனைக் காய்ந்து, பலி இரந்து ஊண் சிட்டு உகந்தார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே.
[8]
காலமும் ஞாயிறும் ஆகி நின்றார்; கழல் பேண வல்லார் சீலமும் செய்கையும் கண்டு உகப்பார்; அடி போற்று இசைப்ப, மாலொடு நான்முகன் இந்திரன் மந்திரத்தால் வணங்க, நீலநஞ்சு உண்டவருக்கு இடம் ஆம் திரு நின்றியூரே .
[9]
வாயார், மனத்தால் நினைக்குமவருக்கு; அருந்தவத்தில்- தூயார்; சுடுபொடி ஆடிய மேனியர்; வானில் என்றும் மேயார்; விடை உகந்து ஏறிய வித்தகர்; பேர்ந்தவர்க்குச் சேயார்; அடியார்க்கு அணியவர்; ஊர் திரு நின்றியூரே .
[10]
சேரும் புகழ்த் தொண்டர் செய்கை அறாத் திரு நின்றியூரில் சீரும் சிவகதி ஆய் இருந்தானைத் திரு நாவல் ஆ- ரூரன் உரைத்த உறு தமிழ் பத்தும் வல்லார் வினை போய், பாரும் விசும்பும் தொழ, பரமன்(ன்) அடி கூடுவரே .
[11]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.020   நீள நினைந்து அடியேன் உமை
பண் - நட்டராகம் (திருக்கோளிலி (திருக்குவளை) கோளிலிநாதர் வண்டமர்பூங்குழலம்மை)
நீள நினைந்து அடியேன் உமை நித்தலும் கை தொழுவேன்; வாள் அன கண் மடவாள் அவள் வாடி வருந்தாமே, கோளிலி எம்பெருமான்! குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்; ஆள் இலை; எம்பெருமான், அவை அட்டித்தரப் பணியே! .
[1]
வண்டு அமரும் குழலாள் உமை நங்கை ஓர் பங்கு உடையாய்! விண்டவர் தம் புரம் மூன்று எரி செய்த எம் வேதியனே! தெண்திரை நீர் வயல் சூழ் திருக்கோளிலி எம்பெருமான்! அண்டம் அது ஆயவனே, அவை அட்டித்தரப் பணியே! .
[2]
பாதி ஓர் பெண்ணை வைத்தாய்; படரும் சடைக் கங்கை வைத்தாய்; மாதர் நல்லார் வருத்தம்(ம்) அது நீயும் அறிதி அன்றே! கோது இல் பொழில் புடை சூழ் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்; ஆதியே, அற்புதனே, அவை அட்டித்தரப் பணியே! .
[3]
சொல்லுவது என், உனை நான்? தொண்டை வாய் உமை நங்கையை நீ புல்கி இடத்தில் வைத்தாய்க்கு ஒரு பூசல் செய்தார் உளரோ? கொல்லை வளம் புறவில்-குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன அல்லல் களைந்து அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே! .
[4]
முல்லை முறுவல் உமை ஒரு பங்கு உடை முக்கணனே! பல் அயர் வெண்தலையில் பலி கொண்டு உழல் பாசுபதா! கொல்லை வளம் புறவில்-திருக்கோளிலி எம்பெருமான்! அல்லல் களைந்து, அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே! .
[5]
குரவு அமரும் குழலாள் உமை நங்கை ஒர் பங்கு உடையாய்! பரவை பசி வருத்தம்(ம்) அது நீயும் அறிதி அன்றே! குரவு அமரும் பொழில் சூழ் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்; அரவம் அசைத்தவனே, அவை அட்டித்தரப் பணியே! .
[6]
எம்பெருமான்! நுனையே நினைந்து ஏத்துவன், எப்பொழுதும்; வம்பு அமரும் குழலாள் ஒரு பாகம் அமர்ந்தவனே! செம்பொனின் மாளிகை சூழ் திருக்கோளிலி எம்பெருமான்! அன்பு அது(வ்) ஆய் அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே! .
[7]
அரக்கன் முடி கரங்கள்(ள்) அடர்த்திட்ட எம் ஆதிப்பிரான்! பரக்கும் அரவு அல்குலாள் பரவை அவள் வாடுகின்றாள்; குரக்கு இனங்கள் குதி கொள் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்; இரக்கம் அது ஆய் அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே! .
[8]
பண்டைய மால், பிரமன், பறந்தும்(ம்) இடந்தும்(ம்) அயர்ந்தும் கண்டிலராய், அவர்கள் கழல் காண்பு அரிது ஆய பிரான்! தெண்திரை நீர் வயல் சூழ் திருக்கோளிலி எம்பெருமான்! அண்டம் அது ஆயவனே, அவை அட்டித்தரப் பணியே! .
[9]
கொல்லை வளம் புறவில்-திருக்கோளிலி மேயவனை நல்லவர் தாம் பரவும் திரு நாவல ஊரன் அவன் நெல் இட ஆட்கள் வேண்டி(ந்) நினைந்து ஏத்திய பத்தும் வல்லார், அல்லல் களைந்து உலகின்(ன்), அண்டர் வான் உலகு ஆள்பவரே .
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.021   நொந்தா ஒண்சுடரே! நுனையே நினைந்திருந்தேன்;
பண் - நட்டராகம் (திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்) திருமேற்றளியீசுவரர் காமாட்சியம்மை)
நொந்தா ஒண்சுடரே! நுனையே நினைந்திருந்தேன்; வந்தாய்; போய் அறியாய்; மனமே புகுந்து நின்ற சிந்தாய்! எந்தைபிரான்! திரு மேற்றளி உறையும் எந்தாய்! உன்னை அல்லால் இனி ஏத்த மாட்டேனே .
[1]
ஆள்-தான் பட்டமையால் அடியார்க்குத் தொண்டு பட்டுக் கேட்டேன், கேட்பது எல்லாம்; பிறவா வகை கேட்டொழிந்தேன்; சேட்(ட்)டார் மாளிகை சூழ் திரு மேற்றளி உறையும் மாட்(ட்)டே! உன்னை அல்லால் மகிழ்ந்து ஏத்த மாட்டேனே .
[2]
மோறாந்து ஓர் ஒரு கால் நினையாது இருந்தாலும், வேறா வந்து என் உள்ளம் புக வல்ல மெய்ப்பொருளே! சேறு ஆர் தண் கழனித் திரு மேற்றளி உறையும் ஏறே! உன்னை அல்லால் இனி ஏத்த மாட்டேனே .
[3]
உற்றார் சுற்றம் எனும் அது விட்டு நுன் அடைந்தேன்; எற்றால் என் குறைவு? என் இடரைத் துறந்தொழிந்தேன்; செற்றாய், மும்மதிலும்! திரு மேற்றளி உறையும் பற்றே! நுன்னை அல்லால் பணிந்து ஏத்த மாட்டேனே .
[4]
எம்மான், எம் அ(ன்)னை, என்றவர் இட்டு இறந்தொழிந்தார்; மெய்ம் மால் ஆயின தீர்த்து அருள் செயும் மெய்ப்பொருளே! கைம்மா ஈர் உரியாய்! கனம் மேற்றளி உறையும் பெம்மான்! உன்னை அல்லால் பெரிது ஏத்த மாட்டேனே .
[5]
நானேல் உன் அடியே நினைந்தேன்; நினைதலுமே ஊன் நேர் இவ் உடலம் புகுந்தாய்; என் ஒண்சுடரே! தேனே! இன்னமுதே! திரு மேற்றளி உறையும் கோனே! உன்னை அல்லால் குளிர்ந்து ஏத்த மாட்டேனே .
[6]
கை ஆர் வெஞ்சிலை நாண் அதன் மேல் சரம் கோத்தே, எய்தாய், மும்மதிலும் எரியுண்ண; எம்பெருமான்! செய் ஆர் பைங்கமலத் திரு மேற்றளி உறையும் ஐயா! உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே .
[7]
விரை ஆர் கொன்றையினாய்! விமலா! இனி உன்னை அல்லால், உரையேன், நா அதனால், உடலில் உயிர் உள்ளளவும்; திரை ஆர் தண்கழனித் திரு மேற்றளி உறையும் அரையா! உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே .
[8]
நிலை ஆய் நின் அடியே நினைந்தேன்; நினைதலுமே; தலைவா! நின் நினையப் பணித்தாய்; சலம் ஒழிந்தேன்; சிலை ஆர் மா மதில் சூழ் திரு மேற்றளி உறையும் மலையே! உன்னை அல்லால் மகிழ்ந்து ஏத்த மாட்டேனே .
[9]
பார் ஊர் பல்லவன் ஊர் மதில் காஞ்சி மா நகர்வாய்ச் சீர் ஊரும் புறவில்-திரு மேற்றளிச் சிவனை ஆரூரன்(ன்) அடியான்-அடித்தொண்டன், ஆரூரன்-சொன்ன சீர் ஊர் பாடல் வல்லார் சிவலோகம் சேர்வாரே .
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.022   முன்னவன், எங்கள் பிரான், முதல்
பண் - நட்டராகம் (திருப்பழமண்ணிப்படிக்கரை நீலகண்டேசுவரர் வடிக்கண்ணமுதகரநாயகியம்மை)
முன்னவன், எங்கள் பிரான், முதல் காண்பு அரிது ஆய பிரான், சென்னியில் எங்கள் பிரான், திரு நீல மிடற்று எம்பிரான், மன்னிய எங்கள் பிரான், மறை நான்கும் கல்லால் நிழல் கீழ்ப் பன்னிய எங்கள் பிரான்-பழமண்ணிப் படிக் கரையே .
[1]
அண்ட கபாலம் சென்னி(ய்) அடிமேல் அலர் இட்டு நல்ல தொண்டு அங்கு அடி பரவி, தொழுது ஏத்தி, நின்று ஆடும் இடம்; வெண் திங்கள் வெண்மழுவன், விரை ஆர் கதிர் மூவிலைய பண்டங்கன், மேய இடம் பழமண்ணிப் படிக் கரையே .
[2]
ஆடுமின், அன்பு உடையீர்! அடிக்கு ஆட்பட்ட தூளி கொண்டு சூடுமின், தொண்டர் உள்ளீர்! உமரோடு எமர் சூழ வந்து, வாடும் இவ் வாழ்க்கை தன்னை வருந்தாமல் திருந்தச் சென்று, பாடுமின், பத்தர் உள்ளீர், பழமண்ணிப் படிக் கரையே .
[3]
அடுதலையே புரிந்தான், நவை; அந்தர மூ எயிலும் கெடுதலையே புரிந்தான்; கிளரும் சிலை நாணியில் கோல் நடுதலையே புரிந்தான்; நரி கான்றிட்ட எச்சில் வெள்ளைப்- படுதலையே புரிந்தான்-பழமண்ணிப் படிக் கரையே .
[4]
உம் கைகளால் கூப்பி உகந்து ஏத்தித் தொழுமின், தொண்டீர்! மங்கை ஒர் கூறு உடையான், வானோர் முதல் ஆய பிரான், அம் கையில் வெண் மழுவன்(ன்), அலை ஆர் கதிர் மூவிலைய பங்கய பாதன், இடம் பழமண்ணிப் படிக் கரையே .
[5]
செடி படத் தீ விளைத்தான், சிலை ஆர் மதில்; செம் புனம் சேர் கொடி படு மூரி வெள்ளை எருது ஏற்றையும் ஏறக் கொண்டான்; கடியவன் காலன் தன்னைக் கறுத்தான்; கழல் செம்பவளப்- படியவன்; பாசுபதன்-பழமண்ணிப் படிக் கரையே .
[6]
கடுத்தவன்-தேர் கொண்டு ஓடிக் கயிலாய நல் மாமலையை எடுத்தவன், ஈர்-ஐந்துவாய் அரக்கன்-முடிபத்து அலற, விடுத்து, அவன் கை நரம்பால் வேத கீதங்கள் பாடல் உறப் படுத்தவன்; பால் வெண் நீற்றன்-பழமண்ணிப் படிக் கரையே.
[7]
திரிவன மும்மதிலும்(ம்) எரித்தான்; இமையோர் பெருமான்; அரியவன்; அட்ட புட்பம்(ம்) அவை கொண்டு அடி போற்றி, நல்ல கரியவன் நான்முகனும்(ம்), அடியும் முடி காண்பு அரிய பரியவன்; பாசுபதன்-பழமண்ணிப் படிக் கரையே .
[8]
வெற்று அரைக் கற்ற(அ)மணும், விரையாது வெண் தாலம் உண்ணும் துற்றரை, துற்று அறுப்பான் துன்ன ஆடைத் தொழில் உடையீர்! பெற்றரைப் பித்தர் என்று(க்) கருதேன்மின்! படிக்கரையுள் பற்றரைப் பற்றி நின்று(ப்) பழி பாவங்கள் தீர்மின்களே! .
[9]
பல் உயிர் வாழும் தெண் நீர்ப் பழமண்ணிப் படிக் கரையை அல்லி அம் தாமரைத்தார் ஆரூரன் உரைத்த தமிழ் சொல்லுதல் கேட்டல் வல்லார் அவர்க்கும், தமர்க்கும், கிளைக்கும், எல்லியும் நன்பகலும்(ம்) இடர் கூருதல் இல்லை அன்றே! .
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.023   செடியேன் தீவினையில்-தடுமாறக் கண்டாலும்,
பண் - நட்டராகம் (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் பொற்பதவேதநாயகியம்மை)
செடியேன் தீவினையில்-தடுமாறக் கண்டாலும், அடியான்; ஆவா! எனாது ஒழிதல் தகவு ஆமே? முடிமேல் மா மதியும் அரவும் உடன் துயிலும் வடிவே தாம் உடையார் மகிழும் கழிப்பாலை அதே .
[1]
எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால், அங்கே வந்து என்னொடும் உடன் ஆகி நின்று அருளி, இங்கே என் வினையை அறுத்திட்டு, எனை ஆளும் கங்கா நாயகனே! கழிப்பாலை மேயானே! .
[2]
ஒறுத்தாய், நின் அருளில்; அடியேன் பிழைத்தனகள் பொறுத்தாய், எத்தனையும் நாயேனைப் பொருள் படுத்துச் செறுத்தாய்; வேலைவிடம் மறியாமல் உண்டு கண்டம் கறுத்தாய் தண்கழனிக் கழிப்பாலை மேயானே!.
[3]
சுரும்பு ஆர் விண்ட மலர் அவை தூவி, தூங்கு கண்ணீர் அரும்பா நிற்கும் மனத்து அடியாரொடும் அன்பு செய்வன்; விரும்பேன், உன்னை அல்லால், ஒரு தெய்வம் என் மனத்தால்; கரும்பு ஆரும் கழனிக் கழிப்பாலை மேயானே! .
[4]
ஒழிப்பாய், என் வினையை; உகப்பாய்; முனிந்து அருளித் தெழிப்பாய்; மோதுவிப்பாய்; விலை ஆவணம் உடையாய் கழிப்பால் கண்டல் தங்கச் சுழி ஏந்து மா மறுகின் கழிப்பாலை மருவும் கனல் ஏந்து கையானே! .
[5]
ஆர்த்தாய், ஆடுஅரவை அரை ஆர் புலி அதள்மேல்; போர்த்தாய், ஆனையின் தோல் உரிவை புலால் நாற; காத்தாய், தொண்டு செய்வார் வினைகள் அவை போக, பார்த்தானுக்கு இடம் ஆம் பழி இல் கழிப்பாலை அதே .
[6]
பருத் தாள் வன் பகட்டைப் படம் ஆக முன் பற்றி, அதள்- உரித்தாய், ஆனையின் தோல்; உலகம் தொழும் உத்தமனே! எரித்தாய், முப்புரமும்; இமையோர்கள் இடர் கடியும் கருத்தா! தண்கழனிக் கழிப்பாலை மேயானே! .
[7]
படைத்தாய், ஞாலம் எலாம்; படர்புன்சடை எம் பரமா! உடைத்தாய், வேள்விதனை; உமையாளை ஓர்கூறு உடையாய்; அடர்த்தாய், வல் அரக்கன் தலை பத்தொடு தோள் நெரிய; கடல் சாரும் கழனிக் கழிப்பாலை மேயானே! .
[8]
பொய்யா நா அதனால் புகழ்வார்கள் மனத்தினுள்ளே மெய்யே நின்று எரியும் விளக்கே ஒத்த தேவர் பிரான், செய்யானும் கரிய நிறத்தானும் தெரிவு அரியான், மை ஆர் கண்ணியொடு மகிழ்வான், கழிப்பாலை அதே .
[9]
பழி சேர் இல் புகழான், பரமன், பரமேட்டி, கழி ஆர் செல்வம் மல்கும் கழிப்பாலை மேயானை, தொழுவான் நாவலர்கோன்-ஆரூரன்-உரைத்த தமிழ் வழுவா மாலை வல்லார் வானோர் உலகு ஆள்பவரே .
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.024   பொன் ஆர் மேனியனே! புலித்தோலை
பண் - நட்டராகம் (திருமழபாடி வச்சிரத்தம்பநாதர் அழகம்மை)
பொன் ஆர் மேனியனே! புலித்தோலை அரைக்கு அசைத்து, மின் ஆர் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே! மன்னே! மாமணியே! மழபாடியுள் மாணிக்கமே! அன்னே! உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?.
[1]
கீள் ஆர் கோவணமும், திருநீறு மெய் பூசி, உன்தன் தாளே வந்து அடைந்தேன்; தலைவா! எனை ஏன்றுகொள், நீ! வாள் ஆர் கண்ணி பங்கா! மழபாடியுள் மாணிக்கமே! கேளா! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?.
[2]
எம்மான், எம் அ(ன்)னை, என் தனக்கு எள்-தனைச் சார்வு ஆகார்; இம் மாயப் பிறவி பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன்; மைம் மாம் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே! அம்மான்! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?.
[3]
பண்டே நின் அடியேன்; அடியார் அடியார்கட்கு எல்லாம் தொண்டே பூண்டொழிந்தேன்; தொடராமைத் துரிசு அறுத்தேன்; வண்டு ஆர் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே! அண்டா! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?.
[4]
கண் ஆய், ஏழ் உலகும் கருத்து ஆய அருத்தமும் ஆய், பண் ஆர் இன் தமிழ் ஆய், பரம் ஆய பரஞ்சுடரே! மண் ஆர் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே! அண்ணா! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே? .
[5]
நாளார் வந்து அணுகி நலியாமுனம், நின் தனக்கே ஆளா வந்து அடைந்தேன்; அடியேனையும் ஏன்றுகொள், நீ! மாளா நாள் அருளும் மழபாடியுள் மாணிக்கமே! ஆளா! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே? .
[6]
சந்து ஆரும் குழையாய்! சடைமேல் பிறைதாங்கி! நல்ல வெந்தார் வெண்பொடியாய்! விடை ஏறிய வித்தகனே! மைந்து ஆர் சோலைகள் சூழ் மழபாடியுள் மாணிக்கமே! எந்தாய்! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே? .
[7]
வெய்ய விரிசுடரோன் மிகு தேவர் கணங்கள் எல்லாம் செய்ய மலர்கள் இட, மிகு செம்மையுள் நின்றவனே! மை ஆர் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே! ஐயா! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே? .
[8]
நெறியே! நின்மலனே! நெடுமால் அயன் போற்றி செய்யும் குறியே! நீர்மையனே! கொடி ஏர் இடையாள் தலைவா! மறி சேர் அம் கையனே! மழபாடியுள் மாணிக்கமே! அறிவே! உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?.
[9]
ஏர் ஆர் முப்புரமும் எரியச் சிலை தொட்டவனை, வார் ஆர் கொங்கை உடன் மழபாடியுள் மேயவனை, சீர் ஆர் நாவலர் கோன்-ஆரூரன்-உரைத்த தமிழ் பாரோர் ஏத்த வல்லார் பரலோகத்து இருப்பாரே .
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.025   பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை
பண் - நட்டராகம் (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை அரைக்கு அசைத்தீர்; முன் செய்த மூ எயிலும்(ம்) எரித்தீர்; முதுகுன்று அமர்ந்தீர்; மின் செய்த நுண் இடையாள் பரவை இவள் தன் முகப்பே, என் செய்த ஆறு, அடிகேள்! அடியேன் இட்டளம் கெடவே?.
மங்கை ஓர் கூறு அமர்ந்தீர்; மறை நான்கும் விரித்து உகந்தீர்; திங்கள் சடைக்கு அணிந்தீர்; திகழும் முதுகுன்று அமர்ந்தீர்; கொங்கை நல்லாள் பரவை குணம் கொண்டு இருந்தாள் முகப்பே, அங்கணனே! அருளாய், அடியேன் இட்டளம் கெடவே! .
[4]
மை ஆரும் மிடற்றாய்! மருவார் புரம் மூன்று எரித்த செய்யார் மேனியனே! திகழும் முதுகுன்று அமர்ந்தாய்! பை ஆரும்(ம்) அரவு ஏர் அல்குலாள் இவள் வாடுகின்றாள்; ஐயா! தந்தருளாய், அடியேன் இட்டளம் கெடவே! .
[5]
நெடியான், நான்முகனும்(ம்), இரவி(ய்)யொடும், இந்திரனும், முடியால் வந்து இறைஞ்ச(ம்) முதுகுன்றம் அமர்ந்தவனே! படி ஆரும்(ம்) இயலாள் பரவை இவள் தன் முகப்பே, அடிகேள்! தந்தருளாய், அடியேன் இட்டளம் கெடவே! .
[6]
கொந்து அணவும் பொழில் சூழ் குளிர் மா மதில் மாளிகை மேல் வந்து அணவும் மதி சேர், சடை மா முதுகுன்று உடையாய்! பந்து அணவும் விரலாள் பரவை இவள் தன் முகப்பே, அந்தணனே! அருளாய், அடியேன் இட்டளம் கெடவே! .
[7]
பரசு ஆரும் கரவா! பதினெண் கணமும் சூழ முரசார் வந்து அதிர(ம்), முதுகுன்றம் அமர்ந்தவனே! விரை சேரும் குழலாள் பரவை இவள் தன் முகப்பே, அரசே! தந்தருளாய், அடியேன் இட்டளம் கெடவே! .
[8]
ஏத்தாது இருந்து அறியேன்; இமையோர் தனி நாயகனே! மூத்தாய், உலகுக்கு எல்லாம்; முதுகுன்றம் அமர்ந்தவனே! பூத்து ஆரும் குழலாள் பரவை இவள் தன் முகப்பே, கூத்தா! தந்து அருளாய், கொடியேன் இட்டளம் கெடவே! .
[9]
பிறை ஆரும் சடை எம்பெருமான்! அருளாய் என்று, முறையால் வந்து அமரர் வணங்கும் முதுகுன்றர் தம்மை மறையார் தம் குரிசில் வயல் நாவல் ஆரூரன்-சொன்ன இறை ஆர் பாடல் வல்லார்க்கு எளிது ஆம், சிவலோகம் அதே .
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.026   செண்டு ஆடும் விடையாய்! சிவனே!
பண் - நட்டராகம் (திருக்காளத்தி காளத்திநாதர் ஞானப்பூங்கோதையம்மை)
செண்டு ஆடும் விடையாய்! சிவனே! என் செழுஞ்சுடரே! வண்டு ஆரும் குழலாள் உமை பாகம் மகிழ்ந்தவனே! கண்டார் காதலிக்கும் கணநாதன்! எம் காளத்தியாய்! அண்டா! உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே .
[1]
இமையோர் நாயகனே! இறைவா! என் இடர்த்துணையே! கமை ஆர் கருணையினாய்! கரு மா முகில் போல் மிடற்றாய்! உமை ஓர் கூறு உடையாய்! உருவே! திருக்காளத்தியுள் அமைவே! உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே.
[2]
படை ஆர் வெண் மழுவா! பகலோன் பல் உகுத்தவனே! விடை ஆர் வேதியனே! விளங்கும் குழைக் காது உடையாய்! கடை ஆர் மாளிகை சூழ் கணநாதன்! எம் காளத்தியாய்! உடையாய்! உன்னை அல்லால் உகந்து ஏத்த மாட்டேனே.
[3]
மறி சேர் கையினனே! மதமா உரி போர்த்தவனே! குறியே! என்னுடைய குருவே! உன் குற்றேவல் செய்வேன்; நெறியே நின்று அடியார் நினைக்கும் திருக்காளத்தியுள் அறிவே! உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே .
[4]
செஞ்சேல் அன்ன கண்ணார் திறத்தே கிடந்து உற்று அலறி, நஞ்சேன், நான் அடியேன், நலம் ஒன்று அறியாமையினால், துஞ்சேன்; நான் ஒரு கால்-தொழுதேன்; திருக்காளத்தியாய்! அஞ்சாது உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே.
[5]
பொய்யவன் நாய் அடியேன் புகவே நெறி ஒன்று அறியேன்; செய்யவன் ஆகி வந்து இங்கு இடர் ஆனவை தீர்த்தவனே! மெய்யவனே! திருவே! விளங்கும் திருக்காளத்தி என் ஐய! நுன் தன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே .
[6]
கடியேன், காதன்மையால் கழல் போது அறியாத என் உள் குடியாக் கோயில் கொண்ட குளிர் வார் சடை எம் குழகா! முடியால் வானவர்கள் முயங்கும் திருக்காளத்தியாய்! அடியேன் உன்னை அல்லால் அறியேன், மற்று ஒருவரையே .
[7]
நீறு ஆர் மேனியனே! நிமலா! நினை அன்றி மற்றுக் கூறேன், நா அதனால்; கொழுந்தே! என் குணக்கடலே! பாறு ஆர் வெண் தலையில் பலி கொண்டு உழல் காளத்தியாய்! ஏறே! உன்னை அல்லால் இனி ஏத்த மாட்டேனே! .
[8]
தளிர் போல் மெல் அடியாள் தனை ஆகத்து அமர்ந்து அருளி, எளிவாய் வந்து என் உள்ளம் புகுத வல்ல எம்பெருமான்! களி ஆர் வண்டு அறையும் திருக்காளத்தியுள் இருந்த ஒளியே! உன்னை அல்லால் இனி ஒன்றும் உணரேனே .
[9]
கார் ஊரும் பொழில் சூழ் கணநாதன் எம் காளத்தியுள் ஆரா இன்னமுதை, அணி நாவல் ஆரூரன் சொன்ன சீர் ஊர் செந்தமிழ்கள் செப்புவார், வினை ஆயின போய்ப் பேரா விண்ணுலகம் பெறுவார்; பிழைப்பு ஒன்று இலரே .
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.027   விடை ஆரும் கொடியாய்! வெறி
பண் - நட்டராகம் (திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை) உச்சிவரதநாயகர் அஞ்சனாட்சியம்மை)
விடை ஆரும் கொடியாய்! வெறி ஆர் மலர்க் கொன்றையினாய்! படை ஆர் வெண்மழுவா! பரம் ஆய பரம்பரனே! கடி ஆர் பூம்பொழில் சூழ் திருக்கற்குடி மன்னி நின்ற அடிகேள்! எம்பெருமான்! அடியேனையும், அஞ்சல்! என்னே!.
[1]
மறையோர் வானவரும் தொழுது ஏத்தி வணங்க நின்ற இறைவா! எம்பெருமான்! எனக்கு இன் அமுது ஆயவனே! கறை ஆர் சோலைகள் சூழ் திருக்கற்குடி மன்னி நின்ற அறவா! அங்கணனே! அடியேனையும், அஞ்சல்! என்னே!.
[2]
சிலையால் முப்புரங்கள் பொடி ஆகச் சிதைத்தவனே! மலை மேல் மா மருந்தே! மட மாது இடம் கொண்டவனே! கலை சேர் கையினனே! திருக்கற்குடி மன்னி நின்ற அலை சேர் செஞ்சடையாய்! அடியேனையும், அஞ்சல்! என்னே!.
[3]
செய்யார் மேனியனே! திரு நீல மிடற்றினனே! மை ஆர் கண்ணி பங்கா! மதயானை உரித்தவனே! கை ஆர் சூலத்தினாய் திருக்கற்குடி மன்னி நின்ற ஐயா! எம்பெருமான்! அடியேனையும், அஞ்சல்! என்னே! .
[4]
சந்து ஆர் வெண்குழையாய்! சரி கோவண ஆடையனே! பந்து ஆரும் விரலாள் ஒரு பாகம் அமர்ந்தவனே! கந்து ஆர் சோலைகள் சூழ் திருக்கற்குடி மன்னி நின்ற எந்தாய்! எம்பெருமான்! அடியேனையும் ஏன்று கொள்ளே!.
[5]
அரை ஆர் கீளொடு கோவணமும்(ம்) அரவும்(ம்) அசைத்து விரை ஆர் கொன்றை உடன் விளங்கும் பிறை மேல் உடையாய்! கரை ஆரும் வயல் சூழ் திருக்கற்குடி மன்னி நின்ற அரையா! எம்பெருமான்! அடியேனையும் அஞ்சல்! என்னே!.
[6]
பாரார் விண்ணவரும் பரவிப் பணிந்து ஏத்த நின்ற சீர் ஆர் மேனியனே! திகழ் நீல மிடற்றினனே! கார் ஆர் பூம்பொழில் சூழ் திருக்கற்குடி மன்னி நின்ற ஆரா இன்னமுதே! அடியேனையும், அஞ்சல்! என்னே! .
[7]
நிலனே, நீர், வளி, தீ, நெடுவானகம், ஆகி நின்ற புலனே! புண்டரிகத்து அயன், மாலவன், போற்றி செய்யும் கனலே! கற்பகமே! திருக்கற்குடி மன்னி நின்ற அனல் சேர் கையினனே! அடியேனையும், அஞ்சல்! என்னே!.
[8]
வரும் காலன்(ன்) உயிரை மடியத் திரு மெல்விரலால் பெரும் பாலன் தனக்கு ஆய்ப் பிரிவித்த பெருந்தகையே! கரும்பு ஆரும் வயல் சூழ் திருக்கற்குடி மன்னி நின்ற விரும்பா! எம்பெருமான்! அடியேனையும் வேண்டுதியே! .
[9]
அலை ஆர் தண் புனல் சூழ்ந்து, அழகு ஆகி, விழவு அமரும் கலை ஆர் மா தவர் சேர் திருக்கற்குடிக் கற்பகத்தைச் சிலை ஆர் வாள் நுதலாள் நல்ல சிங்கடி அப்பன் உரை விலை ஆர் மாலை வல்லார் வியல் மூ உலகு ஆள்பவரே .
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.028   பொடி ஆர் மேனியனே! புரி
பண் - நட்டராகம் (திருக்கடவூர் வீரட்டம் அமிர்தகடேசுவரர் அபிராமியம்மை)
பொடி ஆர் மேனியனே! புரி நூல் ஒருபால் பொருந்த, வடி ஆர் மூ இலை வேல், வளர் கங்கை இன் மங்கையொடும், கடி ஆர் கொன்றையனே! கடவூர் தனுள் வீரட்டத்து எம் அடிகேள்! என் அமுதே! எனக்கு ஆர் துணை, நீ அலதே? .
[1]
பிறை ஆரும் சடையாய்! பிரமன் தலையில் பலி கொள் மறை ஆர் வானவனே! மறையின் பொருள் ஆனவனே! கறை ஆரும் மிடற்றாய்! கடவூர் தனுள் வீரட்டத்து எம் இறைவா! என் அமுதே! எனக்கு ஆர் துணை, நீ அலதே? .
[2]
அன்று ஆலின்(ன்) நிழல் கீழ் அறம் நால்வர்க்கு அருள் புரிந்து, கொன்றாய், காலன்; உயிர் கொடுத்தாய், மறையோனுக்கு; மான் கன்று ஆரும் கரவா! கடவூர்த் திரு வீரட்டத்துள் என் தாதை! பெருமான்! எனக்கு ஆர் துணை, நீ அலதே? .
[3]
போர் ஆரும் கரியின்(ன்) உரி போர்த்துப் பொன் மேனியின் மேல், வார் ஆரும் முலையாள் ஒருபாகம் மகிழ்ந்தவனே! கார் ஆரும் மிடற்றாய்! கடவூர் தனுள் வீரட்டானத்து ஆரா என் அமுதே! எனக்கு ஆர் துணை, நீ அலதே? .
[4]
மை ஆர் கண்டத்தினாய்! மதமா உரி போர்த்தவனே! பொய்யாது என் உயிருள் புகுந்தாய்! இன்னம் போந்து அறியாய்! கை ஆர் ஆடு அரவா! கடவூர் தனுள் வீரட்டத்து எம் ஐயா! என் அமுதே! எனக்கு ஆர் துணை, நீ அலதே? .
[5]
மண், நீர், தீ, வெளி, கால், வரு பூதங்கள் ஆகி, மற்றும் பெண்ணோடு ஆண் அலியாய், பிறவா உரு ஆனவனே! கண் ஆரும் மணியே! கடவூர் தனுள் வீரட்டத்து எம் அண்ணா! என் அமுதே! எனக்கு ஆர் துணை, நீ அலதே? .
[6]
எரி ஆர் புன்சடை மேல் இள நாகம் அணிந்தவனே! நரி ஆரும் சுடலை நகு வெண் தலை கொண்டவனே! கரி ஆர் ஈர் உரியாய்! கடவூர் தனுள் வீரட்டத்து எம் அரியாய்! என் அமுதே! எனக்கு ஆர் துணை, நீ அலதே? .
[7]
வேறா உன் அடியேன், விளங்கும் குழைக் காது உடையாய்! தேறேன், உன்னை அல்லால்; சிவனே! என் செழுஞ்சுடரே! காறு ஆர் வெண்மருப்பா! கடவூர்த் திரு வீரட்டத்துள் ஆறு ஆர் செஞ்சடையாய்! எனக்கு ஆர் துணை, நீ அலதே? .
[8]
அயனோடு அன்று அரியும்(ம்) அடியும் முடி காண்பு அரிய பயனே! எம் பரனே! பரம் ஆய பரஞ்சுடரே! கயம் ஆரும் சடையாய்! கடவூர்த் திரு வீரட்டத்துள் அயனே! என் அமுதே! எனக்கு ஆர் துணை, நீ அலதே? .
[9]
கார் ஆரும் பொழில் சூழ் கடவூர்த் திரு வீரட்டத்துள் ஏர் ஆரும்(ம்) இறையைத் துணையா எழில் நாவலர்கோன்- ஆரூரன்(ன்) அடியான், அடித்தொண்டன்-உரைத்த தமிழ் பாரோர் ஏத்த வல்லார் பரலோகத்து இருப்பாரே.
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.029   இத்தனை ஆம் ஆற்றை அறிந்திலேன்;
பண் - நட்டராகம் (திருக்குருகாவூர் வெள்ளடை வெள்ளிடையப்பர் காவியங்கண்ணியம்மை)
இத்தனை ஆம் ஆற்றை அறிந்திலேன்; எம்பெருமான்! பித்தனே என்று உன்னைப் பேசுவார், பிறர் எல்லாம்; முத்தினை, மணி தன்னை, மாணிக்கம், முளைத்து எழுந்த வித்தனே! குருகாவூர் வெள்ளடை நீ அன்றே; .
[1]
ஆவியைப் போகாமே தவிர்த்து, என்னை ஆட்கொண்டாய்; வாவியில் கயல் பாய, குளத்து இடை மடைதோறும் காவியும் குவளையும் கமலம் செங்கழு நீரும் மேவிய குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .
[2]
பாடுவார் பசி தீர்ப்பாய்; பரவுவார் பிணி களைவாய்; ஓடு நன் கலன் ஆக உண் பலிக்கு உழல்வானே! காடு நல் இடம் ஆகக் கடு இருள் நடம் ஆடும் வேடனே! குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .
[3]
வெப்பொடு பிணி எல்லாம் தவிர்த்து எனை ஆட்கொண்டாய்; ஒப்பு உடை ஒளி நீலம் ஓங்கிய மலர்ப் பொய்கை, அப்படி அழகு ஆய அணி நடை மட அன்னம் மெய்ப்படு குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .
[4]
வரும் பழி வாராமே தவிர்த்து, எனை ஆட்கொண்டாய்; சுரும்பு உடை மலர்க் கொன்றைச் சுண்ண வெண் நீற்றானே! அரும்பு உடை மலர்ப் பொய்கை அல்லியும் மல்லிகையும் விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .
[5]
பண் இடைத் தமிழ் ஒப்பாய்! பழத்தினில் சுவை ஒப்பாய்! கண் இடை மணி ஒப்பாய்! கடு இருள் சுடர் ஒப்பாய்! மண் இடை அடியார்கள் மனத்து இடர் வாராமே, விண் இடைக் குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .
[6]
போந்தனை; தரியாமே நமன் தமர் புகுந்து, என்னை நோந்தன செய்தாலும், நுன் அலது அறியேன், நான்; சாம்தனை வருமேலும் தவிர்த்து எனை ஆட்கொண்ட வேந்தனே! குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .
[7]
மலக்கு இல் நின் அடியார்கள் மனத்து இடை மால் தீர்ப்பாய்; சலச்சலம் மிடுக்கு உடைய தருமனார் தமர் என்னைக் கலக்குவான் வந்தாலும், கடுந் துயர் வாராமே, விலக்குவாய்; குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .
[8]
படுவிப்பாய், உனக்கே ஆள் பலரையும், பணியாமே; தொடுவிப்பாய், துகிலொடு பொன்; தோல் உடுத்து உழல்வானே! கெடுவிப்பாய், அல்லாதார்; கேடு இலாப் பொன் அடிக்கே விடுவிப்பாய்; குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .
[9]
வளம் கனி பொழில் மல்கு வயல் அணிந்து அழகு ஆய விளங்கு ஒளி குருகாவூர் வெள்ளடை உறைவானை, இளங் கிளை ஆரூரன்-வனப்பகை அவள் அப்பன்- உளம் குளிர் தமிழ் மாலை பத்தர்கட்கு உரை ஆமே.
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.030   சிம்மாந்து, சிம்புளித்து, சிந்தையினில் வைத்து
பண் - நட்டராகம் (கருப்பறியலூர் (தலைஞாயிறு) குற்றம்பொறுத்தவீசுவரர் கோல்வளைநாயகியம்மை)
சிம்மாந்து, சிம்புளித்து, சிந்தையினில் வைத்து உகந்து திறம்பா வண்ணம் கைம்மாவின் உரிவை போர்த்து உமை வெருவக் கண்டானை; கருப்பறியலூர், கொய்ம் மாவின் மலர்ச் சோலைக் குயில் பாட மயில் ஆடும், கொகுடிக் கோயில் எம்மானை; மனத்தினால் நினைந்த போது அவர் நமக்கு இனிய ஆறே! .
[1]
நீற்(ற்)று ஆரும் மேனியராய் நினைவார் தம் உள்ளத்தே நிறைந்து தோன்றும் காற்றானை, தீயானை, கதிரானை, மதியானை, கருப்பறியலூர் கூற்றானை, கூற்று உதைத்துக் கோல் வளையாள் அவளோடும் கொகுடிக் கோயில் ஏற்றானை, மனத்தினால் நினைந்த போது அவர் நமக்கு இனிய ஆறே! .
[2]
முட்டாமே நாள்தோறும் நீர் மூழ்கி, பூப் பறித்து, மூன்று போதும் கட்டு ஆர்ந்த இண்டை கொண்டு, அடிச் சேர்த்தும் அந்தணர் தம் கருப்பறியலூர் கொட்டு ஆட்டுப் பாட்டு ஆகி நின்றானை, குழகனை,கொகுடிக் கோயில் எட்டு ஆன மூர்த்தியை, நினைந்த போது அவர் நமக்கு இனிய ஆறே! .
[3]
விருந்து ஆய சொல் மாலை கொண்டு ஏத்தி, வினை போக, வேலிதோறும் கருந் தாள வாழை மேல் செங்கனிகள் தேன் சொரியும் கருப்பறியலூர் குருந்து ஆய முள் எயிற்றுக் கோல் வளையாள் அவளோடும் கொகுடிக் கோயில் இருந்தானை மனத்தினால் நினைந்த போது அவர் நமக்கு இனிய ஆறே!.
[4]
பொடி ஏறு திருமேனிப் பெருமானை, பொங்கு அரவக் கச்சையானை, கடி நாறும் பூம் பொய்கைக் கயல் வாளை குதி கொள்ளும் கருப்பறியலூர் கொடி ஏறி வண்டு இனமும் தண் தேனும் பண் செய்யும் கொகுடிக் கோயில் அடி ஏறு கழலானை, நினைந்த போது அவர் நமக்கு இனிய ஆறே!.
[5]
பொய்யாத வாய்மையால், பொடி பூசிப் போற்று இசைத்து, பூசை செய்து, கையினால் எரி ஓம்பி மறை வளர்க்கும் அந்தணர் தம் கருப்பறியலூர் கொய் உலாம் மலர்ச் சோலைக் குயில் கூவ மயில் ஆலும் கொகுடிக் கோயில் ஐயனை என் மனத்தினால் நினைந்த போது அவர் நமக்கு இனிய ஆறே!.
[6]
செடி கொள் நோய் உள்ளளவும் தீவினையும் தீர்ந்து ஒழியச் சிந்தை செய்மின்! கடி கொள் பூந் தடம் மண்டிக் கருமேதி கண் படுக்கும் கருப்பறியலூர் கொடி கொள் பூ நுண் இடையாள் கோல் வளையாள் அவளோடும் கொகுடிக் கோயில் அடிகளை என் மனத்தினால் நினைந்த போது அவர் நமக்கு இனிய ஆறே! .
[7]
பறையாத வல்வினைகள் பறைந்தொழிய, பல்-நாளும் பாடி ஆடி கறை ஆர்ந்த கண்டத்தன், எண்தோளன், முக்கண்ணன், கருப்பறியலூர், குறையாத மறை நாவர் குற்றேவல் ஒழியாத, கொகுடிக் கோயில் உறைவானை, மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே!.
[8]
சங்கு ஏந்து கையானும் தாமரையின் மேலானும் தன்மை காணாக் கங்கு ஆர்ந்த வார்சடைகள் உடையானை, விடையானை, கருப்பறியலூர் கொங்கு ஆர்ந்த பொழில்-சோலை சூழ் கனிகள் பல உதிர்க்கும் கொகுடிக் கோயில் எம் கோனை, மனத்தினால் நினைந்த போது அவர் நமக்கு இனிய ஆறே!.
[9]
பண் தாழ் இன் இசை முரலப் பல்-நாளும் பாவித்துப் பாடி ஆடிக் கண்டார் தம் கண் குளிரும் களிக் கமுகம் பூஞ்சோலைக் கருப்பறியலூர் குண்டாடும் சமணரும் சாக்கியரும் புறம் கூறும் கொகுடிக் கோயில் எண் தோள் எம்பெருமானை நினைந்த போது அவர் நமக்கு இனிய ஆறே!.
[10]
கலை மலிந்த தென்புலவர் கற்றோர் தம் இடர் தீர்க்கும் கருப்பறியலூர் குலை மலிந்த கோள்-தெங்கு மட்டு ஒழுகும் பூஞ்சோலை கொகுடிக் கோயில் இலை மலிந்த மழுவானை, மனத்தினால் அன்பு செய்து, இன்பம் எய்தி, மலை மலிந்த தோள் ஊரன்-வனப் பகை அப்பன்-உரைத்த வண் தமிழ்களே!.
[11]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.031   முந்தை ஊர் முதுகுன்றம், குரங்கணில்
பண் - கொல்லி (திருவிடையாறு )
முந்தை ஊர் முதுகுன்றம், குரங்கணில் முட்டம், சிந்தை ஊர் நன்று சென்று அடைவான் திரு ஆரூர், பந்தையூர், பழையாறு, பழனம், பைஞ்ஞீலி, எந்தை ஊர் எய்து அ(ம்)மான் இடையாறு, இடை மருதே.
[1]
சுற்றும் ஊர் சுழியல், திருச் சோபுரம், தொண்டர் ஒற்றும் ஊர் ஒற்றியூர், திரு ஊறல், ஒழியாப் பெற்றம் ஊர்தி, பெண் பாதி இடம் பெண்ணைத் தெண்நீர் எற்றும் ஊர் எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே.
[2]
கடங்களூர், திருக்காரிக்கரை, கயிலாயம், விடங்களூர், திரு வெண்ணி, அண்ணாமலை, வெய்ய படங்கள் ஊர்கின்ற பாம்பு அரையான், பரஞ்சோதி, இடம் கொள் ஊர் எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே.
[3]
கச்சையூர், காவம், கழுக்குன்றம், காரோணம், பிச்சை ஊர் திரிவான்-கடவூர், வடபேறூர், கச்சி ஊர் கச்சி, சிக்கல், நெய்த்தானம், மிழலை, இச்சை ஊர் எமது அ(ம்)மான் இடையாறு, இடைமருதே.
திங்களூர், திரு ஆதிரையான் பட்டினம் ஊர், நங்களூர், நறையூர், நனி நால் இசை நாலூர், தங்களூர், தமிழான் என்று பாவிக்க வல்ல எங்களூர், எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே.
[6]
கருக்க நஞ்சு அமுது உண்ட கல்லாலன், கொல் ஏற்றன், தருக்கு அரக்கனைச் செற்று உகந்தான், தன் முடிமேல் எருக்க நாள் மலர் இண்டையும் மத்தமும் சூடி, இருக்கும் ஊர் எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே.
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.032   கடிது ஆய்க் கடல் காற்று
பண் - கொல்லி (திருக்கோடிக்குழகர் அமுதகடநாதர் மையார்தடங்கணம்மை)
கடிது ஆய்க் கடல் காற்று வந்து எற்ற, கரைமேல் குடி தான் அயலே இருந்தால் குற்றம் ஆமோ? கொடியேன் கண்கள் கண்டன, கோடிக் குழகீர்! அடிகேள்! உமக்கு ஆர் துணை ஆக இருந்தீரே?
[1]
முன் தான் கடல் நஞ்சம் உண்ட அதனாலோ? பின் தான் பரவைக்கு உபகாரம் செய்தாயோ? குன்றாப் பொழில் சூழ் தரு கோடிக் குழகா! என் தான் தனியே இருந்தாய்? எம்பிரானே!
[2]
மத்தம் மலி சூழ் மறைக்காடு அதன் தென்பால் பத்தர் பலர் பாட இருந்த பரமா! கொத்து ஆர் பொழில் சூழ்தரு கோடிக் குழகா! எத்தால்-தனியே இருந்தாய்? எம்பிரானே!
[3]
காடேல், மிக வலிது; காரிகை அஞ்ச, கூடிப் பொந்தில் ஆந்தைகள் கூகை குழற, வேடித் தொண்டர் சாலவும் தீயர்; சழக்கர்; கோடிக் குழகா! இடம் கோயில் கொண்டாயே?
[4]
மை ஆர் தடங்கண்ணி பங்கா! கங்கையாளும் மெய் ஆகத்து இருந்தனள்; வேறு இடம் இல்லை; கை ஆர் வளைக் காடு காளோடும் உடன் ஆய்க் கொய் ஆர் பொழில் கோடியே கோயில் கொண்டாயே?
[5]
அரவு ஏர் அல்குலாளை ஓர் பாகம் அமர்ந்து, மரவம் கமழ் மா மறைக்காடு அதன் தென்பால் குரவம் பொழில் சூழ்தரு கோடிக் குழகா! இரவே துணை ஆய் இருந்தாய்; எம்பிரானே!
[6]
பறையும் குழலும்(ம்) ஒலிபாடல் இயம்ப, அறையும் கழல் ஆர்க்க, நின்று ஆடும் அமுதே! குறையாப் பொழில் சூழ்தரு கோடிக் குழகா! இறைவா! தனியே இருந்தாய்; எம்பிரானே!
[7]
ஒற்றியூர் என்ற ஊனத்தினால் அது தானோ? அற்றப் பட ஆரூர் அது என்று அகன்றாயோ? முற்றா மதி சூடிய கோடிக் குழகா! எற்றால்-தனியே இருந்தாய்? எம்பிரானே!
[8]
நெடியானொடு நான்முகனும்(ம்) அறிவு ஒண்ணாப் படியான்! பலி கொள்ளும் இடம் குடி இல்லை; கொடியார் பலர் வேடர்கள் வாழும் கரைமேல்; அடிகேள்! அன்பு அது ஆய் இடம் கோயில் கொண்டாயே!
[9]
பார் ஊர் மலி சூழ் மறைக்காடு அதன் தென்பால் ஏர் ஆர் பொழில் சூழ்தரு கோடிக் குழகை ஆரூரன் உரைத்தன பத்து இவை வல்லார் சீர் ஊர் சிவலோகத்து இருப்பவர் தாமே.
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.033   பாறு தாங்கிய காடரோ? படுதலையரோ?
பண் - கொல்லி (திருவாரூர் )
பாறு தாங்கிய காடரோ? படுதலையரோ? மலைப் பாவை ஓர்- கூறு தாங்கிய குழகரோ? குழைக் காதரோ? குறுங் கோட்டு இள ஏறு தாங்கிய கொடியரோ? சுடு பொடியரோ? இலங்கும் பிறை ஆறு தாங்கிய சடையரோ? நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.
[1]
இட்டிது ஆக வந்து உரைமினோ! நுமக்கு இசையுமா நினைந்து ஏத்துவீர்! கட்டி வாழ்வது நாகமோ? சடை மேலும் நாறு கரந்தையோ? பட்டி ஏறு உகந்து ஏறரோ? படு வெண்தலைப் பலி கொண்டு வந்து அட்டி ஆளவும் கிற்பரோ? நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.
[2]
ஒன்றினீர்கள், வந்து உரைமினோ! நுமக்கு இசையுமா நினைந்து ஏத்துவீர்! குன்றி போல்வது ஒர் உருவரோ? குறிப்பு ஆகி நீறு கொண்டு அணிவரோ? இன்றியே இலர் ஆவரோ? அன்றி உடையராய் இலர் ஆவரோ? அன்றியே மிக அறவரோ? நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.
[3]
தேனை ஆடு முக்கண்ணரோ? மிகச் செய்யரோ? வெள்ளை நீற்றரோ? பால் நெய் ஆடலும் பயில்வரோ? தமைப் பற்றினார்கட்கு நல்லரோ? மானை மேவிய கண்ணினாள் மலை மங்கை நங்கையை அஞ்ச, ஓர் ஆனை ஈர் உரி போர்ப்பரோ? நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.
[4]
கோணல் மாமதி சூடரோ? கொடுகொட்டி, காலர் கழலரோ? வீணை தான் அவர் கருவியோ? விடை ஏறு வேத முதல்வரோ? நாண் அது ஆக ஒர் நாகம் கொண்டு அரைக்கு ஆர்ப்பரோ? நலம் ஆர்தர ஆணை ஆக நம் அடிகளோ? நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.
[5]
வந்து சொல்லுமின், மூடனேனுக்கு! வல்லவா நினைந்து ஏத்துவீர்! வந்த சாயினை அறிவரோ? தம்மை வாழ்த்தினார்கட்கு நல்லரோ? புந்தியால் உரை கொள்வரோ? அன்றிப் பொய் இல் மெய் உரைத்து ஆள்வரோ? அன்றியே மிக அறவரோ? நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.
[6]
மெய் என்? சொல்லுமின், நமரங்காள்! உமக்கு இசையுமா நினைந்து ஏத்துவீர்! கையில் சூலம் அது உடையரோ? கரிகாடரோ? கறைக் கண்டரோ? வெய்ய பாம்பு அரை ஆர்ப்பரோ? விடை ஏறரோ? கடைதோறும் சென்று ஐயம் கொள்ளும் அவ் அடிகளோ? நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.
[7]
நீடு வாழ் பதி உடையரோ? அயன் நெடிய மாலுக்கும் நெடியரோ? பாடுவாரையும் உடையரோ? தமைப் பற்றினார்கட்கு நல்லரோ? காடு தான் அரங்கு ஆகவே, கைகள் எட்டினோடு இலயம் பட, ஆடுவார் எனப்படுவரோ? நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.
[8]
நமண நந்தியும், கருமவீரனும், தருமசேனனும், என்று இவர் குமணமாமலைக் குன்று போல் நின்று, தங்கள் கூறை ஒன்று இன்றியே, ஞமணம், ஞாஞணம், ஞாணம், ஞோணம் என்று ஓதி யாரையும் நாண் இலா அமணரால் பழிப்பு உடையரோ? நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.
[9]
படி செய் நீர்மையின் பத்தர்காள்! பணிந்து ஏத்தினேன்; பணியீர், அருள்! வடிவு இலான் திரு நாவலூரான்-வனப்பகை அப்பன், வன் தொண்டன், செடியன் ஆகிலும் தீயன் ஆகிலும் தம்மையே மனம் சிந்திக்கும் அடியன்-ஊரனை ஆள்வரோ? நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.034   தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்
பண் - கொல்லி (திருப்புகலூர் அக்கினியீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
நரைகள் போந்து மெய் தளர்ந்து மூத்து உடல் நடுங்கி நிற்கும் இக் கிழவனை, வரைகள் போல்-திரள் தோளனே! என்று வாழ்த்தினும் கொடுப்பார் இலை; புரை வெள் ஏறு உடைப் புண்ணியன் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்! அரையனாய் அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
[4]
வஞ்சம் நெஞ்சனை, மா சழக்கனை, பாவியை, வழக்கு இ(ல்)லியை, பஞ்சதுட்டனை, சாதுவே! என்று பாடினும் கொடுப்பார் இலை; பொன் செய் செஞ்சடைப் புண்ணியன் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்! நெஞ்சில் நோய் அறுத்து உஞ்சு போவதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
[5]
நலம் இலாதானை, நல்லனே! என்று, நரைத்த மாந்தரை, இளையனே!
குலம் இலாதானை, குலவனே! என்று, கூறினும் கொடுப்பார் இலை; புலம் எலாம் வெறி கமழும் பூம் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்! அலமரது அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
[6]
நோயனை, தடந்தோளனே! என்று, நொய்ய மாந்தரை, விழுமிய தாய் அன்றோ, புலவோர்க்கு எலாம்! என்று, சாற்றினும் கொடுப்பார் இலை; போய் உழன்று கண் குழியாதே, எந்தை புகலூர் பாடுமின், புலவீர்காள்! ஆயம் இன்றிப் போய் அண்டம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
[7]
எள் விழுந்த இடம் பார்க்கும் ஆகிலும், ஈக்கும் ஈகிலன் ஆகிலும், வள்ளலே! எங்கள் மைந்தனே! என்று வாழ்த்தினும் கொடுப்பார் இலை; புள் எலாம் சென்று சேரும் பூம் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்! அள்ளல்பட்டு அழுந்தாது போவதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
தையலாருக்கு ஒர் காமனே! என்றும், சால நல அழகு உடை ஐயனே! கை உலாவிய வேலனே! என்று, கழறினும் கொடுப்பார் இலை; பொய்கை ஆவியில் மேதி பாய் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்! ஐயனாய் அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
[10]
செறுவினில் செழுங் கமலம் ஓங்கு தென்புகலூர் மேவிய செல்வனை நறவம் பூம்பொழில் நாவலூரன்-வனப்பகை அப்பன், சடையன்தன் சிறுவன், வன்தொண்டன், ஊரன்-பாடிய பாடல் பத்து இவை வல்லவர் அறவனார் அடி சென்று சேர்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
[11]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.035   அங்கம் ஓதி ஓர் ஆறைமேற்றளி
பண் - கொல்லி (திருப்புறம்பயம் சாட்சிவரதேசுவரர் கரும்படுசொல்லம்மை)
அங்கம் ஓதி ஓர் ஆறைமேற்றளி நின்றும் போந்து வந்து இன்னம்பர்த் தங்கினோமையும், இன்னது என்றிலர், ஈசனார்; எழு, நெஞ்சமே! கங்குல் ஏமங்கள் கொண்டு தேவர்கள் ஏத்தி, வானவர்தாம் தொழும் பொங்கு மால்விடை ஏறி செல்வப் புறம்பயம் தொழப் போதுமே.
[1]
பதியும், சுற்றமும், பெற்ற மக்களும், பண்டையார் அலர்; பெண்டிரும், நெதியில் இம் மனை வாழும் வாழ்க்கையும், நினைப்பு ஒழி(ம்), மட நெஞ்சமே! மதியம் சேர் சடைக் கங்கையான் இடம் மகிழும், மல்லிகை, சண்பகம், புதிய பூ மலர்ந்து எல்லி நாறும் புறம்பயம் தொழப் போதுமே.
[2]
புறம் திரைந்து, நரம்பு எழுந்து, நரைத்து, நீ உரையால்-தளர்ந்து, அறம் புரிந்து நினைப்பது ஆண்மை அரிதுகாண்; இஃது அறிதியேல், திறம்பியாது எழு, நெஞ்சமே! சிறுகாலை நாம் உறு வாணியம், புறம் பயத்து உறை பூதநாதன் புறம்பயம் தொழப் போதுமே.
[3]
குற்று ஒரு(வ்)வரைக் கூறை கொண்டு கொலைகள் சூழ்ந்த களவு எலாம் செற்று ஒரு(வ்)வரைச் செய்த தீமைகள், இம்மையே வரும், திண்ணமே; மற்று ஒரு(வ்)வரைப் பற்று இலேன்; மறவாது எழு(ம்), மட நெஞ்சமே! புற்று அர(வ்)வு உடைப் பெற்றம் ஏறி புறம்பயம் தொழப் போதுமே.
[4]
கள்ளி நீ செய்த தீமை உள்ளன பாவமும் பறையும்படி தெள்ளிதா எழு, நெஞ்சமே! செங்கண் சே உடைச் சிவலோகன் ஊர் துள்ளி வெள் இள வாளை பாய் வயல்-தோன்று தாமரைப் பூக்கள் மேல், புள்ளி நள்ளிகள் பள்ளி கொள்ளும் புறம்பயம் தொழப் போதுமே.
[5]
படை எலாம் பகடு ஆர ஆளிலும், பௌவம் சூழ்ந்து அரசு ஆளிலும், கடை எலாம் பினைத் தேரைவால்; கவலாது எழு(ம்), மட நெஞ்சமே! மடை எலாம் கழுநீர் மலர்ந்து, மருங்குஎலாம் கரும்பு ஆட, தேன் புடை எலாம் மணம் நாறு சோலைப் புறம்பயம் தொழப் போதுமே.
[6]
முன்னைச் செய்வினை இம்மையில் வந்து மூடும் ஆதலின் முன்னமே, என்னை நீ தியக்காது எழு(ம்), மட நெஞ்சமே! எந்தை தந்தை ஊர் அன்னச்சேவலோடு ஊடிப் பேடைகள் கூடிச் சேரும் அணி பொழில், புன்னைக் கன்னிகள் அக்கு அரும்பு புறம்பயம் தொழப் போதுமே.
[7]
மலம் எலாம் அறும், இம்மையே; மறுமைக்கும் வல்வினை சார்கிலா; சலம் எலாம் ஒழி, நெஞ்சமே! எங்கள் சங்கரன் வந்து தங்கும் ஊர் கலம் எலாம் கடல் மண்டு, காவிரி நங்கை ஆடிய, கங்கை நீர் புலம் எலாம் மண்டிப் பொன் விளைக்கும் புறம்பயம் தொழப் போதுமே.
[8]
பண்டு அரீயன செய்த தீமையும் பாவமும் பறையும்படி கண்டு அரீயன கேட்டியேல், கவலாது எழு(ம்), மட நெஞ்சமே! தொண்டு அரீயன பாடித் துள்ளி நின்று, ஆடி வானவர்தாம் தொழும் புண்டரீகம் மலரும் பொய்கை புறம்பயம் தொழப் போதுமே.
[9]
துஞ்சியும் பிறந்தும் சிறந்தும் துயக்கு அறாத மயக்கு இவை அஞ்சி, ஊரன் திருப் புறம்பயத்து அப்பனைத் தமிழ்ச் சீரினால் நெஞ்சினாலே, புறம்பயம் தொழுது உய்தும் என்று நினைத்தன வஞ்சியாது உரைசெய்ய வல்லவர், வல்லர், வான் உலகு ஆளவே.
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.036   கார் உலாவிய நஞ்சை உண்டு
பண் - கொல்லி (திருப்பைஞ்ஞீலி மெய்ஞ்ஞான நீலகண்டேசுவரர் விசாலாட்சியம்மை)
கார் உலாவிய நஞ்சை உண்டு இருள் கண்ட! வெண் தலை ஓடு கொண்டு, ஊர் எலாம் திரிந்து, என் செய்வீர்? பலி ஓர் இடத்திலே கொள்ளும், நீர்! பார் எலாம் பணிந்து உம்மையே பரவிப் பணியும் பைஞ்ஞீலியீர்! ஆரம் ஆவது நாகமோ? சொலும்! ஆரணீய விடங்கரே!
[1]
சிலைத்து நோக்கும், வெள் ஏறு; செந்தழல் வாய பாம்பு அது மூசெனும்; பலிக்கு நீர் வரும்போது நும் கையில் பாம்பு வேண்டா, பிரானிரே! மலைத்த சந்தொடு, வேங்கை, கோங்கமும், மன்னு கார் அகில், சண்பகம், அலைக்கும் பைம் புனல் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரே!
[2]
தூயவர், கண்ணும் வாயும் மேனியும்; துன்ன ஆடை, சுடலையில் பேயொடு ஆடலைத் தவிரும்! நீர் ஒரு பித்தரோ? எம்பிரானிரே! பாயும் நீர்க் கிடங்கு ஆர் கமலமும், பைந் தண் மாதவி, புன்னையும், ஆய பைம்பொழில் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரே!
[3]
செந்தமிழ்த் திறம் வல்லிரோ? செங்கண் அரவம் முன் கையில் ஆடவே வந்து நிற்குமிது என்கொலோ? பலி மாற்றமாட்டோம்; இடகிலோம்; பைந் தண் மா மலர் உந்து சோலைகள் கந்தம் நாறும் பைஞ்ஞீலியீர்! அந்தி வானம் உம் மேனியோ சொலும்! ஆரணீய விடங்கரே!
[4]
நீறு நும் திருமேனி நித்திலம்; நீல் நெடுங் கண்ணினாளொடும் கூறராய் வந்து நிற்றிரால்; கொணர்ந்து இடகிலோம், பலி; நடமினோ! பாறு வெண்தலை கையில் ஏந்தி, பைஞ்ஞீலியேன் என்றீர், அடிகள் நீர்; ஆறு தாங்கிய சடையரோ? சொலும்! ஆரணீய விடங்கரே!
[5]
குரவம் நாறிய குழலினார் வளை கொள்வதே தொழில் ஆகி நீர் இரவும் இம் மனை அறிதிரே? இங்கே நடந்து போகவும் வல்லிரே? பரவி நாள்தொறும் பாடுவார் வினை பற்று அறுக்கும் பைஞ்ஞீலியீர்! அரவம் ஆட்டவும் வல்லிரோ? சொலும்! ஆரணீய விடங்கரே!
[6]
ஏடு உலாம் மலர்க் கொன்றை சூடுதிர்; என்பு எலாம் அணிந்து என் செய்வீர்? காடு, நும் பதி; ஓடு, கையது; காதல் செய்பவர் பெறுவது என்? பாடல் வண்டு இசை ஆலும் சோலைப் பைஞ்ஞீலியேன் என்று நிற்றிரால்; ஆடல் பாடலும் வல்லிரோ? சொலும்! ஆரணீய விடங்கரே!
[7]
மத்தம், மா மலர், கொன்றை, வன்னியும், கங்கையாளொடு திங்களும், மொய்த்த வெண்தலை, கொக்கு இற(ஃ)கொடு, வெள் எருக்கம், உம் சடைய தாம்; பத்தர் சித்தர்கள் பாடி ஆடும் பைஞ்ஞீலியேன் என்று நிற்றிரால்; அத்தி ஈர் உரி போர்த்திரோ? சொலும்! ஆரணீய விடங்கரே!
[8]
தக்கை, தண்ணுமை, தாளம், வீணை, தகுணிச்சம், கிணை, சல்லரி, கொக்கரை, குட முழவினோடு இசை கூடிப் பாடி நின்று ஆடுவீர்; பக்கமே குயில் பாடும் சோலைப் பைஞ்ஞீலியேன் என நிற்றிரால்; அக்கும் ஆமையும் பூண்டிரோ? சொலும்! ஆரணீய விடங்கரே!
[9]
கை ஒர் பாம்பு, அரை ஆர்த்த ஒர் பாம்பு, கழுத்து ஒர் பாம்பு, அவை பின்பு தாழ் மெய் எலாம் பொடிக் கொண்டு பூசுதிர்; வேதம் ஓதுதிர்; கீதமும் பையவே விடங்கு ஆக நின்று, பைஞ்ஞீலியேன் என்றீர், அடிகள் நீர்; ஐயம் ஏற்குமிது என் கொலோ? சொலும்! ஆரணீய விடங்கரே!
[10]
அன்னம் சேர் வயல் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரை மின்னும் நுண் இடை மங்கைமார் பலர் வேண்டிக் காதல் மொழிந்த சொல் மன்னு தொல் புகழ் நாவலூரன்-வன்தொண்டன்-வாய்மொழி பாடல் பத்து உன்னி இன் இசை பாடுவார், உமை கேள்வன் சேவடி சேர்வரே.
[11]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.037   குருகு பாய, கொழுங் கரும்புகள்
பண் - கொல்லி (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
பறக்கும் எம் கிள்ளைகாள்! பாடும் எம் பூவைகாள்! அறக்கண் என்னத் தகும் அடிகள் ஆரூரரை மறக்ககில்லாமையும், வளைகள் நில்லாமையும், உறக்கம் இல்லாமையும், உணர்த்த வல்லீர்களே? .
[2]
சூழும் ஓடிச் சுழன்று உழலும் வெண் நாரைகாள்! ஆளும் அம் பொன்கழல் அடிகள் ஆரூரர்க்கு வாழும் ஆறும், வளை கழலும் ஆறும்(ம்), எனக்கு ஊழும் மாறும்(ம்), இவை உணர்த்த வல்லீர்களே? .
[3]
சக்கிரவாளத்து இளம் பேடைகாள்! சேவல்காள்! அக்கிரமங்கள் செயும் அடிகள் ஆரூரர்க்கு, வக்கிரம் இல்லாமையும், வளைகள் நில்லாமையும், உக்கிரம் இல்லாமையும், உணர்த்த வல்லீர்களே? .
[4]
இலை கொள் சோலைத்தலை இருக்கும் வெண் நாரைகாள்! அலை கொள் சூலப்படை அடிகள் ஆரூரர்க்கு, கலைகள் சோர்கின்றதும், கன வளை கழன்றதும், முலைகள் பீர் கொண்டதும், மொழிய வல்லீர்களே? .
[5]
வண்டுகாள்! கொண்டல்காள்! வார் மணல் குருகுகாள்! அண்டவாணர் தொழும் அடிகள் ஆரூரரைக் கண்ட ஆறும், காமத்தீக் கனன்று எரிந்து மெய் உண்ட ஆறும்(ம்), இவை உணர்த்த வல்லீர்களே? .
[6]
தேன் நலம் கொண்ட தேன்! வண்டுகாள்! கொண்டல்காள்! ஆன் நலம் கொண்ட எம் அடிகள் ஆரூரர்க்கு, பால் நலம் கொண்ட எம் பணை முலை பயந்து பொன் ஊன் நலம் கொண்டதும் உணர்த்த வல்லீர்களே? .
[7]
சுற்று முற்றும் சுழன்று உழலும் வெண் நாரைகாள்! அற்றம் முற்றப் பகர்ந்து அடிகள் ஆரூரர்க்கு, பற்று மற்று இன்மையும், பாடு மற்று இன்மையும், முற்றும் மற்று இன்மையும், மொழிய வல்லீர்களே? .
[8]
குரவம் நாற, குயில் வண்டு இனம் பாட, நின்று அரவம் ஆடும் பொழில் அம் தண் ஆரூரரைப் பரவி நாடு(ம்)மதும், பாடி நாடு(ம்)மதும், உருகி நாடு(ம்)மதும், உணர்த்த வல்லீர்களே? .
[9]
கூடும் அன்னப் பெடைகாள்! குயில்! வண்டுகாள்! ஆடும் அம் பொன்கழல் அடிகள் ஆரூரரைப் பாடும் ஆறும், பணிந்து ஏத்தும் ஆறும், கூடி ஊடும் ஆறும்(ம்), இவை உணர்த்த வல்லீர்களே? .
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.038   தம்மானை அறியாத சாதியார் உளரே?
பண் - கொல்லிக்கௌவாணம் (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
தம்மானை அறியாத சாதியார் உளரே? சடைமேல் கொள் பிறையானை, விடை மேற்கொள் விகிர்தன், கைம்மாவின் உரியானை, கரிகாட்டில் ஆடல் உடையானை, விடையானை, கறை கொண்ட கண்டத்து அம்மான் தன் அடிக் கொண்டு என் முடிமேல் வைத்திடும் என்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவு இலா நாயேன்- எம்மானை, எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறை போதும் இகழ்வன் போல் யானே! .
[1]
முன்னே எம்பெருமானை மறந்து என்கொல்? மறவா-தொழிந்து என்கொல்? மறவாத சிந்தையால் வாழ்வேன்; பொன்னே! நல்மணியே! வெண் முத்தே! செய் பவளக் குன்றமே! ஈசன்! என்று உன்னையே புகழ்வேன்; அன்னே! என் அத்தா! என்று அமரரால் அமரப் படுவானை, அதிகை மா நகருள் வாழ்பவனை, என்னே! என் எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல் யானே! .
[2]
விரும்பினேற்கு எனது உள்ளம் விடகிலா விதியே! விண்ணவர் தம் பெருமானே! மண்ணவர் நின்று ஏத்தும் கரும்பே! என் கட்டி! என்று உள்ளத்தால் உள்கி, காதல் சேர் மாதராள் கங்கையாள் நங்கை வரும் புனலும் சடைக்கு அணிந்து, வளராத பிறையும் வரி அரவும் உடன் துயில வைத்து அருளும் எந்தை, இரும் புனல் வந்து எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல் யானே! .
[3]
நால்-தானத்து ஒருவனை, நான் ஆய பரனை, நள்ளாற்று நம்பியை, வெள்ளாற்று விதியை, காற்றானை, தீயானை, கடலானை, மலையின் தலையானை, கடுங் கலுழிக் கங்கை நீர் வெள்ள- ஆற்றானை, பிறையானை, அம்மானை, எம்மான்தம்மானை, யாவர்க்கும் அறிவு அரிய செங்கண் ஏற்றானை, எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல் யானே! .
[4]
சேந்தர் தாய் மலைமங்கை திருநிறமும் பரிவும் உடையானை, அதிகை மா நகருள் வாழ்பவனை, கூந்தல் தாழ் புனல் மங்கை குயில் அன்ன மொழியாள் சடை இடையில் கயல் இனங்கள் குதி கொள்ளக் குலாவி, வாய்ந்த நீர் வர உந்தி மராமரங்கள் வணக்கி, மறிகடலை இடம் கொள்வான் மலை ஆரம் வாரி ஏந்து நீர் எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல் யானே! .
வெய்து ஆய வினைக்கடலில் தடுமாறும் உயிர்க்கு மிக இரங்கி, அருள் புரிந்து, வீடு பேறு ஆக்கம் பெய்தானை, பிஞ்ஞகனை, மைஞ் ஞவிலும் கண்டத்து எண்தோள் எம்பெருமானை, பெண்பாகம் ஒருபால் செய்தானை, செக்கர் வான் ஒளியானை, தீ வாய் அரவு ஆடு சடையானை, திரிபுரங்கள் வேவ எய்தானை, எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல் யானே! .
[7]
பொன்னானை, மயில் ஊர்தி முருகவேள் தாதை, பொடி ஆடு திருமேனி, நெடுமால் தன் முடிமேல்- தென்னானை, குடபாலின் வடபாலின் குணபால் சேராத சிந்தையான், செக்கர்வான் அந்தி அன்னானை, அமரர்கள் தம் பெருமானை, கருமான் உரியானை, அதிகை மா நகருள் வாழ்பவனை, என்னானை, எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல் யானே! .
[8]
திருந்தாத வாள் அவுணர் புரம் மூன்றும் வேவச் சிலை வளைவித்து, ஒரு கணையால்- தொழில் பூண்ட சிவனை, கருந் தான மதகளிற்றின் உரியானை, பெரிய கண் மூன்றும் உடையானை, கருதாத அரக்கன் பெருந்தோள்கள் நால்-ஐந்தும், ஈர்-ஐந்து முடியும், உடையானைப் பேய் உருவம் ஊன்றும் உற மலை மேல் இருந்தானை, எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல் யானே! .
[9]
என்பினையே கலன் ஆக அணிந்தானை, எங்கள் எருது ஏறும் பெருமானை, இசை ஞானி சிறுவன்- வன் பனைய வளர் பொழில் சூழ் வயல் நாவலூர்க்கோன், வன்தொண்டன், ஆரூரன்- மதியாது சொன்ன அன்பனை, யாவர்க்கும் அறிவு அரிய அத்தர்-பெருமானை, அதிகை மா நகருள் வாழ்பவனை, என் பொன்னை, எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல் யானே! .
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.039   தில்லை வாழ் அந்தணர் தம்
பண் - கொல்லிக்கௌவாணம் (திருவாரூர் )
தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்; திரு நீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்; இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்; இளையான் தன் குடிமாறன்அடியார்க்கும் அடியேன்; வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்; விரி பொழில் சூழ் குன்றையார் விறல் மிண்டற்கு அடியேன்; அல்லி மென் முல்லை அந்தார் அமர் நீதிக்கு அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
[1]
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தற்கு அடியேன்; ஏனாதி நாதன் தன் அடியார்க்கும் அடியேன்; கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பர்க்கு அடியேன்; கடவூரில் கலயன் தன் அடியார்க்கும் அடியேன்; மலை மலிந்த தோள் வள்ளல் மானக்கஞ்சாறன், எஞ்சாத வாள்-தாயன், அடியார்க்கும் அடியேன்; அலை மலிந்த புனல் மங்கை ஆனாயற்கு அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
[2]
மும்மையால் உலகு ஆண்ட மூர்த்திக்கும் அடியேன்; முருகனுக்கும், உருத்திர பசுபதிக்கும், அடியேன்; செம்மையே திரு நாளைப் போவார்க்கும் அடியேன்; திருக்குறிப்புத் தொண்டர் தம் அடியார்க்கும் அடியேன்; மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க, வெகுண்டு எழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த, அம்மையான் அடி சண்டிப் பெருமானுக்கு அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
[3]
திரு நின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக்கரையன் தன் அடியார்க்கும் அடியேன்; பெரு நம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்; பெரு மிழலைக் குறும்பற்கும், பேயார்க்கும், அடியேன்; ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்; ஒலி புனல் சூழ் சாத்த மங்கை நீல நக்கற்கு அடியேன்; அரு நம்பி நமி நந்தி அடியார்க்கும் அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
[4]
வம்பு அறா வரிவண்டு மணம் நாற மலரும் மது மலர் நல் கொன்றையான் அடி அலால் பேணா எம்பிரான்-சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்; ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்; நம்பிரான்-திருமூலன் அடியார்க்கும் அடியேன்; நாட்டம் மிகு தண்டிக்கும், மூர்க்கற்கும், அடியேன்; அம்பரான்-சோமாசிமாறனுக்கும் அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
[5]
வார் கொண்ட வன முலையாள் உமை பங்கன் கழலே மறவாது கல் எறிந்த சாக்கியற்கும் அடியேன்;
சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்; செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டற்கு அடியேன்; கார் கொண்ட கொடை கழறிற்றறிவாற்கும் அடியேன்; கடல் காழி கணநாதன் அடியார்க்கும் அடியேன்; ஆர் கொண்ட வேல் கூற்றன்-களந்தைக் கோன்-அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
[6]
பொய் அடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்; பொழில் கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழற்கு அடியேன்; மெய் அடியான்-நரசிங்க முனையரையற்கு அடியேன்; விரி திரை சூழ் கடல் நாகை அதிபத்தற்கு அடியேன்; கை தடிந்த வரிசிலையான்-கலிக் கம்பன், கலியன், கழல் சத்தி-வரிஞ்சையர்கோன்,- அடியார்க்கும் அடியேன்; ஐயடிகள் காடவர் கோன் அடியார்க்கும் அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
[7]
கறைக் கண்டன் கழல் அடியே காப்புக் கொண்டிருந்த கணம் புல்ல நம்பிக்கும், காரிக்கும், அடியேன்; நிறைக் கொண்ட சிந்தையான், நெல்வேலி வென்ற நின்ற சீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்; துறைக் கொண்ட செம்பவளம் இருள் அகற்றும் சோதித் தொல் மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்; அறைக் கொண்ட வேல் நம்பி முனையடுவாற்கு அடியேன்; ஆரூரன் ஆரூரில்அம்மானுக்கு ஆளே .
[8]
கடல் சூழ்ந்த உலகு எலாம் காக்கின்ற பெருமான்- காடவர் கோன்-கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்; மடல் சூழ்ந்த தார் நம்பி இடங்கழிக்கும், தஞ்சை மன்னவன் ஆம்செருத்துணை தன் அடியார்க்கும் அடியேன்; புடை சூழ்ந்த புலி அதள் மேல் அரவு ஆட ஆடி பொன் அடிக்கே மனம் வைத்த புகழ்த் துணைக்கும் அடியேன்; அடல் சூழ்ந்த வேல் நம்பி கோட்புலிக்கும் அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
மன்னிய சீர் மறை நாவன்நின்றவூர் பூசல், வரிவளையாள் மானிக்கும், நேசனுக்கும், அடியேன்; தென்னவனாய் உலகு ஆண்ட செங்கணாற்கு அடியேன்; திருநீல கண்டத்துப் பாணனார்க்கு அடியேன்; என்னவன் ஆம் அரன் அடியே அடைந்திட்ட சடையன், இசைஞானி, காதலன்-திரு நாவலூர்க் கோன், அன்னவன் ஆம் ஆரூரன்-அடிமை கேட்டு உவப்பார் ஆரூரில் அம்மானுக்கு அன்பர் ஆவாரே .
[11]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.040   வள் வாய மதி மிளிரும்
பண் - கொல்லிக்கௌவாணம் (திருக்கானாட்டுமுள்ளூர் பதஞ்சலியீசுவரர் கானார்குழலம்மை)
வள் வாய மதி மிளிரும் வளர் சடையினானை, மறையவனை, வாய்மொழியை, வானவர் தம் கோனை, புள் வாயைக் கீண்டு உலகம் விழுங்கி உமிழ்ந்தானை, பொன்நிறத்தின் முப்புரிநூல் நான் முகத்தினானை, முள் வாய மடல்-தழுவி, முடத்தாழை ஈன்று மொட்டு அலர்ந்து, விரை நாறும் முருகு விரி பொழில் சூழ், கள் வாய கருங்குவளை கண் வளரும் கழனி கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே .
[1]
ஒரு மேக-முகில் ஆகி, ஒத்து உலகம் தான் ஆய், ஊர்வனவும் நிற்பனவும் ஊழிகளும் தான் ஆய், பொரு மேவு கடல் ஆகி, பூதங்கள் ஐந்து ஆய், புனைந்தவனை, புண்ணியனை, புரிசடையினானை, திரு மேவு செல்வத்தார் தீ மூன்றும் வளர்த்த திருத் தக்க அந்தணர்கள் ஓதும் நகர் எங்கும் கருமேதி செந்தாமரை மேயும் கழனி கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே .
[2]
இரும்பு உயர்ந்த மூ இலைய சூலத்தினானை, இறையவனை, மறையவனை, எண் குணத்தினானை, சுரும்பு உயர்ந்த கொன்றையொடு தூ மதியம் சூடும் சடையானை, விடையானை, சோதி எனும் சுடரை, அரும்பு உயர்ந்த அரவிந்தத்து அணி மலர்கள் ஏறி, அன்னங்கள் விளையாடும் அகன் துறையின் அருகே கரும்பு உயர்ந்து, பெருஞ் செந்நெல் நெருங்கி விளை கழனி கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே .
[3]
பூளை புனை கொன்றையொடு புரிசடையினானை, புனல் ஆகி, அனல் ஆகி, பூதங்கள் ஐந்து ஆய், நாளை இன்று நெருநல் ஆய், ஆகாயம் ஆகி, நாயிறு ஆய், மதியம் ஆய், நின்ற எம்பரனை, பாளை படு பைங்கமுகின் சூழல், இளந் தெங்கின் படு மதம் செய் கொழுந் தேறல் வாய் மடுத்துப் பருகி, காளை வண்டு பாட, மயில் ஆலும் வளர் சோலை கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே .
[4]
செருக்கு வாய்ப் பைங்கண் வெள் அரவு அரையினானை, தேவர்கள் சூளாமணியை, செங்கண் விடையானை, முருக்குவாய் மலர் ஒக்கும் திருமேனியானை, முன்னிலை ஆய் முழுது உலகம் ஆய பெருமானை, இருக்கு வாய் அந்தணர்கள் எழுபிறப்புள் எங்கும் வேள்வி இருந்து இரு நிதியம் வழங்கும் நகர், எங்கும் கருக்கு வாய்ப் பெண்ணையொடு தெங்கு மலி சோலை கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே .
[5]
விடை அரவக் கொடி ஏந்தும் விண்ணவர் தம் கோனை, வெள்ளத்து மால் அவனும் வேத முதலானும் அடி இணையும் திருமுடியும் காண அரிது ஆய சங்கரனை, தத்துவனை, தையல் மடவார்கள் உடை அவிழ, குழல் அவிழ, கோதை குடைந்து ஆட, குங்குமங்கள் உந்தி வரு கொள்ளிடத்தின் கரை மேல், கடைகள் விடு வார் குவளைகளை வாரும் கழனி கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே .
இழை தழுவு வெண்நூலும் மேவு திருமார்பின் ஈசன், தன் எண்தோள்கள் வீசி எரி ஆட, குழை தழுவு திருக்காதில் கோள் அரவம் அசைத்து, கோவணம் கொள் குழகனை, குளிர்சடையினானை, தழை தழுவு தண் நிறத்த செந்நெல் அதன் அயலே தடந் தரள மென் கரும்பின் தாழ் கிடங்கின் அருகே, கழை தழுவித் தேன் கொடுக்கும் கழனி சூழ் பழன கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே .
[8]
குனிவு இனிய கதிர் மதியம் சூடு சடையானை, குண்டலம் சேர் காதவனை, வண்டு இனங்கள் பாடப் பனி உதிரும் சடையானை, பால் வெண் நீற்றானை, பல உருவும் தன் உருவே ஆய பெருமானை, துனிவு இனிய தூய மொழித் தொண்டை வாய் நல்லார், தூ நீலம் கண் வளரும் சூழ் கிடங்கின் அருகே கனிவு இனிய கதலி வனம் தழுவு பொழில்-சோலை கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே .
[9]
தேவி, அம்பொன்மலைக்கோமன் தன் பாவை, ஆகத் தனது உருவம் ஓருபாகம் சேர்த்துவித்த பெருமான்; மேவிய வெந் நரகத்தில் அழுந்தாமை நமக்கு மெய்ந்நெறியைத் தான் காட்டும் வேத முதலானை; தூவி வாய் நாரையொடு குருகு பாய்ந்து ஆர்ப்ப, துறைக் கெண்டை மிளிர்ந்து, கயல் துள்ளி விளையாட, காவி வாய் வண்டு பல பண் செய்யும் கழனி கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே .
[10]
திரையின் ஆர் கடல் சூழ்ந்த தென் இலங்கைக் கோனைச் செற்றவனை, செஞ்சடை மேல் வெண் மதியினானை, கரையின் ஆர் புனல் தழுவு கொள்ளிடத்தின் கரை மேல் கானாட்டு முள்ளூரில் கண்டு கழல்-தொழுது, உரையின் ஆர் மதயானை நாவல் ஆரூரன், உரிமையால் உரை செய்த ஒண் தமிழ்கள் வல்லார் வரையின் ஆர் வகை ஞாலம் ஆண்டவர்க்கும், தாம் போய், வானவர்க்கும், தலைவராய் நிற்பர், அவர் தாமே .
[11]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.041   முது வாய் ஓரி கதற,
பண் - கொல்லிக்கௌவாணம் (திருக்கச்சூர் ஆலக்கோயில் தினம்விருந்திட்டநாதர் கன்னியுமையம்மை)
முது வாய் ஓரி கதற, முதுகாட்டு எரி கொண்டு ஆடல் முயல்வானே! மது வார் கொன்றைப் புதுவீ சூடும் மலையான் மகள் தன் மணவாளா! கதுவாய்த் தலையில் பலி நீ கொள்ளக் கண்டால் அடியார் கவலாரே? அதுவே ஆம் ஆறு இதுவோ? கச்சூர் ஆலக்கோயில் அம்மானே!.
[1]
கச்சு ஏர் அரவு ஒன்று அரையில் அசைத்து, கழலும் சிலம்பும் கலிக்க, பலிக்கு என்று உச்சம் போதா ஊர் ஊர் திரியக் கண்டால் அடியார் உருகாரே? இச்சை அறியோம்; எங்கள் பெருமான்! ஏழ் ஏழ் பிறப்பும் எனை ஆள்வாய்! அச்சம் இல்லாக் கச்சூர் வடபால் ஆலக்கோயில் அம்மானே!.
[2]
சாலக் கோயில் உள நின் கோயில்; அவை என் தலை மேல் கொண்டாடி மாலைத் தீர்ந்தேன்; வினையும் துரந்தேன்-வானோர் அறியா நெறியானே! கோலக் கோயில் குறையாக் கோயில் குளிர் பூங் கச்சூர் வடபாலை ஆலக்கோயில், கல்லால் நிழல் கீழ் அறம் கட்டுரைத்த அம்மானே!.
[3]
விடையும் கொடியும் சடையும் உடையாய்! மின் நேர் உருவத்து ஒளியானே! கடையும் புடை சூழ் மணி மண்டபமும் கன்னி மாடம் கலந்து, எங்கும் புடையும் பொழிலும் புனலும் தழுவி, பூமேல்-திருமாமகள் புல்கி, அடையும் கழனிப் பழனக் கச்சூர் ஆலக்கோயில் அம்மானே!.
[4]
மேலை விதியே! வினையின் பயனே! விரவார் புரம் மூன்று எரி செய்தாய்! காலை எழுந்து தொழுவார் தங்கள் கவலை களைவாய்! கறைக் கண்டா! மாலை மதியே! மலை மேல் மருந்தே! மறவேன், அடியேன்; வயல் சூழ்ந்த ஆலைக் கழனிப் பழனக் கச்சூர் ஆலக்கோயில் அம்மானே!.
[5]
பிறவாய்; இறவாய்; பேணாய், மூவாய்; பெற்றம் ஏறிப் பேய் சூழ்தல் துறவாய்; மறவாய், சுடுகாடு என்றும் இடமாக் கொண்டு நடம் ஆடி; ஒறுவாய்த் தலையில் பலி நீ கொள்ளக் கண்டால் அடியார் உருகாரே? அறவே ஒழியாய் கச்சூர் வடபால் ஆலக்கோயில் அம்மானே! .
[6]
பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால் அதுவும் பொருளாக் கொள்வோனே! மெய்யே! எங்கள் பெருமான்! உன்னை நினைவார் அவரை நினை கண்டாய்! மை ஆர் தடங்கண் மங்கை பங்கா! கங்கு ஆர் மதியம் சடை வைத்த ஐயா! செய்யாய்! வெளியாய்! கச்சூர் ஆலக்கோயில் அம்மானே! .
காதல் செய்து, களித்து, பிதற்றி, கடிமாமலர் இட்டு உனை ஏத்தி, ஆதல் செய்யும் அடியார் இருக்க, ஐயம் கொள்வது அழகிதே! ஓதக் கண்டேன்; உன்னை மறவேன்; உமையாள் கணவா! எனை ஆள்வாய்! ஆதல் பழனக் கழனிக் கச்சூர் ஆலக்கோயில் அம்மானே!.
[9]
அன்னம் மன்னும் வயல் சூழ் கச்சூர் ஆலக்கோயில் அம்மானை உன்ன முன்னும் மனத்து ஆரூரன்-ஆரூரன் பேர் முடி வைத்த மன்னு புலவன், வயல் நாவலர் கோன், செஞ்சொல் நாவன், வன்தொண்டன் பன்னு தமிழ் நூல் மாலை வல்லார் அவர் என் தலைமேல் பயில்வாரே .
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.042   எறிக்கும் கதிர் வேய் உரி
பண் - கொல்லிக்கௌவாணம் (திருவெஞ்சமாக்கூடல் விகிர்தேசுவரர் விகிர்தேசுவரி)
எறிக்கும் கதிர் வேய் உரி முத்த(ம்)மொடு, ஏலம்(ம்), இலவங்கம், தக்கோலம், இஞ்சி, செறிக்கும் புனலுள் பெய்து கொண்டு, மண்டி, திளைத்து, எற்று சிற்றாறு அதன் கீழ்க்கரை மேல் முறிக்கும் தழை மா முடப்புன்னை, ஞாழல், குருக்கத்திகள் மேல் குயில் கூவல் அறா, வெறிக்கும் கலைமா வெஞ்சமாக்கூடல் விகிர்தா! அடியேனையும் வேண்டுதியே .
[1]
குளங்கள் பலவும் குழியும் நிறைய, குட மா மணி சந்தனமும்(ம்) அகிலும் துளங்கும் புனலுள் பெய்து கொண்டு மண்டி, திளைத்து, எற்று சிற்றாறு அதன் கீழ்க்கரை மேல் வளம் கொள் மதில் மாளிகை, கோபுரமும், மணி மண்டபமும்(ம்), இவை மஞ்சு தன்னுள் விளங்கும் மதி தோய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா! அடியேனையும் வேண்டுதியே .
[2]
வரை மான் அனையார் மயில் சாயல் நல்லார், வடிவேல் கண் நல்லார் பலர் வந்து இறைஞ்ச, திரை ஆர் புனலுள் பெய்து கொண்டு மண்டி, திளைத்து, எற்று சிற்றாறு அதன் கீழ்க்கரை மேல் நிரை ஆர் கமுகும், நெடுந் தாள்-தெங்கும், குறுந் தாள் பலவும், விரவிக் குளிரும் விரை ஆர் பொழில் சூழ் வெஞ்சமாக்கூடல் விகிர்தா! அடியேனையும் வேண்டுதியே .
[3]
பண் நேர் மொழியாளை ஓர் பங்கு உடையாய்! படு காட்டு அகத்து என்றும் ஓர் பற்று ஒழியாய்! தண் ஆர் அகிலும், நல சாமரையும், அலைத்து எற்று சிற்றாறு அதன் கீழ்க்கரை மேல் மண் ஆர் முழவும் குழலும் இயம்ப, மடவார் நடம் ஆடும்(ம்) மணி அரங்கில் விண் ஆர் மதி தோய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா! அடியேனையும் வேண்டுதியே .
தொழுவார்க்கு எளியாய்! துயர் தீர நின்றாய்! சுரும்பு ஆர் மலர்க் கொன்றை துன்றும் சடையாய்! உழுவார்க்கு அரிய விடை ஏறி! ஒன்னார் புரம் தீ எழ ஓடுவித்தாய்! அழகா! முழவு ஆர் ஒலி பாடலொடு ஆடல் அறா முதுகாடு அரங்கா நடம் ஆட வல்லாய்! விழவு ஆர் மறுகின் வெஞ்சமாக்கூடல் விகிர்தா! அடியேனையும் வேண்டுதியே .
[6]
கடம் மா களியானை உரித்தவனே! கரிகாடு இடமா, அனல் வீசி நின்று நடம் ஆட வல்லாய்! நரை ஏறு உகந்தாய்! நல்லாய்! நறுங்கொன்றை நயந்தவனே! படம் ஆயிரம் ஆம் பருத் துத்திப் பைங்கண் பகுவாய் எயிற்றோடு அழலே உமிழும் விட வார் அரவா! வெஞ்சமாக்கூடல் விகிர்தா! அடியேனையும் வேண்டுதியே.
[7]
காடும் மலையும் நாடும் இடறி, கதிர் மா மணி சந்தனமும்(ம்) அகிலும் சேடன்(ன்) உறையும்(ம்) இடம் தான் விரும்பி, திளைத்து, எற்று சிற்றாறு அதன் கீழ்க் கரை மேல் பாடல் முழவும் குழலும்(ம்) இயம்ப, பணைத் தோளியர் பாதலொடு ஆடல் அறா, வேடர் விரும்பும் வெஞ்சமாக்கூடல் விகிர்தா! அடியேனையும் வேண்டிதியே .
[8]
கொங்கு ஆர் மலர்க் கொன்றை அம் தாரவனே! கொடு கொட்டி ஒர் வீணை உடையவனே! பொங்கு ஆடு அரவும் புனலும் சடை மேல் பொதியும் புனிதா! புனம் சூழ்ந்து அழகு ஆர் துங்கு ஆர் புனலுள் பெய்து கொண்டு மண்டி, திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ்க்கரை மேல் வெங் கார் வயல் சூழ் வெஞ்சமாக்கூடல் விகிர்தா! அடியேனையும் வேண்டுதியே .
[9]
வஞ்சி நுண் இடையார் மயில் சாயல் அன்னார், வடிவேல் கண் நல்லார் பலர் வந்து இறைஞ்சும்
வெஞ்சமாக்கூடல் விகிர்தா! அடியேனையும் வேண்டுதியே” என்று தான் விரும்பி,
வஞ்சியாது அளிக்கும் வயல் நாவலர் கோன்-வனப் பகை அப்பன், வன் தொண்டன்- சொன்ன
செஞ்சொல்-தமிழ் மாலைகள் பத்தும் வல்லார் சிவலோகத்து இருப்பது திண்ணம் அன்றே! .
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.043   நஞ்சி, இடை இன்று நாளை
பண் - கொல்லிக்கௌவாணம் (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
நஞ்சி, இடை இன்று நாளை என்று உம்மை நச்சுவார் துஞ்சியிட்டால் பின்னைச் செய்வது என்? அடிகேள், சொலீர்! பஞ்சி இடப் புட்டில் கீறுமோ? பணியீர், அருள்! முஞ்சி இடைச் சங்கம் ஆர்க்கும் சீர் முதுகுன்றரே!
[1]
ஏரிக் கனகக்கமலம் மலர் அன்ன சேவடி ஊர் இத்தனையும் திரிந்தக்கால் அவை நோம்கொலோ? வாரிக்கண் சென்று வளைக்கப்பட்டு, வருந்திப் போய், மூரிக் களிறு முழக்கு அறா முதுகுன்றரே!
[2]
தொண்டர்கள் பாட, விண்ணோர்கள் ஏத்த உழிதர்வீர்! பண்டு அகம் தோறும் பலிக்குச் செல்வது பான்மையே? கண்டகர் வாளிகள் வில்லிகள் புறங்காக்கும் சீர் மொண்ட கை வேள்வி முழக்கு அறா முதுகுன்றரே!
[3]
இளைப்பு அறியீர்; இம்மை ஏத்துவார்க்கு அம்மை செய்வது என்? விளைப்பு அறியாத வெங் காலனை உயிர் வீட்டினீர்; அளைப் பிரியா அரவு அல்குலாளொடு கங்கை சேர் முளைப்பிறைச் சென்னிச் சடைமுடி முதுகுன்றரே!
[4]
ஆடி அசைந்து அடியாரும் நீரும் அகம் தொறும் பாடிப் படைத்த பொருள் எலாம் உமையாளுக்கோ? மாடம், மதில், அணி கோபுரம், மணி மண்டபம், மூடி முகில் தவழ் சோலை சூழ் முதுகுன்றரே!
[5]
இழை வளர் நுண் இடை மங்கையொடு இடுகாட்டு இடைக் குழை வளர் காதுகள் மோத நின்று குனிப்பதே? மழை வளரும் நெடுங்கோட்டு இடை மதயானைகள், முழை வளர் ஆளி, முழக்கு அறா முதுகுன்றரே!
[6]
சென்று இல் இடைச் செடி நாய் குரைக்க, செடிச்சிகள் மன்றில் இடைப் பலி தேரப் போவது வாழ்க்கையே? குன்றில் இடைக் களிறு ஆளி கொள்ள, குறத்திகள் முன்றில் இடைப் பிடி கன்று இடும் முதுகுன்றரே!
[7]
அந்தி திரிந்து அடியாரும் நீரும் அகம்தொறும் சந்திகள் தோறும் பலிக்குச் செல்வது தக்கதே? மந்தி கடுவனுக்கு உண் பழம் நாடி மலைப்புறம் முந்தி அடி தொழ நின்ற சீர் முதுகுன்றரே!
[8]
செட்டு நின் காதலி ஊர்கள் தோறும் அறம் செய, அட்டுமின், சில்பலிக்கு! என்று அகம் கடை நிற்பதே? பட்டி வெள் ஏறு உகந்து ஏறுவீர்! பரிசு என்கொலோ? முட்டி அடி தொழ நின்ற சீர் முதுகுன்றரே!
[9]
எத்திசையும் திரிந்து ஏற்றக்கால் பிறர் என் சொலார்? பத்தியினால் இடுவார் இடைப் பலி கொண்மினோ! எத்திசையும் திரை ஏற மோதிக் கரைகள் மேல் முத்தி முத்தாறு வலம் செயும் முதுகுன்றரே!
[10]
முத்தி முத்தாறு வலம் செயும் முதுகுன்றரைப் பித்தன் ஒப்பான் அடித்தொண்டன்-ஊரன்-பிதற்று இவை தத்துவ ஞானிகள் ஆயினார் தடுமாற்று இலார், எத்தவத்தோர்களும், ஏத்துவார்க்கு இடர் இல்லையே.
[11]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.044   முடிப்பது கங்கையும், திங்களும்; செற்றது
பண் - கொல்லிக்கௌவாணம் (திருஅஞ்சைக்களம் )
முடிப்பது கங்கையும், திங்களும்; செற்றது மூ எயில்; நொடிப்பது மாத்திரை நீறு எழக் கணை நூறினார்; கடிப்பதும் ஏறும் என்று அஞ்சுவன்; திருக்கைகளால் பிடிப்பது பாம்பு அன்றி இல்லையோ, எம்பிரானுக்கே?
[1]
தூறு அன்றி ஆடு அரங்கு இல்லையோ? சுடலைப் பொடி- நீறு அன்றிச் சாந்தம் மற்று இல்லையோ? இமவான் மகள் கூறு அன்றிக் கூறு மற்று இல்லையோ? கொல்லைச் சில்லை வெள்- ஏறு அன்றி ஏறுவது இல்லையோ, எம்பிரானுக்கே?
[2]
தட்டு எனும் தட்டு எனும், தொண்டர்காள்! தடுமாற்றத்தை, ஒட்டு எனும் ஒட்டு எனும் மா நிலத்து உயிர் கோறலை; சிட்டனும், திரிபுரம் சுட்ட தேவர்கள் தேவனை, வெட்டெனப் பேசன்மின், தொண்டர்காள், எம்பிரானையே!
[3]
நரி தலை கவ்வ, நின்று ஓரி கூப்பிட, நள் இருள் எரி தலைப் பேய் புடை சூழ, ஆர் இருள் காட்டு இடைச் சிரி தலை மாலை சடைக்கு அணிந்த எம் செல்வனை, பிரிதலைப் பேசன்மின், தொண்டர்காள், எம்பிரானையே!
[4]
வேய் அன தோளி மலை மகளை விரும்பிய மாயம் இல் மாமலை நாடன் ஆகிய மாண்பனை, ஆயன சொல்லி நின்றார்கள் அல்லல் அறுக்கிலும், பேயனே! பித்தனே! என்பரால், எம்பிரானையே!
[5]
இறைவன்! என்று எம்பெருமானை வானவர் ஏத்தப் போய், துறை ஒன்றி, தூ மலர் இட்டு, அடி இணை போற்றுவார்; மறை அன்றிப் பாடுவது இல்லையோ? மல்கு வான் இளம்- பிறை அன்றிச் சூடுவது இல்லையோ, எம்பிரானுக்கே?
[6]
தாரும், தண் கொன்றையும் கூவிளம் தனி மத்தமும்; ஆரும் அளவு, அறியாத ஆதியும் அந்தமும்; ஊரும், ஒன்று இல்லை, உலகு எலாம், உகப்பார் தொழப் பேரும் ஓர் ஆயிரம் என்பரால், எம்பிரானுக்கே.
[7]
அரியொடு பூமிசையானும் ஆதியும் அறிகிலார்; வரி தரு பாம்பொடு வன்னி திங்களும் மத்தமும் புரி தரு புன்சடை வைத்த எம் புனிதற்கு, இனி எரி அன்றி அங்கைக்கு ஒன்று இல்லையோ, எம்பிரானுக்கே?
[8]
கரிய மனச் சமண் காடி ஆடு கழுக்களால் எரிய வசவுணும் தன்மையோ? இமவான் மகள் பெரிய மனம் தடுமாற வேண்டி, பெம்மான்-மதக்- கரியின் உரி அல்லது இல்லையோ, எம்பிரானுக்கே?
[9]
காய்சின மால்விடை மாணிக்கத்து, எம் கறைக் கண்டத்து, ஈசனை ஊரன் எட்டோடு இரண்டு விரும்பிய ஆயின சீர்ப் பகை ஞானி அப்பன், அடித்தொண்டன் தான், ஏசின பேசுமின், தொண்டர் காள், எம்பிரானையே!
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.045   காண்டனன் காண்டனன், காரிகையாள் தன்
பண் - கொல்லிக்கௌவாணம் (திருஆமாத்தூர் அழகியநாதர் அழகியநாயகியம்மை)
பாடுவன் பாடுவன், பார்ப் பதிதன் அடி பற்றி, நான் தேடுவன் தேடுவன்; திண்ணெனப் பற்றிச் செறிதர ஆடுவன் ஆடுவன், ஆமாத்தூர் எம் அடிகளை, கூடுவன் கூடுவன், குற்றம் அது அற்று என் குறிப்பொடே.
[2]
காய்ந்தவன் காய்ந்தவன், கண் அழலால் அன்று காமனை; பாய்ந்தவன் பாய்ந்தவன், பாதத்தினால் அன்று கூற்றத்தை; ஆய்ந்தவன் ஆய்ந்தவன், ஆமாத்தூர் எம் அடிகளார், ஏய்ந்தவன் ஏய்ந்தவன், எம்பிராட்டியைப் பாகமே.
[3]
ஓர்ந்தனன் ஓர்ந்தனன், உள்ளத்துள்ளே நின்ற ஒண் பொருள், சேர்ந்தனன் சேர்ந்தனன், சென்று திரு ஒற்றியூர் புக்கு; சார்ந்தனன் சார்ந்தனன், சங்கிலி மென்தோள் தடமுலை; ஆர்ந்தனன் ஆர்ந்தனன், ஆமாத்தூர் ஐயன் அருள் அதே.
[4]
வென்றவன் வென்றவன், வேள்வியில் விண்ணவர் தங்களை; சென்றவன் சென்றவன், சில்பலிக்கு என்று தெரு இடை; நின்றவன் நின்றவன், நீதி நிறைந்தவர் தங்கள் பால்; அன்று அவன் அன்று அவன், செய் அருள்; ஆமாத்தூர் ஐயனே.
எண்ணவன் எண்ணவன், ஏழ் உலகத்து உயிர் தங்கட்கு; கண் அவன் கண் அவன், காண்டும் என்பார் அவர் தங்கட்கு; பெண் அவன் பெண் அவன், மேனி ஓர்பாகம்; ஆம், பிஞ்ஞகன்; அண்ணவன் அண்ணவன்-ஆமாத்தூர் எம் அடிகளே.
[7]
பொன்னவன் பொன்னவன்; பொன்னைத் தந்து என்னைப் போக விடா மின்னவன் மின்னவன்; வேதத்தின் உள் பொருள் ஆகிய அன்னவன் அன்னவன்; ஆமாத்தூர் ஐயனை ஆர்வத்தால் என்னவன் என்னவன்! என் மனத்து இன்புற்று இருப்பனே.
[8]
தேடுவன் தேடுவன், செம்மலர்ப் பாதங்கள் நாள்தொறும்; நாடுவன் நாடுவன், நாபிக்கு மேலே ஓர் நால்விரல்; மா(ட்)டுவன் மா(ட்)டுவன், வன் கை பிடித்து; மகிழ்ந்து உளே ஆடுவன் ஆடுவன், ஆமாத்தூர் எம் அடிகளே.
ஐயனை, அத்தனை, ஆள் உடை ஆமாத்தூர் அண்ணலை, மெய்யனை, மெய்யர்க்கு மெய்ப்பொருள் ஆன விமலனை, மையனை, மை அணி கண்டனை, வன் தொண்டன்-ஊரன்-சொல் பொய் ஒன்றும் இன்றிப் புலம்புவார் பொன் கழல் சேர்வரே.
[11]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.046   பத்து ஊர் புக்கு, இரந்து,
பண் - கொல்லிக்கௌவாணம் (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
பத்து ஊர் புக்கு, இரந்து, உண்டு, பலபதிகம் பாடி, | பாவையரைக் கிறி பேசிப் படிறு ஆடித் திரிவீர்; செத்தார் தம் எலும்பு அணிந்து சே ஏறித் திரிவீர்; | செல்வத்தை மறைத்து வைத்தீர்; எனக்கு ஒரு நாள் இரங்கீர்; முத்து ஆரம், இலங்கி-மிளிர் மணிவயிரக் கோவை-|அவை, பூணத் தந்து அருளி, மெய்க்கு இனிதா நாறும் கத்தூரி கமழ் சாந்து பணித்து அருள வேண்டும் | கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
[1]
வேம்பினொடு தீம் கரும்பு விரவி எனைத் தீற்றி, | விருத்தி நான் உமை வேண்ட, துருத்தி புக்கு அங்கு இருந்தீர்; பாம்பினொடு படர் சடைகள் அவை காட்டி வெருட்டிப் | பகட்ட நான் ஒட்டுவனோ? பல காலும் உழன்றேன்; சேம்பினோடு செங்கழு நீர் தண் கிடங்கில்-திகழும் |திரு ஆரூர் புக்கு இருந்த தீவண்ணர் நீரே; காம்பினொடு நேத்திரங்கள் பணித்து அருள வேண்டும் | கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
[2]
பூண்பது ஓர் இள ஆமை; பொருவிடை ஒன்று ஏறி,| பொல்லாத வேடம் கொண்டு, எல்லாரும் காணப் பாண் பேசி, படுதலையில் பலி கொள்கை தவிரீர்;| பாம்பினொடு படர் சடை மேல் மதி வைத்த பண்பீர்; வீண் பேசி மடவார் கை வெள்வளைகள் கொண்டால்,| வெற்பு அரையன் மடப்பாவை பொறுக்குமோ? சொல்லீர் காண்பு இனிய மணி மாடம் நிறைந்த நெடுவீதிக் | கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
[3]
விட்டது ஓர் சடை தாழ, வீணை விடங்கு ஆக,| வீதி விடை ஏறுவீர்; வீண் அடிமை உகந்தீர்; துட்டர் ஆயின பேய்கள் சூழ நடம் ஆடிச்| சுந்தரராய்த் தூ மதியம் சூடுவது சுவண்டே? வட்டவார் குழல் மடவார் தம்மை மயல் செய்தல் | மா தவமோ? மாதிமையோ? வாட்டம் எலாம் தீரக் கட்டி எமக்கு ஈவது தான் எப்போது? சொல்லீர்| கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
[4]
மிண்டாடித் திரி தந்து, வெறுப்பனவே செய்து,| வினைக்கேடு பல பேசி, வேண்டியவா திரிவீர்; தொண்டாடித் திரிவேனைத் தொழும்பு தலைக்கு ஏற்றும் | சுந்தரனே! கந்தம் முதல் ஆடை ஆபரணம் பண்டாரத்தே எனக்குப் பணித்து அருள வேண்டும்;| பண்டு தான் பிரமாணம் ஒன்று உண்டே? நும்மைக் கண்டார்க்கும் காண்பு அரிது ஆய்க் கனல் ஆகி நிமிர்ந்தீர்| கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே!
[5]
இலவ இதழ் வாய் உமையோடு எருது ஏறி, பூதம் | இசை பாட, இடு பிச்சைக்கு எச்சு உச்சம் போது,
பல அகம் புக்கு, உழிதர்வீர்; பட்டோடு சாந்தம்| பணித்து அருளாது இருக்கின்ற பரிசு என்ன படிறோ?
உலவு திரைக் கடல் நஞ்சை, அன்று, அமரர் வேண்ட | உண்டு அருளிச் செய்தது, உமக்கு இருக்க ஒண்ணாது இடவே;
கலவ மயில் இயலவர்கள் நடம் ஆடும் செல்வக்| கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
[6]
தூசு உடைய அகல் அல்குல்-தூமொழியாள் ஊடல்| தொலையாத காலத்து ஓர் சொல்பாடு ஆய் வந்து, தேசு உடைய இலங்கையர் கோன் வரை எடுக்க அடர்த்து,| திப்பிய கீதம் பாட, தேரொடு வாள் கொடுத்தீர்; நேசம் உடை அடியவர்கள் வருந்தாமை அருந்த,| நிறை மறையோர் உறை வீழிமிழலை தனில் நித்தல் காசு அருளிச் செய்தீர்; இன்று எனக்கு அருள வேண்டும் | கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
[7]
மாற்றம் மேல் ஒன்று உரையீர்; வாளா நீர் இருந்தீர்;| வாழ்விப்பன் என ஆண்டீர்; வழி அடியேன், உமக்கு; ஆற்றவேல்-திரு உடையீர்; நல்கூர்ந்தீர் அல்லீர்;| அணி ஆரூர் புகப் பெய்த அரு நிதியம் அதனில்- தோற்றம் மிகு முக்கூற்றில் ஒரு கூறு வேண்டும்;| தாரீரேல், ஒரு பொழுதும் அடி எடுக்கல் ஒட்டேன்; காற்று அனைய கடும் பரிமா ஏறுவது வேண்டும்| கடல் நாகைக்காரோணம் மேவிஇருந்தீரே! .
[8]
மண்ணுலகும் விண்ணுலகும் உ(ம்)மதே ஆட்சி;| மலை அரையன் பொன் பாவை, சிறுவனையும், தேறேன்; எண்ணிலி உண் பெரு வயிறன் கணபதி ஒன்று அறியான்;| எம்பெருமான்! இது தகவோ? இயம்பி அருள் செய்வீர்! திண்ணென என் உடல் விருத்தி தாரீரே ஆகில்,| திருமேனி வருந்தவே வளைக்கின்றேன்; நாளை, கண்ணறையன், கொடும்பாடன் என்று உரைக்க வேண்டா | கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
[9]
மறி ஏறு கரதலத்தீர்; மாதிமையேல் உடையீர்;| மா நிதியம் தருவன் என்று வல்லீராய் ஆண்டீர்; கிறி பேசி, கீழ்வேளூர் புக்கு, இருந்தீர்; அடிகேள்!| கிறி உம்மால் படுவேனோ? திரு ஆணை உண்டேல், பொறி விரவு நல் புகர் கொள் பொன் சுரிகை மேல் ஓர்| பொன் பூவும் பட்டிகையும் புரிந்து அருள வேண்டும்; கறி விரவு நெய்சோறு முப்போதும் வேண்டும்| கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
[10]
பண் மயத்த மொழிப் பரவை சங்கிலிக்கும் எனக்கும் | பற்று ஆய பெருமானே! மற்று ஆரை உடையேன்? உள் மயத்த உமக்கு அடியேன் குறை தீர்க்க வேண்டும்;| ஒளி முத்தம், பூண் ஆரம், ஒண் பட்டும், பூவும், கண் மயத்த கத்தூரி, கமழ் சாந்தும், வேண்டும் |கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீர்! என்று அண் மயத்தால் அணி நாவல் ஆரூரன் சொன்ன | அருந்தமிழ்கள் இவை வல்லார் அமருலகு ஆள்பவரே .
[11]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.047   காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே!
பண் - பழம்பஞ்சுரம் (திருவாரூர் )
காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே! கானப்பேரூராய்! கோட்டூர்க் கொழுந்தே! அழுந்தூர் அரசே! கொழு நல் கொல் ஏறே! பாட்டு ஊர் பலரும் பரவப்படுவாய்! பனங்காட்டூரானே! மாட்(ட்)டு ஊர் அறவா! மறவாது உன்னைப் பாடப் பணியாயே!
ஆரூர் அத்தா! ஐயாற்று அமுதே! அளப்பூர் அம்மானே! கார் ஊர் பொழில்கள் புடை சூழ் புறவில் கருகாவூரானே! பேரூர் உறைவாய்! பட்டிப் பெருமான்! பிறவா நெறியானே! பார் ஊர் பலரும் பரவப்படுவாய்! பாசூர் அம்மானே!
தாம் கூர் பிணி நின் அடியார் மேல அகல அருளாயே வேங்கூர் உறைவாய்! விளமர் நகராய்! விடை ஆர் கொடியானே! நாங்கூர் உறைவாய்! தேங்கூர் நகராய்! நல்லூர் நம்பானே! பாங்கு ஊர் பலி தேர் பரனே! பரமா! பழனப்பதியானே!
[6]
தேனைக் காவல் கொண்டு விண்ட கொன்றைச் செழுந் தாராய்! வானைக் காவல் கொண்டு நின்றார் அறியா நெறியானே! ஆனைக்காவில் அரனே! பரனே! அண்ணாமலையானே! ஊனைக் காவல் கைவிட்டு, உன்னை உகப்பார் உணர்வாரே.
[7]
துருத்திச் சுடரே! நெய்த்தானத்தாய்! சொல்லாய், கல்லாலா! பருத்(த்)தி நியமத்து உறைவாய்! வெயில் ஆய், பல ஆய், காற்று ஆனாய்; திருத்தித் திருத்தி வந்து, என் சிந்தை இடம் கொள் கயிலாயா! அருத்தித்து, உன்னை அடைந்தார் வினைகள் அகல அருளாயே!
[8]
புலியூர்ச் சிற்றம்பலத்தாய்! புகலூர்ப் போதா! மூதூரா! பொலி சேர் புரம் மூன்று எரியச் செற்ற புரி புன்சடையானே! வலி சேர் அரக்கன் தடக்கை ஐஞ்ஞான்கு அடர்த்த மதிசூடீ! கலி சேர் புறவில் கடவூர் ஆளீ! காண அருளாயே!
[9]
கைம்மா உரிவை அம்மான் காக்கும் பல ஊர் கருத்து உன்னி, மைம் மாந் தடங்கண் மதுரம் அன்ன மொழியாள் மடச் சிங்கடி- தம்மான்-ஊரன், சடையன் சிறுவன், அடியன்-தமிழ் மாலை செம்மாந்து இருந்து திருவாய் திறப்பார் சிவலோகத்தாரே.
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.048   மற்றுப் பற்று எனக்கு இன்றி,
பண் - பழம்பஞ்சுரம் (திருப்பாண்டிக்கொடுமுடி நமசிவாயத் திருப்பதிகம் கொடுமுடிநாதர் பண்மொழியாளம்மை)
மற்றுப் பற்று எனக்கு இன்றி, நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்; பெற்(ற்)றலும் பிறந்தேன்; இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்; கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரில் பாண்டிக் கொடுமுடி நல்-தவா! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.
[1]
இட்டன் நும் அடி ஏத்துவார் இகழ்ந்திட்ட நாள், மறந்திட்ட நாள், கெட்ட நாள் இவை என்று அலால் கருதேன்; கிளர் புனல் காவிரி வட்ட வாசிகை கொண்டு அடி தொழுது ஏத்து பாண்டிக் கொடுமுடி நட்டவா! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.
[2]
ஓவு நாள், உணர்வு அழியும் நாள், உயிர் போகும் நாள், உயர் பாடை மேல் காவு நாள் இவை என்று அலால் கருதேன், கிளர் புனல் காவிரிப் பாவு தண்புனல் வந்து இழி பரஞ்சோதி! பாண்டிக் கொடுமுடி நாவலா! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.
[3]
எல்லை இல் புகழ் எம்பிரான், எந்தை தம்பிரான், என் பொன் மாமணி, கல்லை உந்தி வளம் பொழிந்து இழி காவிரி அதன் வாய்க் கரை, நல்லவர் தொழுது ஏத்தும் சீர் கறையூரில் பாண்டிக் கொடுமுடி வல்லவா! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.
[4]
அஞ்சினார்க்கு அரண் ஆதி என்று அடியேனும் நான் மிக அஞ்சினேன்; அஞ்சல்! என்று அடித் தொண்டனேற்கு அருள் நல்கினாய்க்கு அழிகின்றது என்? பஞ்சின் மெல் அடிப் பாவை மார் குடைந்து ஆடு பாண்டிக் கொடுமுடி நஞ்சு அணி கண்ட! நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.
[5]
ஏடு வான் இளந்திங்கள் சூடினை; என், பின்? கொல் புலித் தோலின் மேல் ஆடு பாம்பு அது அரைக்கு அசைத்த அழகனே! அம் தண் காவிரிப் பாடு தண் புனல் வந்து இழி பரஞ்சோதி! பாண்டிக் கொடுமுடி சேடனே! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.
[6]
விரும்பி நின் மலர்ப் பாதமே நினைந்தேன்; வினைகளும் விண்டன; நெருங்கி வண் பொழில் சூழ்ந்து எழில் பெற நின்ற காவிரிக் கோட்டு இடை குரும்பை மென்முலைக் கோதைமார் குடைந்து ஆடு பாண்டிக் கொடுமுடி விரும்பனே! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.
[7]
செம்பொன் நேர் சடையாய்! திரிபுரம் தீ எழச் சிலை கோலினாய்! வம்பு உலாம் குழலாளைப் பாகம் அமர்ந்து காவிரிக்கோட்டிடை கொம்பின் மேல் குயில் கூவ, மா மயில் ஆடு பாண்டிக் கொடுமுடி நம்பனே! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.
[8]
சாரணன், தந்தை, எம்பிரான், எந்தை தம்பிரான், என் பொன், மாமணி என்று பேர் எண் ஆயிர கோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார்; நாரணன், பிரமன், தொழும் கறையூரில் பாண்டிக் கொடுமுடிக் காரணா! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.
[9]
கோணிய பிறை சூடியை, கறையூரில் பாண்டிக் கொடுமுடி பேணிய பெருமானை, பிஞ்ஞகப்பித்தனை, பிறப்பு இ (ல்)லியை, பாண் உலா வரிவண்டு அறை கொன்றைத் தாரனை, படப்பாம்பு அரை- நாணனை, தொண்டன் ஊரன் சொல் இவை சொல்லுவார்க்கு இல்லை, துன்பமே.
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.049   கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்,
பண் - பழம்பஞ்சுரம் (திருமுருகன்பூண்டி ஆவுடைநாயகர் ஆவுடைநாயகியம்மை)
கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர், விரவலாமை சொல்லி, திடுகு மொட்டு எனக் குத்தி, கூறை கொண்டு, ஆறு அலைக்கும் இடம் முடுகு நாறிய வடுகர் வாழ் முருகன் பூண்டி மா நகர்வாய், இடுகு நுண் இடை மங்கை தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!
[1]
வில்லைக் காட்டி வெருட்டி, வேடுவர், விரவலாமை சொல்லிக் கல்லினால் எறிந்திட்டும், மோதியும், கூறை கொள்ளும் இடம் முல்லைத்தாது மணம் கமழ் முருகன் பூண்டி மா நகர்வாய், எல்லைக் காப்பது ஒன்று இல்லை ஆகில், நீர் எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!
[2]
பசுக்களே கொன்று தின்று, பாவிகள், பாவம் ஒன்று அறியார், உசிர்க் கொலை பல நேர்ந்து, நாள்தொறும் கூறை கொள்ளும் இடம் முசுக்கள் போல் பல வேடர் வாழ் முருகன் பூண்டி மா நகர்வாய், இசுக்கு அழியப் பயிக்கம் கொண்டு, நீர் எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!
[3]
பீறல் கூறை உடுத்து, ஓர் பத்திரம் கட்டி, வெட்டினராய், சூறைப் பங்கியர் ஆகி, நாள்தொறும் கூறை கொள்ளும் இடம் மோறை வேடுவர் கூடி வாழ் முருகன் பூண்டி மா நகர்வாய், ஏறு கால் இற்றது இல்லை ஆய் விடில், எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!
[4]
தயங்கு தோலை உடுத்த சங்கரா! சாம வேதம் ஓதீ! மயங்கி ஊர் இடு பிச்சை கொண்டு உணும் மார்க்கம் ஒன்று அறியீர்; முயங்கு பூண் முலை மங்கையாளொடு முருகன் பூண்டி மா நகர்வாய், இயங்கவும் மிடுக்கு உடையராய் விடில், எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!
[5]
விட்டு இசைப்பன, கொக்கரை, கொடுகொட்டி, தத்தளகம், கொட்டிப் பாடும் துந்துமியொடு, குடமுழா, நீர் மகிழ்வீர்; மொட்டு அலர்ந்து மணம் கமழ் முருகன் பூண்டி மா நகர்வாய், இட்ட பிச்சை கொண்டு உண்பது ஆகில், நீர் எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!
[6]
வேதம் ஓதி, வெண்நீறு பூசி, வெண் கோவணம் தற்று, அயலே ஓதம் மேவிய ஒற்றியூரையும் உத்தரம் நீர் மகிழ்வீர்; மோதி வேடுவர் கூறை கொள்ளும் முருகன் பூண்டி மா நகர்வாய், ஏது காரணம் ஏது காவல் கொண்டு, எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!
[7]
பட அரவு நுண் ஏர் இடை, பணைத்தோள், வரி நெடுங்கண் மடவரல்(ல்) உமை நங்கை தன்னை ஓர் பாகம் வைத்து உகந்தீர்; முடவர் அல்லீர்; இடர் இலீர்; முருகன் பூண்டி மா நகர்வாய்; இடவம் ஏறியும் போவது ஆகில், நீர் எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!
[8]
சாந்தம் ஆக வெண் நீறு பூசி, வெண்பல்-தலை கலனா, வேய்ந்த வெண் பிறைக் கண்ணி தன்னை ஓர் பாகம் வைத்து உகந்தீர்; மோந்தையோடு முழக்கு அறா முருகன் பூண்டி மா நகர்வாய், ஏந்து பூண் முலை மங்கை தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே.
[9]
முந்தி வானவர் தாம் தொழும் முருகன் பூண்டி மா நகர்வாய்ப் பந்து அணை விரல் பாவை தன்னை ஓர் பாகம் வைத்தவனைச் சிந்தையில் சிவ தொண்டன் ஊரன் உரைத்தன பத்தும் கொண்டு எந்தம் அடிகளை ஏத்துவார் இடர் ஒன்றும் தாம் இலரே.
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.050   சித்தம்! நீ நினை! என்னொடு
பண் - பழம்பஞ்சுரம் (திருப்புனவாயில் பழம்பதிநாயகர் பரங்கருணைநாயகியம்மை)
சித்தம்! நீ நினை! என்னொடு சூள் அறு, வைகலும்! மத்தயானையின் ஈர் உரி போர்த்த மணாளன் ஊர் பத்தர் தாம் பலர் பாடி நின்று ஆடும் பழம் பதி, பொத்தில் ஆந்தைகள் பாட்டு அறா புனவாயிலே.
வற்கென்று இருத்தி கண்டாய், மனம்! என்னொடு சூள் அறு, வைகலும்! பொன் குன்றம் சேர்ந்தது ஓர் காக்கை பொன் ஆம்; அதுவே புகல் கல்குன்றும், தூறும், கடு வெளியும், கடல் கானல் வாய்ப் புற்கென்று தோன்றிடும் எம் பெருமான் புனவாயிலே.
மறவல் நீ, மனம்! என்னொடு சூள் அறு, வைகலும்! உறவும் ஊழியும் ஆய பெம்மாற்கு இடம் ஆவது பிறவு கள்ளியின் நீள் கவட்டு ஏறித் தன் பேடையைப் புறவம் கூப்பிடப் பொன் புனம் சூழ் புனவாயிலே.
[6]
ஏசு அற்று நீ நினை, என்னொடு சூள் அறு, வைகலும்! பாசு அற்றவர் பாடி நின்று ஆடும் பழம் பதி தேசத்து அடியவர் வந்து இருபோதும் வணங்கிடப் பூசல்-துடி பூசல் அறா புனவாயிலே.
[7]
கொள்ளி வாயின கூர் எயிற்று ஏனம் கிழிக்கவே தெள்ளி மா மணி தீவிழிக்கும்(ம்) இடம் செந் தறை கள்ளி வற்றி, புல் தீந்து, வெங் கானம் கழிக்கவே, புள்ளி மான் இனம் புக்கு ஒளிக்கும் புனவாயிலே.
[8]
எற்றே, நினை! என்னொடும் சூள் அறு, வைகலும்! மற்று ஏதும் வேண்டா, வல்வினை ஆயின மாய்ந்து அற; கல்-தூறு கார்க் காட்டு இடை மேய்ந்த கார்க்கோழி போயப் புற்று ஏறி, கூ கூ என அழைக்கும் புனவாயிலே.
[9]
பொடி ஆடு மேனியன் பொன் புனம் சூழ் புனவாயிலை அடியார் அடியன்-நாவல் ஊரன்-உரைத்தன மடியாது கற்று இவை ஏத்த வல்லார், வினை மாய்ந்து போய்க் குடி ஆக, பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை, குற்றமே.
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.051   பத்திமையும் அடிமையையும் கைவிடுவான், பாவியேன்
பண் - பழம்பஞ்சுரம் (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
பத்திமையும் அடிமையையும் கைவிடுவான், பாவியேன் பொத்தின நோய் அது இதனைப் பொருள் அறிந்தேன்; போய்த் தொழுவேன்; முத்தனை, மாமணி தன்னை, வயிரத்தை, மூர்க்கனேன் எத்தனை நாள் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?
[1]
ஐவணம் ஆம் பகழி உடை அடல் மதனன் பொடி ஆகச் செவ்வணம் ஆம் திரு நயனம் விழி செய்த சிவமூர்த்தி, மை அணவு கண்டத்து வளர் சடை எம் ஆரமுதை, எவ் வணம் நான் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?
[2]
சங்கு அலக்கும் தடங்கடல் வாய் விடம் சுட வந்து அமரர் தொழ, அங்கு அலக்கண் தீர்த்து விடம் உண்டு உகந்த அம்மானை, இங்கு அலக்கும் உடல் பிறந்த அறிவிலியேன் செறிவு இன்றி எங்கு உலக்கப் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?
[3]
இங்ஙனம் வந்து இடர்ப் பிறவிப் பிறந்து அயர்வேன்; அயராமே அங்ஙனம் வந்து எனை ஆண்ட அரு மருந்து, என் ஆரமுதை, வெங்கனல் மா மேனியனை, மான் மருவும் கையானை, எங்ஙனம் நான் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?
[4]
செப்ப(அ)ரிய அயனொடு மால் சிந்தித்தும் தெளிவு அரிய அப் பெரிய திருவினையே, அறியாதே அரு வினையேன்- ஒப்பு அரிய குணத்தானை, இணை இலியை, அணைவு இன்றி எப் பரிசு பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?
[5]
வல்-நாகம் நாண், வரை வில், அங்கி கணை, அரி பகழி, தன் ஆகம் உற வாங்கிப் புரம் எரித்த தன்மையனை, முன் ஆக நினையாத மூர்க்கனேன் ஆக்கை சுமந்து என் ஆகப் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?
[6]
வன் சயம் ஆய் அடியான் மேல் வரும் கூற்றின் உரம் கிழிய முன் சயம் ஆர் பாதத்தால் முனிந்து உகந்த மூர்த்தி தனை, மின் செயும் வார்சடையானை, விடையானை, அடைவு இன்றி என் செய நான் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?
[7]
முன் நெறி வானவர் கூடித் தொழுது ஏத்தும் முழு முதலை, அந் நெறியை, அமரர் தொழும் நாயகனை, அடியார்கள் செந் நெறியை, தேவர் குலக் கொழுந்தை, மறந்து இங்ஙனம் நான் என் அறிவான் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?
[8]
கற்று உள வான் கனி ஆய கண்ணுதலை, கருத்து ஆர உற்று உளன் ஆம் ஒருவனை, முன் இருவர் நினைந்து இனிது ஏத்தப்- பெற்றுளன் ஆம் பெருமையனை, பெரிது அடியேன் கை அகன்றிட்டு எற்று உளனாய்ப் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?
[9]
ஏழ் இசை ஆய், இசைப் பயன் ஆய், இன் அமுது ஆய், என்னுடைய தோழனும் ஆய், யான் செய்யும் துரிசுகளுக்கு உடன் ஆகி, மாழை ஒண் கண் பரவையைத் தந்து ஆண்டானை, மதி இல்லா ஏழையேன் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?
[10]
வங்கம் மலி கடல் நஞ்சை, வானவர்கள் தாம் உய்ய, நுங்கி, அமுது அவர்க்கு அருளி, நொய்யேனைப் பொருள் படுத்துச் சங்கிலியோடு எனைப் புணர்த்த தத்துவனை, சழக்கனேன் எங்கு உலக்கப் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?
[11]
பேர் ஊரும் மதகரியின் உரியானை, பெரியவர் தம் சீர் ஊரும் திரு ஆரூர்ச் சிவன், அடியே திறம் விரும்பி ஆரூரன்-அடித்தொண்டன், அடியன்-சொல் அகலிடத்தில் ஊர் ஊரன் இவை வல்லார் உலகவர்க்கு மேலாரே.
[12]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.052   முத்தா! முத்தி தர வல்ல
பண் - பழம்பஞ்சுரம் (திருவாலங்காடு (பழையனூர்) ஊர்த்துவதாண்டவேசுவரர் வண்டார்குழலியம்மை)
முத்தா! முத்தி தர வல்ல முகிழ் மென் முலையாள் உமை பங்கா! சித்தா! சித்தித் திறம் காட்டும் சிவனே! தேவர் சிங்கமே! பத்தா! பத்தர் பலர் போற்றும் பரமா! பழையனூர் மேய அத்தா! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே.
[1]
பொய்யே செய்து புறம் புறமே திரிவேன் தன்னைப் போகாமே, மெய்யே வந்து இங்கு எனை ஆண்ட மெய்யா! மெய்யர் மெய்ப்பொருளே! பை ஆடு அரவம் அரைக்கு அசைத்த பரமா! பழையனூர் மேய ஐயா! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே.
[2]
தூண்டா விளக்கின் நற்சோதீ! தொழுவார் தங்கள் துயர் தீர்ப்பாய்! பூண்டாய், எலும்பை! புரம் மூன்றும் பொடியாச் செற்ற புண்ணியனே! பாண்டு ஆழ் வினைகள் அவை தீர்க்கும் பரமா! பழையனூர் மேய ஆண்டா! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே.
[3]
மறி நேர் ஒண் கண் மட நல்லார் வலையில் பட்டு, மதி மயங்கி, அறிவே அழிந்தேன், ஐயா, நான்! மை ஆர் கண்டம் உடையானே! பறியா வினைகள் அவை தீர்க்கும் பரமா! பழையனூர் மேய அறிவே! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே.
[4]
வேல் அங்கு ஆடு தடங்கண்ணார் வளையுள் பட்டு, உன் நெறி மறந்து, மால் அங்கு ஆடி, மறந்தொழிந்தேன்; மணியே! முத்தே! மரகதமே! பால் அங்கு ஆடீ! நெய் ஆடீ! படர் புன்சடையாய்! பழையனூர் ஆலங்காடா! உன்னுடைய அடியார்க்கு அடியேன் ஆவேனே.
[5]
எண்ணார் தங்கள் எயில் எய்த எந்தாய்! எந்தை பெருமானே! கண் ஆய் உலகம் காக்கின்ற கருத்தா! திருத்தல் ஆகாதாய்! பண் ஆர் இசைகள் அவை கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர் அண்ணா! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே.
[6]
வண்டு ஆர் குழலி உமை நங்கை பங்கா! கங்கை மணவாளா! விண்டார் புரங்கள் எரி செய்த விடையாய்! வேத நெறியானே! பண்டு ஆழ் வினைகள் பல தீர்க்கும் பரமா! பழையனூர் மேய அண்டா! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே.
[7]
பேழ்வாய் அரவின் அணையானும், பெரிய மலர் மேல் உறைவானும் தாழாது, உன் தன் சரண் பணிய, தழல் ஆய் நின்ற தத்துவனே! பாழ் ஆம் வினைகள் அவை தீர்க்கும் பரமா! பழையனூர் தன்னை ஆள்வாய்! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே.
[8]
எம்மான்! எந்தை! மூத்த(அ)ப்பன்! ஏழ் ஏழ் படிகால் எமை ஆண்ட பெம்மான்! ஈமப் புறங்காட்டில் பேயோடு ஆடல் புரிவானே! பல் மா மலர்கள் அவை கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர் அம்மா! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே.
[9]
பத்தர் சித்தர் பலர் ஏத்தும் பரமன், பழையனூர் மேய அத்தன், ஆலங்காடன் தன் அடிமைத் திறமே அன்பு ஆகிச் சித்தர் சித்தம் வைத்த புகழ்ச் சிறுவன் ஊரன் ஒண் தமிழ்கள்- பத்தும் பாடி ஆடுவார் பரமன் அடியே பணிவாரே.
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.053   மரு ஆர் கொன்றை மதி
பண் - பழம்பஞ்சுரம் (திருக்கடவூர் மயானம் பிரமபுரீசுவரர் மலர்க்குழல்மின்னம்மை)
மரு ஆர் கொன்றை மதி சூடி, மாணிக்கத்தின் மலை போல வருவார், விடை மேல் மாதோடு மகிழ்ந்து பூதப்படை சூழ; திருமால், பிரமன், இந்திரற்கும், தேவர், நாகர், தானவர்க்கும், பெருமான்-கடவூர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.
[1]
விண்ணோர் தலைவர்; வெண் புரிநூல் மார்பர்; வேதகீதத்தர்; கண் ஆர் நுதலர்; நகுதலையர்; காலகாலர்; கடவூரர்; எண்ணார் புரம் மூன்று எரிசெய்த இறைவர்; உமை ஓர் ஒருபாகம், பெண் ஆண் ஆவர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.
[2]
காயும் புலியின் அதள் உடையர்; கண்டர்; எண்தோள் கடவூரர்; தாயும் தந்தை, பல் உயிர்க்கும், தாமே ஆன தலைவனார்; பாயும் விடை ஒன்று அது ஏறிப் பலி தேர்ந்து உண்ணும் பரமேட்டி பேய்கள் வாழும் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.
[3]
நறை சேர் மலர் ஐங்கணை யானை நயனத் தீயால் பொடி செய்த இறையார் ஆவர்; எல்லார்க்கும் இல்லை என்னாது அருள் செய்வார்; பறை ஆர் முழவம் பாட்டோடு பயிலும் தொண்டர் பயில் கடவூர்ப் பிறை ஆர் சடையார் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.
[4]
கொத்து ஆர் கொன்றை மதி சூடி, கோள் நாகங்கள் பூண் ஆக, மத்த யானை உரி போர்த்து, மருப்பும் ஆமைத் தாலியார்; பத்தி செய்து பாரிடங்கள் பாடி ஆடப் பலி கொள்ளும் பித்தர் கடவூர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.
[5]
துணி வார் கீளும் கோவணமும் துதைந்து, சுடலைப் பொடி அணிந்து, பணி மேல் இட்ட பாசுபதர்; பஞ்சவடி மார்பினர்; கடவூர்த் திணிவு ஆர் குழையார்; புரம் மூன்றும் தீவாய்ப் படுத்த சேவகனார்; பிணி வார் சடையார் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.
[6]
கார் ஆர் கடலின் நஞ்சு உண்ட கண்டர்; கடவூர் உறை வாணர்; தேர் ஆர் அரக்கன் போய் வீழ்ந்து சிதைய விரலால் ஊன்றினார்; ஊர் தான் ஆவது, உலகு ஏழும் உடையார்க்கு ஒற்றியூர், ஆரூர்; பேர் ஆயிரவர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.
[7]
வாடா முலையாள் தன்னோடும் மகிழ்ந்து, கானில் வேடுவனாய்க் கோடு ஆர் கேழல் பின் சென்று, குறுகி, விசயன் தவம் அழித்து, நாடா வண்ணம் செருச் செய்து, ஆவ நாழி நிலை அருள் செய் பீடு ஆர் சடையார் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.
[8]
வேழம் உரிப்பர்; மழுவாளர்; வேள்வி அழிப்பர்; சிரம் அறுப்பர்; ஆழி அளிப்பர், அரிதனக்கு; ஆன் அஞ்சு உகப்பர்; அறம் உரைப்பர்; ஏழைத் தலைவர்; கடவூரில் இறைவர்; சிறு மான்மறிக் கையர்; பேழைச் சடையர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.
[9]
மாடம் மல்கு கடவூரில் மறையோர் ஏத்தும் மயானத்து, பீடை தீர அடியாருக்கு அருளும் பெருமான் அடிகள் சீர் நாடி, நாவல் ஆரூரன் நம்பி சொன்ன நல்-தமிழ்கள் பாடும் அடியார், கேட்பார் மேல், பாவம் ஆன பறையுமே.
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.054   அழுக்கு மெய் கொடு உன்
பண் - தக்கேசி (திருவொற்றியூர் படம்பக்கநாதர் - மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
அழுக்கு மெய் கொடு உன் திருவடி அடைந்தேன்; அதுவும் நான் படப் பாலது ஒன்று ஆனால், பிழுக்கை வாரியும் பால் கொள்வர்; அடிகேள்! பிழைப்பன் ஆகிலும் திருவடிப் பிழையேன்! வழுக்கி வீழினும் திருப் பெயர் அல்லால், மற்று நான் அறியேன், மறு மாற்றம்; ஒழுக்க என் கணுக்கு ஒரு மருந்து உரையாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே! .
[1]
கட்டனேன் பிறந்தேன், உனக்கு ஆள் ஆய்; காதல் சங்கிலி காரணம் ஆக, எட்டினால்-திகழும் திருமூர்த்தி! என் செய்வான், அடியேன் எடுத்து உரைக்கேன்? பெட்டன் ஆகிலும், திருவடி, பிழையேன், பிழைப்பன் ஆகிலும் திருவடிக்கு அடிமை; ஒட்டினேன், எனை நீ செய்வது எல்லாம்; ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே! .
[2]
கங்கை தங்கிய சடை உடைக் கரும்பே! கட்டியே! பலர்க்கும் களை கண்ணே! அங்கை நெல்லியின் பழத்து இடை அமுதே! அத்த! என் இடர் ஆர்க்கு எடுத்து உரைக்கேன்? சங்கும் இப்பியும் சலஞ்சலம் முரல, வயிரம் முத்தொடு பொன் மணி வரன்றி, ஒங்கும் மா கடல் ஓதம் வந்து உலவும் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே!.
[3]
ஈன்று கொண்டது ஓர் சுற்றம் ஒன்று அன்றால்; யாவர் ஆகில் என், அன்பு உடையார்கள்? தோன்ற நின்று அருள் செய்து அளித்திட்டால் சொல்லுவாரை அல்லாதன சொல்லாய்; மூன்று கண் உடையாய்! அடியேன் கண் கொள்வதே கணக்கு வழக்கு ஆகில், ஊன்று கோல் எனக்கு ஆவது ஒன்று அருளாய் ஒற்றியூர் எலும் ஊர் உறைவானே!.
[4]
வழித்தலைப் படுவான் முயல்கின்றேன்; உன்னைப் போல் என்னைப் பாவிக்க மாட்டேன்; சுழித்தலைப் பட்ட நீர் அது போலச் சுழல்கின்றேன்; சுழல்கின்றது, என் உள்ளம்; கழித்தலைப் பட்ட நாய் அது போல ஒருவன் கோல் பற்றிக் கறகற இழுக்கை ஒழித்து, நீ அருள் ஆயின செய்யாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே!.
[5]
மானை நோக்கியர் கண் வலைப் பட்டு, வருந்தி, யான் உற்ற வல்வினைக்கு அஞ்சி, தேனை ஆடிய கொன்றையினாய்! உன் சீலமும் குணமும் சிந்தியாதே நானும் இத்தனை வேண்டுவது; அடியேன் உயிரொடும் நரகத்து அழுந்தாமை, ஊனம் உள்ளன தீர்த்து, அருள் செய்யாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே!.
[6]
மற்றுத் தேவரை நினைந்து உனை மறவேன்; நெஞ்சினாரொடு வாழவும் மாட்டேன்; பெற்றிருந்து பெறா தொழிகின்ற பேதையேன் பிழைத்திட்டதை அறியேன்; முற்றும் நீ எனை முனிந்திட அடியேன் கடவது என்? உனை நான் மறவேனேல், உற்ற நோய் உறு பிணி தவிர்த்து அருளாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே! .
[7]
கூடினாய், மலை மங்கையை; நினையாய்; கங்கை ஆயிரமுகம் உடையாளை சூடினாய் என்று சொல்லிய புக்கால், தொழும்பனேனுக்கும் சொல்லலும் ஆமே; வாடி நீ இருந்து என் செய்தி? மனனே! வருந்தி யான் உற்ற வல்வினைக்கு அஞ்சி, ஊடினால், இனி ஆவது ஒன்று உண்டே? ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே!.
[8]
மகத்தில் புக்கது ஓர் சனி எனக்கு ஆனாய்; மைந்தனே! மணியே! மணவாளா! அகத்தில் பெண்டுகள் நான் ஒன்று சொன்னால், அழையேல், போ, குருடா! எனத் தரியேன்; முகத்தில் கண் இழந்து எங்ஙனம் வாழ்கேன்? முக்கணா! முறையோ? மறை ஓதீ! உகைக்கும் தண் கடல் ஓதம் வந்து உலவும் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே! .
[9]
ஓதம் வந்து உலவும் கரை தன் மேல் ஒற்றியூர் உறை செல்வனை, நாளும் ஞாலம் தான் பரவப்படுகின்ற நால் மறை அங்கம் ஓதிய நாவன்- சீலம் தான் பெரிதும் மிக வல்ல சிறுவன், வன் தொண்டன், ஊரன்-உரைத்த பாடல் பத்து இவை வல்லவர் தாம் போய்ப் பரகதி திண்ணம் நண்ணுவர் தாமே.
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.055   அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத,
பண் - தக்கேசி (திருப்புன்கூர் சிவலோகநாதர் சொக்கநாயகியம்மை)
அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத, அவனைக் காப்பது காரணம் ஆக, வந்த காலன் தன் ஆர் உயிர் அதனை வவ்வினாய்க்கு, உன் தன் வன்மை கண்டு அடியேன், எந்தை! நீ எனை நமன் தமர் நலியின், இவன் மற்று என் அடியான் என விலக்கும் சிந்தையால் வந்து, உன் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே! .
[1]
வையகம் முற்றும் மா மழை மறந்து, வயலில் நீர் இலை; மா நிலம் தருகோம்; உய்யக் கொள்க, மற்று எங்களை! என்ன, ஒலி கொள் வெண்முகில் ஆய்ப் பரந்து எங்கும் பெய்யும் மா மழைப் பெரு வெள்ளம் தவிர்த்து, பெயர்த்தும் பன்னிரு வேலி கொண்டு அருளும் செய்கை கண்டு, நின் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே! .
[2]
ஏதம் நன் நிலம் ஈர்-அறுவேலி ஏயர்கோன் உற்ற இரும் பிணி தவிர்த்து, கோதனங்களின் பால் கறந்து ஆட்டக் கோல வெண்மணல் சிவன் தன்மேல் சென்ற தாதை தாள் அற எறிந்த தண்டிக்கு உன் சடைமிசை மலர் அருள் செயக் கண்டு, பூத ஆளி! நின் பொன் அடி அடைந்தேன்-பூம்பொழில்-திருப் புன்கூர் உளானே! .
[3]
நல்-தமிழ் வல்ல ஞானசம்பந்தன், நாவினுக்கு அரையன், நாளைப் போவானும், கற்ற சூதன், நல் சாக்கியன், சிலந்தி, கண்ணப்பன், கணம் புல்லன், என்று இவர்கள் குற்றம் செய்யினும் குணம் எனக் கருதும் கொள்கை கண்டு, நின் குரை கழல் அடைந்தேன்- பொன்திரள் மணிக் கமலங்கள் மலரும் பொய்கை சூழ் திருப் புன்கூர் உளானே! .
[4]
கோலம் மால் வரை மத்து என நாட்டி, கோள் அர(வ்)வு சுற்றி, கடைந்து எழுந்த ஆலம் நஞ்சு கண்டு அவர் மிக இரிய, அமரர்கட்கு அருள் புரிவது கருதி, நீலம் ஆர் கடல் விடம் தனை உண்டு, கண்டத்தே வைத்த பித்த! நீ செய்த சீலம் கண்டு, நின் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே!.
[5]
இயக்கர், கின்னரர், யமனொடு, வருணர், இயங்கு தீ, வளி, ஞாயிறு, திங்கள் மயக்கம் இல் புலி, வானரம், நாகம், வசுக்கள், வானவர், தானவர், எல்லாம் அயர்ப்பு ஒன்று இன்றி நின் திருவடி அதனை அர்ச்சித்தார்; பெறும் ஆர் அருள் கண்டு, திகைப்பு ஒன்று இன்றி நின் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே! .
[6]
போர்த்த நீள் செவியாளர் அந்தணர்க்குப் பொழில் கொள் ஆல் நிழல் கீழ் அறம் புரிந்து, பார்த்தனுக்கு அன்று பாசுபதம் கொடுத்து அருளினாய்; பண்டு பகீரதன் வேண்ட, ஆர்த்து வந்து இழியும் புனல் கங்கை-நங்கையாளை நின் சடைமிசைக் கரந்த தீர்த்தனே! நின் தன் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே!.
[7]
மூ எயில் செற்ற ஞான்று உய்ந்த மூவரில் இருவர் நின் திருக்கோயிலின் வாய்தல் காவலாளர் என்று ஏவிய பின்னை, ஒருவன்-நீ கரிகாடு அரங்கு ஆக, மானை நோக்கி ஓர் மாநடம் மகிழ மணி முழா முழக்க(வ்) அருள் செய்த தேவ தேவ! நின் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே!.
[8]
அறிவினால் மிக்க அறுவகைச் சமயம் அவ் அவர்க்கு அங்கே ஆர் அருள் புரிந்து, எறியும் மா கடல் இலங்கையர் கோனைத் துலங்க மால் வரைக்கீழ் அடர்த்திட்டு, குறி கொள் பாடலின் இன் இசை கேட்டு, கோல வாளொடு நாள் அது கொடுத்த செறிவு கண்டு, நின் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே!.
[9]
கம்பம் மால் களிற்றின்(ன்) உரியானை, காமற் காய்ந்தது ஓர் கண் உடையானை, செம்பொனே ஒக்கும் திரு உருவானை, செழும் பொழில்-திருப் புன்கூர் உளானை, உம்பர் ஆளியை, உமையவள் கோனை, ஊரன்-வன்தொண்டன்-உள்ளத்தால் உகந்து அன்பினால் சொன்ன அருந்தமிழ் ஐந்தோடு-ஐந்தும் வல்லவர் அருவினை இலரே.
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.056   ஊர்வது ஓர் விடை ஒன்று
பண் - தக்கேசி (திருநீடூர் சோமநாதேசுவரர் வேயுறுதோளியம்மை)
ஊர்வது ஓர் விடை ஒன்று உடையானை, ஒண்நுதல்-தனிக் கண் நுதலானை, கார் அது ஆர் கறை மாமிடற்றானை, கருதலார் புரம் மூன்று எரித்தானை, நீரில் வாளை, வரால், குதி கொள்ளும் நிறை புனல் கழனிச் செல்வம் நீடூர்ப் பார் உளார் பரவித் தொழ நின்ற பரமனை, பணியா விடல் ஆமே?
[1]
துன்னு வார்சடைத் மதியானை, துயக்கு உறா வகை தோன்றுவிப்பானை, பன்னு நால்மறை பாட வல்லானை, பார்த்தனுக்கு அருள் செய்த பிரானை, என்னை இன் அருள் எய்துவிப்பானை, ஏதிலார் தமக்கு ஏதிலன் தன்னை, புன்னை, மாதவிப்போது, அலர் நீடூர்ப் புனிதனை, பணியா விடல் ஆமே?
[2]
கொல்லும் மூ இலை வேல் உடையானை, கொடிய காலனையும் குமைத்தானை, நல்லவா நெறி காட்டுவிப்பானை, நாளும் நாம் உகக்கின்ற பிரானை, அல்லல் இல் அருளே புரிவானை, ஆரும் நீர் வயல் சூழ் புனல் நீடூர்க் கொல்லை வெள் எருது ஏற வல்லானை, கூறி நாம் பணியா விடல் ஆமே?
[3]
தோடு காது இடு தூநெறியானை, தோற்றமும் துறப்பு ஆயவன் தன்னை, பாடு மாமறை பாட வல்லானை, பைம்பொழில் குயில் கூவிட, மாடே ஆடு மா மயில் அன்னமோடு ஆட, அலை புனல் கழனி திரு நீடூர் வேடன் ஆய பிரான் அவன் தன்னை, விரும்பி நாம் பணியா விடல் ஆமே?
[4]
குற்றம் ஒன்று அடியார் இலர் ஆனால் கூடும் ஆறு அதனைக் கொடுப்பானை, கற்ற கல்வியிலும்(ம்) இனியானை, காணப் பேணுமவர்க்கு எளியானை, முற்ற அஞ்சும் துறந்திருப்பானை, மூவரின் முதல் ஆயவன் தன்னை, சுற்றும் நீள் வயல் சூழ் திரு நீடூர்த் தோன்றலை, பணியா விடல் ஆமே?
[5]
கா(ட்)டில் ஆடிய கண் நுதலானை, காலனைக் கடிந்திட்ட பிரானை, பாடி ஆடும் பரிசே புரிந்தானை, பற்றினோடு சுற்றம்(ம்) ஒழிப்பானை, தேடி மால் அயன் காண்பு அரியானை, சித்தமும் தெளிவார்க்கு எளியானை, கோடி தேவர்கள் கும்பிடும் நீடூர்க் கூத்தனை, பணியா விடல் ஆமே?
[6]
விட்டு இலங்கு எரி ஆர் கையினானை, வீடு இலாத வியன் புகழானை, கட்டு வாங்கம் தரித்த பிரானை, காதில் ஆர் கனகக்குழையானை, விட்டு இலங்கு புரிநூல் உடையானை, வீந்தவர் தலை ஓடு கையானை, கட்டியின் கரும்பு ஓங்கிய நீடூர்க் கண்டு நாம் பணியா விடல் ஆமே?
அல்லல் உள்ளன தீர்த்திடுவானை, அடைந்தவர்க்கு அமுது ஆயிடுவானை, கொல்லை வல் அரவம்(ம்) அசைத்தானை, கோலம் ஆர் கரியின்(ன்) உரியானை, நல்லவர்க்கு அணி ஆனவன் தன்னை, நானும் காதல் செய்கின்ற பிரானை, எல்லி மல்லிகையே கமழ் நீடூர் ஏத்தி நாம் பணியா விடல் ஆமே?
[10]
பேர் ஓர் ஆயிரமும்(ம்) உடையானை, பேசினால் பெரிதும்(ம்) இனியானை, நீர் ஊர் வார் சடை நின்மலன் தன்னை, நீடூர் நின்று உகந்திட்ட பிரானை, ஆரூரன்(ன்) அடி காண்பதற்கு அன்பு ஆய் ஆதரித்து அழைத்திட்ட இம் மாலை பார் ஊரும் பரவித் தொழ வல்லார், பத்தராய் முத்தி தாம் பெறுவாரே.
[11]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.057   தலைக்கலன் தலை மேல்-தரித்தானை, தன்னை
பண் - தக்கேசி (திருவாழ்கொளிபுத்தூர் மாணிக்கவண்ணர் வண்டமர்பூங்குழலம்மை)
தலைக்கலன் தலை மேல்-தரித்தானை, தன்னை என்னை நினைக்கத் தருவானை, கொலைக் கை யானை உரி போர்த்து உகந்தானை, கூற்று உதைத்த(க்) குரை சேர் கழலானை, அலைத்த செங்கண் விடை ஏற வல்லானை, ஆணையால் அடியேன் அடிநாயேன்- மலைத்த செந்நெல் வயல் வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, மறந்து என் நினைக்கேனே? .
வெந்த நீறு மெய் பூச வல்லானை, வேத மால்விடை ஏற வல்லானை, அந்தம் ஆதி(ய்) அறிதற்கு அரியானை, ஆறு அலைத்த(ச்) சடையானை, அம்மானை, சிந்தை என் தடுமாற்று அறுப்பானை, தேவதேவன், என் சொல் முனியாதே வந்து என் உள்ளம் புகும் வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, மறந்து என் நினைக்கேனே? .
[3]
தடங்கையால் மலர் தூய்த் தொழுவாரைத் தன் அடிக்கே செல்லும் ஆறு வல்லானை, படம் கொள் நாகம்(ம்) அரை ஆர்த்து உகந்தானை, பல் இல் வெள்ளைத் தலை ஊண் உடையானை, நடுங்க ஆனை உரி போர்த்து உகந்தானை, நஞ்சம் உண்டு கண்டம் கறுத்தானை, மடந்தை பாகனை, வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, மறந்து என் நினைக்கேனே? .
[4]
வளைக்கை முன்கை மலை மங்கை மணாளன்; மாரனார் உடல் நீறு எழச் செற்று, துளைத்த அங்கத்தொடு மலர்க் கொன்றை தோலும் நாலும் துதைந்த(வ்) வரை மார்பன்; திளைக்கும் தெவ்வர் திரி புரம் மூன்றும் அவுணர் பெண்டிரும் மக்களும் வேவ வளைத்த வில்லியை; வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை; மறந்து என் நினைக்கேனே?.
[5]
திருவின் நாயகன் ஆகிய மாலுக்கு அருள்கள் செய்திடும் தேவர் பிரானை, உருவினானை, ஒன்றா அறிவு ஒண்ணா மூர்த்தியை, விசயற்கு அருள் செய்வான் செரு வில் ஏந்தி ஓர் கேழல் பின் சென்று செங்கண் வேடனாய் என்னொடும் வந்து மருவினான் தனை, வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, மறந்து என் நினைக்கேனே? .
[6]
எந்தையை, எந்தை தந்தை பிரானை, ஏதம் ஆய(வ்) இடர் தீர்க்க வல்லானை, முந்தி ஆகிய மூவரின் மிக்க மூர்த்தியை, முதல் காண்பு அரியானை, கந்தின் மிக்க(க்) கரியின் மருப்போடு, கார் அகில், கவரி(ம்)மயிர், மண்ணி வந்து வந்து இழி வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, மறந்து என் நினைக்கேனே?
[7]
தேனை ஆடிய கொன்றையினானை, தேவர் கைதொழும் தேவர் பிரானை, ஊனம் ஆயின தீர்க்க வல்லானை, ஒற்றை ஏற்றனை, நெற்றிக் கண்ணானை, கான ஆனையின் கொம்பினைப் பீழ்ந்த கள்ளப் பிள்ளைக்கும் காண்பு அரிது ஆய வானநாடனை, வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, மறந்து என் நினைக்கேனே?.
[8]
காளை ஆகி வரை எடுத்தான் தன் கைகள் இற்று அவன் மொய் தலை எல்லாம் மூளை போத, ஒருவிரல் வைத்த மூர்த்தியை, முதல் காண்பு அரியானை, பாளை தெங்கு பழம் விழ மண்டி, செங்கண் மேதிகள் சேடு எறிந்து, எங்கும் வாளை பாய் வயல் வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, மறந்து என் நினைக்கேனே?.
[9]
திருந்த நால்மறை பாட வல்லானை, தேவர்க்கும் தெரிதற்கு அரியானை, பொருந்த மால்விடை ஏற வல்லானை, பூதிப்பை புலித்தோல் உடையானை, இருந்து உணும் தேரரும் நின்று உணும் சமணும் ஏச நின்றவன், ஆர் உயிர்க்கு எல்லாம் மருந்து அனான் தனை, வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, மறந்து என் நினைக்கேனே? .
[10]
மெய்யனை, மெய்யில் நின்று உணர்வானை, மெய் இலாதவர் தங்களுக்கு எல்லாம் பொய்யனை, புரம் மூன்று எரித்தானை, புனிதனை, புலித்தோல் உடையானை, செய்யனை, வெளிய(த்) திருநீற்றில்-திகழும் மேனியன், மான்மறி ஏந்தும் மை கொள் கண்டனை, வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, மறந்து என் நினைக்கேனே? .
[11]
வளம் கிளர் பொழில் வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேன்? என்று உளம் குளிர் தமிழ், ஊரன்-வன்தொண்டன், சடையன் காதலன், வனப்பகை அப்பன், நலம் கிளர் வயல் நாவலர் வேந்தன், நங்கை சிங்கடி தந்தை பயந்த பலம் கிளர் தமிழ் பாட வல்லார் மேல் பறையும் ஆம், செய்த பாவங்கள் தானே .
[12]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.058   சாதலும் பிறத்தலும் தவிர்த்து, எனை
பண் - தக்கேசி (சீர்காழி பிரமபுரியீசுவரர் திருநிலைநாயகியம்மை)
சாதலும் பிறத்தலும் தவிர்த்து, எனை வகுத்து, தன் அருள் தந்த எம் தலைவனை; மலையின் மாதினை மதித்து, அங்கு ஒர் பால் கொண்ட மணியை; வருபுனல் சடை இடை வைத்த எம்மானை; ஏதிலென் மனத்துக்கு ஒர் இரும்பு உண்ட நீரை; எண் வகை ஒருவனை; எங்கள் பிரானை; காதில் வெண்குழையனை; கடல் கொள மிதந்த கழுமல வள நகர்க் கண்டு கொண்டேனே .
[1]
மற்று ஒரு துணை இனி மறுமைக்கும் காணேன்; வருந்தல் உற்றேன்; மறவா வரம் பெற்றேன்; சுற்றிய சுற்றமும் துணை என்று கருதேன்; துணை என்று நான் தொழப்பட்ட ஒண்சுடரை, முத்தியும் ஞானமும் வானவர் அறியா முறைமுறை பலபல நெறிகளும் காட்டிக் கற்பனை கற்பித்த கடவுளை, அடியேன் கழுமல வள நகர்க் கண்டுகொண்டேனே .
மழைக்கு அரும்பும் மலர்க் கொன்றையினானை வளைக்கல் உற்றேன்; மறவா மனம் பெற்றேன்; பிழைத்து ஒரு கால் இனிப் போய்ப் பிறவாமைப் பெருமை பெற்றேன்; பெற்றது ஆர் பெறுகிற்பார்? குழைக் கருங்கண்டனைக் கண்டு கொள்வானே பாடுகின்றேன்; சென்று கூடவும் வல்லேன்; கழைக் கரும்பும் கதலிப் பலசோலை கழுமல வள நகர்க் கண்டுகொண்டேனே .
[4]
குண்டலம் குழை திகழ் காதனே! என்றும், கொடு மழுவாள் படைக் குழகனே! என்றும், வண்டு அலம்பும் மலர்க் கொன்றையன்! என்றும், வாய் வெருவித் தொழுதேன், விதியாலே; பண்டை நம் பல மனமும் களைந்து ஒன்று ஆய், பசுபதி பதி வினவி, பலநாளும், கண்டல் அம் கழிக் கரை ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர்க் கண்டு கொண்டேனே .
[5]
வரும், பெரும் வல்வினை என்று இருந்து எண்ணி, வருந்தல் உற்றேன்; மறவா மனம் பெற்றேன்; விரும்பி, என் மனத்து இடை மெய் குளிர்ப்பு எய்தி, வேண்டி நின்றே தொழுதேன், விதியாலே; அரும்பினை, அலரினை, அமுதினை, தேனை, ஐயனை, அறவன், என் பிறவி வேர் அறுக்கும் கரும்பினை, பெருஞ் செந்நெல் நெருங்கிய கழனி கழுமல வள நகர்க் கண்டு கொண்டேனே .
[6]
அயலவர் பரவவும், அடியவர் தொழவும், அன்பர்கள் சாயலுள் அடையல் உற்று இருந்தேன்- முயல்பவர் பின் சென்று, முயல் வலை யானை படும் என மொழிந்தவர் வழி முழுது எண்ணி; புயலினை, திருவினை, பொன்னினது ஒளியை, மின்னினது உருவை, என் இடைப் பொருளை, கயல் இனம் சேலொடு வயல் விளையாடும் கழுமல வள நகர்க் கண்டுகொண்டேனே .
[7]
நினைதரு பாவங்கள் நாசங்கள் ஆக, நினைந்து முன் தொழுது எழப்பட்ட ஒண்சுடரை; மனை தரு மலை மகள் கணவனை; வானோர் மாமணி மாணிக்கத்தை(ம்); மறைப்பொருளை; புனைதரு புகழினை; எங்களது ஒளியை; இருவரும், ஒருவன் என்று உணர்வு அரியவனை; கனை தரு கருங்கடல் ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர்க் கண்டுகொண்டேனே .
[8]
மறை இடைத் துணிந்தவர் மனை இடை இருப்ப, வஞ்சனை செய்தவர் பொய்கையும் மாய, துறை உறக் குளித்து உளது ஆக வைத்து உய்த்த உண்மை எனும் தக வின்மையை ஓரேன்; பிறை உடைச் சடையனை, எங்கள் பிரானை, பேர் அருளாளனை, கார் இருள் போன்ற கறை அணி மிடறு உடை அடிகளை, அடியேன் கழுமல வள நகர்க் கண்டு கொண்டேனே .
[9]
செழு மலர்க் கொன்றையும் கூவிள மலரும் விரவிய சடை முடி அடிகளை நினைந்திட்டு அழும் மலர்க் கண் இணை அடியவர்க்கு அல்லால், அறிவு அரிது, அவன் திருவடியிணை இரண்டும்; கழுமல வள நகர்க் கண்டுகொண்டு, ஊரன்-சடையன் தன் காதலன்-பாடிய பத்தும் தொழு மலர் எடுத்த கை அடியவர் தம்மைத் துன்பமும் இடும்பையும் சூழகிலாவே .
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.059   பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும்
பண் - தக்கேசி (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும் திருவும் புணர்ப்பானை, பின்னை என் பிழையைப் பொறுப்பானை, பிழை எலாம் தவிரப் பணிப்பானை, இன்ன தன்மையன் என்று அறிவு ஒண்ணா எம்மானை, எளி வந்த பிரானை, அன்னம் வைகும் வயல்-பழனத்து அணி ஆரூரானை, மறக்கலும் ஆமே? .
[1]
கட்டமும் பிணியும் களைவானை; காலற் சீறிய கால் உடையானை; விட்ட வேட்கை வெந்நோய் களைவானை; விரவினால் விடுதற்கு அரியானை; பட்ட வார்த்தை, பட நின்ற வார்த்தை, வாராமே தவிரப் பணிப்பானை; அட்ட மூர்த்தியை; மட்டு அவிழ் சோலை ஆரூரானை; மறக்கலும் ஆமே? .
[2]
கார்க்குன்ற(ம்) மழை ஆய்ப் பொழிவானை, கலைக்கு எலாம் பொருள் ஆய் உடன்கூடிப் பார்க்கின்ற(வ்) உயிர்க்குப் பரிந்தானை, பகலும் கங்குலும் ஆகி நின்றானை, ஓர்க்கின்ற(ச்) செவியை, சுவை தன்னை, உணரும் நாவினை, காண்கின்ற கண்ணை, ஆர்க்கின்ற(க்) கடலை, மலை தன்னை, ஆரூரானை, மறக்கலும் ஆமே? .
[3]
செத்த போதினில் முன் நின்று நம்மைச் சிலர்கள் கூடிச் சிரிப்பதன் முன்னம், வைத்த சிந்தை உண்டே; மனம் உண்டே; மதி உண்டே; விதியின் பயன் உண்டே! முத்தன், எங்கள் பிரான் என்று வானோர் தொழ நின்ற(த்) திமில் ஏறு உடையானை, அத்தன், எந்தைபிரான், எம்பிரானை, ஆரூரானை, மறக்கலும் ஆமே? .
[4]
செறிவு உண்டேல், மனத்தால்-தெளிவு உண்டேல், தேற்றத்தால் வரும் சிக்கனவு உண்டேல், மறிவு உண்டேல், மறுமைப் பிறப்பு உண்டேல், வாழ்நாள் மேல் செல்லும் வஞ்சனை உண்டேல், பொறிவண்டு யாழ் செய்யும் பொன்மலர்க் கொன்றை பொன் போலும் சடைமேல் புனைந்தானை அறிவு உண்டே; உடலத்து உயிர் உண்டே; ஆரூரானை மறக்கலும் ஆமே? .
[5]
பொள்ளல் இவ் உடலைப் பொருள் என்று, பொருளும் சுற்றமும் போகமும் ஆகி, மெள்ள நின்றவர் செய்வன எல்லாம் வாராமே தவிர்க்கும் விதியானை, வள்ளல்! எம்தமக்கே துணை! என்று நாள் நாளும்(ம்) அமரர் தொழுது ஏத்தும் அள்ளல் அம் கழனிப் பழனத்து அணி ஆரூரானை மறக்கலும் ஆமே?.
[6]
கரி-யானை உரி கொண்ட கையானை, கண்ணின் மேல் ஒரு கண் உடையானை, வரியானை, வருத்தம் களைவானை, மறையானை, குறை மாமதி சூடற்கு உரியானை, உலகத்து உயிர்க்கு எல்லாம் ஒளியானை, உகந்து உள்கி நண்ணாதார்க்கு அரியானை, அடியேற்கு எளியானை, ஆரூரானை, மறக்கலும் ஆமே? .
[7]
வாளா நின்று தொழும் அடியார்கள் வான் ஆளப் பெறும் வார்த்தையைக் கேட்டும் நாள் நாளும் மலர் இட்டு வணங்கார்; நம்மை ஆள்கின்ற தன்மையை ஓரார்; கேளா நான் கிடந்தே உழைக்கின்றேன், கிளைக்கு எலாம் துணை ஆம் எனக் கருதி; ஆள் ஆவான் பலர் முன்பு அழைக்கின்றேன்; ஆரூரானை மறக்கலும் ஆமே? .
[8]
விடக்கையே பெருக்கிப் பலநாளும் வேட்கையால் பட்ட வேதனை தன்னைக் கடக்கிலேன்; நெறி காணவும் மாட்டேன்; கண் குழிந்து இரப்பார் கையில் ஒன்றும் இடக்(க்)கிலேன்; பரவைத் திரைக் கங்கைச் சடையானை, உமையாளை ஓர் பாகத்து அடக்கினானை, அம் தாமரைப் பொய்கை ஆரூரானை, மறக்கலும் ஆமே?.
[9]
ஒட்டி ஆட்கொண்டு போய் ஒளித்திட்ட உச்சிப்போதனை, நச்சு அரவு ஆர்த்த பட்டியை, பகலை, இருள் தன்னை, பாவிப்பார் மனத்து ஊறும் அத் தேனை, கட்டியை, கரும்பின் தெளி தன்னை, காதலால் கடல் சூர் தடிந்திட்ட செட்டி அப்பனை, பட்டனை, செல்வ ஆரூரானை, மறக்கலும் ஆமே?.
[10]
ஓர் ஊர் என்று உலகங்களுக்கு எல்லாம் உரைக்கல் ஆம் பொருள் ஆய் உடன் கூடி, கார் ஊரும் கமழ் கொன்றை நல்மாலை முடியன், காரிகை காரணம் ஆக ஆரூரை(ம்) மறத்தற்கு அரியானை, அம்மான் தன் திருப்பேர் கொண்ட தொண்டன்- ஆரூரன்(ன்) அடிநாய் உரை வல்லார் அமரலோகத்து இருப்பவர் தாமே .
[11]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.060   கழுதை குங்குமம் தான் சுமந்து
பண் - தக்கேசி (திருவிடைமருதூர் மருதீசுவரர் நலமுலைநாயகியம்மை)
கழுதை குங்குமம் தான் சுமந்து எய்த்தால், கைப்பர், பாழ் புக; மற்று அது போலப் பழுது நான் உழன்று உள்-தடுமாறிப் படு சுழித்தலைப் பட்டனன்; எந்தாய்! அழுது நீ இருந்து என் செய்தி? மனனே! அங்கணா! அரனே! எனமாட்டா இழுதையேனுக்கு ஓர் உய்வகை அருளாய் இடை மருது(வ்) உறை எந்தை பிரானே! .
[1]
நரைப்பு மூப்பொடு பிணி வரும், இன்னே; நன்றி இல் வினையே துணிந்து எய்த்தேன்; அரைத்த மஞ்சள் அது ஆவதை அறிந்தேன்; அஞ்சினேன், நமனார் அவர் தம்மை; உரைப்பன், நான் உன சேவடி சேர; உணரும் வாழ்க்கையை ஒன்று அறியாத இரைப்பனேனுக்கு ஓர் உய்வகை அருளாய் இடை மருது(வ்) உறை எந்தை பிரானே!.
[2]
புல்-நுனைப் பனி வெங்கதிர் கண்டால் போலும் வாழ்க்கை பொருள் இலை; நாளும் என் எனக்கு? இனி இன்றைக்கு நாளை என்று இருந்து இடர் உற்றனன்; எந்தாய்! முன்னமே உன சேவடி சேரா மூர்க்கன் ஆகிக் கழிந்தன, காலம்; இன்னம் என் தனக்கு உய்வகை அருளாய் இடை மருது(வ்) உறை எந்தை பிரானே! .
[3]
முந்திச் செய்வினை இம்மைக்கண் நலிய, மூர்க்கன் ஆகிக் கழிந்தன, காலம்; சிந்தித்தே மனம் வைக்கவும் மாட்டேன்; சிறுச் சிறிதே இரப்பார்கட்கு ஒன்று ஈயேன்; அந்தி வெண்பிறை சூடும் எம்மானே! ஆரூர் மேவிய அமரர்கள் தலைவா! எந்தை! நீ எனக்கு உய்வகை அருளாய் இடை மருது(வ்) உறை எந்தை பிரானே! .
[4]
அழிப்பர், ஐவர் புரவு உடையார்கள்; ஐவரும் புரவு ஆசு அற ஆண்டு, கழித்து, கால் பெய்து, போயின பின்னை, கடை முறை உனக்கே பொறை ஆனேன்; விழித்துக் கண்டனன், மெய்ப் பொருள் தன்னை; வேண்டேன், மானுட வாழ்க்கை, ஈது ஆகில்; இழித்தேன்; என் தனக்கு உய்வகை அருளாய் இடை மருது(வ்) உறை எந்தை பிரானே! .
[5]
குற்றம் தன்னொடு குணம் பல பெருக்கி, கோல நுண் இடையாரொடு மயங்கி, கற்றிலேன், கலைகள் பல ஞானம்; கடிய ஆயின கொடுமைகள் செய்தேன்; பற்றல் ஆவது ஓர் பற்று மற்று இல்லேன்; பாவியேன் பல பாவங்கள் செய்தேன்; எற்று உளேன்? எனக்கு உய்வகை அருளாய் இடை மருது(வ்) உறை எந்தைபிரானே!.
[6]
கொடுக்க கிற்றிலேன், ஒண் பொருள் தன்னை; குற்றம் செற்றம் இவை முதல் ஆக, விடுக்க கிற்றிலேன், வேட்கையும் சினமும்; வேண்டில், ஐம்புலன் என் வசம் அல்ல; நடுக்கம் உற்றது ஓர் மூப்பு வந்து எய்த, நமன்தமர் நரகத்து இடல் அஞ்சி; இடுக்கண் உற்றனன்; உய்வகை அருளாய்- இடைமருது(வ்)உறை எந்தைபிரானே!.
[7]
ஐவகையர் அரையர் அவர் ஆகி, ஆட்சிகொண்டு, ஒரு கால் அவர் நீங்கார்; அவ் வகை அவர் வேண்டுவது ஆனால், அவர் அவர் வழி ஒழுகி, நான் வந்து செய்வகை அறியேன்; சிவலோகா! தீவணா! சிவனே! எரிஆடீ! எவ் வகை, எனக்கு உய்வகை? அருளாய் இடைமருது(வ்) உறை எந்தைபிரானே!.
[8]
ஏழை மானுட இன்பினை நோக்கி, இளையவர் வயப்பட்டு இருந்து, இன்னம் வாழை தான் பழுக்கும், நமக்கு என்று வஞ்ச வல்வினையுள் வலைப்பட்டு, கூழை மாந்தர் தம் செல்கதிப் பக்கம், போகமும் பொருள் ஒன்று அறியாத ஏழையேனுக்கு ஓர் உய்வகை அருளாய் இடைமருது(வ்) உறை எந்தைபிரானே! .
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.061   ஆலம் தான் உகந்து அமுது
பண் - தக்கேசி (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
ஆலம் தான் உகந்து அமுது செய்தானை, ஆதியை, அமரர் தொழுது ஏத்தும் சீலம் தான் பெரிதும்(ம்) உடையானை, சிந்திப்பார் அவர் சிந்தை உளானை, ஏல வார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற கால காலனை, கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
[1]
உற்றவர்க்கு உதவும் பெருமானை, ஊர்வது ஒன்று உடையான், உம்பர் கோனை, பற்றினார்க்கு என்றும் பற்றவன் தன்னை, பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை, அற்றம் இல் புகழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப் பெற்ற கற்றை வார் சடைக் கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
[2]
திரியும் முப்புரம் தீப்பிழம்பு ஆகச் செங்கண் மால் விடைமேல்-திகழ்வானை, கரியின் ஈர் உரி போர்த்து உகந்தானை, காமனைக் கனலா விழித்தானை, வரி கொள் வெள்வளையாள் உமை நங்கை மருவி ஏத்தி வழிபடப் பெற்ற பெரிய கம்பனை, எங்கள் பிரானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
வெல்லும் வெண்மழு ஒன்று உடையானை, வேலை நஞ்சு உண்ட வித்தகன் தன்னை, அல்லல் தீர்த்து அருள்செய்ய வல்லானை, அருமறை அவை அங்கம் வல்லானை, எல்லை இல் புகழாள் உமை நங்கை என்று ஏத்தி வழிபடப் பெற்ற நல்ல கம்பனை, எங்கள் பிரானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
[5]
திங்கள் தங்கிய சடை உடையானை, தேவதேவனை, செழுங் கடல் வளரும் சங்க வெண்குழைக் காது உடையானை, சாம வேதம் பெரிது உகப்பானை, மங்கை நங்கை மலை மகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப் பெற்ற கங்கையாளனை, கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
[6]
விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை, வேதம் தான் விரித்து ஓத வல்லானை, நண்ணினார்க்கு என்றும் நல்லவன் தன்னை, நாளும் நாம் உகக்கின்ற பிரானை, எண் இல் தொல் புகழாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற கண்ணும் மூன்று உடைக் கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
[7]
சிந்தித்து என்றும் நினைந்து எழுவார்கள் சிந்தையில்-திகழும் சிவன் தன்னை, பந்தித்த(வ்) வினைப்பற்று அறுப்பானை, பாலொடு ஆன் அஞ்சும் ஆட்டு உகந்தானை, அந்தம் இல் புகழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப் பெற்ற கந்த வார்சடைக் கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
[8]
வரங்கள் பெற்று உழல் வாள் அரக்கர் தம் வாலிய(ப்) புரம் மூன்று எரித்தானை, நிரம்பிய தக்கன் தன் பெருவேள்வி நிரந்தரம் செய்த நிர்க்கண்டகனை, பரந்த தொல் புகழாள் உமை நங்கை பரவி ஏத்தி வழிபடப்பெற்ற கரங்கள் எட்டு உடைக் கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
[9]
எள்கல் இன்றி இமையவர் கோனை, ஈசனை, வழிபாடு செய்வாள் போல் உள்ளத்து உள்கி, உகந்து, உமை நங்கை வழிபடச் சென்று நின்றவா கண்டு, வெள்ளம் காட்டி வெருட்டிட, அஞ்சி வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட கள்ளக் கம்பனை, எங்கள் பிரானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
[10]
பெற்றம் ஏறு உகந்து ஏற வல்லானை, பெரிய எம்பெருமான் என்று எப்போதும் கற்றவர் பரவப்படுவானை, காணக் கண் அடியேன் பெற்றது என்று கொற்றவன், கம்பன், கூத்தன் எம்மானை, குளிர் பொழில்-திரு நாவல் ஆரூரன் நல்-தமிழ் இவை ஈர்-ஐந்தும் வல்லார், நன்நெறி(ய்) உலகு எய்துவர் தாமே .
[11]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.062   புற்றில் வாள் அரவு ஆர்த்த
பண் - தக்கேசி (திருக்கோலக்கா சத்தபுரீசுவரர் ஓசைகொடுத்தநாயகியம்மை)
புற்றில் வாள் அரவு ஆர்த்த பிரானை; பூதநாதனை; பாதமே தொழுவார் பற்று வான்துணை; எனக்கு எளி வந்த பாவநாசனை; மேவ(அ)ரியானை; முற்றலார் திரி புரம் ஒரு மூன்றும் பொன்ற, வென்றி மால்வரை அரி அம்பா, கொற்ற வில் அம் கை ஏந்திய கோனை; கோலக் காவினில் கண்டு கொண்டேனே .
[1]
அங்கம் ஆறும் மாமறை ஒரு நான்கும் ஆய நம்பனை, வேய் புரை தோளி தங்கு மா திரு உரு உடையானை, தழல் மதி(ச்) சடைமேல் புனைந்தானை, வெங் கண் ஆனையின் ஈர் உரியானை, விண் உளாரொடு மண் உளார் பரசும், கொங்கு உலாம் பொழில் குர வெறி கமழும் கோலக் காவினில் கண்டு கொண்டேனே.
[2]
பாட்டு அகத்து இசை ஆகி நின்றானை, பத்தர் சித்தம் பரிவு இனியானை, நாட்டு அகத்தேவர் செய்கை உளானை, நட்டம் ஆடியை, நம் பெருமானை, காட்டு அகத்து உறு புலி உரியானை, கண் ஓர் மூன்று உடை அண்ணலை, அடியேன் கோட்டகப் புனல் ஆர் செழுங் கழனிக் கோலக் காவினில் கண்டு கொண்டேனே.
[3]
ஆத்தம் என்று எனை ஆள் உகந்தானை, அமரர் நாதனை, குமரனைப் பயந்த வார்த் தயங்கிய முலை மடமானை வைத்து வான்மிசைக் கங்கையைக் கரந்த தீர்த்தனை, சிவனை, செழுந்தேனை, தில்லை அம்பலத்துள்-நிறைந்து ஆடும் கூத்தனை, குரு மா மணி தன்னை, கோலக் காவினில் கண்டு கொண்டேனே.
[4]
அன்று வந்து எனை அகலிடத்தவர் முன், ஆள் அது ஆக! என்று ஆவணம் காட்டி, நின்று வெண்ணெய் நல்லூர் மிசை ஒளித்த நித்திலத் திரள்-தொத்தினை; முத்திக்கு ஒன்றினான் தனை; உம்பர் பிரானை; உயரும் வல் அரணம் கெடச் சீறும் குன்ற வில்லியை மெல்லியல் உடனே கோலக் காவினில் கண்டு கொண்டேனே .
[5]
காற்றுத் தீப் புனல் ஆகி நின்றானை, கடவுளை, கொடு மால் விடையானை, நீற்றுத் தீ உரு ஆய் நிமிர்ந்தானை, நிரம்பு பல் கலையின் பொருளாலே போற்றித் தன் கழல் தொழுமவன் உயிரைப் போக்குவான் உயிர் நீக்கிடத் தாளால் கூற்றைத் தீங்கு செய் குரை கழலானை, கோலக் காவினில் கண்டு கொண்டேனே.
[6]
அன்று அயன் சிரம் அரிந்து, அதில் பலி கொண்டு, அமரருக்கு அருள் வெளிப்படுத்தானை; துன்று பைங்கழலில் சிலம்பு ஆர்த்த சோதியை; சுடர் போல் ஒளியானை; மின்தயங்கிய இடை மட மங்கை மேவும் ஈசனை; வாசம் மா முடிமேல் கொன்றை அம் சடைக் குழகனை; அழகு ஆர் கோலக் காவினில் கண்டு கொண்டேனே .
[7]
நாளும் இன் இசையால்-தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உலகவர் முன் தாளம் ஈந்து, அவன் பாடலுக்கு இரங்கும் தன்மையாளனை; என் மனக் கருத்தை; ஆளும் பூதங்கள் பாட, நின்று ஆடும் அங்கணன் தனை; எண் கணம் இறைஞ்சும் கோளிலிப் பெருங்கோயில் உள்ளானை; கோலக் காவினில் கண்டு கொண்டேனே.
[8]
அரக்கன் ஆற்றலை அழித்து அவன் பாட்டுக்கு அன்று இரங்கிய வென்றியினானை, பரக்கும் பார் அளித்து உண்டு உகந்தவர்கள் பரவியும் பணிதற்கு அரியானை, சிரக் கண் வாய் செவி மூக்கு உயர் காயம்-ஆகித் தீவினை தீர்த்த எம்மானை, குரக்கு இனம் குதி கொண்டு உகள் வயல் சூழ் கோலக் காவினில் கண்டு கொண்டேனே.
[9]
கோடரம் பயில் சடை உடைக் கரும்பை, கோலக் காவுள் எம்மானை, மெய்ம் மானப் பாடர் அம் குடி அடியவர் விரும்பப் பயிலும் நாவல் ஆரூரன்-வன்தொண்டன்- நாடு இரங்கி முன் அறியும் அந் நெறியால் நவின்ற பத்து இவை விளம்பிய மாந்தர் காடு அரங்கு என நடம் நவின்றான் பால் கதியும் எய்துவர்; பதி அவர்க்கு அதுவே .
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.063   மெய்யை முற்றப் பொடிப் பூசி
பண் - தக்கேசி (பொது -திருமுதுகுன்றம் )
மெய்யை முற்றப் பொடிப் பூசி ஒர் நம்பி, வேதம் நான்கும் விரித்து ஓதி ஒர் நம்பி, கையில் ஒர் வெண் மழு ஏந்தி ஒர் நம்பி, கண்ணும் மூன்றும் உடையாய் ஒரு நம்பி, செய்ய நம்பி, சிறு செஞ்சடை நம்பி, திரிபுரம் தீ எழச் செற்றது ஓர் வில்லால் எய்த நம்பி, என்னை ஆள் உடை நம்பி எழு பிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .
[1]
திங்கள் நம்பி, முடிமேல்; அடியார் பால் சிறந்த நம்பி; பிறந்த உயிர்க்கு எல்லாம் அம் கண் நம்பி; அருள் மால் விசும்பு ஆளும் அமரர் நம்பி; குமரன் முதல்-தேவர்- தங்கள் நம்பி; தவத்துக்கு ஒரு நம்பி; தாதை என்று உன் சரண் பணிந்து ஏத்தும் எங்கள் நம்பி; என்னை ஆள் உடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே.
[2]
வருந்த அன்று மதயானை உரித்த வழக்கு நம்பி, முழக்கும் கடல் நஞ்சம் அருந்தும் நம்பி, அமரர்க்கு அமுது ஈந்த அருள் என் நம்பி, பொருளால் வரு நட்டம் புரிந்த நம்பி, புரிநூல் உடை நம்பி, பொழுதும் விண்ணும் முழுதும் பல ஆகி இருந்த நம்பி, என்னை ஆள் உடை நம்பி எழு பிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே.
[3]
ஊறு நம்பி அமுதா; உயிர்க்கு எல்லாம் உரிய நம்பி; தெரியும் மறை அங்கம், கூறு நம்பி, முனிவர்க்கு; அருங்கூற்றைக் குமைத்த நம்பி; குமையாப் புலன் ஐந்தும் சீறு நம்பி; திரு வெள்ளடை நம்பி; செங்கண் வெள்ளைச் செழுங் கோட்டு எருது என்றும் ஏறு நம்பி; என்னை ஆள் உடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .
[4]
குற்ற நம்பி, குறுகார் எயில் மூன்றை, குலைத்த நம்பி, சிலையா வரை கையில் பற்று நம்பி, பரமானந்த வெள்ளம் பணிக்கும் நம்பி எனப் பாடுதல் அல்லால் மற்று நம்பி! உனக்கு என் செய வல்லேன்? மதியிலேன் படு வெந்துயர் எல்லாம் எற்று நம்பி, என்னை ஆள் உடை நம்பி எழு பிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே.
[5]
அரித்த நம்பி, அடி கை தொழுவார் நோய்; ஆண்ட நம்பி, முன்னை; ஈண்டு உலகங்கள் தெரித்த நம்பி; ஒரு சே உடை நம்பி; சில்பலிக்கு என்று அகம் தோறும் மெய் வேடம் தரித்த நம்பி; சமயங்களின் நம்பி; தக்கன் தன் வேள்வி புக்கு அன்று இமையோரை இரித்த நம்பி; என்னை ஆள் உடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே.
[6]
பின்னை நம்பும் புயத்தான் நெடுமாலும் பிரமனும் என்று இவர் நாடியும் காணா உன்னை நம்பி! ஒருவர்க்கு எய்தல் ஆமே, உலகு நம்பி உரை செய்யுமது அல்லால்? முன்னை நம்பி; பின்னும் வார் சடை நம்பி; முழுது இவை இத்தனையும் தொகுத்து ஆண்டது என்னை? நம்பி! எம்பிரான் ஆய நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .
[7]
சொல்லை நம்பி; பொருள் ஆய் நின்ற நம்பி; தோற்றம், ஈறு, முதல், ஆகிய நம்பி; வல்லை நம்பி, அடியார்க்கு அருள் செய்ய; வருந்தி நம்பி உனக்கு ஆட்செய கில்லார் அல்லல் நம்பி! படுகின்றது என்? நாடி அணங்கு ஒருபாகம் வைத்து, எண் கணம் போற்ற, இல்லம் நம்பி இடு பிச்சை கொள் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .
[8]
காண்டு, நம்பி கழல் சேவடி என்றும் கலந்து உனைக் காதலித்து ஆட் செய்கிற்பாரை ஆண்டு நம்பி அவர் முன்கதி சேர அருளும் நம்பி; குரு மாப் பிறை பாம்பைத் தீண்டு நம்பி; சென்னியில் கன்னி தங்கத் திருத்தும் நம்பி; பொய்ச் சமண் பொருள் ஆகி ஈண்டு நம்பி; இமையோர் தொழும் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.064   நீறு தாங்கிய திரு நுதலானை,
பண் - தக்கேசி (திருத்தினைநகர் (தீர்த்தனகிரி) திருநந்தீசுவரர் இளங்கொம்பம்மை)
நீறு தாங்கிய திரு நுதலானை, நெற்றிக் கண்ணனை, நிரை வளை மடந்தை கூறு தாங்கிய கொள்கையினானை, குற்றம் இ(ல்)லியை, கற்றை அம் சடை மேல் ஆறு தாங்கிய அழகனை, அமரர்க்கு அரிய சோதியை, வரிவரால் உகளும் சேறு தாங்கிய திருத் தினை நகருள் சிவக்கொழுந்தினை, சென்று அடை, மனனே!.
[1]
பிணி கொள் ஆக்கையில் பிறப்பு இறப்பு என்னும் இதனை நீக்கி, ஈசன் திருவடி இணைக்கு ஆள்- துணிய வேண்டிடில், சொல்லுவன்; கேள், நீ: அஞ்சல், நெஞ்சமே! வஞ்சர் வாழ் மதில் மூன்று அணி கொள் வெஞ்சிலையால் உகச் சீறும் ஐயன், வையகம் பரவி நின்று ஏத்தும் திணியும் வார் பொழில்-திருத் தினை நகருள் சிவக்கொழுந்தினை, சென்று அடை, மனனே! .
[2]
வடி கொள் கண் இணை மடந்தையர் தம்பால் மயல் அது உற்று, வஞ்சனைக்கு இடம் ஆகி, முடியுமா கருதேல்! எருது ஏறும் மூர்த்தியை, முதல் ஆய பிரானை, அடிகள்! என்று அடியார் தொழுது ஏத்தும் அப்பன், ஒப்பு இலா முலை உமை கோனை, செடி கொள் கான் மலி திருத் தினை நகருள் சிவக்கொழுந்தினை, சென்று அடை, மனனே! .
[3]
பாவமே புரிந்து, அகலிடம் தன்னில் பல பகர்ந்து, அலமந்து, உயிர் வாழ்க்கைக்கு ஆவ! என்று உழந்து அயர்ந்து வீழாதே, அண்ணல் தன் திறம் அறிவினால் கருதி; மாவின் ஈர் உரி உடை புனைந்தானை, மணியை, மைந்தனை, வானவர்க்கு அமுதை, தேவ தேவனை, திருத் தினை நகருள் சிவக் கொழுந்தினை, சென்று அடை, மனனே!.
[4]
ஒன்று அலா உயிர் வாழ்க்கையை நினைந்திட்டு, உடல் தளர்ந்து, அரு மா நிதி இயற்றி, என்றும் வாழல் ஆம், எமக்கு எனப் பேசும் இதுவும் பொய் எனவே நினை, உளமே! குன்று உலாவிய புயம் உடையானை, கூத்தனை, குலாவிக் குவலயத்தோர் சென்று எலாம் பயில் திருத் தினை நகருள் சிவக் கொழுந்தினை, சென்று அடை, மனனே! .
[5]
வேந்தராய், உலகு ஆண்டு, அறம் புரிந்து, வீற்றிருந்த இவ் உடல் இது தன்னைத் தேய்ந்து, இறந்து, வெந்துயர் உழந்திடும் இப் பொக்க வாழ்வினை விட்டிடு, நெஞ்சே! பாந்தள் அம் கையில் ஆட்டு உகந்தானை, பரமனை, கடல் சூர் தடிந்திட்ட சேந்தர் தாதையை, திருத் தினை நகருள் சிவக்கொழுந்தினை, சென்று அடை, மனனே!.
[6]
தன்னில் ஆசு அறு சித்தமும் இன்றி, தவம் முயன்று, அவம் ஆயின பேசி, பின்னல் ஆர் சடை கட்டி, என்பு அணிந்தால், பெரிதும் நீந்துவது அரிது; அது நிற்க; முன் எலாம் முழு முதல் என்று வானோர் மூர்த்தி ஆகிய முதலவன் தன்னை, செந்நெல் ஆர் வயல்-திருத் தினை நகருள் சிவக்கொழுந்தினை, சென்று அடை, மனனே! .
[7]
பரிந்த சுற்றமும், மற்று வன் துணையும், பலரும், கண்டு அழுது எழ உயிர் உடலைப் பிரிந்து போய் இது நிச்சயம் அறிந்தால், பேதை வாழ்வு எனும் பிணக்கினைத் தவிர்ந்து; கருந் தடங்கண்ணி பங்கனை, உயிரை, கால காலனை, கடவுளை, விரும்பி, செருந்தி பொன் மலர் திருத் தினை நகருள் சிவக்கொழுந்தினை, சென்று அடை, மனனே! .
[8]
நமை எலாம் பலர் இகழ்ந்து உரைப்பதன் முன், நன்மை ஒன்று இலாத் தேரர் புன் சமண் ஆம் சமயம் ஆகிய தவத்தினார் அவத்தத்-தன்மை விட்டொழி, நன்மையை வேண்டில்! உமை ஒர் கூறனை, ஏறு உகந்தானை, உம்பர் ஆதியை, எம்பெருமானை, சிமயம் ஆர் பொழில்-திருத் தினை நகருள் சிவக்கொழுந்தினை, சென்று அடை, மனனே! .
[9]
நீடு பொக்கையின் பிறவியைப் பழித்து, நீங்கல் ஆம் என்று மனத்தினைத் தெருட்டி, சேடு உலாம் பொழில்-திருத் தினை நகருள் சிவக்கொழுந்தின திருவடி இணை தான் நாடு எலாம் புகழ் நாவலூர் ஆளி நம்பி, வன் தொண்டன், ஊரன்-உரைத்த பாடல் ஆம் தமிழ் பத்து இவை வல்லார் முத்தி ஆவது பரகதிப் பயனே .
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.065   திருவும், வண்மையும், திண் திறல்
பண் - தக்கேசி (திருநின்றியூர் இலட்சுமிவரதர் உலகநாயகியம்மை)
திருவும், வண்மையும், திண் திறல் அரசும், சிலந்தியார் செய்த செய் பணிகண்டு- மருவு கோச்செங்கணான் தனக்கு அளித்த வார்த்தை கேட்டு நுன் மலர் அடி அடைந்தேன்- பெருகு பொன்னி வந்து உந்து பல் மணியைப் பிள்ளைப் பல்கணம் பண்ணையுள் நண்ணி, தெருவும் தெற்றியும் முற்றமும் பற்றி, திரட்டும் தென் திரு நின்றியூரானே! .
[1]
அணி கொள் ஆடை, அம் பூண், மணி மாலை, அமுது செய்த அமுதம், பெறு சண்டி; இணை கொள் ஏழ்-எழுநூறு இரும் பனுவல் ஈந்தவன் திரு நாவினுக்கு அரையன்; கணை கொள் கண்ணப்பன்; என்று இவர் பெற்ற காதல் இன் அருள் ஆதரித்து அடைந்தேன்- திணை கொள் செந்தமிழ் பைங்கிளி தெரியும் செல்வத் தென் திரு நின்றியூரானே! .
[2]
மொய்த்த சீர் முந்நூற்று அறுபது வேலி மூன்று நூறு வேதியரொடு நுனக்கு ஒத்த பொன் மணிக் கலசங்கள் ஏந்தி, ஓங்கும் நின்றியூர் என்று உனக்கு அளிப்ப, பத்தி செய்த அப் பரசுராமற்குப் பாதம் காட்டிய நீதி கண்டு அடைந்தேன்- சித்தர், வானவர், தானவர், வணங்கும் செல்வத் தென் திரு நின்றியூரானே! .
[3]
இரவி நீள் சுடர் எழுவதன் முன்னம் எழுந்து, தன் முலைக் கலசங்கள் ஏந்தி, சுரபி பால் சொரிந்து, ஆட்டி, நின் பாதம் தொடர்ந்த வார்த்தை திடம் படக் கேட்டு, பரவி உள்கி, வன் பாசத்தை அறுத்து, பரம! வந்து, நுன் பாதத்தை அடைந்தேன்- நிரவி நித்திலம், அத் தகு செம்பொன், அளிக்கும் தென் திரு நின்றியூரானே! .
[4]
வந்து ஓர் இந்திரன் வழிபட மகிழ்ந்து, வானநாடு நீ ஆள்க! என அருளி, சந்தி மூன்றிலும் தாபரம் நிறுத்திச் சகளி செய்து இறைஞ்சு அகத்தியர் தமக்குச் சிந்து மா மணி அணி திருப் பொதியில் சேர்வு நல்கிய செல்வம் கண்டு அடைந்தேன்- செந் தண் மா மலர்த் திருமகள் மருவும் செல்வத் தென் திரு நின்றியூரானே! .
[5]
காது பொத்தர் ஐக் கின்னரர், உழுவை, கடிக்கும் பன்னகம், பிடிப்ப(அ)ரும் சீயம், கோது இல் மா தவர் குழு உடன், கேட்பக் கோல ஆல் நிழல் கீழ் அறம் பகர; ஏதம் செய்தவர் எய்திய இன்பம் யானும் கேட்டு, நின் இணை அடி அடைந்தேன்- நீதி வேதியர் நிறை புகழ் உலகில் நிலவு தென் திரு நின்றியூரானே! .
[6]
கோடு நான்கு உடைக் குஞ்சரம் குலுங்க, நலம் கொள் பாதம் நின்று ஏத்திய பொழுதே பீடு விண் மிசைப் பெருமையும் பெற்ற பெற்றி கேட்டு நின் பொன்கழல் அடைந்தேன்- பேடை மஞ்ஞையும், பிணைகளின் கன்றும், பிள்ளைக்கிள்ளையும், எனப் பிறை நுதலார் நீடு மாடங்கள் மாளிகை தோறும் நிலவு தென் திரு நின்றியூரானே! .
[7]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.066   மறையவன்(ன்) ஒரு மாணி வந்து
பண் - தக்கேசி (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
மறையவன்(ன்) ஒரு மாணி வந்து அடைய, வாரம் ஆய், அவன் ஆர் உயிர் நிறுத்தக் கறை கொள் வேல் உடைக் காலனைக் காலால் கடந்த காரணம் கண்டு கண்டு, அடியேன், இறைவன், எம்பெருமான் என்று எப்போதும் ஏத்தி ஏத்தி நின்று அஞ்சலி செய்து, உன் அறை கொள் சேவடிக்கு அன்பொடும் அடைந்தேன்-ஆவடுதுறை ஆதி எம்மானே! .
[1]
தெருண்ட வாய் இடை நூல் கொண்டு சிலந்தி சித்திரப் பந்தர் சிக்கென இயற்ற, சுருண்ட செஞ்சடையாய்! அது தன்னைச் சோழன் ஆக்கிய தொடர்ச்சி கண்டு, அடியேன், புரண்டு வீழ்ந்து நின் பொன்மலர்ப் பாதம், போற்றி போற்றி! என்று அன்பொடு புலம்பி, அருண்டு, என் மேல்வினைக்கு அஞ்சி, வந்து அடைந்தேன்-ஆவடுதுறை ஆதி எம்மானே! .
[2]
திகழும் மால் அவன் ஆயிரம் மலரால் ஏத்துவான் ஒரு நீள் மலர் குறைய, புகழினால் அவன் கண் இடந்து இடலும், புரிந்து, சக்கரம் கொடுத்தல் கண்டு, அடியேன், திகழும் நின் திருப்பாதங்கள் பரவி, தேவதேவ! நின் திறம்பல் பிதற்றி, அகழும் வல்வினைக்கு அஞ்சி வந்து அடைந்தேன்-ஆவடுதுறை ஆதி எம்மானே!.
[3]
வீரத்தால் ஒரு வேடுவன் ஆகி, விசைத்து, ஒர் கேழலைத் துரந்து, சென்று, அணைந்து, போரைத் தான் விசயன் தனக்கு அன்பு ஆய்ப் புரிந்து, வான் படை கொடுத்தல் கண்டு, அடியேன், வாரத்தால் உன நாமங்கள் பரவி, வழிபட்டு, உன் திறமே நினைந்து, உருகி, ஆர்வத்தோடும் வந்து, அடி இணை அடைந்தேன்-ஆவடுதுறை ஆதி எம்மானே! .
[4]
ஒக்க முப்புரம் ஓங்கு எரி தூவ, உன்னை உன்னிய மூவர் நின் சரணம் புக்கு, மற்றவர் பொன்னுலகு ஆளப் புகழினால் அருள் ஈந்தமை அறிந்து, மிக்க நின் கழலே தொழுது, அரற்றி, வேதியா! ஆதி மூர்த்தி! நின் அரையில் அக்கு அணிந்த எம்மான்! உனை அடைந்தேன்-ஆவடுதுறை ஆதி எம்மானே!.
[5]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.067   ஊன் அங்கத்து உயிர்ப்பு ஆய்,
பண் - தக்கேசி (திருவலிவலம் மனத்துணைநாதர் மாழையங்கண்ணியம்மை)
ஊன் அங்கத்து உயிர்ப்பு ஆய், உலகு எல்லாம் ஓங்காரத்து உரு ஆகி நின்றானை; வானம் கைத்தவர்க்கும்(ம்) அளப்ப(அ)ரிய வள்ளலை; அடியார்கள் தம் உள்ளத் தேன், அங்கத்து அமுது, ஆகி, உள் ஊறும் தேசனை; நினைத்தற்கு இனியானை; மான் அம் கைத்தலத்து ஏந்த வல்லானை; வலி வலம் தனில் வந்து கண்டேனே.
[1]
பல் அடியார் பணிக்குப் பரிவானை, பாடி ஆடும் பத்தர்க்கு அன்பு உடையானை, செல் அடியே நெருக்கித் திறம்பாது சேர்ந்தவர்க்கே சித்தி முத்தி செய்வானை, நல் அடியார் மனத்து எய்ப்பினில் வைப்பை, நான் உறு குறை அறிந்து அருள் புரிவானை, வல் அடியார் மனத்து இச்சை உளானை, வலி வலம் தனில் வந்து கண்டேனே.
[2]
ஆழியனாய், அகன்றே, உயர்ந்தானை; ஆதி அந்தம் பணிவார்க்கு அணியானை; கூழையர் ஆகி, பொய்யே குடி ஓம்பி, குழைந்து, மெய் அடியார் குழுப் பெய்யும் வாழியர்க்கே வழுவா நெறி காட்டி மறுபிறப்பு என்னை மாசு அறுத்தானை; மாழை ஒண் கண் உமையை மகிழ்ந்தானை; வலி வலம் தனில் வந்து கண்டேனே.
[3]
நாத்தான் உன் திறமே திறம்பாது, நண்ணி அண்ணித்து, அமுதம் பொதிந்து ஊறும் ஆத்தானை, அடியேன் தனக்கு; என்றும் அளவு இறந்த பல்-தேவர்கள் போற்றும் சோத்தானை; சுடர் மூன்றிலும் ஒன்றி, துருவி மால் பிரமன்(ன்) அறியாத மாத்தானை; மாத்து எனக்கு வைத்தானை; வலி வலம் தனில் வந்து கண்டேனே .
[4]
நல் இசை ஞானசம்பந்தனும் நாவுக்கு-அரசரும் பாடிய நல்-தமிழ்மாலை சொல்லியவே சொல்லி ஏத்து உகப்பானை; தொண்டனேன் அறியாமை அறிந்து, கல் இயல் மனத்தைக் கசிவித்து, கழல் அடி காட்டி, என் களைகளை அறுக்கும் வல் இயல் வானவர் வணங்க நின்றானை; வலி வலம் தனில் வந்து கண்டேனே.
[5]
பாடுமாப் பாடிப் பணியும் ஆறு அறியேன்; பனுவுமா பனுவிப் பரவும் ஆறு அறியேன்; தேடுமா தேடித் திருத்தும் ஆறு அறியேன்; செல்லுமா செல்லச் செலுத்தும் ஆறு அறியேன்; கூடும் ஆறு எங்ஙனமோ? என்று கூறக் குறித்துக் காட்டிக் கொணர்ந்து எனை ஆண்டு, வாடி நீ வாளா வருந்தல்! என்பானை வலி வலம் தனில் வந்து கண்டேனே .
[6]
பந்தித்த வல் வினைப் பற்று அற, பிறவிப்-படுகடல் பரப்புத் தவிர்ப்பானை; சந்தித்த(த்) திறலால் பணி பூட்டித் தவத்தை ஈட்டிய தம் அடியார்க்கு, சிந்தித்தற்கு எளிது ஆய், திருப்பாதம், சிவலோகம் திறந்து ஏற்ற வல்லானை; வந்திப்பார் தம் மனத்தின் உள்ளானை; வலி வலம் தனில் வந்து கண்டேனே .
[7]
எவ் எவர் தேவர் இருடிகள் மன்னர் எண் இறந்தார்கள் மற்று எங்கும் நின்று ஏத்த, அவ் அவர் வேண்டியதே அருள் செய்து, அடைந்தவர்க்கே இடம் ஆகி நின்றானை; இவ் அவர் கருணை எம் கற்பகக் கடலை; எம்பெருமான், அருளாய்! என்ற பின்னை, வவ்வி என் ஆவி மனம் கலந்தானை; வலி வலம் தனில் வந்து கண்டேனே .
[8]
திரியும் முப்புரம் செற்றதும், குற்றத் திறல் அரக்கனைச் செறுத்ததும், மற்றைப் பெரிய நஞ்சு அமுது உண்டதும், முற்றும் பின்னை ஆய் முன்னமே முளைத்தானை; அரிய நால் மறை அந்தணர் ஓவாது அடி பணிந்து அறிதற்கு அரியானை; வரையின் பாவை மணாளன், எம்மானை; வலி வலம் தனில் வந்து கண்டேனே.
[9]
ஏன்ற அந்தணன் தலையினை அறுத்து, நிறைக்க மால் உதிரத்தினை ஏற்று, தோன்று தோள்மிசைக் களேபரம் தன்னைச் சுமந்த மா விரதத்த கங்காளன்; சான்று காட்டுதற்கு அரியவன்; எளியவன்தன்னை; தன் நிலாம் மனத்தார்க்கு மான்று சென்று அணையாதவன் தன்னை; வலி வலம் தனில் வந்து கண்டேனே.
[10]
கலி வலம் கெட ஆர் அழல் ஓம்பும்-கற்ற நால்மறை முற்று அனல் ஓம்பும் வலி வலம் தனில் வந்து கண்டு, அடியேன் மன்னும் நாவல் ஆரூரன்-வன்தொண்டன்- ஒலி கொள் இன் இசைச் செந்தமிழ் பத்தும் உள்ளத்தால் உகந்து ஏத்த வல்லார், போய், மெலிவு இல் வான் உலகத்தவர் ஏத்த, விரும்பி விண்ணுலகு எய்துவர் தாமே .
[11]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.068   செம்பொன் மேனி வெண் நீறு
பண் - தக்கேசி (திருநள்ளாறு தெர்ப்பாரணியயீசுவரர் போகமார்த்தபூண்முலையம்மை)
செம்பொன் மேனி வெண் நீறு அணிவானை, கரிய கண்டனை, மால் அயன் காணாச் சம்புவை, தழல் அங்கையினானை, சாமவேதனை, தன் ஒப்பு இலானை, கும்ப மாகரியின்(ந்) உரியானை, கோவின் மேல் வரும் கோவினை, எங்கள் நம்பனை, நள்ளாறனை, அமுதை, நாயினேன் மறந்து என் நினைக்கேனே? .
[1]
விரை செய் மா மலர்க் கொன்றையினானை; வேத கீதனை; மிகச் சிறந்து உருகிப் பரசுவார் வினைப் பற்று அறுப்பானை; பாலொடு ஆன் அஞ்சும் ஆட வல்லானை; குரை கடல், வரை, ஏழ், உலகு உடைய கோனை; ஞானக் கொழுந்தினை; தொல்லை நரை விடை உடை நள்ளாறனை; அமுதை; நாயினேன் மறந்து என் நினைக்கேனே? .
[2]
பூவில் வாசத்தை, பொன்னினை, மணியை, புவியை, காற்றினை, புனல், அனல், வெளியை, சேவின் மேல் வரும் செல்வனை, சிவனை, தேவ தேவனை, தித்திக்கும் தேனை, காவி அம் கண்ணி பங்கனை, கங்கைச் சடையனை, காமரத்து இசை பாட நாவில் ஊறும் நள்ளாறனை, அமுதை, நாயினேன் மறந்து என் நினைக்கேனே? .
[3]
தஞ்சம் என்று தன் தாள் அது அடைந்த பாலன் மேல் வந்த காலனை, உருள நெஞ்சில் ஓர் உதை கொண்ட பிரானை; நினைப்பவர் மனம் நீங்க கில்லானை; விஞ்சை வானவர், தானவர், கூடிக் கடைந்த வேலையுள் மிக்கு எழுந்து எரியும் நஞ்சம் உண்ட நள்ளாறனை; அமுதை; நாயினேன் மறந்து என் நினைக்கேனே? .
[4]
மங்கை பங்கனை, மாசு இலா மணியை, வான நாடனை, ஏனமோடு அன்னம் எங்கும் நாடியும் காண்பு அரியானை, ஏழையேற்கு எளி வந்த பிரானை, அங்கம் நால்மறையால் நிறைகின்ற அந்தணாளர் அடி அது போற்றும் நங்கள் கோனை, நள்ளாறனை, அமுதை, நாயினேன் மறந்து என் நினைக்கேனே? .
[5]
கற்பகத்தினை, கனக மால் வரையை, காம கோபனை, கண் நுதலானை, சொல் பதப் பொருள் இருள் அறுத்து அருளும் தூய சோதியை, வெண்ணெய் நல்லூரில் அற்புதப் பழ ஆவணம் காட்டி அடியனா என்னை ஆள் அது கொண்ட நல் பதத்தை, நள்ளாறனை, அமுதை, நாயினேன் மறந்து என் நினைக்கேனே? .
[6]
மறவனை, அன்று பன்றிப் பின் சென்ற மாயனை, நால்வர்க்கு ஆலின் கீழ் உரைத்த அறவனை, அமரர்க்கு அரியானை, அமரர் சேனைக்கு நாயகன் ஆன குறவர் மங்கை தன் கேள்வனைப் பெற்ற கோனை, நான் செய்த குற்றங்கள் பொறுக்கும் நறை விரி(ய்)யும் நள்ளாறனை, அமுதை, நாயினேன் மறந்து என் நினைக்கேனே? .
[7]
மாதினுக்கு உடம்பு இடம் கொடுத்தானை, மணியினை, பணிவார் வினை கெடுக்கும் வேதனை, வேத வேள்வியர் வணங்கும் விமலனை, அடியேற்கு எளிவந்த தூதனை, தன்னைத் தோழமை அருளித் தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும் நாதனை, நள்ளாறனை, அமுதை, நாயினேன் மறந்து என் நினைக்கேனே? .
[8]
இலங்கை வேந்தன், எழில் திகழ் கயிலை எடுப்ப, ஆங்கு இமவான் மகள் அஞ்ச, துலங்கு நீள் முடி ஒருபதும் தோள்கள்-இருபதும் நெரித்து, இன் இசை கேட்டு, வலங்கை வாளொடு நாமமும் கொடுத்த வள்ளலை; பிள்ளை மாமதிச் சடை மேல் நலம் கொள் சோதி நள்ளாறனை; அமுதை; நாயினேன் மறந்து என் நினைக்கேனே?.
[9]
செறிந்த சோலைகள் சூழ்ந்த நள்ளாற்று எம் சிவனை, நாவலூர்ச் சிங்கடி தந்தை, மறந்தும் நான் மற்றும் நினைப்பது ஏது? என்று வனப் பகை அப்பன், ஊரன், வன்தொண்டன்- சிறந்த மாலைகள் அஞ்சினோடு அஞ்சும் சிந்தையுள் உருகிச் செப்ப வல்லார்க்கு இறந்து போக்கு இல்லை, வரவு இல்லை ஆகி இன்ப வெள்ளத்துள் இருப்பர்கள், இனிதே .
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.069   திருவும் மெய்ப் பொருளும் செல்வமும்,
பண் - தக்கேசி (வடதிருமுல்லைவாயில் மாசிலாமணியீசுவரர் கொடியிடைநாயகியம்மை)
திருவும் மெய்ப் பொருளும் செல்வமும், எனக்கு உன் சீர் உடைக் கழல்கள் என்று எண்ணி, ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும், ஊடியும், உறைப்பனாய்த் திரிவேன்; முருகு அமர் சோலை சூழ் திரு முல்லை-வாயிலாய்! வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! .
[1]
கூடிய இலயம் சதி பிழையாமை, கொடி இடை உமை அவள் காண, ஆடிய அழகா! அருமறைப் பொருளே! அங்கணா! எங்கு உற்றாய்? என்று தேடிய வானோர் சேர் திரு முல்லை-வாயிலாய்! திருப் புகழ் விருப்பால் பாடிய அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே!.
[2]
விண் பணிந்து ஏத்தும் வேதியா! மாதர் வெருவிட, வேழம் அன்று உரித்தாய்! செண்பகச் சோலை சூழ் திரு முல்லை-வாயிலாய்! தேவர் தம் அரசே! தண் பொழில் ஒற்றி மா நகர் உடையாய்! சங்கிலிக்கா என் கண் கொண்ட பண்ப! நின் அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! .
[3]
பொன் நலம் கழனிப் புது விரை மருவி, பொறி வரிவண்டு இசை பாட, அம் நலம் கமலத் தவிசின் மேல் உறங்கும் அலவன் வந்து உலவிட, அள்ளல் செந்நெல் அம் கழனி சூழ் திரு முல்லை-வாயிலாய்! திருப் புகழ் விருப்பால் பன்னல் அம் தமிழால் பாடுவேற்கு அருளாய், பாசுபதா! பரஞ்சுடரே! .
[4]
சந்தனவேரும், கார் அகில் குறடும், தண் மயில் பீலியும், கரியின் தந்தமும், தரளக் குவைகளும், பவளக்-கொடிகளும், சுமந்து கொண்டு உந்தி வந்து இழி பாலி வடகரை முல்லை-வாயிலாய்! மாசு இலா மணியே! பந்தனை கெடுத்து என் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! .
[5]
மற்று நான் பெற்றது ஆர் பெற வல்லார்? வள்ளலே! கள்ளமே பேசிக் குற்றமே செயினும், குணம் எனக் கொள்ளும் கொள்கையால் மிகை பல செய்தேன்; செற்று மீது ஓடும் திரிபுரம் எரித்த திரு முல்லை வாயிலாய்! அடியேன் பற்று இலேன்; உற்ற படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! .
[6]
மணி கெழு செவ்வாய், வெண்நகை, கரிய வார்குழல், மா மயில் சாயல், அணி கெழு கொங்கை, அம் கயல் கண்ணார் அரு நடம் ஆடல் அறாத திணி பொழில் தழுவு திரு முல்லை வாயில் செல்வனே! எல்லியும் பகலும் பணி அது செய்வேன் படு துயர் களையாய்; பாசுபதா! பரஞ்சுடரே! .
[7]
நம்பனே! அன்று வெண்ணெய் நல்லூரில் நாயினேன் தன்னை ஆட்கொண்ட சம்புவே! உம்பரார் தொழுது ஏத்தும் தடங்கடல் நஞ்சு உண்ட கண்டா! செம்பொன் மாளிகை சூழ் திரு முல்லை வாயில்-தேடி, யான் திரிதர்வேன், கண்ட பைம்பொனே! அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! .
[8]
மட்டு உலாம் மலர் கொண்டு அடி இணை வணங்கும் மாணி தன்மேல் மதியாதே கட்டுவான் வந்த காலனை, மாளக் காலினால் ஆர் உயிர் செகுத்த சிட்டனே! செல்வத் திரு முல்லை வாயில் செல்வனே! செழுமறை பகர்ந்த பட்டனே! அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே!.
[9]
சொல்ல(அ)ரும் புகழான் தொண்டைமான் களிற்றை சூழ் கொடி முல்லையால் கட்டிட்டு, எல்லை இல் இன்பம் அவன் பெற வெளிப்பட்டு, அருளிய இறைவனே! என்றும் நல்லவர் பரவும் திரு முல்லை வாயில் நாதனே! நரை விடை ஏறீ! பல் கலைப் பொருளே! படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! .
[10]
விரை தரு மலர் மேல் அயனொடு மாலும் வெருவிட நீண்ட எம்மானை, திரை தரு புனல் சூழ் திரு முல்லை வாயில் செல்வனை, நாவல் ஆரூரன் உரை தரு மாலை ஓர் அஞ்சினோடு அஞ்சும் உள் குளிர்ந்து ஏத்த வல்லார்கள், நரை திரை மூப்பும் நடலையும் இன்றி நண்ணுவர், விண்ணவர்க்கு அரசே .
[11]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.070   கங்கை வார்சடையாய்! கணநாதா! காலகாலனே!
பண் - தக்கேசி (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
கங்கை வார்சடையாய்! கணநாதா! காலகாலனே! காமனுக்கு அனலே! பொங்கு மாகடல் விடம் மிடற்றானே! பூதநாதனே! புண்ணியா! புனிதா! செங்கண் மால்விடையாய்! தெளி தேனே! தீர்த்தனே! திரு ஆவடுதுறையுள் அங்கணா! எனை, அஞ்சல்! என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!
[1]
மண்ணின் மேல் மயங்கிக் கிடப்பேனை வலிய வந்து என்னை ஆண்டுகொண்டானே! கண் இலேன்; உடம்பில்(ல்) அடு நோயால் கருத்து அழிந்து, உனக்கே பொறை ஆனேன்; தெண் நிலா எறிக்கும் சடையானே! தேவனே! திரு ஆவடுதுறையுள் அண்ணலே! எனை, அஞ்சல்! என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!
[2]
ஒப்பு இலாமுலையாள் ஒருபாகா! உத்தமா! மத்தம் ஆர் தரு சடையாய்! முப்புரங்களைத் தீ வளைத்து அங்கே மூவருக்கு அருள் செய்ய வல்லானே! செப்ப ஆல் நிழல் கீழ் இருந்து அருளும் செல்வனே! திரு ஆவடுதுறையுள் அப்பனே! எனை, அஞ்சல்! என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!
[3]
கொதியினால் வரு காளி தன் கோபம் குறைய ஆடிய கூத்து உடையானே! மதி இலேன்; உடம்பில்(ல்) அடு நோயால் மயங்கினேன்; மணியே! மணவாளா! விதியினால் இமையோர் தொழுது ஏத்தும் விகிர்தனே! திரு ஆவடுதுறையுள் அதிபனே! எனை, அஞ்சல்! என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!
[4]
வந்த வாள் அரக்கன் வலி தொலைத்து வாழும் நாள் கொடுத்தாய்! வழி முதலே! வெந்த வெண் பொடிப் பூச வல்லானே! வேடனாய் விசயற்கு அருள் புரிந்த இந்துசேகரனே! இமையோர் சீர் ஈசனே! திரு ஆவடுதுறையுள் அந்தணா! எனை, அஞ்சல்! என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!
[5]
குறைவு இலா நிறைவே! குணக்குன்றே! கூத்தனே! குழைக் காது உடையானே! உறவு இலேன், உனை அன்றி; மற்று அடியேன் ஒரு பிழை பொறுத்தால் இழிவு உண்டே? சிறை வண்டு ஆர் பொழில் சூழ் திரு ஆரூர்ச் செம்பொனே! திரு ஆவடுதுறையுள் அறவனே! எனை, அஞ்சல்! என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!
[6]
வெய்ய மா கரி ஈர் உரியானே! வேங்கை ஆடையினாய்! விதி முதலே! மெய்யனே! அடல் ஆழி அன்று அரிதான் வேண்ட, நீ கொடுத்து அருள்புரி விகிர்தா! செய்ய மேனியனே! திகழ் ஒளியே! செங்கணா! திரு ஆவடுதுறையுள் ஐயனே! எனை, அஞ்சல்! என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!
[7]
கோது இலா அமுதே! அருள் பெருகு கோலமே! இமையோர் தொழு கோவே! பாதி மாது ஒருகூறு உடையானே! பசுபதீ! பரமா! பரமேட்டீ! தீது இலா மலையே! திரு அருள் சேர் சேவகா! திரு ஆவடுதுறையுள் ஆதியே! எனை, அஞ்சல்! என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!
[8]
வான நாடனே! வழித் துணை மருந்தே! மாசு இலா மணியே! மறைப்பொருளே! ஏன மா எயிறு, ஆமையும், எலும்பும், ஈடு தாங்கிய மார்பு உடையானே! தேன் நெய் பால் தயிர் ஆட்டு உகந்தானே! தேவனே! திரு ஆவடுதுறையுள் ஆனையே! எனை, அஞ்சல்! என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!
[9]
வெண்தலை, பிறை, கொன்றையும், அரவும், வேரி மத்தமும், விரவி முன் முடித்த இண்டை மா மலர்ச் செஞ்சடையானை; ஈசனை; திரு ஆவடுதுறையுள் அண்டவாணனை; சிங்கடி அப்பன்-அணுக்க வன் தொண்டன்-ஆர்வத்தால் உரைத்த தண் தமிழ் மலர் பத்தும் வல்லார்கள் சாதலும் பிறப்பும்(ம்) அறுப்பாரே.
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.071   யாழைப் பழித் தன்ன மொழி
பண் - காந்தாரம் (திருமறைக்காடு (வேதாரண்யம்) மறைக்காட்டீசுவரர் யாழைப்பழித்தநாயகி)
யாழைப் பழித் தன்ன மொழி மங்கை ஒருபங்கன், பேழைச் சடை முடி மேல் பிறை வைத்தான், இடம் பேணில் தாழைப் பொழில் ஊடே சென்று பூழைத்தலை நுழைந்து வாழைக்கனி கூழைக்குரங்கு உண்ணும் மறைக்காடே.
[1]
சிகரத்து இடை இள வெண்பிறை வைத்தான் இடம், தெரியில் முகரத்து இடை முத்தின்(ன்) ஒளி பவளத்திரள், ஓதம், தகரத்து இடை தாழைத்திரள் ஞாழல்-திரள் நீழல், மகரத்தொடு சுறவம், கொணர்ந்து எற்றும் மறைக்காடே.
[2]
அங்கங்களும் மறை நான்கு உடன் விரித்தான் இடம் அறிந்தோம் தெங்கங்களும் நெடும் பெண்ணையும் பழம் வீழ் மணல் படப்பை, சங்கங்களும் இலங்கு இப்பியும் வலம்புரிகளும் இடறி, வங்கங்களும் உயர் கூம்பொடு வணங்கும் மறைக்காடே.
[3]
நரை விரவிய மயிர் தன்னொடு பஞ்ச(வ்) வடி மார்பன், உரை விரவிய உத்தமன், இடம் உணரல்(ல்) உறு, மனமே! குரை விரவிய குலை சேகரக் கொண்டல்-தலை விண்ட வரை புரைவன திரை பொருது இழிந்து எற்றும் மறைக்காடே.
[4]
சங்கைப் பட நினையாது எழு, நெஞ்சே, தொழுது ஏத்த! கங்கைச் சடைமுடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை அங்கக் கடல் அரு மா மணி உந்திக் கரைக்கு ஏற்ற, வங்கத்தொடு சுறவம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே.
[5]
அடல் விடையினன், மழுவாளினன், அலரால் அணி கொன்றைப் படரும் சடைமுடி உடையவர்க்கு இடம் ஆவது பரவைக்- கடல் இடை இடை கழி அருகினில் கடி நாறு தண் கைதை மடல் இடை இடை வெண்குருகு எழு மணிநீர் மறைக்காடே.
[6]
முளை வளர் இளமதி உடையவன், முன் செய்த வல்வினைகள்- களை களைந்து எனை ஆளல்(ல்) உறு கண்டன், இடம் செந்நெல் வளை விளைவயல் கயல் பாய்தரு குண, வார் மணல், கடல் வாய் வளை வளையொடு சலஞ்சலம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே.
[7]
நலம் பெரியன, சுரும்பு ஆர்ந்தன, நம்கோன் இடம் அறிந்தோம்; கலம் பெரியன சாரும் கடல் கரை பொருது இழி கங்கைச்- சலம் புரி சடைமுடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை வலம் புரியொடு சலஞ்சலம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே.
[8]
குண்டாடியும் சமண் ஆடியும் குற்று உடுக்கையர் தாமும் கண்டார் கண்ட காரணம்(ம்) அவை கருதாது கைதொழுமின்- எண் தோளினன், முக்கண்ணினன், ஏழ் இசையினன், அறுகால் வண்டு ஆடு தண் பொழில் சூழ்ந்து எழு மணிநீர் மறைக்காடே!
[9]
பார் ஊர் பல புடை சூழ் வளவயல் நாவலர் வேந்தன் வார் ஊர் வன முலையாள் உமை பங்கன் மறைக்காட்டை ஆரூரன தமிழ்மாலைகள் பாடும்(ம்) அடித்தொண்டர் நீர் ஊர் தரு நிலனோடு உயர் புகழ் ஆகுவர், தாமே.
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.072   எனக்கு இனித் தினைத்தனைப் புகல்
பண் - காந்தாரம் (திருவலம்புரம் வலம்புரநாதர் வடுவகிர்க்கண்ணம்மை)
எனக்கு இனித் தினைத்தனைப் புகல் இடம் அறிந்தேன்; பனைக் கனி பழம் படும் பரவையின் கரை மேல் எனக்கு இனியவன், தமர்க்கு இனியவன், எழுமையும் மனக்கு இனியவன் தனது இடம் வலம்புரமே.
[1]
புரம் அவை எரிதர வளைந்த வில்லினன், அவன்; மர உரி புலி அதள் அரைமிசை மருவினன்; அர உரி இரந்தவன், இரந்து உண விரும்பி நின்று; இரவு எரி ஆடி தன் இடம் வலம்புரமே.
[2]
நீறு அணி மேனியன், நெருப்பு உமிழ் அரவினன், கூறு அணி கொடுமழு ஏந்தி(ய) ஒர் கையினன், ஆறு அணி அவிர்சடை அழல் வளர் மழலை வெள்- ஏறு அணி அடிகள் தம் இடம் வலம்புரமே.
[3]
கொங்கு அணை சுரும்பு உண, நெருங்கிய குளிர் இளந் தெங்கொடு பனை பழம் படும் இடம்; தேவர்கள் தங்கிடும் இடம்; தடங்கடல்-திரை புடைதர எங்களது அடிகள் நல் இடம் வலம்புரமே.
[4]
கொடு மழு விரகினன், கொலை மலி சிலையினன், நெடு மதில் சிறுமையின் நிரவ வல்லவன், இடம்; படு மணி முத்தமும் பவளமும் மிகச் சுமந்து இடு மணல் அடை கரை இடம் வலம்புரமே.
[5]
கருங்கடக் களிற்று உரிக் கடவுளது இடம்; கயல் நெருங்கிய நெடும் பெ(ண்)ணை அடும்பொடு விரவிய மருங்கொடு, வலம்புரி சலஞ்சலம் மணம் புணர்ந்து இருங்கடல் அணைகரை இடம் வலம்புரமே.
[6]
நரி புரி காடு அரங்கா நடம் ஆடுவர், வரி புரி பாட நின்று ஆடும் எம்மான், இடம்; புரி சுரி வரி குழல் அரிவை ஒர்பால் மகிழ்ந்து எரி எரி ஆடி தன் இடம் வலம்புரமே.
[7]
பாறு அணி முடைதலை கலன் என மருவிய, நீறு அணி, நிமிர்சடை முடியினன்; நிலவிய மாறு அணி வரு திரை வயல் அணி பொழிலது, ஏறு உடை அடிகள் தம் இடம் வலம்புரமே.
[8]
சடசட விடு பெ(ண்)ணை பழம் படும் இட வகை; பட வடகத்தொடு பல கலந்து உலவிய கடை கடை பலி திரி கபாலிதன் இடம் அது; இடி கரை மணல் அடை இடம் வலம்புரமே.
[9]
குண்டிகைப் படப்பினில் விடக்கினை ஒழித்தவர் கண்டவர், கண்டு அடி வீழ்ந்தவர், கனை கழல் தண்டு உடைத் தண்டிதன் இனம் உடை அர உடன் எண் திசைக்கு ஒரு சுடர் இடம் வலம்புரமே.
[10]
வரும் கலமும் பல பேணுதல், கருங்கடல், இருங் குலப் பிறப்பர் தம் இடம் வலம்புரத்தினை, அருங் குலத்து அருந்தமிழ் ஊரன்-வன்தொண்டன்-சொல் பெருங் குலத்தவரொடு பிதற்றுதல் பெருமையே.
[11]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.073   கரையும், கடலும், மலையும், காலையும்,
பண் - காந்தாரம் (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
கரையும், கடலும், மலையும், காலையும், மாலையும், எல்லாம் உரையில் விரவி வருவான்; ஒருவன்; உருத்திரலோகன்; வரையின் மடமகள் கேள்வன்; வானவர் தானவர்க்கு எல்லாம் அரையன்; இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்!
[1]
தனியன் என்று எள்கி அறியேன்; தம்மைப் பெரிதும் உகப்பன்; முனிபவர் தம்மை முனிவன்; முகம் பல பேசி மொழியேன்; கனிகள் பல உடைச் சோலைக் காய்க்குலை ஈன்ற கமுகின் இனியன் இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்!
[2]
சொல்லில் குலா அன்றிச் சொல்லேன்; தொடர்ந்தவர்க்கும் துணை அல்லேன்; கல்லில் வலிய மனத்தேன்; கற்ற பெரும் புலவாணர் அல்லல் பெரிதும் அறுப்பான், அருமறை ஆறு அங்கம் ஓதும் எல்லை, இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்!
[3]
நெறியும், அறிவும், செறிவும், நீதியும், நான் மிகப் பொல்லேன்; மிறையும் தறியும் உகப்பன்; வேண்டிற்றுச் செய்து திரிவேன்; பிறையும் அரவும் புனலும் பிறங்கிய செஞ்சடை வைத்த இறைவன் இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்!
[4]
நீதியில் ஒன்றும் வழுவேன்; நிட்கண்டகம் செய்து வாழ்வேன்; வேதியர் தம்மை வெகுளேன்; வெகுண்டவர்க்கும் துணை ஆகேன்; சோதியில் சோதி எம்மானை, சுண்ண வெண் நீறு அணிந்திட்ட ஆதி, இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்!
[5]
அருத்தம் பெரிதும் உகப்பேன்; அலவலையேன்; அலந்தார்கள் ஒருத்தர்க்கு உதவியேன் அல்லேன்; உற்றவர்க்குத் துணை அல்லேன்; பொருத்த மேல் ஒன்றும் இலாதேன்; புற்று எடுத்திட்டு இடம் கொண்ட அருத்தன் இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்!
[6]
சந்தம் பல அறுக்கில்லேன்; சார்ந்தவர் தம் அடிச் சாரேன்; முந்திப் பொரு விடை ஏறி மூ உலகும் திரிவானே, கந்தம் கமழ் கொன்றை மாலைக் கண்ணியன், விண்ணவர் ஏத்தும் எந்தை, இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்!
[7]
நெண்டிக் கொண்டேயும் கிலாய்ப்பன்; நிச்சயமே; இது திண்ணம்; மிண்டர்க்கு மிண்டு அலால் பேசேன்; மெய்ப்பொருள் அன்றி உணரேன்; பண்டு அங்கு இலங்கையர் கோனைப் பருவரைக் கீழ் அடர்த்திட்ட அண்டன் இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்!
[8]
நமர், பிறர், என்பது அறியேன்; நான் கண்டதே கண்டு வாழ்வேன்; தமரம் பெரிதும் உகப்பன்; தக்க ஆறு ஒன்றும் இலாதேன்; குமரன், திருமால், பிரமன் கூடிய தேவர் வணங்கும் அமரன் இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்!
[9]
ஆசை பல அறுக்கில்லேன்; ஆரையும் அன்றி உரைப்பேன்; பேசில் சழக்கு அலால் பேசேன்; பிழைப்பு உடையேன், மனம் தன்னால்; ஓசை பெரிதும் உகப்பேன்; ஒலி கடல் நஞ்சு அமுது உண்ட ஈசன் இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்!
[10]
எந்தை இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? என்று சிந்தை செயும் திறம் வல்லான், திரு மருவும் திரள் தோளான், மந்த முழவம் இயம்பும் வளவயல் நாவல் ஆரூரன் சந்தம் இசையொடும் வல்லார் தாம் புகழ் எய்துவர் தாமே.
[11]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.074   மின்னும் மா மேகங்கள் பொழிந்து
பண் - காந்தாரம் (திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் )
மின்னும் மா மேகங்கள் பொழிந்து இழிந்த(அ)ருவி வெடிபடக் கரையொடும் திரை கொணர்ந்து எற்றும் அன்னம் ஆம் காவிரி அகன் கரை உறைவார்; அடி இணை தொழுது எழும் அன்பர் ஆம் அடியார் சொன்ன ஆறு அறிவார்; துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன் என்னை, நான் மறக்கும் ஆறு? எம் பெருமானை, என் உடம்பு அடும் பிணி இடர் கெடுத்தானை .
[1]
கூடும் ஆறு உள்ளன கூடியும், கோத்தும், கொய் புன ஏனலோடு ஐவனம் சிதறி, மாடு மா கோங்கமே மருதமே பொருது, மலை எனக் குலைகளை மறிக்கும் ஆறு உந்தி, ஓடு மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன் பாடும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, பழவினை உள்ளன பற்று அறுத்தானை.
[2]
கொல்லும் மால் யானையின் கொம்பொடு வம்பு ஆர் கொழுங் கனிச் செழும் பயன் கொண்டு, கூட்டு எய்தி, புல்கியும், தாழ்ந்தும், போந்து தவம் செய்யும் போகரும் யோகரும் புலரிவாய் மூழ்கச் செல்லும் மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன் சொல்லும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, தொடர்ந்து அடும் கடும் பிணித் தொடர்வு அறுத்தானை .
[3]
பொறியும் மா சந்தனத் துண்டமோடு அகிலும் பொழிந்து, இழிந்து, அருவிகள் புன்புலம் கவர,
கறியும் மா மிளகொடு கதலியும் உந்தி, கடல் உற விளைப்பதே கருதி, தன் கை போய்
எறியும் மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன்
அறியும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, அருவினை உள்ளன ஆசு அறுத்தானை .
[4]
பொழிந்து இழி மும்மதக் களிற்றின மருப்பும், பொன்மலர் வேங்கையின் நல் மலர் உந்தி, இழிந்து இழிந்து, அருவிகள் கடும் புனல் ஈண்டி, எண் திசையோர்களும் ஆட வந்து இங்கே சுழிந்து இழி காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன் ஒழிந்திலேன், பிதற்றும் ஆறு; எம்பெருமானை, உற்ற நோய் இற்றையே உற ஒழித்தானை .
[5]
புகழும் மா சந்தனத் துண்டமோடு அகிலும் பொன்மணி வரன்றியும், நல் மலர் உந்தி, அகழும் மா அருங் கரை வளம் படப் பெருகி, ஆடுவார் பாவம் தீர்த்து, அஞ்சனம் அலம்பி, திகழும் மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன் இகழும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, இழித்த நோய் இம்மையே ஒழிக்க வல்லானை .
ஊரும் மா தேசமே மனம் உகந்து, உள்ளி, புள் இனம் பல படிந்து ஒண் கரை உகள, காரும் மா கருங்கடல் காண்பதே கருத்து ஆய், கவரி மா மயிர் சுமந்து, ஒண் பளிங்கு இடறி, தேரும் மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன் ஆரும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, அம்மை நோய் இம்மையே ஆசு அறுத்தானை .
[8]
புலங்களை வளம்படப் போக்கு அறப் பெருகி, பொன்களே சுமந்து, எங்கும் பூசல் செய்து ஆர்ப்ப, இலங்கும் ஆர் முத்தினோடு இனமணி இடறி, இருகரைப் பெரு மரம் பீழந்து கொண்டு எற்றி, கலங்கு மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன் விலங்கும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, மேலை நோய் இம்மையே வீடு வித்தானை .
[9]
மங்கை ஓர்கூறு உகந்து, ஏறு உகந்து ஏறி, மாறலார் திரிபுரம் நீறு எழச் செற்ற அம் கையான் கழல் அடி அன்றி, மற்று அறியான்-அடியவர்க்கு அடியவன், தொழுவன், ஆரூரன்- கங்கை ஆர் காவிரித் துருத்தியார் வேள்விக்-குடி உளார், அடிகளைச் சேர்த்திய பாடல் தம் கையால்-தொழுது, தம் நாவின் மலர் கொள்வார் தவநெறி சென்று அமருலகம் ஆள்பவரே .
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.075   மறைகள் ஆயின நான்கும், மற்று
பண் - காந்தாரம் (திருவானைக்கா சம்புகேசுவரர் அகிலாண்டநாயகியம்மை)
மறைகள் ஆயின நான்கும், மற்று உள பொருள்களும், எல்லாத்- துறையும், தோத்திரத்து இறையும், தொன்மையும், நன்மையும், ஆய அறையும் பூம்புனல் ஆனைக்கா உடை ஆதியை, நாளும், இறைவன் என்று அடி சேர்வார் எம்மையும் ஆள் உடையாரே.
[1]
வங்கம் மேவிய வேலை நஞ்சு எழ, வஞ்சகர்கள் கூடி, தங்கள் மேல் அடராமை, உண்! என, உண்டு இருள் கண்டன்; அங்கம் ஓதிய ஆனைக்கா உடை ஆதியை; நாளும், எங்கள் ஈசன் என்பார்கள் எம்மையும் ஆள் உடையாரே.
[2]
நீல வண்டு அறை கொன்றை, நேர் இழை மங்கை, ஒர் திங்கள், சால வாள் அரவங்கள், தங்கிய செஞ்சடை எந்தை; ஆல நீழலுள் ஆனைக்கா உடை ஆதியை; நாளும் ஏலும் ஆறு வல்லார்கள் எம்மையும் ஆள் உடையாரே.
[3]
தந்தை தாய், உலகுக்கு; ஓர் தத்துவன்; மெய்த் தவத்தோர்க்கு; பந்தம் ஆயின பெருமான்; பரிசு உடையவர் திரு அடிகள்; அம் தண் பூம்புனல் ஆனைக்கா உடை ஆதியை; நாளும் எந்தை என்று அடி சேர்வார் எம்மையும் ஆள் உடையாரே.
[4]
கணை செந்தீ, அரவம் நாண், கல் வளையும் சிலை, ஆகத் துணை செய் மும் மதில் மூன்றும் சுட்டவனே, உலகு உய்ய; அணையும் பூம்புனல் ஆனைக்கா உடை ஆதியை; நாளும் இணை கொள் சேவடி சேர்வார் எம்மையும் ஆள் உடையாரே.
[5]
விண்ணின் மா மதி சூடி; விலை இலி கலன் அணி விமலன்; பண்ணின் நேர் மொழி மங்கை பங்கினன்; பசு உகந்து ஏறி; அண்ணல் ஆகிய ஆனைக்கா உடை ஆதியை; நாளும் எண்ணும் ஆறு வல்லார்கள் எம்மையும் ஆள் உடையாரே.
[6]
தாரம் ஆகிய பொன்னித் தண்துறையும் ஆடி விழுத்தும் நீரில் நின்று, அடி போற்றி, நின்மலா, கொள்! என ஆங்கே ஆரம் கொண்ட எம் ஆனைக்கா உடை ஆதியை நாளும் ஈரம் உள்ளவர் நாளும் எம்மையும் ஆள் உடையாரே.
[7]
உரவம் உள்ளது ஒர் உழையின் உரி, புலி அதள், உடையானை; விரை கொள் கொன்றையினானை, விரி சடை மேல், பிறையானை; அரவம் வீக்கிய ஆனைக்கா உடை ஆதியை; நாளும் இரவொடு எல்லி அம் பகலும் ஏத்துவார் எமை உடையாரே.
[8]
வலம் கொள்வார் அவர் தங்கள் வல்வினை தீர்க்கும் மருந்து; கலங்கக் காலனைக் காலால், காமனைக் கண், சிவப்பானை; அலங்கல் நீர் பொரும் ஆனைக்கா உடை ஆதியை; நாளும் இலங்கு சேவடி சேர்வார் எம்மையும் ஆள் உடையாரே.
[9]
ஆழியாற்கு அருள் ஆனைக்கா உடை ஆதி பொன் அடியின் நீழலே சரண் ஆக நின்று அருள் கூர நினைந்து வாழ வல்ல வன் தொண்டன் வண் தமிழ் மாலை வல்லார், போய், ஏழுமா பிறப்பு அற்று(வ்) எம்மையும் ஆள் உடையாரே.
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.076   பொருவனார்; புரிநூலர்; புணர் முலை
பண் - பியந்தைக்காந்தாரம் (திருவாஞ்சியம் சுகவாஞ்சிநாதர் வாழவந்தநாயகி)
பொருவனார்; புரிநூலர்; புணர் முலை உமையவளோடு மருவனார்; மருவார் பால் வருவதும் இல்லை, நம் அடிகள்; திருவனார் பணிந்து ஏத்தும் திகழ் திரு வாஞ்சியத்து உறையும் ஒருவனார்; அடியாரை ஊழ்வினை நலிய ஒட்டாரே.
[1]
தொறுவில் ஆன் இள ஏறு துண்ணென, இடி குரல் வெருவிச் செறுவில் வாளைகள் ஓட, செங்கயல் பங்கயத்து ஒதுங்க, கறுவு இலா மனத்தார்கள் காண்தகு வாஞ்சியத்து அடிகள் மறு இலாத வெண்நீறு பூசுதல் மன்னும் ஒன்று உடைத்தே.
[2]
தூர்த்தர் மூ எயில் எய்து, சுடு நுனைப் பகழி அது ஒன்றால், பார்த்தனார் திரள் தோள் மேல் பல்-நுனைப் பகழிகள் பாய்ச்சி, தீர்த்தம் ஆம் மலர்ப் பொய்கைத் திகழ் திரு வாஞ்சியத்து அடிகள் சாத்து மா மணிக் கச்சு அங்கு ஒரு தலை பல தலை உடைத்தே.
[3]
சள்ளை வெள்ளை அம் குருகுதான் அது ஆம் எனக் கருதி, வள்ளை வெண் மலர் அஞ்சி, மறுகி, ஓர் வாளையின் வாயில் துள்ளு தெள்ளும் நீர்ப் பொய்கைத் துறை மல்கு வாஞ்சியத்து அடிகள் வெள்ளை நுண்பொடிப் பூசும் விகிர்தம் ஒன்று ஒழிகிலர், தாமே.
[4]
மை கொள் கண்டர், எண்தோளர், மலை மகள் உடன் உறை வாழ்க்கைக் கொய்த கூவிள மாலை குலவிய சடைமுடிக் குழகர், கைதை நெய்தல் அம் கழனி கமழ் புகழ் வாஞ்சியத்து அடிகள், பைதல் வெண் பிறையோடு பாம்பு உடன் வைப்பது பரிசே?
[5]
கரந்தை கூவிள மாலை கடி மலர்க் கொன்றையும் சூடி, பரந்த பாரிடம் சூழ, வருவர், எம் பரமர், தம் பரிசால்; திருந்து மாடங்கள் நீடு திகழ் திரு வாஞ்சியத்து உறையும் மருந்தனார், அடியாரை வல்வினை நலிய ஒட்டாரே.
[6]
அருவி பாய்தரு கழனி, அலர் தரு குவளை அம் கண்ணார், குருவி ஆய் கிளி சேர்ப்ப, குருகு இனம் இரிதரு கிடங்கின் பரு வரால் குதி கொள்ளும் பைம் பொழில் வாஞ்சியத்து உறையும் இருவரால் அறிய ஒண்ணா இறைவனது அறை கழல் சரணே.
[7]
களங்கள் ஆர் தரு கழனி அளி தரக் களி தரு வண்டு உளங்கள் ஆர் கலிப் பாடல் உம்பரில் ஒலித்திடும் காட்சி, குளங்கள் ஆல் நிழல் கீழ் நல் குயில் பயில், வாஞ்சியத்து அடிகள் விளங்கு தாமரைப் பாதம் நினைப்பவர் வினை நலிவு இலரே.
[8]
வாழை இன் கனி தானும், மது விம்மி, வருக்கை இன் சுளையும், கூழை வானரம் தம்மில், கூறு இது சிறிது எனக் குழறி, தாழை வாழை அம் தண்டால் செருச் செய்து தருக்கு வாஞ்சியத்துள், ஏழை பாகனை அல்லால் இறை எனக் கருதுதல் இலமே.
[9]
செந்நெல் அங்கு அலங்(கு) கழனித் திகழ் திரு வாஞ்சியத்து உறையும் இன் அலங்கல் அம் சடை எம் இறைவனது அறைகழல் பரவும் பொன் அலங்கல் நல் மாடப் பொழில் அணி நாவல் ஆரூரன் பன் அலங்கல் நல் மாலை பாடுமின், பத்தர் உளீரே!
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.077   பரவும் பரிசு ஒன்று அறியேன்
பண் - காந்தாரபஞ்சமம் (திருவையாறு செம்பொற்சோதியீசுவரர் அறம் வளர்த்த நாயகியம்மை)
பரவும் பரிசு ஒன்று அறியேன் நான் பண்டே உம்மைப் பயிலாதேன்; இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினையமாட்டேன், நான்- கரவு இல் அருவி கமுகு உண்ண, தெங்கு அம் குலைக்கீழ்க் கருப்பாலை அரவம் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ!
[1]
எங்கே போவேன் ஆயிடினும், அங்கே வந்து என் மனத்தீராய், சங்கை ஒன்றும் இன்றியே தலை நாள் கடை நாள் ஒக்கவே; கங்கை சடை மேல் கரந்தானே! கலை மான் மறியும் கனல் மழுவும் தங்கும், திரைக் காவிரிக் கோட்டத்து, ஐயாறு உடைய அடிகளோ!
[2]
மருவிப் பிரிய மாட்டேன், நான்; வழி நின்றொழிந்தேன்; ஒழிகிலேன்- பருவி விச்சி(ய) மலைச்சாரல் பட்டை கொண்டு பகடு ஆடி, குருவி ஓப்பி, கிளி கடிவார் குழல் மேல் மாலை கொண்டு ஒட்டந் தர, அம் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ!
[3]
பழகா நின்று பணி செய்வார், பெற்ற பயன் ஒன்று அறிகிலேன், இகழாது உமக்கு ஆட்பட்டோர்க்கு; ஏகபடம் ஒன்று அரைச் சாத்தி! குழகா! வாழை, குலை, தெங்கு கொணர்ந்து கரை மேல் எறியவே, அழகு ஆர் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ!
[4]
பிழைத்த பிழை ஒன்று அறியேன், நான்; பிழையைத் தீரப் பணியாயே! மழைக் கண் நல்லார் குடைந்து ஆட, மலையும் நிலனும் கொள்ளாமை கழைக் கொள் பிரசம் கலந்து, எங்கும் கழனி மண்டி, கை ஏறி, அழைக்கும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ!
[5]
கார்க் கொள் கொன்றை சடைமேல் ஒன்று உடையாய்! விடையாய்! நகையினால் மூர்க்கர் புரம் மூன்று எரி செய்தாய்! முன் நீ; பின் நீ; முதல்வன் நீ வார்க் கொள் அருவி பல வாரி, மணியும் முத்தும் பொன்னும் கொண்டு, ஆர்க்கும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ!
[6]
மலைக்கண் மடவாள் ஒரு பால் ஆய்ப் பற்றி உலகம் பலி தேர்வாய்! சிலைக் கொள் கணையால் எயில் எய்த செங்கண் விடையாய்! தீர்த்தன் நீ மலைக் கொள் அருவி பல வாரி, மணியும் முத்தும் பொன்னும் கொண்டு, அலைக்கும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ!
[7]
போழும் மதியும், புனக் கொன்றை, புனல், சேர் சென்னிப் புண்ணியா! சூழும் அரவச் சுடர்ச் சோதீ! உன்னைத் தொழுவார் துயர் போக, வாழுமவர்கள், அங்கு அங்கே வைத்த சிந்தை உய்த்து ஆட்ட! ஆழும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ!
[8]
கதிர்க்(க்) கொள் பசியே ஒத்தே நான் கண்டேன், உம்மைக் காணாதேன்; எதிர்த்து நீந்த மாட்டேன், நான்-எம்மான் தம்மான் தம்மானே! விதிர்த்து மேகம் மழை பொழிய, வெள்ளம் பரந்து, நுரை சிதறி, அதிர்க்கும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ!
[9]
கூசி அடியார் இருந்தாலும் குணம் ஒன்று இல்லீர்; குறிப்பு இல்லீர்;
தேச வேந்தன் திருமாலும், மலர் மேல் அயனும், காண்கிலார்
தேசம் எங்கும் தெளித்து ஆடத் தெண்நீர் அருவி கொணர்ந்து எங்கும்
வாசம் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ!
[10]
கூடி அடியார் இருந்தாலும், குணம் ஒன்று இல்லீர்; குறிப்பு இல்லீர்; ஊடி இருந்தும் உணர்கிலேன், உம்மை, தொண்டன், ஊரனேன், தேடி எங்கும் காண்கிலேன்; திரு ஆரூரே சிந்திப்பன்- ஆடும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ!
[11]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.078   வாழ்வு ஆவது மாயம்(ம்); இது
பண் - நட்டபாடை (திருக்கேதாரம் கேதாரேசுவரர் கேதாரேசுவரியம்மை)
வாழ்வு ஆவது மாயம்(ம்); இது மண் ஆவது திண்ணம்; பாழ் போவது பிறவிக் கடல்; பசி, நோய், செய்த பறி தான்; தாழாது அறம் செய்ம்மின்! தடங்கண்ணான் மலரோனும் கீழ் மேல் உற நின்றான் திருக்கேதாரம் எனீரே!
[1]
பறியே சுமந்து உழல்வீர்; பறி நரி கீறுவது அறியீர்; குறி கூவிய கூற்றம் கொளும் நாளால் அறம் உளவே? அறிவானிலும் அறிவான்-நல நறுநீரொடு, சோறு, கிறி பேசி நின்று இடுவார் தொழு கேதாரம் எனீரே!
[2]
கொம்பைப் பிடித்து ஒருக்(கு)காலர்கள் இருக்கால் மலர் தூவி, நம்பன் நமை ஆள்வான் என்று, நடுநாளையும் பகலும்; கம்பக் களிற்று இனம் ஆய் நின்று, சுனை நீர்களைத் தூவி, செம்பொன் பொடி சிந்தும் திருக்கேதாரம் எனீரே!
[3]
உழக்கே உண்டு, படைத்து ஈட்டி வைத்து, இழப்பார்களும், சிலர்கள்; வழக்கே? எனில், பிழைக்கேம் என்பர், மதி மாந்திய மாந்தர்; சழக்கே பறி நிறைப்பாரொடு தவம் ஆவது செயன்மின்! கிழக்கே சலம் இடுவார் தொழு கேதாரம் எனீரே!
[4]
வாள் ஓடிய தடங்கண்ணியர் வலையில்(ல்) அழுந்தாதே, நாள் ஓடிய நமனார் தமர் நணுகாமுனம் நணுகி, ஆள் ஆய் உய்ம்மின்! அடிகட்கு இடம் அதுவே எனில் இதுவே; கீளோடு அரவு அசைத்தான் இடம் கேதாரம் எனீரே!
[5]
தளி சாலைகள் தவம் ஆவது, தம்மைப் பெறில் அன்றே? குளியீர், உளம்! குருக்கேத்திரம் கோதாவிரி, குமரி, தெளியீர் உளம்! சீ பர்ப்பதம்; தெற்கு(வ்) வடக்கு ஆக கிளி வாழை ஒண்கனி கீறி உண் கேதாரம் எனீரே!
[6]
பண்ணின் தமிழ் இசை பாடலின், பழ வேய் முழவு அதிர, கண்ணின்(ன்) ஒளி கனகச்சுனை வயிரம்(ம்) அவை சொரிய, மண் நின்றன மதவேழங்கள் மணி வாரிக் கொண்டு எறிய, கிண்ணென்று இசை முரலும் திருக்கேதாரம் எனீரே!
[7]
முளைக்கைப் பிடி முகமன் சொலி, முது வேய்களை இறுத்து, துளைக்கைக் களிற்று இனம் ஆய் நின்று சுனை நீர்களைத் தூவி, வளைக்கைப் பொழி மழை கூர்தர, மயில் மான்பிணை நிலத்தைக் கிளைக்க(ம்) மணி சிந்தும் திருக்கேதாரம் எனீரே!
[8]
பொதியே சுமந்து உழல்வீர்; பொதி அவம் ஆவதும் அறியீர்; மதி மாந்திய வழியே சென்று குழி வீழ்வதும், வினையால்; கதி சூழ் கடல் இலங்கைக்கு இறை மலங்க(வ்) வரை அடர்த்துக் கெதி பேறு செய்து இருந்தான் இடம் கேதாரம் எனீரே!
[9]
நாவின் மிசை அரைய(ன்)னொடு, தமிழ் ஞானசம்பந்தன், யாவர் சிவன் அடியார்களுக்கு, அடியான் அடித்தொண்டன், தேவன் திருக்கேதாரத்தை ஊரன்(ன்) உரை செய்த பாவின் தமிழ் வல்லார், பரலோகத்து இருப்பாரே.
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.079   மானும், மரை இனமும், மயில்
பண் - நட்டபாடை (திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) பருவதநாதர் பருவதநாயகியம்மை)
மானும், மரை இனமும், மயில் இனமும், கலந்து எங்கும் தாமே மிக மேய்ந்து(த்) தடஞ் சுனை நீர்களைப் பருகி, பூ மா மரம் உரிஞ்சி, பொழில் ஊடே சென்று, புக்கு, தேமாம் பொழில் நீழல்-துயில் சீ பர்ப்பத மலையே.
[1]
மலைச் சாரலும் பொழில் சாரலும் புறமே வரும் இனங்கள் மலைப் பால் கொணர்ந்து இடித்து ஊட்டிட மலங்கி, தன களிற்றை அழைத்து ஓடியும், பிளிறீயவை அலமந்து வந்து எய்த்து, திகைத்து ஓடி, தன் பிடி தேடிடும் சீ பர்ப்பத மலையே.
[2]
மன்னிப் புனம் காவல் மடமொழியாள் புனம் காக்க, கன்னிக் கிளி வந்து(க்) கவைக் கோலிக் கதிர் கொய்ய, என்னைக் கிளி மதியாது என எடுத்துக் கவண் ஒலிப்ப, தென் நல் கிளி திரிந்து ஏறிய சீ பர்ப்பத மலையே.
[3]
மை ஆர் தடங்கண்ணாள் மட மொழியாள் புனம் காக்கச் செவ்வே திரிந்து, ஆயோ! எனப் போகாவிட, விளிந்து, கை பாவிய கவணால் மணி எறிய(வ்) இரிந்து ஓடிச் செவ்வாயன கிளி பாடிடும் சீ பர்ப்பத மலையே.
[4]
ஆனைக் குலம் இரிந்து ஓடி, தன் பிடி சூழலில்-திரிய, தானப் பிடி செவி தாழ்த்திட, அதற்கு(ம்) மிக இரங்கி, மானக் குற அடல் வேடர்கள் இலையால் கலை கோலி, தேனைப் பிழிந்து இனிது ஊட்டிடும் சீ பர்ப்பத மலையே.
[5]
மாற்றுக் களிறு அடைந்தாய் என்று மதவேழம் கை எடுத்து, மூற்றித் தழல் உமிழ்ந்தும் மதம் பொழிந்தும் முகம் சுழிய, தூற்றத் தரிக்கில்லேன் என்று சொல்லி(ய்) அயல் அறியத் தேற்றிச் சென்று, பிடி சூள் அறும் சீ பர்ப்பத மலையே.
[6]
அப்போது வந்து உண்டீர்களுக்கு, அழையாது முன் இருந்தேன்; எப்போதும் வந்து உண்டால், எமை எமர்கள் சுளியாரோ? இப்போது உமக்கு இதுவே தொழில் என்று ஓடி, அக் கிளியைச் செப்பு ஏந்து இளமுலையாள் எறி சீ பர்ப்பத மலையே.
[7]
திரியும் புரம் நீறு ஆக்கிய செல்வன் தன கழலை அரிய திருமாலோடு அயன் தானும்(ம்) அவர் அறியார்; கரியின்(ன்) இனமோடும் பிடி தேன் உண்டு அவை களித்துத் திரி தந்தவை, திகழ்வால் பொலி சீ பர்ப்பத மலையே.
[8]
ஏனத்திரள் கிளைக்க(வ்), எரி போல(ம்) மணி சிதற, ஏனல்(ல்) அவை மலைச்சாரல் இற்று இரியும் கரடீயும், மானும், மரை இனமும், மயில் மற்றும், பல எல்லாம், தேன் உண் பொழில்-சோலை(ம்) மிகு சீ பர்ப்பத மலையே.
[9]
நல்லார் அவர் பலர் வாழ்தரு வயல் நாவல ஊரன் செல்லல்(ல்) உற அரிய சிவன் சீ பர்ப்பத மலையை அல்லல் அவை தீரச் சொன தமிழ் மாலைகள் வல்லார் ஒல்லைச் செல, உயர் வானகம் ஆண்டு அங்கு இருப்பாரே.
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.080   நத்தார் புடை ஞானன்; பசு
பண் - நட்டபாடை (திருக்கேதீச்சரம் கேதீசுவரர் கௌரியம்மை)
நத்தார் புடை ஞானன்; பசு ஏறிந்(ன்); நனை கவுள் வாய்ப் மத்தம் மத யானை உரி போர்த்த மழுவாளன்; பத்து ஆகிய தொண்டர் தொழு, பாலாவியின் கரைமேல், செத்தார் எலும்பு அணிவான்-திருக்கேதீச்சுரத்தானே.
[1]
சுடுவார் பொடி-நீறும், நல துண்டப் பிறை, கீளும், கடம் ஆர் களியானை உரி, அணிந்த(க்) கறைக் கண்டன்; பட ஏர் இடை மடவாளொடு, பாலாவியின் கரை மேல்- திடமா உறைகின்றான்-திருக்கேதீச்சுரத்தானே.
[2]
அங்கம் மொழி அன்னார் அவர், அமரர், தொழுது ஏத்த, வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்நகரில் பங்கம் செய்த பிறை சூடினன்; பாலாவியின் கரைமேல்- செங்கண்(ண்) அரவு அசைத்தான் திருக்கேதீச்சுரத்தானே.
[3]
கரியக் கறைக்கண்டன்(ன்); நல கண்மேல் ஒரு கண்ணான்; வரிய சிறை வண்டு யாழ்செயும் மாதோட்ட நன் நகருள் பரிய திரை எறியா வரு பாலாவியின் கரைமேல்- தெரியும் மறை வல்லான்திருக்கேதீச்சுரத்தானே.
[4]
அங்கத்து உறு நோய்கள்(ள்) அடியார் மேல் ஒழித்து அருளி வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்நகரில் பங்கம் செய்த மடவாளொடு பாலாவியின் கரைமேல்- தெங்கு அம்பொழில் சூழ்ந்த திருக்கேதீச்சுரத்தானே.
[5]
வெய்ய வினை ஆய அடியார்மேல் ஒழித்துஅருளி வையம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்நகரில பை ஏர் இடை மடவாளொடு பாலாவியின் கரைமேல் செய்ய சடை முடியான்-திருக்கேதீச்சுரத்தானே.
[6]
ஊனத்து உறு நோய்கள்(ள்) அடியார் மேல் ஒழித்து அருளி, வால் நத்து உறு மலியும் கடல் மாதோட்ட நன் நகரில் பால் நத்துறும் மொழியாளொடு பாலாவியின் கரைமேல் ஏனத்து எயிறு அணிந்தான் திருக்கேதீச்சுரத்தானே.
[7]
அட்டன்(ந்) அழகு ஆக (வ்) அரைதன் மேல் அரவு ஆர்த்து மட்டு உண்டு வண்டு ஆலும் பொழில் மாதோட்ட நன்நகரில் பட்ட அரி நுதலாளொடு பாலாவியின் கரைமேல சிட்டன் நமை ஆள்வான் திருக்கேதீச்சுரத்தானே.
[8]
மூவர் என, இருவர் என, முக்கண் உடை மூர்த்தி; மா இன் கனி தூங்கும் பொழில் மாதோட்ட நன்நகரில் பாவம் வினை அறுப்பார் பயில் பாலாவியின் கரைமேல்- தேவன்; எனை ஆள்வான் திருக்கேதீச்சுரத்தானே.
[9]
கறை ஆர் கடல் சூழ்ந்த கழி மாதோட்ட நன் நகருள் சிறை ஆர் பொழில் வண்டு யாழ் செயும் கேதீச்சுரத்தானை மறை ஆர் புகழ் ஊரன்(ந்)-அடித் தொண்டன்(ந்)-உரை செய்த குறையாத் தமிழ்பத்தும் சொலக் கூடா, கொடுவினையே.
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.081   கொன்று செய்த கொடுமையால் பல,
பண் - நட்டபாடை (திருக்கழுக்குன்றம் வேதகிரியீசுவரர் பெண்ணினல்லாளம்மை)
கொன்று செய்த கொடுமையால் பல, சொல்லவே நின்ற பாவவினைகள் தாம், பல, நீங்கவே சென்று சென்று தொழுமின் தேவர்பிரான் இடம்- கன்றினோடு பிடி சூழ் தண் கழுக்குன்றமே!
[1]
இறங்கிச் சென்று தொழுமின், இன் இசை பாடியே! பிறங்கு கொன்றைச் சடையன், எங்கள் பிரான், இடம்- நிறங்கள் செய்த மணிகள், நித்திலம், கொண்டு இழி கறங்கு வெள்ளை அருவித் தண் கழுக்குன்றமே.
[2]
நீள நின்று தொழுமின், நித்தலும் நீதியால் ஆளும் நம்ம வினைகள் அல்கி அழுந்திட- தோளும் எட்டும் உடைய மா மணிச்சோதியான், காளகண்டன், உறையும் தண் கழுக்குன்றமே.!
புலைகள் தீரத் தொழுமின் புன்சடைப் புண்ணியன், இலை கொள் சூலப்படையன், எந்தைபிரான், இடம்- முலைகள் உண்டு தழுவிக் குட்டியொடு முசுக் கலைகள் பாயும் புறவின் தண் கழுக்குன்றமே!
[5]
மடம் உடைய அடியார் தம் மனத்தே உற விடம் உடைய மிடறன், விண்ணவர்மேலவன், படம் உடைய அரவன் தான், பயிலும்(ம்) இடம்- கடம் உடைய புறவின் தண் கழுக்குன்றமே
[6]
ஊனம் இல்லா அடியார் தம் மனத்தே உற ஞானமூர்த்தி, நட்டம் ஆடி, நவிலும்(ம்) இடம்- தேனும் வண்டும் மது உண்டு இன் இசை பாடியே, கான மஞ்ஞை உறையும் தண் கழுக்குன்றமே.
[7]
அந்தம் இல்லா அடியார் தம் மனத்தே உற வந்து, நாளும் வணங்கி, மாலொடு நான்முகன் சிந்தை செய்த மலர்கள் நித்தலும் சேரவே கந்தம் நாறும் புறவின் தண் கழுக்குன்றமே.
[8]
பிழைகள் தீரத் தொழுமின்பின் சடைப் பிஞ்ஞகன், குழை கொள் காதன், குழகன், தான் உறையும்(ம்) இடம்- மழைகள் சாலக் கலித்து நீடு உயர் வேய் அவை கழை கொள் முத்தம் சொரியும் தண் கழுக்குன்றமே!
[9]
பல் இல் வெள்ளைத் தலையன் தான் பயிலும்(ம்) இடம், கல்லில் வெள்ளை அருவித் தண் கழக்குன்றினை, மல்லின் மல்கு திரள்தோள் ஊர வனப்பினால் சொல்லல் சொல்லித் தொழுவாரைத் தொழுமின்களே!
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.082   ஊன் ஆய், உயிர் புகல்
பண் - நட்டபாடை (திருச்சுழியல் (திருச்சுழி) இணைத்திருமேனிநாதர் துணைமாலைநாயகியம்மை)
ஊன் ஆய், உயிர் புகல் ஆய், அகலிடம் ஆய், முகில் பொழியும் வான் ஆய், வரு மதி ஆய், விதி வருவான் இடம்-பொழிலின் தேன் ஆதரித்து இசை வண்டு இனம் மிழற்றும்-திருச் சுழியல், நானாவிதம் நினைவார்தமை நலியார், நமன்தமரே.
[1]
தண்டு ஏர் மழுப்படையான், மழவிடையான், எழு கடல் நஞ்சு உண்டே புரம் எரியச் சிலை வளைத்தான்,-இமையவர்க்கா,- திண் தேர்மிசை நின்றான் அவன், உறையும் திருச் சுழியல்- தொண்டே செய வல்லார் அவர் நல்லார்; துயர் இலரே.
[2]
கவ்வைக் கடல் கதறிக் கொணர் முத்தம் கரைக்கு ஏற்ற, கொவ்வைத்துவர் வாயார் குடைந்து ஆடும் திருச் சுழியல், தெய்வத்தினை வழிபாடு செய்து எழுவார் அடி தொழுவார், அவ் அத் திசைக்கு அரசு ஆகுவர்; அலராள் பிரியாளே.
[3]
மலையான் மகள் மடமாது இடம் ஆகத்தவன், மற்றுக் கொலை யானையின் உரி போர்த்த எம்பெருமான், திருச் சுழியல் அலை ஆர் சடை உடையான், அடி தொழுவார் பழுது உள்ளம் நிலையார்; திகழ் புகழால் நெடுவானத்து உயர்வாரே.
[4]
உற்றான், நமக்கு; உயரும் மதிச் சடையான்; புலன் ஐந்தும் செற்று ஆர் திருமேனிப் பெருமான்; ஊர் திருச் சுழியல் பெற்றான், இனிது உறைய; திறம்பாமைத் திருநாமம் கற்றார் அவர் கதியுள் செல்வர்; ஏத்தும்(ம்)மது கடனே.
[5]
மலம் தாங்கிய பாசப் பிறப்பு அறுப்பீர்! துறைக் கங்கைச்- சலம் தாங்கிய முடியான் அமர்ந்த இடம் ஆம் திருச் சுழியல் நிலம் தாங்கிய மலரால்; கொழும் புகையால், நினைந்து ஏத்தும்! தலம் தாங்கிய புகழ் ஆம்; மிகு தவம் ஆம்; சதுர் ஆமே!
[6]
சைவத்த செவ் உருவன்; திருநீற்றன்(ன்), உரும் ஏற்றன்; கை வைத்த ஒரு சிலையால் அரண் மூன்றும்(ம்) எரிசெய்தான்; தெய்வத்தவர் தொழுது ஏத்திய குழகன்; திருச் சுழியல் மெய் வைத்து அடி நினைவார் வினை தீர்தல்(ல்) எளிது அன்றே!
[7]
பூ ஏந்திய பீடத்தவன் தானும், அடல் அரியும், கோ ஏந்திய வினயத்தொடு குறுகப் புகல் அறியார்- சே ஏந்திய கொடியான் அவன் உறையும் திருச் சுழியல், மா ஏந்திய கரத்தான், எம சிரத்தான் தனது அடியே.
[8]
கொண்டாடுதல் புரியா வரு தக்கன் பெரு வேள்வி செண்டு ஆடுதல் புரிந்தான் திருச் சுழியல் பெருமானைக் குண்டாடிய சமண் ஆதர்கள் குடைச் சாக்கியர் அறியா, மிண்டாடிய அது செய்தது(வ்) ஆனால், வரு விதியே
[9]
நீர் ஊர் தரு நிமலன், திருமலையார்க்கு அயல் அருகே தேர் ஊர் தரும் அரக்கன் சிரம் நெரித்தான், திருச் சுழியல் பேர் ஊர் என உறைவான், அடிப்பெயர் நாவலர்கோமான் ஆரூரன-தமிழ்மாலைபத்து அறிவார் துயர் இலரே.
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.083   அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி,
பண் - புறநீர்மை (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி, முந்தி எழும் பழைய வல்வினை மூடா முன், சிந்தை பராமரியா தென்திரு ஆரூர் புக்கு, எந்தை பிரானாரை என்றுகொல் எய்துவதே?
[1]
நின்ற வினைக் கொடுமை நீங்க இருபொழுதும் துன்று மலர் இட்டு, சூழும் வலம் செய்து, தென்றல் மணம் கமழும் தென்திரு ஆரூர் புக்கு, என் தன் மனம் குளிர என்றுகொல் எய்துவதே?
[2]
முன்னை முதல் பிறவி மூதறியாமையினால் பின்னை நினைந்தனவும் பேதுறவும்(ம்) ஒழிய, செந்நெல் வயல்-கழனித் தென்திரு ஆரூர் புக்கு, என் உயிர்க்கு இன்னமுதை என்றுகொல் எய்துவதே?
[3]
நல்ல நினைப்பு ஒழிய நாள்களில் ஆர் உயிரைக் கொல்ல நினைப்பனவும் குற்றமும் அற்று ஒழிய, செல்வ வயல்-கழனித் தென்திரு ஆரூர் புக்கு, எல்லை மிதித்து, அடியேன் என்றுகொல் எய்துவதே?
[4]
கடு வரி மாக் கடலுள் காய்ந்தவன் தாதையை, முன்; சுடுபொடி மெய்க்கு அணிந்த சோதியை; வன்தலை வாய் அடு புலி ஆடையனை; ஆதியை;-ஆரூர் புக்கு- இடு பலி கொள்ளியை; நான் என்றுகொல் எய்துவதே?
[5]
சூழ் ஒளி, நீர், நிலம், தீ, தாழ் வளி, ஆகாசம், வான் உயர் வெங்கதிரோன், வண்தமிழ் வல்லவர்கள் ஏழ் இசை, ஏழ் நரம்பின் ஓசையை;-ஆரூர் புக்கு- ஏழ் உலகு ஆளியை; நான் என்றுகொல் எய்துவதே;
ஆறு அணி நீள் முடிமேல் ஆடு அரவம் சூடிப் பாறு அணி வெண்தலையில் பிச்சை கொள் நச்சு அரவன்,- சேறு அணி தண்கழனித் தென்திரு ஆரூர் புக்கு- ஏறு அணி எம் இறையை, என்றுகொல் எய்துவதே?
மின் நெடுஞ்செஞ்சடையன் மேவிய ஆரூரை நன்நெடுங் காதன்மையால் நாவலர்கோன் ஊரன் பல்-நெடுஞ் சொல்மலர்கொண்டு இட்டன பத்தும் வல்லார் பொன் உடை விண்ணுலகம் நண்ணுவர்; புண்ணியரே.
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.084   தொண்டர் அடித்தொழலும், சோதி இளம்பிறையும்,
பண் - புறநீர்மை (திருக்கானப்பேர் (திருக்காளையார்கோயில்) காளைநாதேசுவரர் பொற்கொடியம்மை)
தொண்டர் அடித்தொழலும், சோதி இளம்பிறையும், சூது அன மென்முலையாள் பாகமும், ஆகி வரும் புண்டரிகப் பரிசு ஆம் மேனியும்; வானவர்கள் பூசல் இடக் கடல் நஞ்சு உண்ட கருத்து அமரும், கொண்டல் எனத் திகழும், கண்டமும்; எண்தோளும்; கோல நறுஞ்சடைமேல் வண்ணமும்; கண்குளிரக் கண்டு, தொழப்பெறுவது என்றுகொலோ, அடியேன்?-கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே .
[1]
கூதல் இடும் சடையும், கோள் அரவும், விரவும் கொக்கு இறகும், குளிர் மா மத்தமும், ஒத்து உன தாள் ஓதல் உணர்ந்து, அடியார் உன் பெருமைக்கு நினைந்து உள் உருகா, விரசும் ஓசையைப் பாடலும், நீ ஆதல் உணர்ந்து அவரோடு அன்பு பெருத்து அடியேன் அங்கையில் மா மலர் கொண்டு, என் கணது அல்லல் கெட, காதல் உற, தொழுவது என்றுகொலோ, அடியேன்?-கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே .
[2]
நான் உடை மாடு எனவே நன்மை தரும் பரனை, நல் பதம் என்று உணர்வார் சொல்பதம் ஆர் சிவனை, தேன் இடை இன்னமுதை, பற்று அதனில்-தெளிவை, தேவர்கள் நாயகனை, பூ உயர் சென்னியனை, வான் இடை மாமதியை, மாசு அறு சோதியனை, மாருதமும்(ம்) அனலும் மண் தலமும்(ம்) ஆய- கான் இடை மாநடன் என்று எய்துவது என்றுகொலோ?-கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே .
[3]
செற்றவர் முப்புரம் அன்று அட்ட சிலைத் தொழில் ஆர் சேவகம்; முன் நினைவார் பாவகமும்; நெறியும்; குற்றம் இல் தன் அடியார் கூறும் இசைப் பரிசும்; கோசிகமும்(ம்),-அரையில்,- கோவணமும்(ம்) அதளும்; மல்-திகழ் திண்புயமும்; மார்பு இடை, நீறு துதை, மாமலைமங்கை உமை சேர் சுவடும்; புகழக் கற்றனவும் பரவிக் கைதொழல் என்றுகொலோ?-கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே .
[4]
கொல்லை விடைக் குழகும், கோல நறுஞ்சடையில் கொத்து அலரும்(ம்) இதழித் தொத்தும், அதன் அருகே முல்லை படைத்த நகை மெல்லியலால் ஒருபால் மோகம் மிகுத்து இலங்கும் கூறு செய் எப்பரிசும், தில்லைநகர்ப் பொது உற்று ஆடிய சீர் நடமும், திண்ழுவும், கைமிசைக் கூர் எரியும்(ம்) அடியார் கல்லவடப் பரிசும், காணுவது என்றுகொலோ?-கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே .
[5]
பண்ணு தலைப் பயன் ஆர் பாடலும், நீடுதலும்,- பங்கயமாது அனையார்,-பத்தியும்; முத்தி அளித்து எண்ணு தலைப்பெருமான் என்று எழுவார் அவர் தம் ஏசறவும்(ம்); இறை ஆம் எந்தையையும் விரவி நண்ணுதலைப் படும் ஆறு எங்ஙனம்? என்று அயலே நைகிற என்னை மதித்து உய்யும் வணம் அருளும் கண்ணுதலை, கனியை, காண்பதும்; என்றுகொலோ? கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே .
[6]
மாவை உரித்து அதள் கொண்டு அங்கம் அணிந்தவனை, வஞ்சர் மனத்து இறையும் நெஞ்சு அணுகாதவனை, மூவர் உருத் தனது ஆம் மூல முதல் கருவை, மூசிடும் மால்விடையின் பாகனை, ஆகம் உறப் பாவகம் இன்றி மெய்யே பற்றுமவர்க்கு அமுதை, பால் நறுநெய் தயிர் ஐந்து ஆடு பரம்பரனை,- காவல் எனக்கு இறை என்று, எய்துவது என்றுகொலோ?-கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே .
[7]
தொண்டர் தமக்கு எளிய சோதியை, வேதியனை, தூய மறைப் பொருள் ஆம் நீதியை, வார்கடல் நஞ்சு உண்டு அதனுக்கு இறவாது என்றும் இருந்தவனை, ஊழி படைத்தவனோடு ஒள் அரியும்(ம்) உணரா அண்டனை, அண்டர் தமக்கு ஆகம நூல் மொழியும் ஆதியை, மேதகு சீர் ஓதியை, வானவர் தம் கண்டனை,-அன்பொடு சென்று எய்துவது என்றுகொலோ?-கார் வயல் சூழ் கனப்பேர் உறை காளையையே .
[8]
நாதனை, நாதம் மிகுந்த ஓசை அது ஆனவனை, ஞானவிளக்கு ஒளி ஆம் ஊன் உயிரை, பயிரை, மாதனை, மேதகு தன் பத்தர் மனத்து இறையும் பற்று விடாதவனை, குற்றம் இல் கொள்கையனை, தூதனை, என்தனை ஆள் தோழனை, நாயகனை, தாழ் மகரக்குழையும் தோடும் அணிந்த திருக்- காதனை,-நாய் அடியேன் எய்துவது என்றுகொலோ?-கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே .
[9]
கன்னலை, இன்னமுதை, கார் வயல் சூழ் கானப் பேர் உறை காளையை, ஒண் சீர் உறை தண் தமிழால் உன்னி மனத்து அயரா, உள் உருகி, பரவும் ஒண் பொழில் நாவலர்கோன் ஆகிய ஆரூரன், பன்னும் இசைக்கிளவி பத்து இவை பாட வல்லார், பத்தர் குணத்தினராய், எத்திசையும் புகழ, மன்னி இருப்பவர்கள், வானின்; இழிந்திடினும், மண்டல நாயகராய் வாழ்வது நிச்சயமே! .
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.085   வடிவு உடை மழு ஏந்தி,
பண் - புறநீர்மை (திருக்கூடலையாற்றூர் நெறிகாட்டுநாயகர் புரிகுழலாளம்மை)
வடிவு உடை மழு ஏந்தி, மதகரி உரி போர்த்து, பொடி அணி திருமேனிப் புரிகுழல் உமையோடும், கொடி அணி நெடுமாடக் கூடலையாற்றூரில் அடிகள் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!
[1]
வையகம் முழுது உண்ட மாலொடு, நான்முகனும், பை அரவு இள அல்குல் பாவையொடும்(ம்), உடனே, கொய் அணி மலர்ச் சோலைக் கூடலையாற்றூரில் ஐயன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!
[2]
ஊர்தொறும் வெண் தலை கொண்டு, உண் பலி இடும்! என்று, வார் தரு மென்முலையாள் மங்கையொடும்(ம்) உடனே, கூர் நுனை மழு ஏந்தி, கூடலையாற்றூரில் ஆர்வன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!
[3]
சந்து அணவும் புனலும் தாங்கிய தாழ்சடையன் பந்து அணவும் விரலாள் பாவையொடும்(ம்) உடனே, கொந்து அணவும் பொழில் சூழ் கூடலையாற்றூரில் அந்தணன் வழி போந்த அதிசயம் அறியேனே!
[4]
வேதியர் விண்ணவரும் மண்ணவரும் தொழ, நல் சோதி அது உரு ஆகி, சுரிகுழல் உமையோடும், கோதிய வண்டு அறையும் கூடலையாற்றூரில் ஆதி இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!
[5]
வித்தக வீணையொடும், வெண்புரிநூல் பூண்டு, முத்து அன வெண் முறுவல் மங்கையொடும்(ம்) உடனே, கொத்து அலரும் பொழில் சூழ் கூடலையாற்றூரில் அத்தன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!
[6]
மழை நுழை மதியமொடு வாள் அரவம் சடைமேல இழை நுழை துகில் அல்குல் ஏந்திழையாளோடும குழை அணி திகழ் சோலைக் கூடலையாற்றூரில் அழகன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!
[7]
மறை முதல் வானவரும், மால், அயன், இந்திரனும், பிறை நுதல் மங்கையொடும், பேய்க்கணமும், சூழ, குறள்படை அதனோடும், கூடலையாற்றூரில் அறவன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!
[8]
வேலையின் நஞ்சு உண்டு, விடை அது தான் ஏறி, பால் அன மென்மொழியாள் பாவையொடும்(ம்) உடனே, கோலம் அது உரு ஆகி, கூடலையாற்றூரில் ஆலன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!
[9]
கூடலையாற்றூரில் கொடி இடையவளோடும் ஆடல் உகந்தானை, அதிசயம் இது என்று நாடிய இன்தமிழால் நாவல ஊரன் சொல் பாடல்கள் பத்தும் வல்லார் தம் வினை பற்று அறுமே.
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.086   விடையின் மேல் வருவானை; வேதத்தின்
பண் - சீகாமரம் (திருவன்பார்த்தான்பனங்காட்டூர் (திருப்பனங்காட்டூர்) பனங்காட்டீசுவரர் அமிர்தவல்லியம்மை)
விடையின் மேல் வருவானை; வேதத்தின் பொருளானை; அடையில் அன்பு உடையானை; யாவர்க்கும் அறிய ஒண்ணா, மடையில் வாளைகள் பாயும் வன் பார்த்தான் பனங்காட்டூர், சடையில் கங்கை தரித்தானை; சாராதார் சார்பு என்னே!
[1]
அறையும் பைங்கழல் ஆர்ப்ப, அரவு ஆட, அனல் ஏந்தி, பிறையும் கங்கையும் சூடி, பெயர்ந்து, ஆடும் பெருமானார்; பறையும் சங்கு ஒலி ஓவாப் படிறன்; தன் பனங்காட்டூர் உறையும் எங்கள் பிரானை; உணராதார் உணர்வு என்னே!
[2]
தண் ஆர் மா மதி சூடி, தழல் போலும் திருமேனிக்கு எண் ஆர் நாள்மலர் கொண்டு அங்கு இசைந்து ஏத்தும் அடியார்கள் பண் ஆர் பாடல் அறாத படிறன்; தன் பனங்காட்டூர் பெண் ஆண் ஆய பிரானை; பேசாதார் பேச்சு என்னே!
[3]
நெற்றிக்கண் உடையானை, நீறு ஏறும் திருமேனிக் குற்றம் இல் குணத்தானை, கோணாதார் மனத்தானை பற்றிப் பாம்பு அரை ஆர்த்த படிறன், தன் பனங்காட்டூர்ப் பெற்றொன்று ஏறும் பிரானை, பேசாதார் பேச்சு என்னே!
[4]
உரம் என்னும் பொருளானை, உருகில் உள் உறைவானை, சிரம் என்னும் கலனானை, செங்கண் மால்விடையானை, வரம் முன்னம் அருள் செய்வான், வன் பார்த்தான் பனங்காட்டூர்ப் பரமன், எங்கள் பிரானை, பரவாதார் பரவு என்னே!
[5]
எயிலார் பொக்கம்(ம்) எரித்த எண்தோள் முக்கண்(ண்) இறைவன்; வெயில் ஆய், காற்று என் வீசி, மின் ஆய், தீ என நின்றான்; மயில் ஆர் சோலைகள் சூழ்ந்த வன் பார்த்தான் பனங்காட்டூர்ப் பயில்வானுக்கு, அடிமைக் கண் பயிலாதார் பயில்வு என்னே!
[6]
மெய்யன், வெண்பொடி பூசும் விகிர்தன், வேத(ம்) முதல்வன், கையில் மான் மழு ஏந்திக் காலன் காலம்(ம்) அறுத்தான், பை கொள் பாம்பு அரை ஆர்த்த படிறன், தன் பனங்காட்டூர் ஐயன், எங்கள் பிரானை, அறியாதார் அறிவு என்னே!
[7]
வஞ்சம் அற்ற மனத்தாரை மறவாத பிறப்பு இலியை, பஞ்சிச் சீறடியாளைப் பாகம் வைத்து உகந்தானை, மஞ்சு உற்ற மணி மாட வன் பார்த்தான் பனங்காட்டூர் நெஞ்சத்து எங்கள் பிரானை, நினையாதார் நினைவு என்னே!
[8]
மழையானும், திகழ்கின்ற மலரோன், என்று இருவர் தாம் உழையா நின்றவர் உள்க உயர்வானத்து உயர்வானை, பழையானை; பனங்காட்டூர் பதி ஆகத் திகழ்கின்ற குழை(க்)காதற்கு அடிமைக் கண் குழையாதார் குழைவு என்னே!
[9]
பார் ஊரும் பனங்காட்டூர்ப் பவளத்தின் படியானை, சீர் ஊரும் திரு ஆரூர்ச் சிவன் பேர் சென்னியில் வைத்த ஆரூரன் அடித்தொண்டன் அடியன் சொல், அடி நாய் சொல், ஊர் ஊரன் உரை செய்வார், உயர்வானத்து உயர்வாரே.
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.087   மாட மாளிகை கோபுரத்தொடு மண்டபம்
பண் - சீகாமரம் (திருப்பனையூர் சவுந்தரேசர் பெரியநாயகியம்மை)
மாட மாளிகை கோபுரத்தொடு மண்டபம் வளரும் வளர் பொழில் பாடல் வண்டு அறையும் பழனத் திருப் பனையூர், தோடு பெய்து, ஒரு காதினில் குழை தூங்க, தொண்டர்கள் துள்ளிப் பாட, நின்று ஆடும் ஆறு வல்லார் அவரே அழகியரே.
[1]
நாறு செங்கழு நீர்மலர் நல்ல மல்லிகை சண்பகத்தொடு, சேறு செய் கழனிப் பழனத் திருப் பனையூர், நீறு பூசி, நெய் ஆடி, தம்மை நினைப்பவர் தம் மனத்தர் ஆகி நின்று, ஆறு சூட வல்லார் அவரே அழகியரே.
[2]
செங்கண் மேதிகள் சேடு எறிந்து தடம் படிதலின் சேல் இனத்தொடு பைங்கண் வாளைகள் பாய் பழனத் திருப் பனையூர், திங்கள் சூடிய செல்வனார், அடியார் தம்மேல் வினை தீர்ப்பராய் விடில் அங்கு இருந்து உறைவார் அவரே அழகியரே.
[3]
வாளை பாய,-மலங்கு, இளங்கயல், வரிவரால், உகளும்-கழனியுள் பாளை ஒண் கமுகம் புடை சூழ் திருப் பனையூர், தோளும் ஆகமும் தோன்ற, நட்டம் இட்டு ஆடுவார்; அடித்தொண்டர் தங்களை ஆளும் ஆறு வல்லார்; அவரே அழகியரே.
[4]
கொங்கையார் பலரும் குடைந்து ஆட, நீர்க் குவளை மலர்தர, பங்கயம் மலரும் பழனத் திருப் பனையூர், மங்கை பாகமும் மால் ஒர்பாகமும் தாம் உடையவர்; மான் மழுவினொடு அங்கைத் தீ உகப்பார்; அவரே அழகியரே.
[5]
காவிரி புடை சூழ் சோணாட்டவர் தாம் பரவிய கருணை அம் கடல்; அப் பா விரி புலவர் பயிலும் திருப் பனையூர், மா விரி மட நோக்கி அஞ்ச, மதகரி உரி போர்த்து உகந்தவர்; ஆவில் ஐந்து உகப்பார்; அவரே அழகியரே.
[6]
மரங்கள் மேல் மயில் ஆல, மண்டபம் மாட மாளிகை கோபுரத்தின் மேல் திரங்கல் வன் முகவன் புகப் பாய் திருப் பனையூர், துரங்க வாய் பிளந்தானும், தூ மலர்த் தோன்றலும், அறியாமல்-தோன்றி நின்று, அரங்கில் ஆட வல்லார் அவரே அழகியரே.
[7]
மண் எலாம் முழவம் அதிர்தர, மாட மாளிகை கோபுரத்தின் மேல், பண் யாழ் முரலும் பழனத் திருப் பனையூர், வெண்நிலாச் சடை மேவிய-விண்ணவரொடு மண்ணவர் தொழ- அண்ணல் ஆகி நின்றார் அவரே அழகியரே.
[8]
குரக்கு இனம் குதி கொள்ள, தேன் உக, குண்டு தண் வயல் கெண்டை பாய்தர, பரக்கும் தண்கழனிப் பழனத் திருப் பனையூர், இரக்கம் இல்லவர் ஐந்தொடு ஐந்தலை தோள் இருபது தாள் நெரித அரக்கனை அடர்த்தார் அவரே அழகியரே.
[9]
வஞ்சி நுண் இடை மங்கை பங்கினர்-மா தவர் வளரும், வளர் பொழில், பஞ்சின் மெல் அடியார் பயிலும்-திருப் பனையூர், வஞ்சியும் வளர் நாவலூரன்வனப்பகை அவள் அப்பன், வன்தொண்டன் செஞ்சொல் கேட்டு உகப்பார் அவரே அழகியரே.
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.088   நம்பினார்க்கு அருள் செய்யும் அந்தணர்
பண் - சீகாமரம் (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகையம்மை)
நம்பினார்க்கு அருள் செய்யும் அந்தணர் நால்மறைக்கு இடம் ஆய வேள்வியுள் செம்பொன் ஏர் மடவார் அணி பெற்ற திரு மிழலை, உம்பரார் தொழுது ஏத்த மா மலையாளொடும்(ம்) உடனே உறைவு இடம் அம் பொன் வீழி கொண்டீர்!-அடியேற்கும் அருளுதிரே!
[1]
விடம் கொள் மா மிடற்றீர்! வெள்ளைச் சுருள் ஒன்று இட்டு விட்ட காதினீர்! என்று திடம் கொள் சிந்தையினார் கலி காக்கும் திரு மிழலை, மடங்கல் பூண்ட விமானம் மண்மிசை வந்து இழிச்சிய வான நாட்டையும் அடங்கல் வீழி கொண்டீர்-அடியேற்கும் அருளுதிரே!
[2]
ஊனை உற்று உயிர் ஆயினீர்; ஒளி மூன்றும் ஆய், தெளி நீரொடு ஆன் அஞ்சின் தேனை ஆட்டு உகந்தீர்! செழு மாடத் திரு மிழலை, மானை மேவிய கையினீர்! மழு ஏந்தினீர்! மங்கை பாகத்தீர்! விண்ணில் ஆன வீழி கொண்டீர்!-அடியேற்கும் அருளுதிரே!
[3]
பந்தம், வீடு, இவை பண்ணினீர்; படிறீர்; மதிப்பிதிர்க் கண்ணியீர் என்று சிந்தை செய்து இருக்கும் செங்கையாளர் திரு மிழலை, வந்து நாடகம் வான நாடியர் ஆட, மால் அயன் ஏத்த, நாள்தொறும் அம் தண் வீழி கொண்டீர்!-அடியேற்கும் அருளுதிரே!
[4]
புரிசை மூன்றையும் பொன்றக் குன்றவில் ஏந்தி; வேதப்புரவித் தேர்மிசைத் திரிசெய்-நால்மறையோர் சிறந்து ஏத்தும் திரு மிழலை, பரிசினால் அடி போற்றும் பத்தர்கள் பாடி ஆடப் பரிந்து நல்கினீர்!- அரிய வீழி கொண்டீர்!-அடியேற்கும் அருளுதிரே!
[5]
எறிந்த சண்டி, இடந்த கண்ணப்பன், ஏத்து பத்தர் கட்கு ஏற்றம் நல்கினீர்! செறிந்த பூம்பொழில்-தேன் துளி வீசும் திரு மிழலை, நிறைந்த அந்தணர் நித்தம்-நாள்தொறும் நேசத்தால் உமைப் பூசிக்கும்(ம்) இடம் அறிந்து, வீழி கொண்டீர்!-அடியேற்கும் அருளுதிரே!
[6]
பணிந்த பார்த்தன், பகீரதன், பல பத்தர் சித்தர்க்குப் பண்டு நல்கினீர்! திணிந்த மாடம்தொறும் செல்வம் மல்கு திரு மிழலை, தணிந்த அந்தணர் சந்தி நாள்தொறும் அந்தி வான் இடு பூச்சிறப்பு அவை அணிந்து, வீழி கொண்டீர்!-அடியேற்கும் அருளுதிரே!
[7]
பரந்த பாரிடம் ஊர் இடைப் பலி பற்றிப் பாத்து உணும் சுற்றம் ஆயினீர்; தெரிந்த நால்மறையோர்க்கு இடம் ஆய திரு மிழலை இருந்து, நீர் தமிழோடு இசை கேட்கும் இச்சையால் காசு நித்தம் நல்கினீர்; அருந் தண் வீழி கொண்டீர்!;-அடியேற்கும் அருளுதிரே!
[8]
தூய நீர் அமுது ஆய ஆறு அது சொல்லுக! என்று உமை கேட்க, சொல்லினீர்; தீயர், ஆக்கு உலையாளர், செழு மாடத் திரு மிழலை மேய நீர் பலி ஏற்றது என்? என்று விண்ணப்பம் செய்பவர்க்கு மெய்ப்பொருள் ஆய வீழி கொண்டீர்;-அடியேற்கும் அருளுதிரே!
[9]
வேத வேதியர், வேட நீதியர் ஓதுவார், விரி நீர் மிழலையுள் ஆதி வீழி கொண்டீர்; அடியேற்கும் அருளுக! என்று நாதகீதம் வண்டு ஓது வார் பொழில் நாவலூரன் வன்தொண்டன்நல்-தமிழ் பாதம் ஓத வல்லார் பரனோடு கூடுவரே.
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.089   பிழை உளன பொறுத்திடுவர் என்று
பண் - சீகாமரம் (திருவெண்பாக்கம் (பூண்டி) வெண்பாக்கத்தீசுவரர் கனிவாய்மொழியம்மை)
பிழை உளன பொறுத்திடுவர் என்று அடியேன் பிழைத்தக்கால் பழி அதனைப் பாராதே, படலம் என் கண் மறைப்பித்தாய்; குழை விரவு வடி காதா! கோயில் உளாயே! என்ன, உழை உடையான் உள் இருந்து, உளோம்; போகீர்! என்றானே!
[1]
இடை அறியேன்; தலை அறியேன்; எம்பெருமான், சரணம்! என்பேன்; நடை உடையன், நம் அடியான்; என்று அவற்றைப் பாராதே, விடை உடையான், விடநாகன், வெண்நீற்றன், புலியின்தோல்- உடை உடையான், எனை உடையான், உளோம்; போகீர்! என்றானே!
[2]
செய் வினை ஒன்று அறியாதேன்; திருவடியே சரண் என்று பொய் அடியேன் பிழைத்திடினும், பொறுத்திட நீ வேண்டாவோ? பை அரவா! இங்கு இருந்தாயோ? என்ன, பரிந்து என்னை உய்ய அருள் செய்ய வல்லான், உளோம், போகீர்! என்றானே!
[3]
கம்பு அமரும் கரி உரியன்; கறைமிடற்றன்; காபாலி; செம்பவளத்திரு உருவன்; சேயிழையோடு உடன் ஆகி, நம்பி இங்கே இருந்தீரே! என்று நான் கேட்டலுமே, உம்பர் தனித்துணை எனக்கு, உளோம்; போகீர்! என்றானே!
[4]
பொன் இலங்கு நறுங்கொன்றை புரிசடைமேல் பொலிந்து இலங்க, மின் இலங்கு நுண் இடையாள் பாகமா, எருது ஏறி, துன்னி இருபால் அடியார் தொழுது ஏத்த, அடியேனும் உன்ன தம் ஆய்க் கேட்டலுமே, உளோம் போகீர்! என்றானே!
[5]
கண் நுதலான், காமனையும் காய்ந்த திறல்; கங்கை, மலர், தெண்நிலவு, செஞ்சடைமேல் தீ மலர்ந்த கொன்றையினான்; கண்மணியை மறைப்பித்தாய்; இங்கு இருந்தாயோ? என்ன, ஒண்நுதலி பெருமானார், உளோம்; போகீர்! என்றானே!
[6]
பார் நிலவு மறையோரும் பத்தர்களும் பணி செய்யத் தார் நிலவு நறுங்கொன்றைச் சடையனார்; தாங்க(அ)ரிய கார் நிலவு மணிமிடற்றீர்! இங்கு இருந்தீரே? என்ன, ஊர் அரவம் அரைக்கு அசைத்தான், உளோம்; போகீர்; என்றானே!
[7]
வார் இடம் கொள் வனமுலையாள் தன்னோடு மயானத்துப் பாரிடங்கள் பல சூழப் பயின்று ஆடும் பரமேட்டி, கார் இடம் கொள் கண்டத்தன், கருதும் இடம் திரு ஒற்றி- யூர் இடம் கொண்டு இருந்த பிரான், உளோம்; போகீர்! என்றானே!
[8]
பொன் நவிலும் கொன்றையினாய்! போய் மகிழ்க்கீழ் இரு! என்று சொன்ன எனைக் காணாமே, சூளுறவு மகிழ்க்கீழே என்ன வல்ல பெருமானே! இங்கு இருந்தாயோ? என்ன, ஒன்னலரைக் கண்டால் போல், உளோம்; போகீர்! என்றானே!
[9]
மான் திகழும் சங்கிலியைத் தந்து, வரு பயன்கள் எல்லாம் தோன்ற அருள் செய்து அளித்தாய் என்று உரைக்க, உலகம் எலாம் ஈன்றவனே! வெண்கோயில் இங்கு இருந்தாயோ? என்ன, ஊன்றுவது ஓர் கோல் அருளி, உளோம்; போகீர்! என்றானே!
[10]
ஏர் ஆரும் பொழில் நிலவு வெண்பாக்கம் இடம் கொண்ட கார் ஆரும் மிடற்றானைக் காதலித்திட்டு, அன்பினொடும் சீர் ஆரும் திரு ஆரூர்ச் சிவன் பேர் சென்னியில் வைத்த ஆரூரன் தமிழ் வல்லார்க்கு அடையா, வல்வினைதானே.
[11]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.090   மடித்து ஆடும் அடிமைக்கண் அன்றியே,
பண் - குறிஞ்சி (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
மடித்து ஆடும் அடிமைக்கண் அன்றியே, மனனே! நீ வாழும் நாளும் தடுத்து ஆட்டி, தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான்; கடுத்து ஆடு கரதலத்தில் தமருகமும், எரி அகலும்; கரிய பாம்பும் பிடித்து ஆடி; புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே!
[1]
பேராது காமத்தில் சென்றார் போல் அன்றியே, பிரியாது உள்கி, சீர் ஆர்ந்த அன்பராய், சென்று, முன் அடி வீழும் திருவினாரை, ஓராது தருமனார் தமர் செக்கில் இடும்போது, தடுத்து ஆட்கொள்வான், பேராளர் புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே!
[2]
நரியார் தம் கள்ளத்தால் பக்கு ஆன பரிசு ஒழிந்து, நாளும் உள்கி, பிரியாத அன்பராய், சென்று, முன் அடி வீழும் சிந்தையாரை, தரியாது தருமனார் தமர் செக்கில் இடும்போது, தடுத்து ஆட்கொள்வான், பெரியோர்கள் புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே!
[3]
கருமை ஆர் தருமனார் தமர் நம்மைக் கட்டிய கட்டு அறுப்பிப்பானை; அருமை ஆம் தன் உலகம் தருவானை; மண்ணுலகம் காவல் பூண்ட உரிமையால் பல்லவர்க்குத் திறை கொடா மன்னவரை மறுக்கம் செய்யும், பெருமை ஆர் புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே!
உய்த்து ஆடித் திரியாதே, உள்ளமே! ஒழிகண்டாய், ஊன் கண் ஓட்டம்! எத்தாலும் குறைவு இல்லை என்பர் காண்; நெஞ்சமே! நம்மை நாளும்- பைத்து ஆடும் அரவினன், படர்சடையன், பரஞ்சோதி,-பாவம் தீர்க்கும் பித்தாடி, புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே!
[6]
முட்டாத முச்சந்தி மூ ஆயிரவர்க்கும் மூர்த்தி என்னப்- பட்டானை, பத்தராய்ப் பாவிப்பார் பாவமும் வினையும் போக விட்டானை, மலை எடுத்த இராவணனைத் தலைபத்தும் நெரியக் காலால்- தொட்டானை, புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே!
[7]
கல்-தானும் குழையும் ஆறு அன்றியே, கருதுமா கருத கிற்றார்க்கு, எற்றாலும் குறைவு இல்லை என்பர்காண்; உள்ளமே! நம்மை நாளும்- செற்று ஆட்டித் தருமனார் தமர் செக்கில் இடும்போது-தடுத்து ஆட்கொள்வான், பெற்றேறி,(ப்) புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே!
[8]
நாடு உடைய நாதன் பால் நன்று என்றும் செய், மனமே! நம்மை நாளும், தாடு உடைய தருமனார் தமர் செக்கில் இடும்போது, தடுத்து ஆட்கொள்வான்; மோடு உடைய சமணர்க்கும், முடை உடைய சாக்கியர்க்கும், மூடம் வைத்த, பீடு உடைய-புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே!
[9]
பார் ஊரும் அரவு அல்குல் உமை நங்கை அவள் பங்கன்; பைங்கண் ஏற்றன்; ஊர் ஊரன்; தருமனார் தமர் செக்கில் இடும்போது, தடுத்து ஆட்கொள்வான்; ஆரூரன் தம்பிரான்; ஆரூரன்; மீ கொங்கில் அணி காஞ்சிவா அய்ப் பேரூரர் பெருமானைப் புலியூர்ச் சிற்றம்பலத்தே பெற்றாம் அன்றே!
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.091   பாட்டும் பாடிப் பரவித் திரிவார்
பண் - குறிஞ்சி (திருவொற்றியூர் படம்பக்கநாதர் - மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
பணம் கொள் அரவம் பற்றி, பரமன், கணங்கள் சூழக் கபாலம் ஏந்தி, வணங்கும் இடை மென்மடவார் இட்ட உணங்கல் கவர்வான்,-ஒற்றியூரே.
[5]
படை ஆர் மழுவன், பலவெண் நீற்றன், விடை ஆர் கொடியன், வேத நாவன், அடைவார் வினைகள் அறுப்பான், என்னை உடையான், உறையும்-ஒற்றியூரே.
[6]
சென்ற புரங்கள் தீயில் வேவ வென்ற விகிர்தன், வினையை வீட்ட நன்றும் நல்ல நாதன், நரை ஏறு ஒன்றை உடையான்,-ஒற்றியூரே.
[7]
கலவ மயில் போல் வளைக்கை நல்லார் பலரும் பரவும் பவளப்படியான், உலகின் உள்ளார் வினைகள் தீர்ப்பான்,- உலவும் திரைவாய் ஒற்றியூரே.
[8]
பற்றி வரையை எடுத்த அரக்கன் இற்று முரிய விரலால் அடர்த்தார்; எற்றும் வினைகள் தீர்ப்பார்;-ஓதம் ஒற்றும் திரைவாய் ஒற்றியூரே.
[9]
ஒற்றி ஊரும் அரவும் பிறையும் பற்றி ஊரும் பவளச் சடையான் ஒற்றியூர் மேல் ஊரன் உரைத்த கற்றுப் பாட, கழியும், வினையே.
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.092   எற்றால் மறக்கேன், எழுமைக்கும் எம்பெருமானையே?
பண் - குறிஞ்சி (திருப்புக்கொளியூர் (அவிநாசி) அவிநாசியப்பர் பெருங்கருணைநாயகி)
வழி போவார் தம்மோடும் வந்து உடன் கூடிய மாணி-நீ ஒழிவது அழகோ? சொல்லாய்! அருள், ஓங்கு சடையானே!- பொழில் ஆரும் சோலைப் புக்கொளியூரில் குளத்து இடை இழியாக் குளித்த மாணி-என்னைக் கிறி செய்ததே?
[2]
எங்கேனும் போகினும், எம்பெருமானை, நினைந்தக்கால், கொங்கே புகினும் கூறை கொண்டு ஆறு அலைப்பார் இலை; பொங்கு ஆடு அரவா! புக்கொளியூர் அவிநாசியே! எம் கோனே! உனை வேண்டிக்கொள்வேன், பிறவாமையே.
[3]
உரைப்பார் உரை உகந்து, உள்க வல்லார் தங்கள் உச்சியாய்! அரைக்கு ஆடு அரவா! ஆதியும் அந்தமும் ஆயினாய்! புரைக் காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே!- கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு, காலனையே!
[4]
அரங்கு ஆவது எல்லாம் மாய் இடுகாடு; அது அன்றியும், சரம்-கோலை வாங்கி, வரிசிலை நாணியில் சந்தித்து, புரம் கோட எய்தாய்-புக்கொளியூர் அவிநாசியே! குரங்கு ஆடு சோலைக் கோயில் கொண்ட குழைக்காதனே.
[5]
நாத்தானும் உனைப் பாடல் அன்றி நவிலாது எனா, சோத்து! என்று தேவர் தொழ நின்ற சுந்தரச் சோதியாய்! பூத் தாழ்சடையாய்! புக்கொளியூர் அவிநாசியே! கூத்தா!-உனக்கு நான் ஆட்பட்ட குற்றமும் குற்றமே!
[6]
மந்தி கடுவனுக்கு உண் பழம் நாடி, மலைப்புறம் சந்திகள்தோறும் சலபுட்பம் இட்டு வழிபட, புந்தி உறைவாய்! புக்கொளியூர் அவிநாசியே! நந்தி உனை வேண்டிக் கொள்வேன் நரகம் புகாமையே
[7]
பேணாது ஒழிந்தேன், உன்னை அலால் பிற தேவரை; காணாது ஒழிந்தேன்; காட்டுதியேல் இன்னம் காண்பன், நான்;- பூண் நாண் அரவா! புக்கொளியூர் அவிநாசியே! காணாத கண்கள் காட்ட வல்ல கறைக்கண்டனே!
[8]
நள்ளாறு, தெள்ளாறு, அரத்துறைவாய் எங்கள் நம்பனே வெள்ளாடை வேண்டாய், வேங்கையின் தோலை விரும்பினாய்!- புள் ஏறு சோலைப் புக்கொளியூரில் குளத்து இடை உள் ஆடப் புக்க மாணி என்னைக் கிறி செய்ததே?
[9]
நீர் ஏற ஏறும் நிமிர் புன்சடை நின்மல மூர்த்தியை- போர் ஏறு அது ஏறியை, புக்கொளியூர் அவிநாசியை, கார் ஏறு கண்டனை,-தொண்டன் ஆரூரன் கருதிய சீர் ஏறு பாடல்கள் செப்ப வல்லார்க்கு இல்லை, துன்பமே.
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.093   நீரும் மலரும் நிலவும் சடைமேல்
பண் - குறிஞ்சி (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)
நீரும் மலரும் நிலவும் சடைமேல் ஊரும் அரவம் உடையான் இடம் ஆம்- வாரும் அருவி மணி, பொன், கொழித்துச் சேரும்-நறையூர்ச் சித்தீச்சுரமே.
[1]
அளைப் பைஅரவு ஏர் இடையாள் அஞ்ச, துளைக்கைக்கரித் தோல் உரித்தான் இடம் ஆம்- வளைக்கைம் மடவார் மடுவில்-தடநீர்த் திளைக்கும்-நறையூர்ச் சித்தீச்சுரமே.
போர் ஆர் புரம் எய் புனிதன் அமரும் சீர் ஆர் நறையூர்ச் சித்தீச்சுரத்தை ஆரூரன் சொல் இவை வல்லவர்கள், ஏர் ஆர் இமையோர் உலகு எய்துவரே.
[11]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.094   அழல் நீர் ஒழுகியனைய சடையும்,
பண் - கௌசிகம் (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
அழல் நீர் ஒழுகியனைய சடையும், உழை ஈர் உரியும், உடையான் இடம் ஆம்- கழை நீர் முத்தும் ககைக்குவையும் சுழல் நீர்ப் பொன்னி-சோற்றுத்துறையே.
[1]
பண்டை வினைகள் பறிய நின்ற அண்ட முதல்வன், அமலன், இடம் ஆம்- இண்டை கொண்டு அன்பு இடை அறாத தொண்டர் பரவும்-சோற்றுத்துறையே.
[2]
கோல அரவும், கொக்கின் இறகும், மாலை மதியும், வைத்தான் இடம் ஆம்- ஆலும் மயிலும், ஆடல் அளியும், சோலை தரு நீர்-சோற்றுத்துறையே.
[3]
பளிக்குத்தாரை பவளவெற்பில் குளிக்கும் போல் நூல் கோமாற்கு இடம் ஆம்- அளிக்கும் ஆர்த்தி, அல்லால் மதுவும் துளிக்கும் சோலை-சோற்றுத்துறையே.
[4]
உதையும், கூற்றுக்கு; ஒல்கா விதிக்கு வதையும்; செய்த மைந்தன் இடம் ஆம்- திதையும் தாதும் தேனும் ஞிமிறும் துதையும் பொன்னி-சோற்றுத்துறையே.
காமன் பொடியாக் கண் ஒன்று இமைத்த ஓமக் கடலார் உகந்த இடம் ஆம்- தேமென்குழலார் சேக்கை புகைத்த தூமம் விசும்பு ஆர்-சோற்றுத்துறையே.
[8]
இலையால், அன்பால், ஏத்துமவர்க்கு நிலையா வாழ்வை நீத்தார் இடம் ஆம்- தலையால்-தாழும் தவத்தோர்க்கு என்றும் தொலையாச் செல்வ-சோற்றுத்துறையே.
[9]
சுற்று ஆர் தரு நீர்ச் சோற்றுத்துறையுள் முற்றா மதி சேர் முதல்வன் பாதத்து அற்றார் அடியார் அடி நாய் ஊரன் சொல்-தான் இவை கற்றார் துன்பு இலரே.
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.095   மீளா அடிமை உமக்கே ஆள்
பண் - செந்துருத்தி (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
மீளா அடிமை உமக்கே ஆள் ஆய், பிறரை வேண்டாதே, மூளாத் தீப் போல் உள்ளே கனன்று, முகத்தால் மிக வாடி, ஆள் ஆய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளா(ஆ)ங்கு இருப்பீர்; திரு ஆரூரீர்! வாழ்ந்துபோதீரே!
[1]
விற்றுக் கொள்வீர்; ஒற்றி அல்லேன்; விரும்பி ஆட்பட்டேன்; குற்றம் ஒன்றும் செய்தது இல்லை; கொத்தை ஆக்கினீர்; எற்றுக்கு-அடிகேள்!-என் கண் கொண்டீர்? நீரே பழிப்பட்டீர்; மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால், வாழ்ந்துபோதீரே!
[2]
அன்றில் முட்டாது அடையும் சோலை ஆரூர் அகத்தீரே! கன்று முட்டி உண்ணச் சுரந்த காலி அவை போல, என்றும் முட்டாப் பாடும் அடியார் தம் கண் காணாது குன்றில் முட்டிக் குழியில் விழுந்தால், வாழ்ந்துபோதீரே!
[3]
துருத்தி உறைவீர்; பழனம் பதியா, சோற்றுத்துறை ஆள்வீர்; இருக்கை திரு ஆரூரே உடையீர்; மனமே என வேண்டா: அருத்தி உடைய அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால், வருத்தி வைத்து, மறுமை பணித்தால், வாழ்ந்துபோதீரே!
[4]
செந் தண் பவளம் திகழும் சோலை இதுவோ, திரு ஆரூர்? எம்தம் அடிகேள்! இதுவே ஆம் ஆறு, உமக்கு ஆட்பட்டோர்க்கு? சந்தம் பலவும் பாடும் அடியார் தம் கண் காணாது வந்து, எம்பெருமான்! முறையோ? என்றால், வாழ்ந்துபோதீரே!
[5]
தினைத்தாள் அன்ன செங்கால் நாரை சேரும் திரு ஆரூர்ப் புனைத் தார் கொன்றைப் பொன் போல் மாலைப் புரிபுன் சடையீரே! தனத்தால் இன்றி, தாம்தாம் மெலிந்து, தம் கண் காணாது, மனத்தால் வாடி, அடியார் இருந்தால், வாழ்ந்துபோதீரே!
[6]
ஆயம் பேடை அடையும் சோலை ஆரூர் அகத்தீரே! ஏ, எம்பெருமான்! இதுவே ஆம் ஆறு, உமக்கு ஆட்பட்டோர்க்கு? மாயம் காட்டி, பிறவி காட்டி, மறவா மனம் காட்டி, காயம் காட்டி, கண் நீர் கொண்டால், வாழ்ந்துபோதீரே!
[7]
கழி ஆய், கடல் ஆய், கலன் ஆய், நிலன் ஆய், கலந்த சொல் ஆகி,- இழியாக் குலத்தில் பிறந்தோம்-உம்மை இகழாது ஏத்துவோம்; பழிதான் ஆவது அறியீர்: அடிகேள்! பாடும் பத்தரோம்; வழிதான் காணாது, அலமந்து இருந்தால், வாழ்ந்துபோதீரே!
[8]
பேயோடேனும் பிரிவு ஒன்று இன்னாது என்பர், பிறர் எல்லாம்; காய்தான் வேண்டில், கனிதான் அன்றோ, கருதிக் கொண்டக்கால்? நாய்தான் போல நடுவே திரிந்தும், உமக்கு ஆட்பட்டோர்க்கு வாய்தான் திறவீர்; திரு ஆரூரீர்! வாழ்ந்துபோதீரே!
[9]
செருந்தி செம்பொன்மலரும் சோலை இதுவோ, திரு ஆரூர்? பொருந்தித் திரு மூலட்டான(ம்)மே இடமாக் கொண்டீரே; இருந்தும், நின்றும், கிடந்தும், உம்மை இகழாது ஏத்துவோம்; வருந்தி வந்தும், உமக்கு ஒன்று உரைத்தால், வாழ்ந்துபோதீரே!
[10]
கார் ஊர் கண்டத்து எண்தோள் முக்கண் கலைகள் பல ஆகி, ஆரூர்த் திரு மூலட்டானத்தே அடிப்பேர் ஆரூரன், பார் ஊர் அறிய, என் கண் கொண்டீர்; நீரே பழிப்பட்டீர்; வார் ஊர் முலையாள் பாகம் கொண்டீர்! வாழ்ந்துபோதீரே!
[11]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.096   தூ வாயா! தொண்டு செய்வார்
பண் - பஞ்சமம் (திருவாரூர்ப்பரவையுண்மண்டளி வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
தூ வாயா! தொண்டு செய்வார் படு துக்கங்கள் காவாயா? கண்டு கொண்டார் ஐவர் காக்கிலும், நா வாயால் உன்னையே நல்லன சொல்லுவேற்கு ஆவா! என் பரவையுள் மண்டளி அம்மானே!
அம்மானே! ஆகம சீலர்க்கு அருள் நல்கும் பெம்மானே பேர் அருளாளன் பிடவூரன் தம்மானே! தண்தமிழ்நூல் புலவாணர்க்கு ஓர் அம்மானே! பரவையுள்மண்டளி அம்மானே!
[6]
விண்டானே! மேலையார் மேலையார் மேல் ஆய எண்தானே! எழுத்தொடு சொல்பொருள் எல்லாம் முன் கண்டானே! கண்தனைக் கொண்டிட்டுக் காட்டாயே!- அண்டானே! பரவையுள் மண்டளி அம்மானே!
[7]
காற்றானே! கார்முகில் போல்வது ஒர் கண்டத்து எம் கூற்றானே! கோல்வளையாளை ஓர்பாகம் ஆம் நீற்றானே! நீள்சடைமேல் நிறை உள்ளது ஓர் ஆற்றானே! பரவையுள் மண்டளி அம்மானே!
[8]
செடியேன், நான்; செய்வினை நல்லன செய்யாத கடியேன், நான் கண்டதே கண்டதே காமுறும் கொடியேன், நான்; கூறும் ஆறு உன் பணி கூறாத அடியேன், நான்பரவையுள் மண்டளி அம்மானே!
[9]
கரந்தையும், வன்னியும், மத்தமும், கூவிளம், பரந்த சீர்ப் பரவையுள் மண்டளி அம்மானை நிரம்பிய ஊரன் உரைத்தன பத்து இவை விரும்புவார் மேலையார் மேலையார் மேலாரே.
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.097   ஆதியன்; ஆதிரையன்(ன்) அயன் மால்
பண் - பஞ்சமம் (திருநனிப்பள்ளி நற்றுணையப்பர் பர்வதராசபுத்திரி)
உறவு இலி; ஊனம் இலி; உணரார் புரம் மூன்று எரியச் செறி வி(ல்)லி; தன் நினைவார் வினை ஆயின தேய்ந்து அழிய அற இலகும்(ம்) அருளான்; மருள் ஆர் பொழில், வண்டு அறையும், நற விரி கொன்றையினான்; நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே.
[2]
வான் உடையான்; பெரியான்; மனத்தாலும் நினைப்பு அரியான்; ஆன் இடை ஐந்து அமர்ந்தான்; அணு ஆகி, ஓர் தீ உருக் கொண்டு ஊன் உடை இவ் உடலம்(ம்) ஒடுங்கிப் புகுந்தான்; பரந்தான்; நான் உடை மாடு; எம்பிரான்; நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே.
[3]
ஓடு உடையன், கலனா; உடை கோவணவன்(ன்); உமை ஓர்- பாடு உடையன்; பலி தேர்ந்து உண்ணும் பண்பு உடையன்; பயிலக் காடு உடையன்(ன்), இடமா; மலை ஏழும், கருங்கடல் சூழ் நாடு, உடை நம்பெருமான் நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே.
[4]
பண்ணற்கு அரியது ஒரு படை ஆழிதனைப் படைத்துக் கண்ணற்கு அருள்புரிந்தான்; கருதாதவர் வேள்வி அவி உண்ணற்கு இமையவரை உருண்டு ஓட உதைத்து, உகந்து, நண்ணற்கு அரிய பிரான்; நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே.
[5]
மல்கிய செஞ்சடைமேல் மதியும்(ம்) அரவும்(ம்) உடனே,- புல்கிய ஆரணன், எம் புனிதன், புரிநூல் விகிர்தன், மெல்கிய வில்-தொழிலான், விருப்பன், பெரும் பார்த்தனுக்கு நல்கிய நம்பெருமான், நண்ணும் ஊர் நன்பள்ளி அதே.
[6]
அங்கம் ஓர் ஆறு அவையும்(ம்), அருமாமறை, வேள்விகளும், எங்கும் இருந்து அந்தணர் எரிமூன்று அவை, ஓம்பும் இடம்; பங்கயமா முகத்தாள் உமை பங்கன் உறை கோயில்; செங்கயல் பாயும் வயல்-திரு ஊர்-நனிபள்ளி அதே.
[7]
திங்கள் குறுந்தெரியல்-திகழ் கண்ணியன்-; நுண்ணியனாய், நம் கண் பிணி களைவான்; அரு மா மருந்து, ஏழ் பிறப்பும்; மங்கத் திருவிரலால் அடர்த்தான், வல் அரக்கனையும்; நங்கட்கு அருளும் பிரான்; நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே.
[8]
ஏன மருப்பினொடும்(ம்) எழில் ஆமையும் பூண்டு, உகந்து, வான மதிள் அரணம் மலையே சிலையா வளைத்தான்; ஊனம் இல் காழி தன்னுள்(ள்) உயர் ஞானசம்பந்தற்கு அன்று ஞானம் அருள்புரிந்தான்; நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே.
[9]
காலமும் நாழிகையும் நனிபள்ளி மனத்தின் உள்கி, கோலம் அது ஆயவனைக் குளிர் நாவல ஊரன் சொன்ன மாலை மதித்து உரைப்பார், மண் மறந்து வானோர் உலகில் சால நல் இன்பம் எய்தி, தவலோகத்து இருப்பவரே.
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.098   தண் இயல் வெம்மையினான்; தலையில்
பண் - பஞ்சமம் (திருநன்னிலத்துப்பெருங்கோயில் )
தண் இயல் வெம்மையினான்; தலையில் கடைதோறும் பலி, பண் இயல் மென்மொழியார், இடக் கொண்டு உழல் பண்டரங்கன் புண்ணிய நால்மறையோர் முறையால் அடி போற்று இசைப்ப நண்ணிய-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.
[1]
வலம் கிளர் மாதவம் செய் மலை மங்கை ஓர் பங்கினனாய், சலம் கிளர் கங்கை தங்கச் சடை ஒன்று இடையே தரித்தான் பலம் கிளர் பைம்பொழில்-தண்பனி வெண்மதியைத் தடவ, நலம் கிளர்-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.
[2]
கச்சியன்; இன் கருப்பூர் விருப்பன்; கருதிக் கசிவார் உச்சியன்; பிச்சை உண்ணி(ய்); உலகங்கள் எல்லாம் உடையான் நொச்சி அம் பச்சிலையால், நுரைநீர்-புனலால்,-தொழுவார் நச்சிய-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.
[3]
பாடிய நால்மறையான்; படு பல் பிணக்காடு அரங்கா ஆடிய மா நடத்தான் அடி போற்றி! என்று அன்பினராய்ச் சூடிய செங்கையினார் பலதோத்திரம் வாய்த்த சொல்லி நாடிய-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.
[4]
பிலம் தரு வாயினொடு பெரிதும் வலி மிக்கு உடைய சலந்தரன் ஆகும் இருபிளவு ஆக்கிய, சக்கரம் முன் நிலம் தரு மாமகள்கோன் நெடுமாற்கு அருள்செய்த பிரான் நலம் தரு நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே
[5]
வெண்பொடி மேனியினான்; கருநீலமணி மிடற்றான், பெண் படி செஞ்சடையான், பிரமன் சிரம் பீடு அழித்தான் பண்பு உடை நல்மறையோர் பயின்று ஏத்தி, பல்கால் வணங்கும் நண்பு உடை-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.
கருவரை போல் அரக்கன் கயிலை(ம்) மலைக்கீழ்க் கதற, ஒருவிரலால் அடர்த்து, இன் அருள் செய்த உமாபதிதான் திரை பொரு பொன்னி நன்நீர்த் துறைவன், திகழ் செம்பியர்கோன், நரபதி,-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.
[10]
கோடு உயர் வெங்களிற்றுத் திகழ் கோச்செங்கணான் செய் கோயில், நாடிய நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனைச் சேடு இயல் சிங்கிதந்தை-சடையன், திரு ஆரூரன் பாடிய பத்தும் வல்லார் புகுவார், பரலோகத்துளே.
[11]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.099   பிறை அணி வாள் நுதலாள்
பண் - பஞ்சமம் (திருநாகேச்சரம் செண்பகாரணியேசுவரர் குன்றமுலையம்மை)
பிறை அணி வாள் நுதலாள் உமையாள் அவள் பேழ் கணிக்க நிறை அணி நெஞ்சு அனுங்க(ந்), நீலமால்விடம் உண்டது என்னே? குறை அணி குல்லை, முல்லை, அளைந்து(க்), குளிர் மாதவி மேல் சிறை அணி வண்டுகள் சேர்-திரு நாகேச்சுரத்து அரனே!
[1]
அருந்தவம் மா முனிவர்க்கு அருள் ஆகி, ஓர் ஆல் அதன் கீழ் இருந்து, அறமே புரிதற்கு இயல்பு ஆகியது என்னைகொல் ஆம்!- குருந்து அயலே குரவம்(ம்) அரவின்(ன்) எயிறு ஏற்று அரும்ப, செருந்தி செம்பொன் மலரும்-திரு நாகேச்சுரத்து அரனே!
[2]
பாலனது ஆர் உயிர்மேல் பரியாது கைத்து எழுந்த காலனை வீடுவித்து, கருத்து ஆக்கியது என்னைகொல் ஆம்?- கோல மலர்க்குவளை கழுநீர் வயல் சூழ் கிடங்கில், சேலொடு வாளைகள் பாய்-திரு நாகேச்சுரத்து அரனே!
அரை விரி கோவணத்தோடு அரவு ஆர்த்து, ஒரு நால்மறை நூல் உரை பெருக(வ்) உரைத்து, அன்று உகந்து(வ்), அருள்செய்தது என்னே?- வரை தரு மா மணியும், வரைச் சந்து, அகிலோடும், உந்தித் திரை பொரு தண்பழன-திரு நாகேச்சுரத்து அரனே!
[5]
தங்கிய மா தவத்தின் தழல் வேள்வியின் நின்று எழுந்த சிங்கமும் நீள் புலியும் செழு மால்கரியோடு அலறப் பொங்கிய போர் புரிந்து(ப்), பிளந்து, ஈர் உரி போர்த்தது என்னே?- செங்கயல் பாய் கழனி-திரு நாகேச்சுரத்து அரனே!
[6]
நின்ற இம் மா தவத்தை ஒழிப்பான் சென்று, அணைந்து, மிகப் பொங்கிய பூங்கணை வேள் பொடி ஆக விழித்தல் என்னே?- பங்கய மா மலர்மேல் மது உண்டு, வண் தேன் முரல, செங்கயல் பாய் வயல் சூழ்-திரு நாகேச்சுரத்து அரனே!
[7]
வரி அர நாண் அது(வ்) ஆக, மாமேரு வில் அது(வ்) ஆக, அரியன முப்புரங்கள்(ள்) அவை ஆர் அழல் மூட்டல் என்னே?- விரிதரு மல்லிகையும், மலர்ச் சண்பகமும்(ம்), அளைந்து திரிதரு வண்டு பண்செய்-திரு நாகேச்சுரத்து அரனே!
[8]
அங்கு இயல் யோகு தன்னை அழிப்பான் சென்று அணைந்து மிகப் பொங்கிய பூங்கணை வேள் பொடி ஆக விழித்தல் என்னே?- பங்கய மா மலர்மேல் மது உண்டு, பண் வண்டு அறைய, செங்கயல் நின்று உகளும்-திரு நாகேச்சுரத்து அரனே!
[9]
குண்டரை, கூறை இன்றித் திரியும் சமண்சாக்கியப்பேய்- மிண்டரை, கண்ட தன்மை விரவு ஆகியது என்னைகொலோ? தொண்டு இரைத்து(வ்), வணங்கி, தொழில் பூண்டு, அடியார் பரவும் தெண்திரைத் தண்வயல் சூழ் திரு நாகேச்சுரத்து அரனே!
[10]
கொங்கு அணை வண்டு அரற்ற, குயிலும் மயிலும் பயிலும் தெங்கு அணை பூம்பொழில் சூழ் திரு நாகேச்சுரத்து அரனை, வங்கம் மலி கடல் சூழ் வயல் நாவல் ஆரூரன், சொன்ன பங்கம் இல் பாடல் வல்லார் அவர்தம் வினை பற்று அறுமே.
[11]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.100   தான் எனை முன் படைத்தான்;
பண் - பஞ்சமம் (திருக்கயிலாயம் )
தான் எனை முன் படைத்தான்; அது அறிந்து தன் பொன் அடிக்கே நான் என பாடல்? அந்தோ! நாயினேனைப் பொருட்படுத்து, வான் எனை வந்து எதிர்கொள்ள, மத்தயானை அருள்புரிந்து(வ்) ஊன் உயிர் வேறு செய்தான்-நொடித்தான்மலை உத்தமனே.
[1]
ஆனை உரித்த பகை அடியேனொடு மீளக்கொலோ- ஊனை உயிர் வெருட்டி ஒள்ளியானை நினைந்திருந்தேன், வானை மதித்த(அ)மரர் வலம்செய்து, எனை ஏற வைக்க ஆனை அருள் புரிந்தான், நொடித்தான்மலை உத்தமனே?
[2]
மந்திரம் ஒன்று அறியேன், மனைவாழ்க்கை மகிழ்ந்து, அடியேன்; சுந்தர வேடங்களால்-துரிசே செயும் தொண்டன் எனை அந்தர மால்விசும்பில்(ல்) அழகு ஆனை அருள்புரிந்தது- உம்தரமோ? நெஞ்சமே!-நொடித்தான்மலை உத்தமனே.
[3]
வாழ்வை உகந்த நெஞ்சே! மடவார் தங்கள் வல்வினைப் பட்டு, ஆழ முகந்த என்னை அது மாற்றி, அமரர் எல்லாம் சூழ அருள் புரிந்து(த்), தொண்டனேன் பரம் அல்லது ஒரு வேழம் அருள் புரிந்தான்நொடித்தான்மலை உத்தமனே.
[4]
மண்ணுலகில் பிறந்து(ந்) நும்மை வாழ்த்தும் வழி அடியார் பொன்னுலகம் பெறுதல் தொண்டனேன் இன்று கண்டொழிந்தேன்; விண்ணுலகத்தவர்கள் விரும்ப(வ்) வெள்ளையானையின் மேல் என் உடல் காட்டுவித்தான் நொடித்தான்மலை உத்தமனே.
[5]
அஞ்சினை ஒன்றி நின்று(வ்) அலர் கொண்டு அடி சேர்வு அறியா வஞ்சனை என் மனமே வைகி, வான நன் நாடர் முன்னே! துஞ்சுதல் மாற்றுவித்து, தொண்டனேன் பரம் அல்லது ஒரு வெஞ்சின ஆனை தந்தான்நொடித்தான்மலை உத்தமனே.
[6]
நிலை கெட, விண் அதிர(ந்), நிலம் எங்கும் அதிர்ந்து அசைய, மலை இடை யானை ஏறி(வ்) வழியே வருவேன் எதிரே, அலைகடல் ஆல் அரையன்(ன்) அலர் கொண்டு முன் வந்து இறைஞ்ச, உலை அணையாத வண்ணம்-நொடித்தான்மலை உத்தமனே.
[7]
அர ஒலி, ஆகமங்கள்(ள்) அறிவார் அறி தோத்திரங்கள், விரவிய வேத ஒலி, விண் எலாம் வந்து எதிர்ந்து இசைப்ப, வரம் மலி வாணன் வந்து(வ்) வழிதந்து, எனக்கு ஏறுவது ஓர் சிரம் மலி யானை தந்தான்நொடித்தான்மலை உத்தமனே.
[8]
இந்திரன், மால், பிரமன்(ன்), எழில் ஆர் மிகு தேவர், எல்லாம் வந்து எதிர்கொள்ள, என்னை மத்தயானை அருள்புரிந்து, மந்திர மா முனிவர், இவன் ஆர்? என,-எம்பெருமான் நம்தமர் ஊரன் என்றான்நொடித்தான்மலை உத்தமனே.
[9]
ஊழிதொறு ஊழி முற்றும்(ம்) உயர் பொன் நொடித்தான்மலையை, சூழ் இசை இன் கரும்பின் சுவை நாவல ஊரன் சொன்ன, ஏழ் இசை இன் தமிழால் இசைந்து ஏத்திய பத்தினையும், ஆழி-கடல்(ல்) அரையா! அஞ்சையப்பர்க்கு அறிவிப்பதே!
[10]
Back to Top சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.101   பொன் ஆம் இதழி விரை
பண் - (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) )
பொன் ஆம் இதழி விரை மத்தம் பொங்கு கங்கை புரிசடைமேல் முன்னா அரவம் மதியமும் சென்னி வைத்தல் மூர்க்கு அன்றே!- துன்னா மயூரம் சோலைதொறும் ஆட, தூரத் துணைவண்டு தென்னா என்னும் தென்நாகைத் திருக்காரோணத்து இருப்பீரே!
[1]
வரைக்கை வேழம் உரித்தும் அரன் நடமாட்டு ஆனால் மனைதோறும் இரக்கை ஒழியீர்; பழி அறியில், ஏற்றை விற்று நெல் கொள்வீர்!- முரைக் கை பவளக்கால் காட்ட, மூரிச் சங்கத்தொடு முத்தம் திரைக் கை காட்டும் தென்நாகைத் திருக்காரோணத்து இருப்பீரே!
[2]
புல்லும் பெறுமே, விடை? புணரச் சடைமேல் ஒரு பெண் புக வைத்தீர்! இல்லம் தோறும் பலி என்றால், இரக்க இடுவார் இடுவாரே?- முல்லை முறுவல் கொடி எடுப்ப, கொன்றை முகம் மோதிரம் காட்ட, செல்லும் புறவின் தென்நாகைத் திருக்காரோணத்து இருப்பீரே!
[3]
மாண்டார் எலும்பும் கலும்பும் எலாம் மாலை ஆக மகிழ்ந்து அருளி, பூண் தார் பொறி ஆடு அரவு ஆமை, புரம் மூன்று எரித்தீர், பொருள் ஆக- தூண்டா விளக்கு மணி மாட வீதிதோறும் சுடர் உய்க்க, சேண் தார் புரிசைத் தென்நாகைத் திருக்காரோணத்து இருப்பீரே!
[4]
ஒருவர்க்கு ஒருவர் அரிது ஆகில், உடை வெண்தலை கொண்டு ஊர் ஊரன் இருவர்க்கு ஒருவர் இரந்து உண்டால் எளிதே? சொல்லீர்-எத்தனையும் பரு வன் கனகம் கற்பூரம் பகர்ந்த முகந்து பப்பரவர் தெருவில் சிந்தும் தென்நாகைத் திருக்காரோணத்து இருப்பீரே!
[5]
தோ(ட்)டை உடுத்த காது உடையீர்! தோலை உடுத்துச் சோம்பாதே ஆடை உடுத்துக் கண்டக்கால் அழகிது அன்றே! அரிது அன்று(வ்)- ஓடை உடுத்த குமுதமே உள் அம் கை மறிப்ப, புறம் கை அனம் சேடை உடுத்தும் தென்நாகைத் திருக்காரோணத்து இருப்பீரே!
[6]
கடு நஞ்சு உண்டு, இரக்கவே, கண்டம் கறுத்தது; இக் காலம்- விடும் நஞ்சு உண்டு-நாகத்தை வீட்டில் ஆட்டை வேண்டா, நீ!- கொடு மஞ்சுகள் தோய் நெடுமாடம் குலவு மணி மாளிகைக்குழாம் இடு மிஞ்சு இதை சூழ் தென்நாகைத் திருக்காரோணத்து இருப்பீரே!
[7]
பள்ளம் பாறும் நறும் புனலைச் சூடி, பெண் ஓர்பாகமா, வெள்ளை நீறே பூசுவீர்; மேயும் விடையும் பாயுமே?- தொள்ளை ஆம் நல் கரத்து ஆனை சுமந்து வங்கம் சுங்கம் இடத் தெள்ளும் வேலைத் தென்நாகைத் திருக்காரோணத்து இருப்பீரே!
[8]
மத்தம் கவரும் மலர்க்கொன்றைமாலை மேல் மால் ஆனாளை உய்த்து அங்கு அவரும் உரைசெய்தால் உமக்கே அன்றே, பழி? உரையீர்- முத்தம் கவரும் நகை இளையார் மூரித் தானை முடிமன்னர் சித்தம் கவரும் தென்நாகைத் திருக்காரோணத்து இருப்பீரே!
[9]
மறை அன்று ஆலின் கீழ் நால்வர்க்கு அளித்தீர்; களித்தார் மதில் மூன்றும் இறையில் எரித்தீர்; ஏழ் உலகும் உடையார் இரந்து ஊண் இனிதேதான்?- திறை கொண்டு அமரர் சிறந்து இறைஞ்சித் திருக்கோபுரத்து நெருக்க, மலர்ச் சிறைவண்டு அறையும் தென்நாகைத் திருக்காரோணத்து இருப்பீரே!
[10]
தேர் ஆர் வீதித் தென்நாகைத் திருக்காரோணத்து இறையானைச் சீர் ஆர் மாடத் திரு நாவலூர்க் கோன்சிறந்த வன்தொண்டன் ஆரா அன்போடு உரைசெய்த அஞ்சொடு அஞ்சும் அறிவார்கள், வார் ஆர் முலையால் உமை கணவன் மதிக்க இருப்பார், வான் அகத்தே.
[11]
Back to Top
7 -ஆம் திருமுறை பதிகம் 7.102  
பண் - ( )
விடைத்தவர் புரங்கள் மூன்றும் விரிசிலை குனிய வாங்கிப் படைத்தொழில் புரிந்து நின்ற பரமனே! பரம யோகி! கடைத்தலைப் புகுந்து நின்றோம்; கலிமறைக் காடு(ட்) அமர்ந்தீர்! அடைத்திடும், கதவு தன்னை அப்படித் தாளி னாலே!
கொங்கு(கு) அணா மலர்கள் மேவும் குளிர்பொழில் இமையப் பாவை பங்கு(கு) அணா(வ்) உருவினானே! பருமணி உமிழும் வெம்மைச் செங்கண் ஆர் அரவம் பூண்ட திகழ்மறைக் காடு(டு) அமர்ந்தாய்! அங்கணா! இது அன்றோதான், எம்மை ஆள் உகக்கும் ஆறே!
[3]
இருள் உடை மிடற்றினானே! எழில்மறைப் பொருள்கள் எல்லாம் தெருள் பட முனிவர்க்கு(கு) ஈந்த திகழ்மறைக் காடு(டு) அமர்ந்தாய்! மருள் உடைமனத்த னேனும் வந்து அடி பணிந்து நின்றேற்கு(கு) அருள் அது புரிவது(து) அன்றோ, எம்மை ஆள் உகக்கும் ஆறே!
செப்பு(பு) அமர் கொங்கை மாதர் செறிவளை கொள்ளும் தேசோடு(டு) ஒப்பு(பு) அம்நர் பலிகொள் வானே! ஒளிமறைக் காடு(டு) அமர்ந்தாய்! அப்பு(பு) அமர் சடையினானே! அடியனேன் பணி உகந்த அப்பனே! அளவில் சோதீ! அடிமையை உகக்கும் ஆறே!
[6]
மதி துன்றும் இதழி, மத்தம், மன்னிய சென்னி யானே! கதி ஒன்றும் ஏற்றி னானே! கலிமறைக் காடு(டு) அமர்ந்தாய்! விதி ஒன்று பாவின் மாலை கேட்டருள் வியக்கும் தன்மை இது அன்றோ, உலகில் நம்பி எம்மை ஆள் உகக்கும் ஆறே!
[7]
நீசன் ஆம் அரக்கன் திண்தோள் நெரிதர விரலால் ஊன்றும் தேசனே! ஞானமூர்த்தீ! திருமறைக் காடு(டு) அமர்ந்தாய்! ஆசையை அறுக்க உய்ந்திட்டு(டு) அவன் அடி பரவ, மெய்யே ஈசனார்க்(கு) ஆள் அது(து) ஆனேன் என்பதை அறிவித்தாயே.
[8]
மைதிகழ் உருவினானும், மலரவன் தானும், மெய்ம்மை எய்து மா(று) அறிய மாட்டார்; எழில்மறைக் காடு அமர்ந்தாய்! பொய்தனை இன்றி நின்னைப் போற்றினார்க்(கு) அருளைச் சேரச் செய்தனை, எனக்கு நீ இன்று அருளிய திறத்தினாலே.
[9]
மண் தலத்து(து) அமணர் பொய்யும், தேரர்கள் பொழியும், மாறக் கண்டனை; அடிகள்! என்றும் கலிமறைக் காடு(டு) அமர்ந்தாய்! தண்டியைத் தானா வைத்தான் என்னும் அத் தன்மை யாலே எண்திசைக்கு(கு) அறிய வைத்தாய், இக்கதவு(வு) அடைப்பித்து(து) அன்றே!
Back to Top
7 -ஆம் திருமுறை பதிகம் 7.103  
பண் - ( )
அம்மானே! ஆனந்த வெள்ள மூர்த்தி! அருமறையுள் அருமறையின் பொருளே! வானோர் தம்மால் ஒன்று(று) அறிவு(வு) அரிய சிவனும், மாலும், சதுமுகனும், உடன் ஆக விளங்கும் சோதி! இம்மாயப் பிறப்பு(பு) ஆகி, உலகும் தானாய், இரவு(வு) ஆகிப் பகல் ஆகிக் கலந்து நின்ற அம்மானே! அம்பரம் மீது(து) எழுந்து தோன்றும் ஆதித்தா! அடியேன் என் இடர்தீர்ப் பாயே.
[1]
ஆயிரம் செங் கதிர் விளங்க, புவனம் தன்னில் அளவு(வு) இறந்த பிறவி தனக்கு(கு) உயிர் ஆய், எங்கும் மா இருளைக் கடிந்து, மயக்கு(கு) அறுத்து, நாளும் வஞ்சகரை வஞ்சித்திட்டு(டு), அடியேன் உய்ய ஆயிரம்பாவம்களைந்தே, என்னை ஆண்ட ஆதவன் என்று(று) உலகு(கு) அறியும் ஆதி மூர்த்தி! ஆயிரம் பேர் உடையானே! அமரர் ஏறே! ஆதித்தா! அடியேன் என் இடர்தீர்ப் பாயே .
[2]
இந்திரியத் துடன் கலந்த கரணம் நான்கும் ஈர்-ஐந்து மாருதமும் மயங்கி ஒன்று(று) ஆய், மந்திரங்கள் ஈர்-எட்டும் எட்டும் போற்றி, மணிக்கரத்தால் அடி வணங்கி, சிறப்புச் செய்த சுந்தரனே! சுடர் ஒளி ஆய் நின்ற சோதி! சூரியனே! தாரணித் துணை ஆய் நாளும் அந்தரமே திர்ந்து(து) என்னை ஆண்டு கொண்டாய்! ஆதித்தா! அடியேன் என் இடர்தீர்ப் பாயே .
[3]
ஈண்டு நன் மலர் கொண்டு(டு) உன் அடியார் ஏத்த, இருபொழுதும் மறையோர்கள் புனல் கொண்டு(டு) என்றும் காண்டம் எனும் கடுஞ்சரத்தால் அசுரர் மாள, காதல் இரு மடவார்கள் அருகே நிற்க, பூண்ட ஏழ் புரவிக் கொணர்ந்து(து) அருணன் ஊர, புவனம் எலாம் ஒளிவிளங்கப் போந்தே, என்னை ஆண்டு கொண்ட பரமேட்டி! ஆதி மூர்த்தி! ஆதித்தா! அடியேன் என் இடர் தீர்ப் பாயே .
[4]
உத்தமனே! பத்தர் மனத்து உறையும் தேனே! உதயதிவா கரனே! என் உயிர் ஆய் நின் வித்தகனே! விடக்கு(கு) உடலில் கொழுநோய் தீர்க்கும் மிகுமருந்தே! விளக்கு(கு) ஒளி ஆய் முளைத்த சோதி! சித்தம் எனும் திண் கடலில்-திளைத்து நீந்தித் திசை அறியா மரக்கலம் போல் வினாவிக் கீண்டு(டு) இங்கு(கு) அத்தலத்தே எடுத்து(து) அவனி விளங்கத் தோன்றும் ஆதித்தா! அடியேன் என் இடர்தீர்ப் பாயே.
[5]
ஊக்கம் எனும் பெருஞ்செல்வம் ஒன்று காட்டி உகந்து(து) அளித்த அதிபதியாய் உதிக்கும் சோதி! பாற்கரனே! பரஞ்சுடரே! பாவ நாசா! பார் அடங்கத் திரிந்து வரும் பரம மூர்த்தி! பூக்கள் கொண்டு(டு) அடி வணங்கிச் சிறப்புச் செய்து போற்றி செயும் பூதலத்தில் அடியார்க்கு(கு) எல்லாம் ஆக்கமும் ஆய் மயக்கத்தின் பயனும் ஆனாய்! ஆதித்தா! அடியேன் என் இடர்த்தீர்ப் பாயே.
[6]
எரிகதிர் ஆய் நாயிறு(று) ஆய்த் திங்கள் ஆகி எனப்பல ஆய், யாண்டு(டு) ஊழி தோறும் ஆகி, கருமமும் ஆய், கருமத்தின் பயனும் ஆகி, காரணம் ஆய், ஆரணமந் திரங்கட்கு(கு) எல்லாம் தெரிவு(வு) அரிய பொருள் உருவம் ஒன்று(று) ஆய் நின்ற திவாகரனே! ஒருவனே! தேவே! நாளும் அரு உரு ஆய், உருவம் அது(து) ஆய், எங்கும் நின்ற ஆதித்தா! அடியேன் என் இடர்தீர்ப் பாயே.
[7]
ஏவி நலப் பணி உகந்தாய்! எந்தாய்! ஈண்டு(டு) இங்கு(கு) இளமுலையார் புனல் ஆட எழுந்து கூடிக் கூவும் இளங் குயில் என்ன மயில் என்று(று) எண்ணிக் குளங்கள்தொறும் குடைந்து குடைந்து(து) ஆட நோக்கித் தேவபிரான் எழுந்தருளும் படி, பொன் சோதித் தேர் ஊர்ந்து பரிமாவும் படையும் சூழ, ஆவி குளிர்ந்து(து) அவனி தலம் விளங்கத் தோன்றும் ஆதித்தா! அடியேன் என் இடர்தீர்ப் பாயே.
[8]
ஐ-இரண்டும் பதினைந்தும் ஒன்று ஆய்க் கூடி அம்பலம் சேர் அம்பலத்துக்கு(கு) ஆதி ஆகிக் கை இரண்டும் படைத்தார், உன் பாதம் கூப்ப; கனி இருப்பக் காய் கவர்ந்த கடைய னேற்குப் பொய் இருளைக் கடிந்து, நின்னை வணங்க நல்காய்! புலன் ஐந்தும் தொல் குரம்பை புகவே செய்து(து) இங்கு(கு), ஐயனே! மாயக்கூத்து(து) ஆட்டு கின்ற ஆதித்தா! அடியேன் என் இடர்தீர்ப் பாயே.
[9]
ஒட்டு(டு) இயல் ஆர் ஒருவடிவே உரைக்க என்றால் ஒளி உடைய திரு உருவம் பெரிய சோதி! குட்டம், உடல் கொழுநோய்கள், வாத, பித்தம், கொடிய கயம்,-பாவத்தர் கூடக் கட்டி இட்டம் உள விளையாட்டும் கோலம் காட்டி-இடர் இன்றி, விடக்கடலில் அடக்கை ஆக்கி, அட்டகுணம் ஆய், ஆட்ட மூர்த்தி ஆனாய்! ஆதித்தா! அடியேன் என் இடர்தீர்ப் பாயே .
[10]
ஓர் எழுத்து(து) ஆய், ஒண் பொருள் ஆய், தேன் ஆய், பால் ஆய், ஒளி அழலின் பழம் ஆகி, உருவம் ஒவ்வாத் தாரணிக்குத் தான் ஒன்று(று) ஆய், தானும் மூன்று(று) ஆய், தான் எங்கும் கலந்து(து), ஈர் ஏழ் உலகும் மிக்க பூரணத்தின் அரும்பொருளை-புண்ணி யத்தை, பூதலத்தோர் தொழுது(து) ஏத்தும் புனிதன் தன்னை, ஆரணத்தின் பயன் தன்னை-அறிந்தாய்! எந்தை! ஆதித்தா! அடியேன் என் இடர்தீர்ப் பாயே.
[11]
ஒளவனத்தின் அருமறையின் உச்சி உள்ளார் அணிமகர மண்டலப்புண் டரிகத்து(து) உள்ளார், ஒளவனத்தார் பாற்கடலின் பள்ளி ஆனார், அயன் ஆனார், மூவர்களும் ஆன சோதி! ஒளவனத்தில் கொணர் வேடம் புனைந்து மாறா ஆயிரம் பேர் ஒளிகாட்டி, அகிலம் எல்லாம் ஒளவனத்தில் அருந்துயரம் அகற்றி மாற்றும் ஆதித்தா! அடியேன் என் இடர்தீர்ப் பாயே.
[12]
This page was last modified on Sat, 20 Jul 2024 00:11:37 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org